பூமிக்குவந்த புதுமலராய் நாமிருப்போம்
கோபிக்கும் குணமதனை
குழிதோண்டி புதைத்து நிற்போம்
சன்மார்க்கம் மனம் கொள்வோம்
ஆருக்கும்
இடராக
அமையாது நாம் வாழ்வோம் !
மண்ணுக்குள் வேரூன்றும் மரமாக
நாம் இருப்போம்
கண்ணுக்குள் மணி போன்று
கருத்துகளை
இருத்திடுவோம்
விண்ணிற்கும் பரிதியைப் போல்
மண்ணினிலே விளங்கிடுவோம்
எண்ண மெலாம் என்னாளும்
இமயமென
உயர்த்திடுவோம் !
அரை குறையாய் வாழுவதை
அகமிருந்து அகற்றிடுவோம்
அறம் அதனை வாழ்வாக்கி
ஆனந்தம்
பெற்றிடுவோம்
பெறுமதியாய் சொல் தேர்ந்து
பெருமகிழ்வாய்
உரைத்திடுவோம்
வறுமை நிலை வந்தாலும்
வாய்மையினை காத்துநிற்போம் !
நிலை தளர்ந்து நிற்பாரை
நிமிந்துவிடச் செய்திடுவோம்
தலை குனியச் செய்வாரை
தானுணரச் செய்துநிற்போம்
விலை பேசும் உறவுகளின்
உளமன்பை நிறைத்திடுவோம்
வளமாக நாம் வாழ
வழிவகுப்போம்
வாருங்கள் !
No comments:
Post a Comment