தமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது ?


20/11/2019 பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதன் மூலம், புதிய கட்­சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பத­வியில் அறி­மு­க­மா­கி­யுள்­ளது. இந்தப் புதிய முக பிர­வே­ச­மா­னது நாட்டைப் புதி­யதோர் அர­சியல் நெறியில் வழி­ந­டத்திச் செல்­வ­தற்கு வழி­வ­குக்­குமா என்­பது பல­ரு­டைய ஆர்­வ­மிக்க கேள்­வி­யாக உள்­ளது.
ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள கோத்­த­பாய அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­வ­ரல்ல. பாராளு­மன்ற அர­சி­யலில் அனு­ப­வ­மு­டை­ய­வ­ரு­மல்ல. யுத்தச் செயற்­பாட்டுப் பின்­ன­ணியைக் கொண்­டதோர் அதி­கார பல­முள்ள சிவில் அதி­கா­ரி­யா­கவே அவர் பிர­பலம் பெற்­றி­ருந்தார்.
ஒரு சிப்­பா­யாக இரா­ணு­வத்தில் பிர­வே­சித்து போர்க்­கள அனு­ப­வத்தின் பின்பே அவர் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராகப் பொறுப்­பேற்­றி­ருந்தார். முடி­வின்றி தொடர்ந்த யுத்­தத்­திற்கு முடி­வு­கட்­டு­வ­தற்­காக விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாகச் செய­லி­ழக்கச் செய்ய வேண்டும் அல்­லது முழு­மை­யாகத் தோற்­க­டிக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­பக் ஷ இரா­ணுவ நட­வ­டிக்­கை­களைத் தீவ­ிரப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.
விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கையில் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்குத் தோளோடு தோள் கொடுத்து கோத்­த­பாய ராஜ­பக் ஷ உறு­து­ணை­யாகச் செயற்­பட்­டி­ருந்தார். சுதந்­தி­ர­மாக முடி­வெ­டுத்துச் செயற்­ப­டு­வ­தற்கு அவ­ரு­டைய மூத்த ஜனா­தி­ப­தியின் கூடப்­பி­றந்த சகோ­தரர் என்ற குடும்ப உறவு முறை அவ­ருக்குப் பேரு­தவி புரிந்­தி­ருந்­தது. சகோ­த­ரர்­களின் எதிர்­பார்ப்­புக்­க­மைய வெற்­றி­க­ர­மாக யுத்தம் முடி­வ­டைந்­தது.
யுத்­தத்தில் கிடைத்த வெற்றி ஜனா­தி­பதி ராஜ­பக் ஷவை மட்­டு­மல்­லாமல் அவ­ரு­டைய சகோ­த­ரரும் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரு­மா­கிய கோத்­த­பாய ராஜ­பக் ஷ உள்­ளிட்ட ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு அர­சி­யலில் ஒரு மேன்மை நிலை­மையை அளித்­தி­ருந்­தது.
யுத்­த­ வெற்­றி­யையே தனது அர­சியல் மூல­த­ன­மாகப் பயன்­ப­டுத்­திய மஹிந்த ராஜ­பக் ஷ மூன்றாம் முறை­யா­கவும் ஜனா­தி­ப­தி­யாகப் பதவிப் பிர­மாணம் செய்து கொள்­வ­தற்­காக மேற்­கொண்ட பேராசைமிக்க முயற்சி 2015 ஆம் ஆண்டு அவரைத் தோல்­வி­ய­டையச் செய்­தி­ருந்­தது. அர­சி­யலில் அவரைப் பின்­ன­டை­யவும் செய்­து­விட்­டது.
சர்­வா­தி­காரப் போக்­கிற்கும் ஜன­நா­யக சக்­தி­க­ளுக்கும் இடை­யி­லான போராட்ட கள­மா­கவே 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலும், பொதுத்தேர்­தலும் அமைந்­தி­ருந்­தன. இந்த அர­சியல் போராட்­டத்தில் ரணில்–- சந்­தி­ரிகா மற்றும் சம்­பந்தன் இணைந்த கூட்டு அமைப்பு வெற்­றியைத் தட்­டிக்­கொண்­டது. ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் இரண்டாம் நிலை தலை­வ­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன –மஹிந்­த­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கினார்.
அவப்­பெ­ய­ருக்கு ஆளா­கிய அர­சாங்கம்
வெல்­ல­மு­டி­யாத யுத்­த­மாகக் கரு­தப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் வெற்றி பெற்று அர­சி­யலில் உச்­சத்தை எட்­டி­யி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ குழு­வினர் இந்தத் தேர்தல் தோல்­வியில் முதலில் துவண்­டு­போ­னார்கள். இருப்­பினும் அந்த அர­சியல் சோர்வில் அவர்கள் தொடர்ந்து ஆழ்ந்து போயி­ருக்­க­வில்லை. மீண்டும் ஆட்­சியைப் பிடித்து அதி­கா­ரத்­திற்கு வர­வேண்டும் என்ற உத்­வே­கத்­துடன் வியூ­கங்­களை வகுத்துச் செயற்­படத் தொடங்­கினர்.
முன்னர் 2010ஆம் தேர்­த­லிலும், பின்னர் 2015 ஆம் ஆண்டு தேர்­த­லிலும் தமிழ் மக்கள் தங்­க­ளுக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­தி­ருந்­தனர் என்ற அர­சியல் யதார்த்­தத்தை அவர்கள் மிகத் தீவி­ர­மாகக் கவ­னத்திற் கொண்­டி­ருந்­தார்கள்.
இனப்­பி­ரச்­சி­னைக்கு எதிர்ப்­ப­ர­சியல் வழி­மூ­ல­மாக அழுத்­தத்தைப் பிர­யோ­கித்து அர­சியல் தீர்வு காண வேண்டும் என்­பதை அடிப்­ப­டை­யாகக்கொண்ட தமிழ்த்­தே­சி­யத்தை அவர்கள் ஏற்­கத்­தயா­ராக இல்லை. தனித்­தா­யகத் தேசியக் கொள்­கையை எதிர்­கொள்­வ­தற்கு சிங்­கள பௌத்த தேசிய கொள்­கை­யையே அவர்கள் தீவி­ர­மாகக் கையில் எடுத்­தார்கள். ஓர் உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடி­யாது. அது­போ­லவே இந்த இரண்டு தேசி­யங்கள் இந்த நாட்டில் இருக்க முடி­யாது என்­பதே அவர்­க­ளு­டைய தீர்க்­க­மான அர­சியல் நிலைப்­பாடு.
அது மட்­டு­மல்­லாமல் தொடர்ந்து எதிர்ப்­ப­ர­சி­யலில் ஈடு­பட்டு தங்­களை அர­சியல் ரீதி­யாகப் புறந்­தள்ளி வரு­கின்ற சிறு­பான்மை இன மக்­களின் ஆத­ர­வின்றி சிங்­கள மக்­க­ளு­டைய ஒத்­து­ழைப்பை மட்­டுமே ஆதா­ர­மாகக்கொண்டு தேர்­தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அர­சியல் வியூ­கத்தை வகுத்து அதற்­க­மைய அவர்கள் செயற்­படத் தொடங்­கி­னார்கள்.
இந்த நிலைப்­பாட்டின் பிர­தி­ப­லிப்­பா­கவே சமஷ்டி ஆட்சி முறையைப் புறந்­தள்ளி ஒற்­றை­யாட்சி முறையிலிருந்து வழுவிச் செல்ல முடி­யாது என்­பதில் அவர்கள் தமது அர­சியல் பிடி­வா­தத்தை வெளிப்­ப­டுத்தி வந்­துள்­ளார்கள். அந்த நிலையிலிருந்து அவர்கள் ஒரு­போ­துமே பின்­வாங்­க­வில்லை. மாறாக அதில் மேலும் மேலும் பற்­று­று­தி­யு­ட­னேயே செயற்­பட்டு வரு­வதைக் காண முடி­கின்­றது.
ஐக்­கிய தேசி­ய­க்கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்த நல்­லாட்சி அர­சாங்கம் தனது தேர்தல் கால வாக்­கு­று­தி­களைக் கைவிட்டு தங்­க­ளுக்­குள்­ளான அதி­காரப் போட்­டி­யி­லேயே அதிக கவ­னத்தைக் குவித்­தி­ருந்­தனர். முன்­னைய ஆட்­சிக்­கா­லத்து ஊழல் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தாகக் கூறிய புதிய அர­சாங்­கமே மோச­மான ஊழல்­க­ளிலும் மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி என்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் ஆளா­கி­யது.
சிறு­பான்மை இன மக்­களின் அமோக ஆத­ரவைப் பெற்று ஆட்சி அமைத்­த­வர்கள் அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வில்லை. அவர்­களின் நம்­பிக்­கையைத் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வு­மில்லை. இதனால் நல்­லாட்சி அர­சாங்கம் பொல்­லாத ஆட்சி என்ற அவப்­பெ­யரைச் சம்­பா­திக்க வேண்­டி­ய­தா­யிற்று.
வர­லாற்­றி­லேயே இல்­லாத வகையில் நாட்டின் அதி உயர் சட்­ட­மா­கிய அர­சிய­ ல­மைப்புச் சட்­டத்­துக்கு விரோ­த­மான முறை யில் பிர­த­மரைப் பதவி நீக்கம், யாரைப் பெரும் பகை­யா­ளி­யாகக் கரு­தி­யி­ருந்­தாரோ அவ­ரையே புதிய பிர­த­ம­ராக நிய­மித்து, பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து, தேர்­த­லுக்கு உத்­த­ர­விட்ட கைங்­க­ரி­யத்தைச் செய்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைத் தலை­மை­யாகக் கொண்­டி­ருந்த அரசு என்ற பெயரைத் தட்­டிக்­கொண்­டதும் இந்த நல்­லாட்சி அர­சாங்­கமே.
ஆட்சி மாற்ற அர­சியல் வியூ­கத்­திற்கு கிடைத்த உற்­சாகம்
நல்­லாட்சி அரசின் ஆளு­மை­யற்ற போக் கும், சிறு­பான்மை இனத்­த­வர்கள் பக்கம் சாய்ந்­தி­ருந்த அர­சியல் நிலைப்­பாடும் ராஜ­பக் ஷ­வி­ன­ரு­டைய அர­சியல் வியூ­கத்­திற்கு வலு­வூட்­டு­வ­ன­வாக அமைந்­து­விட்­டன. உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களும் அந்த வியூ­கத்­திற்கு உரம் சேர்த்து உத­வி­யி­ருந்­தன.
தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புடன் நல்­லாட்சி அர­சாங்கம் கொண்­டி­ருந்த அர­சியல் ரீதி­யான நெருக்­கத்தை, யுத்­தத்தில் தோற்­க­டிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களை அரசு மீள் உரு­வாக்கம் செய்­கின்­றது என்றும் இரா­ணு­வத்­தினர் உயிர்த்­தி­யாகம் செய்து அடைந்த இரா­ணுவ வெற்­றியைக் காட்­டிக்­கொ­டுத்து விடு­த­லைப்­பு­லி­களின் கொள்­கை­க­ளுக்கு அரசு உயி­ரூட்­டு­கின்­றது என்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் பெரும் பிர­சா­ரத்தை ராஜ­பக் ஷக்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.
உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதக் குண்­டுத்­தாக்­குதல் பற்­றிய முன்­ன­றி­வித் தல் உளவுத் தக­வல்கள் கிடைத்­தி­ருந்த போதிலும், அவற்றைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் தவ­றி­யி­ருந்­ததைத் தீவிரக் குற்­ற­மாகச் சுட்­டிக்­காட்டி அவர்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­பு­ரை­களைச் செய்­தி­ருந்­தனர்.
அது மட்­டு­மல்­லாமல், முஸ்லிம் பயங்­க­ர­வா­தத்­திற்கு அரசு துணை­போ­யி­ருந்­தது என்ற குற்­றச்­சாட்­டையும் அவர்கள் சிங்­கள மக்­க­ளிடம் முன்­வைத்­தி­ருந்­தனர். ஏற்­க­னவே முஸ்­லிம்கள் சிங்­கள பௌத்த தேசி­யத்­திற்கு எதி­ரா­ன­வர்கள் என்ற மனப்­ப­திவு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த மக்கள் மத்­தியில் பயங்­க­ர­வா­தத்­திற்கு அரசு துணை­போ­யுள்­ளது என்ற குற்­றச்­சாட்டு அவர்­க­ளு­டைய மனங்­களில் அரச தரப்­பினர் மீது ஆழ­மான வெறுப்­பு­ணர்வை வளர்ப்­ப­தற்கு உத­வி­யி­ருந்­தது.
ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியை ஜனா­தி­பதி என்ற பதவி வழியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இழந்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷக்கள் அந்தக் கட்­சியில் செல்­வாக்கு இழந்­தி­ருந்­தனர். கட்சி அர­சி­யலில் இழந்த செல்­வாக்கை ஈடு செய்து ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்குப் பதி­லாக இடையில் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த பொது­ஜன பெர­மு­னவை வலுப்­ப­டுத்தி அத­னையே புதி­யதோர் அர­சியல் கட்­சி­யாக உரு­வாக்கி அதன் ஊடாக சிங்­கள மக்­களின் ஆத­ரவை மட்­டுமே ஆதா­ர­மாகக் கொண்டு தேர்­தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பிர­மாண அம்­சத்தை உள்­ள­டக்­கிய தமது அர­சியல் வியூ­கங்­களை ராஜ­பக் ஷக்கள் மிகக் கச்­சி­த­மாகச் செயற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.
அடி­மட்­டத்­தி­லான பிர­தேச சபையிலி ருந்து மக்கள் மத்­தியில் அவர்கள் மிகக் காத்­தி­ர­மான பிர­சாரச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து பொது­ஜன பெர­மு­ன­வுக்­கான ஆத­ரவுத் தளத்தைக் கட்­டி­யெ­ழுப்பி இருந்­தனர். அவர்­க­ளு­டைய இன­வாத அர­சியல் பரப்­புரைச் செயற்­பா­டு­களின் திறம் உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­பட்­டி­ருந்­தது.
அதி­கா­ரத்திலிருந்த அரச தரப்­பினர் அந் தத் தேர்­தலில் மோச­மான பின்­ன­டை­வை யும் தோல்­வி­யையும் தழு­வி­யி­ருந்­தனர். பொது­ஜன பெர­முன சிங்­கள மக்கள் மத்­தியில் புத்­தெ­ழுச்­சி­யுடன் முகிழ்த்து எழுந்­தி­ருந்­தது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வுக்குக் கிடைத்த வெற்றி, மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­கான ராஜ­பக் ஷக்­களின் அர­சியல் வியூகச் செயற்­பா­டு­க­ளுக்கு மிகுந்த உற்­சா­கத்தை அளித்­தி­ருந்­தது.
பாராளு­மன்­றத்திலிருந்து கிரா­மிய மட்டம் வரை­யி­லான அர­சியல் செயற்­பா­டுகள்
இத­னை­ய­டுத்து அவர்கள் ஜனா­தி­பதி தேர்­தலை இலக்கு வைத்து தமது அர­சியல் பிர­சா­ரங்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் அடி­மட்­டத்திலிருந்து நன்கு திட்­ட­மிட்ட வகையில் தீவி­ர­மாக முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இந்த அர­சியல் செயற்­பாடே கைமேல் பல­னாக கோத்­த­பாய ராஜ­பக் ஷவை ஜனா­தி­பதி தேர்­தலில் 13 லட்சம் மேல­திக வாக்­கு­க­ளினால் வெற்றி பெறு­வ­தற்கு வழி வகுத்­தி­ருந்­தது.
தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, கோத்­த­பா­யவின் வெற்றி குறித்து கருத்­து­ரைத்த அவ­ரு­டைய பெறா­ம­கனும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய நாமல் ராஜ­பக் ஷ வெளி­யிட்ட கருத்து இதனை உறுதி செய்­வ­தாக உள்­ளது. மக்கள் விரும்பும் ஆட்சி முறையை உரு­வாக்­கு­வ­தற்கு பாராளு­மன்றம் தொடக்கம் கிரா­மிய மட்டம் வரையில் முன்­னெ­டுத்த முயற்­சிகள் அனைத்தும் இன்று வெற்றி பெற்­றுள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார் என்­பது கவ­னத்­திற்­கு­ரி­யது.
பொது­ஜன பெர­மு­னவை வளர்த்­தெ­டுப்­ப­தற்­காக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் மனங்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அவர்­களைக் கட்சி மாறச் செய்­வதில் தாங்கள் மேற்­கொண்ட முயற்­சி­க­ளையே பாராளு­மன்­றத்திலிருந்து முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  
நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான எண்ணக் கருத்­துக்கள் மட்­டு­மல்ல. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத்தைத் தடுப்­ப­தற்கு இய­லாத ஆட்­சி­யா­ளர்கள் என்ற மனப்­ப­தி­வையும் ஏற்­ப­டுத்தி சிங்­கள மக்­களைத் தம் பக்கம் திருப்­பு­வதில் ராஜ­பக் ஷக்கள் பெரும் வெற்றி பெற்­றி­ருக்­கின்­றனர். அதே­நேரம் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆளு­மை­யற்ற அர­சியல் தலை­மைகள் குறித்த பிர­சா­ரமும் அவர்­க­ளுக்கு சிங்­கள மக்­களின் மனங்­களை வென்­றெ­டுப்­ப­தற்கு வழி­வ­குத்­தி­ருந்­தது.
ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­கண்ட அர­சியல் ருசியைத் தொடர்ந்து, அடுத்து வர­வுள்ள மாகா­ண­சபைத் தேர்தல், பொதுத் தேர்தல் என்­பன­வற்­றிலும் இதே­பா­ணி­யி­லான பிர­சார நட­வ­டிக்­கைகளை இன்னும் தீவி­ர­மாக ராஜ­பக் ஷக்கள் மேற்­கொண்டு முன்­னோக்கி நகர்­வார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.
இரா­ணுவ தொழில்­முறை சார்ந்த மனப்­பாங்கைக் கொண்­டுள்ள கோத்­த­பாய ராஜ­பக் ஷ கட்­டுக்­கோப்­பான நிர்­வாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்வார் என திட­மாக நம்­பலாம். தீர்­மா­னங்கள் மேற்­கொள்­வதில் தயக்கம் காட்­டாத அவ­ரு­டைய போக்கு ஜனா­தி­பதி என்ற நிலைப்­பாட்டில் பல துணி­க­ர­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்குப் பேரு­த­வி­யாக அமைந்­தி­ருக்கும் என்று எதிர்­பார்க்­கலாம்.
அதே­வேளை, பாது­காப்பு அமைச்­ச­ராக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யா­கிய அவர் அந்தப் பத­விக்­கு­ரிய அதி­கா­ரங்கள் வெட்­டிக்­கு­றைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் தேசிய பாது­காப்­புக்குப் பொறுப்­பா­னவர் என்ற ரீதியில் அவர் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கத் தயங்­க­மாட்டார். அர­சியல் விட­யங்­களை தனது மூத்த சகோ­த­ர­ரா­கிய மஹிந்த ராஜ­பக் ஷ பார்த்துக் கொள்வார் என்­பதை ஏற்­க­னவே அவர் வெளிப்­ப­டை­யாகக் கூறி­யி­ருக்­கின்றார்.
கோத்­தாவின் கூற்றிலுள்ள மறை­பொருள்
சிங்­கள மக்­களே தனது வெற்­றிக்குக் கார­ண­மாக இருந்­தார்கள் என்­பதைத் தனது பத­வி­யேற்பு நிகழ்­வின்­போது சுட்­டிக்­காட்­டிய அவர், வடக்கு–கிழக்குப் பிர­தே­சங்­களைச் சேர்ந்த சிறு­பான்மை இன மக்கள் தனக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தையும் நினை­வு­ப­டுத்­தி­யுள்ளார். அதே­வேளை அதற்­காக அவர்­களைத்தான் ஒதுக்­கி­விடப்போவ­தில்லை என்­பதைக் குறிப்­பிட்­டுள்ளார்.
தேர்­தலில் சிறு­பான்மை இன மக்­களின் பங்­க­ளிப்பு தனக்குக் கிடைக்க வேண்டும் என விரும்­பி­யி­ருந்­த­தா­கவும், ஆனால் அது கிடைக்­க­வில்லை என்­ப­தையும் எடுத்­து­ரைத்து, நாட்டை முன்­னேற்றிச் செல்­வ­தற்கு சிறு­பான்மை இன மக்கள் தங்­க­ளுடன் இணைந்து பங்­க­ளிப்புச் செய்ய முன்­வ­ர­வேண்டும் என்றும் அழைப்பு விடுத்­துள்ளார். தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வுப் பிரச்­சினை குறித்தோ, முஸ்லிம் மக்­களின் மத ரீதி­யான பாது­காப்பு குறித்தோ அவர் மறந்­தும்­கூட தனது பத­வி­யேற்பு வைபவ உரையில் எத­னையும் குறிப்­பி­ட­வில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­பது அர­சியல் பிரச்­சி­னை­யாக இருப்­ப­தனால், அர­சியல் விவ­கா­ரங்­களைக் கவ­னிக்­க­வுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ அதைப்­பற்­றிய கருத்­துக்­களை வெளி­யி­டு­வார்­தானே என்ற எண்­ணத்தில் அவர் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் முஸ்­லிம்­களின் மத ரீதி­யான பாது­காப்பு என்­பது நாட்டின் பாது­காப்பு விவ­கா­ரங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாக இருந்தபோதிலும், அது குறித்து அவர் வேண்டுமென்றே தவிர்த்­தி­ருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.
நாட்டை முன்­னேற்­று­வ­தற்கு சிறு­பான்மை இன மக்கள் பங்­க­ளிப்பு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்த அவர் அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பது தொடர்­பாகக் கருத்துரைத்­தி­ருக்க வேண்டும் அல்­லது அது குறித்த சமிக்­ஞை­யை­யா­வது வெளிப்­ப­டுத்தியிருக்க வேண்டும். அதனை அவ­ரு­டைய உரையில் காண­வில்லை.  
சிறு­பான்மை இன மக்கள் தங்­க­ளுடன் இணைந்து நாட்டின் முன்­னேற்­றத்­திற்குப் பங்­க­ளிப்பு செய்ய வேண்டும் என்ற கூற்றில் முக்­கிய விடயம் பொதிந்­தி­ருக்­கின்­றது. அர­சு­ட­னான பங்­க­ளிப்பு என்­பது சிறு­பான்மை இன மக்கள் குறிப்­பாக தமிழ் மக்கள் தங்­க­ளு­டைய அர­சியல் அபி­லா­ஷை­களை முதன்­மைப்­ப­டுத்­திய நிலை­யி­லான செயற்­பா­டு­க­ளுக்கு இட­மில்லை என்­ப­தையே அவர் தொனி செய்­துள்ளார்.
சிங்­கள பௌத்த தேசி­யத்தின் அடிப்­ப­டையில் ஆட்­சி­யா­ளர்கள் என்ன நிலைப்­பாட்டைக் கொண்­டி­ரு­க்கின்­றார்­களோ அந்த நிலைப்­பாட்டை ஏற்று அதற்கு ஒத்­து­ழைக்கும் வகையில் சிறு­பான்மை இன மக்கள் நாட்டின் முன்­னேற்­றத்­திற்குப் பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும் என்­பதே அவ­ரு­டைய கூற்றின் மறை­பொ­ரு­ளாகும்.
அடுத்­தது என்ன, சுவ­ாரஸ்­யமா அல்­லது சோர்வு நிலையா?
மனித உரிமை மீறல்கள் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­னவற்­றுக்குப் பொறுப்பு கூறு­கின்ற செயற்­பா­டு­க­ளுக்கு தங்­க­ளிடம் இட­மில்லை என்­பதை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பே கோத்­தபாய தெளி­வாகக் கூறி­யுள்ளார். இதே நிலைப்­பாட்­டையே இவ­ருக்கு முன்­ன­தாக மஹிந்த ராஜ­பக் ஷ தெளி­வாகப் பல தட­வைகள் எடுத்­து­ரைத்­தி­ருந்தார் என்­பதும், அந்த நிலைப்­பாட்டிலிருந்து அவர் இன்னும் மாற­வில்லை என்­பதும் நினை­வு­றுத்­து­வது முக்­கியம்.
நாட்டில் அர­சியல் ரீதி­யாகப் பிரச்­சி­னைகள் இல்லை. பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களே உள்­ளன. பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதன் ஊடாக நாட்டில் நிரந்­த­ர­மான அமை­தி­யையும் ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்க முடியும் என்­பது ராஜ­பக் ஷக்­களின் அசைக்க முடி­யாத நம்­பிக்கை. இந்த அடிப்­ப­டை­யி­லேயே அவர்கள் சிறு­பான்மை இன மக்­களின் பங்­க­ளிப்பை எதிர்­நோக்­கி­யுள்­ளார்கள்.
அவர்­களின் இந்த அர­சியல் நம்­பிக்­கையே நாட்டை இன ரீதி­யாகப் பிள­வு­படச் செய்­தி­ருக்­கின்­றது. இந்த பிளவு சரி­செய்­யப்­பட வேண்­டு­மானால் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி ஏற்­றுள்ள கோத்­த­பாய ராஜ­பக் ஷ சிறு­பான்மை மக்­க­ளுக்கும் தானே ஜனா­தி­பதி என்ற வகையில் அவர்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்து பல­ராலும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் இன்­றைய அர­சியல் யதார்த்தம் அத்­த­கை­ய­தொரு நகர்­வுக்கு இட­மில்லை என்­ப­தையே மறை­மு­க­மாக வெளிப்­ப­டுத்தி யிருக்­கின்­றது.
இந்த நிலையில் சிறு­பான்மை மக்­களின் பங்­க­ளிப்பைத் தேடிச் செல்­லாத அர­சியல் அணு­கு­மு­றையைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வு­டைய நிர்­வா­கத்தில் சிறு­பான்மை இன மக்கள் குறிப்­பாக தமிழ் மக்கள் எத்­த­கைய அர­சியல் அணு­கு­மு­றையைக் கையாளப் போகின்­றார்கள் என்­பதே முக்­கிய விட­ய­மாகும்.
சிறு­பான்மை இன மக்களாகிய தமிழ் மக்களையும் அரவணைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறை படிப்படியாகக் கைவிடப்பட்டு, இப்போது அவர்களின் அனுசரணை இல்லாமல் சிங்கள மக்களுடைய ஆதரவில் மாத்திரமே அரச அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்த முடியும் என்ற புதிய அரசியல் வழித்தடம் இந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம்  திறக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில் தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது, எத்தகைய அரசியல் அணுகுமுறையை அல்லது அரசியல் தந்தி ரோபாயத்தைக் கடைப்பிடிக்கப் போகின்றது என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. இது வரையிலான அரசியல் போக்கில் மாற்றங் கள் அவசியம் என்பதை இந்தத் தேர்தல் தெளிவாக உணர்த்தி இருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற் பது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமை ப்பு பரிசீலிக்க உள்ளதாக கூட்டமைப் பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரு மாகிய சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்தும் இந்த புதிய அரசியல் வழித்தடத்தின் அடை யாளமாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.
எதிர்ப்பரசியலைத் தீவிரமாகக் கடைப்பி டித்து, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் வரையில் அரச அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில்லை என்பதில் பிடிவாதமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது. இந்தக் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து மாறுவது பற்றி அது இப்போது சிந்திக்கத் தொடங்கியிருப்பது நாட்டு அரசியலின் தீவிரத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சாத்வீகப் போராட்டம் தொடக்கம் யுத்த மோதல்கள் அதனையடுத்த யுத்த முடிவு வரையில் அழித்தொழிக்கின்ற அரசியல் அணுகுமுறையே அரச தரப்பில் கடைப்பி டிக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இரண்டறக் கலக்கச் செய்கின்ற அரசியல் அணுகுமுறையில் சிங்கள பௌத்த தேசியம் தீவிர கவனத்தைச் செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில் எதிர்ப்பரசியலில் இருந்து அனுசரணை அரசியலுக்குத் தாவி யுள்ள தமிழ்த்தரப்பு அடுத்ததாக சரணாகதி அரசியலை நோக்கி நகர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதோ என்று எண் ணத் தோன்றுகின்றது.
இந்த நிலையில் அடுத்தடுத்த அரசியல் நிலைமைகள் சுவராஸ்யம் மிக்கதாக இருக்குமா அல்லது சோர்ந்து தளர்வதாக இருக்குமா என்பது தெரியவில்லை.
பி.மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி 
















No comments: