பாகிஸ்தான், இந்தியருக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கிய பதவிகள்


26/07/2019 லண்டன், ( நியூஸ் இன் ஏசியா ) உண்மையான ஒரு பல்லின நாடாகுவதை நோக்கிய பிரிட்டனின் பயணத்திற்கு சான்றாாக இரு தெற்காசிய நாட்டவர்களுக்கு ( இந்தியா, பாகிஸ்தான் ) புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கியமான பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  பிரீதி பட்டேல் உள்துறை அமைச்சராகவும்  பாகிஸ்தானிய வம்சாவளியினரான  சாஜித் ஜாவித் நிதியமைச்சராவும் பதவியேற்றிருக்கிறார்கள். 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்று உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கும் பட்டேல், தெரேசா மேயின் பிரெக்சிட் தந்திரோபாயத்தை மிகவுமம் கடுமையாக எதிர்த்து விமர்சித்த ஒருவராவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரிட்டனின் உள்துறை அமைச்சராக வந்திருப்பது இதுவே முதற்தடவையாகும். தெரேசா மேயின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த சாஜித் ஜாவித்தை பிரீதி பதிலீடு செய்திருக்கிறார். பிரிட்டனில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக ஜாவித்தின் நியமனம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
" எமது நாட்டைப் பாதுகாப்பானதாகவும் எமது மக்களைப் பத்திரமாகவும் வைத்திருப்பதற்கு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட சகலதையும் செய்வேன்.எமது வீதிகளில் நாம் காண்கின்ற வன்முறைக்கொடுமையை எதிர்த்து நான்போாடுவேன்.எமக்கு முன்னாலுள்ள சவால்களுக்கு முகங்கொடுப்போம் " என்று ஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அலவலகத்தில் தனது உயர்பதவி குறித்து குறிப்பிட்டபோது பட்டேல் வியாழனன்று கூறினார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின்தலைமைத்துவத்துக்கு  " போறிஸை ஆதரிப்போம் " என்ற பிரசாரத்தின் முக்கியமான  உறுப்பினராக இருந்து வந்த பட்டேல் புதிய பிரதமரின் அமைச்சரவையின் முன்னரங்கக்குழுவில்  அதிமுக்கியமான ஒரு பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது." அமைச்சரவை நவீன பிரிட்டனையும் நவீன கன்சர்வேட்டிவ் கட்சியையும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டியது முக்கியமானதாகும் " என்று தனது நியமனத்துக்கு சில மணித்தியாலங்கள்  முன்னதாக புதன்கிழமை பட்டேல் கூறினார்.
ஐரோப்பிய ஒனன்றியத்தில் பிரிட்டன் அங்கம் வகிப்பது குறித்து நீண்டகாலமாக  பலத்த ஐயுறவைக்கொண்டவராக விளங்கிய பட்டேல், 2016 ஜூன் சர்வஜனவாக்கெடுப்புக்கு முன்னதாக ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக தீவிரமாகப் பிரசாரம் செய்தார்.
47 வயதான அவர் 2010 ஆம் ஆண்டில் எசெக்ஸின் விதாம் தொகுதியில் இருந்து கன்சர்வேட்டிவ் எம்.பி.யாக தெரிவுசெய்ப்பட்டார்.டேவிட் கமரூனின் கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தில் அவரின் ' புலம்பெயர் இந்திய சமூகத்தின் ' குரலாக பட்டேல் பிரபல்யமடைந்தார்.
2014 ஆம்ஆண்டில் திறைசேரி அமைச்சராக ஒரு கனிஷ்ட அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பட்டேல் 2015 பொதுத்தேர்தலுக்குப் பிறகு தொழில்வாய்ப்பு அமைச்சரானார்.பிரெக்சிட் சர்வஜனவாக்கெடுப்பை அடுத்து கமரூன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.புதிய பிரதமராகப்  பதவியேற்ற தெரேசா மே 2016 பட்டேலை சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களத்தில் இணை அமைச்சராக நிமித்தாார்.2017 இல் அந்தப்்பதவியில் இருந்து அவர் விலகினார்.
"போறிஸ் ஜோன்சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருக்கும் நிலையில், பிரிட்டனை நம்புகின்ற ஒரு தலைவரை ஐக்கிய இராச்சியம் கொண்டிருக்கும்.அவர் நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய நோக்கொன்ற நடைமுறைப்படுத்துவார். எமது உறவுகளை நண்பர்களுடனும் இந்தியா போன்ற உலகம் பூராவும் இருக்கின்ற நேசநாடுகளுடனும் மீளநிறுவிக்கொள்கின்ற -- சுய ஆட்சியுடைய தேசமாக பிரிட்டனை முன்னிலைப்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றையும் அவர் வகுப்பார்" என்று இவ்வார ஆரம்பத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின்்தலைமைத்துவத்துக்கான போட்டியில்  ஜோன்சன் மகத்தான வெற்றிபெற்ற பிறகு பி.ரி.ஐ.செய்தி நிறுவனத்துக்கு பட்டேல் கூறினார்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்தல்
"  இந்தியாவில் உள்ள எமது நண்பர்களுடன் பதியதும் மேம்பட்டதுமான வர்த்தக உறவுமுறையை வளர்த்துக்கொள்வதில் பிரதமர் ஜோன்சன் பற்றுறுதி கொண்டிருப்பதுடன்  உலக அரங்கில் எமது முக்கியமான பங்காளி நாடுகளில் ஒன்றான இந்தியாவுடனான ஊடாட்டங்களைப் பொறுத்தவரை, இருதரப்புகளுக்கும் பொதுவானதாக விளங்குகின்ற -- சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் ஊக்கம் வாய்ந்த தொழில்முனைவு உணர்வு -- விழுமியங்களை உறுதிசெய்துகொள்வதில் கருத்தூன்றிய கவனம் செலுத்தப்படும்" என்று பட்டேல் கூறினார்.
சாஜித் ஜாவித் 
பிரிட்டனின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முதலாவது நிதியமைச்சர் என்ற பெருமையைத் தனதாக்கிக்கொண்டிருக்கும் சாஜித் ஜாவித் எளிமையான பின்னணியில் இருந்து இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கையாளும் பொறுப்பான பதவிக்கு வந்து உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்.
49 வயதான ஜாவித்தின் பெற்றோர்  பாகிஸ்தானில் இருந்துவந்து பிரிட்டனில் குடியேறியவர்கள்.நிதியியலில் நன்கு தேர்ச்சி பெற்றவரான ஜாவித் 25 வயதில் அமெரிக்காவின் ஷேஸ் மன்ஹற்றன் வங்கியின் உப தலைவர் பதவியை வகித்தவர் ; பாராளுமன்றத்தில் பிரவேசித்த பிறகு நான்கு வருடங்கள் ஒரு அமைச்சராக இருந்திருக்கிறார்.
அவர் முன்னாள் பிரதமர் மார்கரட் தட்சரின் மிகப்பெரிய அபிமானி. இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட தட்சரின் உருவப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறார்.ஒரளவு  கூச்ச சுபாவமுடைய ஜாவித்  திறந்த சந்தைக் கொள்கை மற்றும் குறைந்த வரி மீது தட்சருக்கு இருந்த அதீத விருப்பத்தினால் கவரப்பட்டவர் ; சிறந்த ஒரு பேச்சாளராக அறியப்பட்டவர் அல்ல.
 ஜாவித்தின் தந்தையார்  பஸ்சாரதி. அவர்கள் வாழ்ந்த பிறிஸ்டலின் ஸ்ரப்லெரொன் வீதி பிரிட்டனி்ன்  ' மிகவும் மோசமான வீதி ' என்று பத்திரிகைகளினால்  வர்ணிக்கப்பட்டது. 
எக்ஸ்ரர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தையும் அரசியலையும் கற்று பட்டம் பெற்ற பிறகு வங்கித்துறையில் 20 வருடங்கள் பணியாற்றிய ஜாவித் அரசியலில் மிகவும் விரைவாக முன்னேறியவர்.2010 ஆம்்ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தெரிவான அவர் கலாசார இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். நான்கு வருடங்கள் கழித்து அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் முழுமையான பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உள்துறை அமைச்சரானார்.  நன்றி வீரகேசரி 










No comments: