ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - புதிய காரணம் வெளியாகியது
கன்னியா விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்
மானிப்பாயில் இளைஞன் சுட்டுக்கொலை ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய
வெலிகடைச் சிறைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு…
வைத்தியர் ஷாபிக்குப் பிணை!
சகோதரர்களுக்கு இடையில் மோதல் ; இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வைரவர் ஆலயம் - யாழில் சம்பவம்
இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியரான மு.சின்னத்தம்பி காலமானார்
ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - புதிய காரணம் வெளியாகியது
22/07/2019 யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை முன்பாக ஆவா குழு உறுப்பினர் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் மானிப்பாய் - இணுவில் சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்ட ஆவா குழு உறுப்பினருடன் அப்பகுதிக்கு வந்து, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, தப்பியோடிய 5 ஆவா குழு உறுப்பினர்களில் இருவரை நேற்று மாலை ஆகும் போதும் பொலிஸார் அடையாளம் கண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர வீரகேசரிக்கு கூறினார்.
அடையாளம் காணப்பட்டோரைக் கைது செய்யவும் ஏனையோரை அடையாளம் காணவும் விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வருடத்தில் நேற்று வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 27 ஆவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் இரவு 8.40 மணியளவில், யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவின் இணுவில் இணைப்பு வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர். ஆவா குழு இணுவில் பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்த வருவதாக மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, முன் கூட்டியே பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைப்படி, கோப்பாய், மானிப்பாய் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவினர் இரவு நேர விஷேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் பல இடங்களிலிலும் பாதைகளில் வாகனங்களை சோதனை செய்துள்ளனர். அதன்படியே இணுவில் இணைப்பு வீதியிலும் பொலிஸ் குழுவொன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்போது ஒரே நேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வருவதை அவதானித்துள்ள பொலிஸார் அம்மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சமிக்ஞை காண்பித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளில் முன் நோக்கி பயணிக்கவே, பொலிஸார், தமது தற்காப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
இதன்போது என்.பி. பீ.எப்.ஏ.4929 எனும் இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது துப்பாக்கி தோட்டாக்கள் இரண்டு பாய்ந்துள்ளன.
இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடின்றி அருகில் இருந்த மதிலுடன் மோதி விழுந்துள்ளதுடன், குண்டடிபட்ட இளைஞனும் படுகாயமடைந்துள்ளான். இதனையடுத்து 22 வயதான கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் எனும் அந்த இளஞனை பொலிஸார் யாழ். வைத்தியசாலையில் அனுமதித்தனர், எனினும் அங்கு சிகிச்சைப் பலனின்று அவ்விளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் நேற்று குறித்த இளைஞன் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் யாழ். வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்போது துப்பாக்கிச் சூட்டினால் அதிக இரத்தம் வெளியேறியதால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து குறித்த மோட்டார் சைக்கிளுக்கு மேலதிகமாக 2 வாள்கள், மேலும் இரு கூரிய ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடும் போலியானது என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ள பொலிசார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்பினர் ஒருவரினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணப் பை ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே மீள தலை தூக்கும் ஆவா குழுவை ஒடுக்கவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மானிப்பாய், கோப்பாய் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
22/07/2019 திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது.

இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேசத்தின் காணி உரிமையாளரான மாரியம்மன் ஆலய முகாமையளாரினால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றத்திற்குள்ள கிழக்கு மாகாண காணி தொடர்பான எழுத்தாணைக்கமைய இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. இன்றைய இந்த நீதிமன்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழக்காளியான ஆலய முகாமையாளர் தரப்பில் ஆஜாராகியிருந்தார்.
இதற்கிணங்க இந்துக்களின் மத நடவடிக்கைளுக்கு எவரும் எந்தத் தடையும் ஏற்படத்தமுடியாது என சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
22/07/2019 கன்னியா வெந்நீருற்று பகுதியை மீள பூர்விக மக்களிடம் கையளிக்குமாறு திருகோணமலை நீதி மன்ற கட்டித் தொகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதி மன்றத்திலே மிக முக்கியமான நான்கு விடயங்களுக்கு நீதி மன்றம் தடையுத்தரவை வழங்கி இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அவர்கள் அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மாகாண மேல் நீதி மன்றத்தில் தடையுத்தரவை பெற்றதன் பின் நீதி மன்ற முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நிருற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்பட்டுள்ளது. இந்த ஆதனங்கள் திருகோணமலை மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்கள் அதனுடைய நம்பிக்கைப் பொறுப்பளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா உள்ளார். எனவே அவர்தான் இன்று வழக்கைகின் மனுதாரராக நீதி மன்றத்திற்கு கொண்டு வந்து வெந்நிருற்று பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மக்கள் செய்து வந்த கிரிகைகளை தற்போது தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாட்டை வைத்திருக்கின்றார்.
இது சம்மந்தமான எழுத்தாணை வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற படியால் காணி தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட எழுத்தானைகளை நீதி மன்றம் வழங்க முடியும். எனவே கிழக்கு மாகாண நீதி மன்றம் இன்று 22ம் திகதி திருகோணமலை அமர்விலே எமது எழுத்தனை மனுவை பரிசீலித்து நீதி மன்ற நியாயத்திட்டத்திற்கு உட்பட்ட விடயம் கருதி இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல்கள் அவர்களுக்கு முறையே சேர்ப்பிக்கப்பட்டது. என்பதை உறுதி செய்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடைக்கால தடை உத்தரவு ஐந்தில் நான்கை நீதி மன்றம் வழங்கியுள்ளது.
இதில் ஒரு இடைக்கால தடையுத்தரவு பிள்ளையார் ஆலயத்தை மீள கட்டுவதை எவரும் தடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தோம் அதனை நீதி மன்றம் வழங்க வில்லை. அது சம்மந்தமாக தொல் பொருள் திணைக்களம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. எனவே வழக்கின் இடையில் அல்லது வழக்கின் இறுதியில் இது தொடர்பாக இரு தரப்பினையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக மன்று கூறியுள்ளது.
எனினும் மிக அவசரமான மற்றைய நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டள்ளது.
இவற்றில் முதலாவதாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு நீதி மன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரதேசத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுக்கக் கூடாது, அடுத்தாக ஆலயத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் செல்பவர்களிடம் டிக்கட் விற்று பணம் பெறக் கூடாது என்றும் சுதந்திரமாக இந்து மக்கள் சென்று வர வேண்டும் என்றும் அதனை அவரும் தடுக்கக் கூடாது என்றும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக இந்த ஆதனங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா அவர்களும் அவர்களின் முகவர்களும் இந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்காவதாக மிகுதிப் பிரதேசத்தை அதாவது பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று உள்ள இடத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதி மன்ற கட்டளைகளையும் நீதி மன்ற பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர் இருவருக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி சமூகமளிக்குமாறு அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அவசரமாக இன்னுமொரு கோரிக்கையையும் முன் வைத்தோம். அதாவது இந்த வெந்நீருற்றுக்களிலே தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம் அதிலேயும் விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அணைவரும் மேற்கொள்வது வழக்கம் எதிர்வரும் 31ம் திகத இந்த ஆடி அமாவாசை தினம் ஆதலால் இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள் அப்படி தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரிகைகளை மேற் கொள்ள முடியும் . என்றார்
முழு இந்து மக்களுக்குமாக கோகிலவாணி ரமனி அம்மையார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருக்கும் அனைத்து மக்கள் சார்பிலும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
23/07/2019 மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் வழங்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது
கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் பதுங்கிருந்த மூவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்தனர்.
அவர்களில் இருவர், இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட போது பின்னால் நான்காவது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்தேகநபர்களைத் தேடி தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதால் கைது செய்யப்பட்டோரின் விவரத்தை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர்.
பொலிஸாரின் கண்ணில் தென்பட்டுத் தப்பித்த 5 பேரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. நன்றி வீரகேசரி
22/07/2019 டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கப்போவதில்லை.
அதனால் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக பதில் வேட்பாளர்களை நியமிக்க முயற்சிக்கவேண்டாம். பிரதான வேட்பாளருக்கு ஒத்ததாக ஆடை அணிந்தும் உருவத்தை மாற்றிக்கொண்டு செயற்படுவதும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக சுயாதீனமாக போட்டியிட களமிறங்கும் யாராவது பதிலாள் வேட்பாளர் போன்று செயற்பட்டால் அவர் பதிலாள் என்று பகிரங்கப்படுத்த ஆணைக்குழுவுக்கு நேரிடும். அவர்கள் எங்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
வெலிகடைச் சிறைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு…
25/07/2019 தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட வெலிகடைப் படுகொலையின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு காரியாலத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தம் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உபதவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசபைத் தவிசாளர் யோகநாதன், போரதீவுப் பற்றுப் பிரதேசபைத் தவிசாளர் ரஜனி உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் குட்டிமணி, தளபதி தங்கதுரை ஆகியோரின் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1983ம் ஆண்டு ஜுலை 25 தொடக்கம் 27ம் திகதி காலப்பகுதிகளில் இடம்பெற்ற வெலிகடைச் சிறைச்சாலை கலவரத்தின் போது குட்டிமணி தங்கதுரை உட்பட போராளிகள், பொதுமக்கள் என 53 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். அத்தினத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தினால் தமிழ்த் தேசிய வீரர்கள் தினமாக வருடாவருடம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வைத்தியர் ஷாபிக்குப் பிணை!
25/07/2019 சொத்துக்குவிப்பு மற்றும் கருத்தடை செய்தமை போன்ற போலியான இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த மேதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சுமார் 2 மாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிரேஷ்ட வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹம்மட் ஷாபி இன்றைய தினம் 2,50000 ரூபா ரொக்க பிணையிலும் 2.5 மில்லியன் ரூபாவுடைய 4 சரீர பிணையிலும் சற்றுமுன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் குருணாகல் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை குருணாகல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (25) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
இதேவேளை வைத்தியர் ஷாபியின் வழக்கு விசாரணைக்கு முன்னதாக குருணாகல் மக்களினால் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று (25) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.



சகோதரர்களுக்கு இடையில் மோதல் ; இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வைரவர் ஆலயம் - யாழில் சம்பவம்
25/07/2019 யாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த அயலவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் குறித்த கும்பல் களவாடி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அயலவரான முதியவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த ஆலயம் பல வருடங்கள் தொன்மையானது. அவ்வாலயத்தை பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் பாதுகாத்து வந்தது. அக்குடும்பத்தில் இறுதியாக பாதுகாத்து வந்தவர் 1983 ஆம் கால பகுதியில் வெளிநாட்டுக்கு செல்லும் போது, ஆலயத்தில் அணைத்து தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ள வழியமைத்து கொடுத்தார்.
அதனை தொடர்ந்து அயலவர்கள் பலரும் வைரவரை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு கால பகுதியில், ஆலயத்திற்கு அருகில் வசிப்போர் , புலம்பெயர் தேசத்தில் வசிப்போர் என பலரின் நிதி பங்களிப்புடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பான முறையில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த ஆலயத்தினை ஆரம்ப காலங்களில் ஆதரித்து வந்த குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் உருவாகி முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. குறித்த ஆலயமே கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற காரணமாக அமைந்திருந்தன.
இந்நிலையிலையே ஆலயத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று ஆலயத்தினை முற்றாக இடித்தழித்ததோடு ஆலய விக்கிரகங்களையும் களவாடி சென்றுள்ளனர்.
குறித்த கும்பலை புலம்பெயர் நாட்டில் வாழும் ஆலயத்தினை முன்னைய காலத்தில் ஆதரித்து வந்தவரின் மகளே காசு கொடுத்து கூலிக்கு அமர்த்தி இந்த நாசகார செயலை செய்வித்துள்ளார் என நாம் சந்தேகிக்கின்றோம்.
ஆலயம் இடித்தழிக்கப்பட்டு, விக்கிரகங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளோம். பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பில் இந்து சமய பெரியவர்கள் , அமைப்புக்கள் உள்ளிட்டவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் இடிக்கப்பட்ட ஆலயத்திற்கு நேரில் சென்று பார்த்து எமக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆலயத்திற்கு நிதியுதவி கோரி இருந்தோம். அவரும் நிதி ஒதுக்கி இருந்தார். அந்த நிதியில் ஆலயத்தினை மேலும் சில புனரமைப்பு வேலைகளை செய்ய முயன்ற போதிலேயே ஆலயம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது என கவலையுடன் முதியவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியரான மு.சின்னத்தம்பி காலமானார்
28/07/2019 இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமைக்குரிய பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.
கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் முத்துசாமி –முத்துவடிவு தம்பதிகளுக்கு பிறந்த இவர், அங்குள்ள தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இவரது தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தராவார். 1948 ஆம் ஆண்டு இவரது குடும்பம் தலவாக்கலை கல்கந்த எனும் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் தலவாக்கலை அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்லிப்பளை மகஜனா கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்தார். 1965 இல் உதவி விரிவுரையாளராகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணி பட்டத்தைப் பெற்றார். 1974 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகி கடமையாற்றி வந்த இவர், 1993 ஆம் ஆண்டு பொருளியல்துறை பேராசிரியராகவும் 1997 இல் துறைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு 2006 இல் ஓய்வு பெற்றார். தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டு பத்தாண்டு திட்ட உருவாக்கத்தில் தொழில் கல்வி சம்பந்தமான குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு காத்திரமான பங்களிப்பை செய்தார். தேயிலையின் செழுமையும் தொழிலாளர்களின் ஏழ்மையும் என்ற ஆய்வு நூலிற்காக 2015 ஆம் ஆண்டு இவருக்கு சாகித்ய விருது கிடைத்தது.
தோட்டத்தொழிலாளர்களின் மாதச்சம்பளம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டியதன் அவசியம் ஏன் என்பதை புள்ளி விபரங்களோடு ஆய்வு செய்து வெளியிட்ட இவர், மலையக பல்கலைக் கழகம் பற்றிய செயற்பாடுகளில் காத்திரமான கருத்துக்களை முன்வைத்தார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
– எம். வாமதேவன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment