கனவுகளை விதைத்த மல்லிகை ஜீவாவும் கனவுலகில் வாழும் டொமினிக்ஜீவாவும்

.

                                                                                                                                  முருகபூபதி
இந்த ஆண்டு (2015 ) தொடக்கத்தில் நான்  இலங்கைக்கு  வந்ததும்  முதலில்  தொலைபேசியில்  பேசியவர்களில்   டொமினிக்ஜீவாவும்  ஒருவர்.   அவர்  நீண்ட காலம் நடத்திய   மல்லிகை  இதழ்  நிறுத்தப்பட்டதன்  பின்னர்  அவரை சந்திப்பதற்கு   சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.   எனினும்  2011 இற்குப்பின்னர்   அவருடன்  தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன்.   
 மல்லிகை   நின்றுவிட்டதை  அறிந்து அவர்பற்றிய   நீண்ட  விரிவான  கட்டுரையும்  எழுதினேன்.   பல  இதழ்களில் வெளியானது
அவரது   பால்ய கால   நண்பர்  எஸ்.பொ.   சிட்னியில்  மறைந்ததும் தகவலும்  சொன்னேன்.  இம்முறை   பயணத்தில்  அவரைச்சந்தித்து நீர்கொழும்பில்   பெப்ரவரி  28  ஆம்   திகதி   நடத்தவிருந்த  நெய்தல் விழாவுக்கு   அழைப்பதற்காக  முற்கூட்டியே  தகவல்  தெரிவித்து -அவர்   அந்த  நாளை   எமக்காக  ஒதுக்கிவைக்கவேண்டும்  என்பதற்காக  அதுபற்றியும்   உரையாடியிருந்தேன்.
எனது   குரலைக்கேட்டதும்  குதூகலத்துடன்  பேசினார்.
" வடக்கு, கிழக்கு   பயணங்களை   முடித்துக்கொண்டு  வருவேன் " என்று   அவருக்கு  உறுதியளித்தேன்.



சுமார்  46  வருடமாக  வெளிவந்த  மல்லிகை  கடந்த  மூன்று ஆண்டுகாலமாக   வெளிவரவில்லை.   ஜீவா   யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு   இடம் பெயர்ந்து  வந்த பின்னர்  கொழும்பு - 13 இல்  201, ஸ்ரீகதிரேசன்  வீதியிலிருந்து  (முன்னாள்  செக்கடித்தெரு)   மல்லிகை வெளியானது.  அதற்கு  முன்னர்  கஸ்தூரியார்  வீதியில்  அவருடைய ஜோசப் சலூன்  முகவரியிலிருந்தும்,  பின்னர்  ராஜா தியேட்டருக்குப் பின்னால்  சிற்றொழுங்கையிலிருந்தும்  வெளியானது.  அந்த ஒழுங்கையிலிருந்து   தற்பொழுது  தினக்குரல்  யாழ்.பதிப்பு வெளியாகிறது.
முன்னர்   யாழ். ரயில்  நிலையத்திற்கு  அருகில்  தமது  மனைவி மக்களுடன்    வாழ்ந்த  ஜீவா   தற்பொழுது  கொழும்பில்  மட்டக்குளிய - காக்கை  தீவில்  மகன்  திலீபன்  குடும்பத்துடன்  வசிக்கிறார்.  முன்னர் அவரைச்சுற்றி   மல்லிகை   இதழ்களும்  மல்லிகை   வெளியீடுகளும் நூல்   மதிப்புரைக்கு  வந்த    எழுத்தாளர்களின்  நூல்களும்தான் இருக்கும்.   ஆனால்,  இப்பொழுது  அவரைச்சுற்றி பேரக்குழந்தைகள்தான்  இருக்கிறார்கள்.
மல்லிகையின்   தாரக  மந்திரமாக  ஒலித்த  மகாகவி  பாரதியின் வரிகளே   இந்த  அங்கத்தின்  தலைப்பில்  வருகிறது.   சாதாரண குடும்பத்தில்   பிறந்து  தனக்குத்தெரிந்த  தொழிலையே   செய்து வாழ்ந்தவரை -  தோழர்  கார்த்திகேசன்  மாஸ்டர்  இடதுசாரி அரசியலுக்குள்   அழைத்து  வந்தார்.   ராஜகோபாலன்  என்ற  இலக்கிய   ஆர்வலர்  இலக்கியத்தின்பால்   திருப்பினார்.  கணித வாத்தியாரின்   கணக்கை   திருத்தியதனால் "உனக்கெதற்குப்படிப்பு....போய்   சிரையேன்டா..." -  என்று அவமானப்படுத்தியதும்   பள்ளிப்படிப்புக்கு  முழுக்குப்போட்டார். மல்லிகை   நடத்தியபொழுது  இடதுசாரிச் சிந்தனையாளர்களினதும்  முற்போக்கு  இலக்கியவாதிகளினதும்  சகவாசத்தினால்  தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள  முயன்று  பிற  மொழி இலக்கியங்களுக்கும்   மல்லிகையில்  களம்  வழங்கினார்.

K.Danial

 சகோதர   சிங்கள  இலக்கியவாதிகளின்  மீது  நேசமுற்று  பிரபல மூத்த   சிங்கள  இலக்கிய  மேதை   மார்ட்டின்  விக்கிரம  சிங்காவை  கௌரவித்து  மல்லிகை   முகப்பில்  அவரது  படத்தை   வெளியிட்டு சிறப்பிதழ்  வெளியிட்டார்.
அதனைக்கண்டு   பொறுக்கமுடியாத  ஒரு  அதிதீவிர  தமிழ்க்கொழுந்து,  யாழ். மத்திய  கல்லூரிக்கு  முன்னால்  தமது பிரியத்துக்குரிய   சைக்கிளில்  வந்துகொண்டிருந்த  ஜீவாவை வழிமறித்து  -  மார்ட்டின்  விக்கிரமசிங்காவின்    படத்துடன்  வெளியான   மல்லிகை  இதழை   வாங்கி  அவர்  முன்னாலேயே கிழித்து   முகத்தில்  எறிந்துவிட்டுச்சென்றது.
அதன்  பின்னும்  பல  வருடங்கள்  மல்லிகை   வெளியானது.  ஜீவா தொடர்ந்தும்   இலங்கையெங்கும்  அலைந்து  திரிந்து  மல்லிகை விநியோகித்து   ஈழத்து  தமிழ்  இலக்கியத்தை  வளர்த்தார். வளம்படுத்தினார்.
ஆனால்  - அந்த  அதி தீவிர  தமிழ்க்கொழுந்து  அகதியாகச்சென்று ஐரோப்பிய   நாடொன்றில்  தனது  வாழ்வாதாரத்திற்காக  ஐரோப்பிய மொழி  படித்து  வாழ்கிறது.
ஆடுதல்   பாடுதல்  சித்திரம்  கவி
யாதியினைய   கலைகளில்  உள்ளம்
ஈடுபட்டென்றும்   நடப்பவர்  பிறர்
ஈன  நிலைகண்டு  துள்ளுவர்
- என்ற பாரதியின் மந்திரத்தை மல்லிகையில்   உச்சாடனம்  செய்த  ஜீவா   இன்று  எப்படி   இருக்கிறார்....?   
இலக்கிய  உலகில்  கனவுகளை   விதைத்தவர்....  இன்று  ஒரு  புதிய கனவுலகில்   வாழ்கிறார்.   அது  குழந்தைகளின்  உலகம்.
47  ஆண்டுகளை   நெருங்கிய  மல்லிகை   50  ஆண்டுகளை நிறைவு  செய்துவிடவேண்டும்  என்றுதான்  மல்லிகையை   நேசித்த  பலரும் எழுதினார்கள்.    பேசினார்கள்.   தமது  முகநூல்களில்  பதிவுசெய்தார்கள்.   ஆனால்,  ஜீவாவுக்கும்  மல்லிகைக்கும்  யார் மணிகட்டுவது...?
எவரும்   முன்வரவில்லை.   முன்வந்திருந்தாலும்  ஜீவா  அதற்கு சம்மதித்திருப்பாரா...?    என்பதும்   கேள்விக்குறி.  அவருக்கு எதிர்பாராதவிதமாக  வந்த  சுகவீனத்தால்   அவர்  இன்று மட்டக்குளியில்   பேரக்குழந்தைகளுடன்  விடப்பட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான   தமிழ்,  முஸ்லிம்,  சிங்கள  படைப்பாளிகள் - கல்விமான்கள் , அறிஞர்களின்  வாழ்வையும்  பணிகளையும் சித்திரிக்கும்   கட்டுரைகளையும்  அவர்தம்  படங்களையும்  பதிவுசெய்த   மல்லிகை   இன்று  நூலகம்  இணையத்தில்  மாத்திரமே பதிவாகியிருக்கிறது.   பலரதும்  வீடுகளில்  பல்கலைக்கழகங்களில் நூலகங்களில்   முன்னைய  பிரதிகள் ,   ஆண்டு மலர்கள்  இருக்கின்றன.
ஜீவா   இலங்கையர்களை   மட்டும்  மல்லிகையில்  கனம் பண்ணவில்லை.   இந்திய  சோவியத்  உட்பட  பல  சர்வதேச படைப்பாளிகளுக்கும்    உரிய  மரியாதையை   வழங்கினார்.

S.PO

ஜீவா   சில   சமயங்களில்  வெட்டு  ஒன்று  துண்டு   இரண்டு  என்றும் முகத்துக்கு   நேரே   பேசும்  இயல்புள்ளவர்.   யாழ்ப்பாணத்தில் பிரபலமாக   இருந்த  தம்பித்துரை   அன்  சன்ஸ்  என்ற  பத்திரிகை - புத்தகக்கடைக்கு   மாதாந்தம்  மல்லிகையில்  பத்துப்பிரதிகளை வழங்குவார்.   அந்த  கடை  உரிமையாளர்  அதனை  பத்திரமாக பாதுகாத்து   மேசையின்  கீழே  வைத்திருந்துவிட்டு,  அடுத்த  தடவை ஜீவா  புதிய  இதழின்  பிரதிகளை   கொடுக்கவரும்பொழுது,  " எதுவும் விற்கவில்லை" -   என்று  மேசையின்  கிழே   இருந்த  பத்து பிரதிகளையும்   எடுத்துக்கொடுப்பார்.   இந்த  நாடகம்  பல  மாதங்களாக அரங்கேறியது.   வழக்கம்போல்  கடையில்  தொங்கும்  குமுதம், ஆனந்தவிகடன்,   பொம்மை,  பேசும்  படம்  இதழ்கள் விற்பனையாகிவிடும்.
ஒரு  நாள்   ஜீவாவின்  தர்மாவேசம்  விழித்துக்கொண்டது.
''  நாளைக்கு  நீர்  இறந்துபோனால்  உம்முடைய  சாவீட்டுக்கு  குமுதம்,   ஆனந்த  விகடன்,   பொம்மை,  பேசும்  படம்  ஆசிரியர்கள் வரமாட்டார்கள்.    யாழ்ப்பாணத்திலிருக்கும்  இந்த  ஜீவாதான் வருவான். " -  எனச்சொன்னது  அவரது  தர்மாவேசக்குரல்.
ஒரு   சமயம் The Island   பத்திரிகை   வெளியிடும்  நிறுவனம் வெளியிட்ட   திவயின  சிங்கள  ஏடு  ஜீவாவை   பேட்டி கண்டு  எழுத விரும்பி   நாள்   குறித்தது.   அவருக்கு  சிங்களம்  தெரியாது.   என்னை உடன்  அழைத்துச்சென்றார்.   அந்த  நேர்காணல்  சந்திப்பு  கொழும்பு கலாபவனத்தில்  (Art Gallery ) செய்து  தந்தவர்  கலாசார திணைக்களத்தில்  செயலாளராக  பணியாற்றிய  தமிழ்  அபிமானி கே.ஜி.அமரதாஸ.
அவ்வேளையில்  குட்டிமணி   -   சிறையில்  இருந்தார். அமிர்தலிங்கம்   எதிர்க்கட்சித்தலைவராக  பிரபலமாகியிருந்தார்.
சிங்கள   வாசகர்களுக்கு  தமிழ்  இலக்கியம்  போதியளவு  அறிமுகம் இல்லாதிருந்த   காலம்.   ஆனால், மார்ட்டின்  விக்கிரமசிங்கா,   டி.பி. இளங்கரத்னா,   குணதாச  அமரசேகர,  கருணாசேன  ஜயலத்,  ஜீ. பி.சேனாநாயக்கா,   குணசேன  வித்தான,   ஆரியரத்தின  வித்தான, கே.ஜயத்திலக்க,   மடவள  எஸ்.  ரத்நாயக்கா  போன்ற இலக்கியவாதிகள்   தமிழ்  வாசகர்களுக்கு  அறிமுகமாகியிருந்தனர்.
ஜீவா,  அந்த  நேர்காணலில்  மேலே   குறிப்பிட்ட  சிங்கள எழுத்தாளர்களின்   பெயர்களைச்சொல்லி,  இவர்களையெல்லாம் எமது   தமிழ்   இலக்கிய  வாசகர்கள்  தெரிந்து  வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள  வாசகர்களுக்கு  தெரிந்த  பெயர்கள் அமிர்தலிங்கமும்   குட்டிமணியும்தான்.   எனச்சொன்னதும்,  அந்த சிங்கள  நிருபர்  அசந்துவிட்டார்.  பின்னர்  தன்னை சுதாகரித்துக்கொண்டு,    இந்தக்கருத்தையே   இந்த  நேர்காணலுக்கு தலைப்பாக  எழுதுவேன்   என்றார்.
அந்த  நிருபர்  சொன்னவாறே  அந்தத்தலைப்பு   ஜீவாவின் தர்மாவேசக்குரலாக   அந்தச்சிங்கள  ஏட்டில்  ஒலித்தது.
தொடக்க   காலத்தில்  மல்லிகையின்  ஆண்டு  மலர்கள்  ஒவ்வொரு வருடமும்   ஓகஸ்ட்  மாதத்தில்  வெளியாகும்.   பிற்காலத்தில்   ஜனவரி   மாதத்தில்  வெளியானது.   இறுதியாக  நான்  பார்த்த மல்லிகை   46   ஆவது   ஆண்டு  மலரில்  2001  இல்    பாராளுமன்றத்தில்    அஸ்வர்  எம்.பி.,  மல்லிகை   பற்றி உரையாற்றியபொழுது    ஜீவாவையும்  அவரது  தேசிய  உடையையும் விதந்து   போற்றியது  பற்றிய  தகவலை  இரத்தினச்சுருக்கமாக வெளியிட்டு    பாரளுமன்ற  பதிவேட்டு  திகதியையும்      (Hansard  -  04-02-2001)   குறிப்பிட்டிருந்தார்.

S.Ganesalingam

மல்லிகை   இலக்கிய  வாசகர்களின்   மனதில்  மட்டுமல்ல இலங்கைப்பாராளுமன்றத்திலும்   ஒலித்திருக்கிறது  என்ற  பெருமிதம் அதில்  தெரிந்தது.
இலங்கையில்   தமிழில்  முதல்  முதலில்  சிறுகதைக்காக  சாகித்திய விருது   பெற்றவர்.   சாகித்திய  இரத்தினா,   தேசத்தின்  கண்,  கனடா இலக்கியத்தோட்டத்தின்   இயல்  விருது  என்பனவற்றையெல்லாம் பெற்றுள்ள ஜீவா   - 2010 - 2011   காலப்பகுதியில்   என்னுடன் உரையாற்றியபோதெல்லாம்... '' எல்லாம்  போதுமப்பா... இனி  எனக்கு என்ன  தேவை....? முடிந்த  வரையில்  எனக்குத்  தெரிந்ததை எனக்குத்தெரிந்த  விதமாகச்செய்தேன்.... எல்லாம்  போதுமப்பா..." என்ற களைப்புத்தொனியுடன்   சொல்லியிருக்கிறார்.
அவர்   எனக்குள்ளும்,  பலருக்குள்ளும்  பயனுள்ள  விதைகளை விதைத்தவர்.   எனக்குத் தெரிந்த மட்டில்  மல்லிகை  நீர்கொழும்பு பிரதேச   சிறப்பிதழ்,   ( 1971)  அவுஸ்திரேலியா   சிறப்பு  மலர் (2000) சர்வதேச   தமிழ்  எழுத்தாளர்  மாநாடு (2011).  அந்தக்கனவுளை நனவாக்கியிருக்கின்றோம்.
ஒருசமயம்  இலங்கை   வந்தபொழுது  எனக்காக  மல்லிகை காரியாலயத்தில்   நடத்திய  சந்திப்பில்தான்  மாநாடு  பற்றிய எண்ணக்கருவை   விதைத்தார்.
நீர்கொழும்பு,   திக்குவல்லை,   மினுவாங்கொடை,  அநுராதபுரம் முதலான  தமிழ்  மக்கள்  செறிந்து  வாழாத பிரதேசங்களிலிருந்தெல்லாம்   பலரை  இலக்கிய  உலகிற்கு  அழைத்து   வந்து   களம்  அமைத்துக்கொடுத்தவர்.
பிரதேச   மொழி வழக்குகள்   ஆய்வுகளில்  பேசுபொருளாவதற்கு தூண்டுகோலாக   இருந்தவர்.   ஐரோப்பிய  நாடுகளில்  நடக்கும் இலக்கியச்சந்திப்பிற்காக   அழைக்கப்பட்டு  பரிஸிலும்  லண்டனிலும் பாரட்டப்பட்டவர்.   சோவியத்தின்  அழைப்பில்  சென்று  திரும்பியவர். தமிழக   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்,  கலை,  இலக்கிய பெருமன்றம் ,   எட்டயபுரம்  பாரதி  மன்றம்,  கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், (C.L.S)  முதலானவற்றின்  அழைப்பில்  சென்றவர்.
மணிவிழா,  பவள  விழா  முதலானவற்றை   கடந்து  வந்தவர்.... இன்று மட்டக்குளியில் , காக்கைதீவில்  மாலைப்பொழுதுகளில்  சூரியன் மறையும்   ரம்மிய  காட்சியை   கண்டு களித்துக்கொண்டிருக்கிறார்.
நண்பர்   மேமன்  கவியுடன்  அவரைச்சந்திக்கச்செல்லும்  பொழுது இரவாகிவிட்டது.   கண்டவுடன், "  எப்பொழுது  வந்தீர்...? " எனக்கேட்டார்.
"நான்  இலங்கை  வந்தவுடனேயே   தொலைபேசியில் சொன்னேன்தானே...    ஜீவா  " என்றேன்.
" அப்படியா ...?"  - என்று  குழந்தையைப்போன்று  சிரித்தார். '' 28 ஆம் திகதி     'நெய்தல்'   விழாவுக்கு  அழைக்கின்றேன்.  போக்குவரத்து வசதியெல்லாம்   செய்து  தருவேன்.   வாருங்கள்.  உங்கள்  நண்பர்கள் பலர்   வருகிறார்கள்.   பழைய  நீர்கொழும்பின்  இலக்கிய  காலம்  பற்றி  நீங்கள்  பேசவேண்டும்." என்றேன்.
" என்னை   மன்னித்துக்கொள்ளும்.  நான்  இப்பொழுது  மகன், மருமகள் பராமரிப்பில்   இருக்கின்றேன்.  வெளிநடமாட்டங்களை குறைத்துக்கொண்டேன்.   வெளியே   செல்லும்பொழுது  தனக்கேதும் நடந்தால்   அது   அவர்களையும்  பாதிக்கும்.   அவர்களுக்கு  நான் கஷ்டம்   தரவிரும்பவில்லை.   நீங்கள்  நன்றாக  விழாவை நடத்துங்கள்.   எனது  வாழ்த்துக்கள்  என்றும்  இருக்கும்."- என்றார்.
அப்பொழுது   எனது  கைத்தொலைபேசி   சிணுங்கியது.  பேசும் வரையில்   அமைதியாக  இருந்துவிட்டு, ''  பூபதி... அவுஸ்திரேலியாவுக்கு    திரும்பிச்செல்லும்  முன்னர்  இந்த மொபைலை   எனக்கு  தந்துவிட்டுச்செல்லும் " என்று  ஒரு குழந்தையைப்போன்று   சொன்னார்.


"உங்களிடம்  இல்லையா...?" -  என்று  கேட்டேன்.  கிடைத்ததெல்லாம் சரியாக  வேலை   செய்யவில்லை  என்றார்.
வெளித்தொடர்புகள்   ஏதும்  அற்று  வீட்டுக்குள்ளே  இருக்கும் இவருடைய   மொபைல்   விருப்பம்  பற்றி  வெளியே   வந்ததும்  உடன்   வந்த  நண்பரிடம்  கேட்டேன்.   எத்தனை  மொபைல்கள் அவரிடம்   வந்தன  என்ற  பட்டியலை அவர்  சொன்னார்.
மல்லிகை    நின்றது  கவலைதான்.  ஏமாற்றம்தான்.
கோமல்  சாமிநாதன்  நடத்திய  சுபமங்களா  நின்றபொழுது  அவர் முதுகுத்தண்டு   நோயினால்  காலமாகியிருந்தார்.   எனினும்  இறுதி இதழாக   அவருக்கு  அஞ்சலி    செலுத்தும்  சிறப்பிதழ்  வெளியானது.
மல்லிகை   நின்றதை   நாம்  இலக்கிய -  ஊடக வரலாற்றுப்பின்னணிகளுடன்   ஆராய்தல்  பொருத்தமானது.
பி.எஸ். ராமையா   நடத்திய  மணிக்கொடி,   ரகுநாதன்  நடத்திய  சாந்தி, விஜயபாஸ்கரன்   நடத்திய  சரஸ்வதி,   ஜெயகாந்தன்  நடத்திய ஞானரதம்,   நா. பார்த்தசாரதி  நடத்திய  தீபம் ,  கண்ணதாசன் நடத்திய  கண்ணதாசன்  ஆகியன  நின்றன.   அதன்  பிறகு  அவற்றை எவரும்   நடத்துவதற்கு  முன்வந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் -  வணிக  இதழ்கள்  என  வர்ணிக்கப்பட்ட  குமுதம், ஆனந்தவிகடன்,   என்பன  தலைமுறை   தலைமுறையாக வெளியாகிறது.
கல்கியும்  -  கலைமகளும்  வருகின்றன.  கல்கி,  கிருஷ்ணமூர்த்தியுடன் கல்கியோ,    கலைமகள்  கி.வா. ஜகந்நாதனுடன்  கலைமகளோ நின்றுவிடவில்லை.   ஆனால்,  ஜீவா   இருக்கும்பொழுதே  மல்லிகை நின்றுவிட்டது.   எஸ்.பொன்னுத்துரையின்  மறைவுடன்  தமிழகத்தில் இயங்கிய   அவரது  மித்ர  பதிப்பகமும்  மூடப்பட்டுவிட்டதாக  சில நாட்களுக்கு  முன்னர்  தகவல்  வந்தது.
குமரன்   இதழையும்  பதிப்பகத்தையும்  தொடக்கிய  மூத்த படைப்பாளி   செ. கணேசலிங்கனின்  குமரன்  இதழ்  நின்றுவிட்டாலும்  - குமரன் பதிப்பகம்  இலங்கையிலும்  தமிழகத்திலும்   இயங்குகிறது.   கணேசலிங்கன்  அதற்கென  ஒரு வாரிசை  உருவாக்கி  வளர்த்துவிட்டார்.
எம்மவர்கள்   எங்கே  தோற்றுப்போனோம்... ?  அதற்கான  பின்னணி என்ன...?
மல்லிகை   ஜீவா  பல   மேடைகளில்  மல்லிகையின் எதிர்காலத்திற்காக  உயில்  எழுதிவைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.   தனது  மகன்  திலீபன்  தனக்குப்பின்னர் மல்லிகையை   நடத்துவார்  என்று   இழையோடும்  கருத்துக்களை மல்லிகை  ( தூண்டில்)  கேள்வி - பதில்  பகுதியிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
              ஆனால்,  இன்று  அவற்றை  அவரிடம்  யாராவது  நினைவு படுத்தினால்... '' அப்படியா...?"  என்றுதான்  கேட்பார்.                                  இந்த " அப்படியா "   சொல்லைக்கேட்க  விரும்பாமல்தான்  அவரைச்சந்திக்கும்   பலரும்  அவரது  சுகத்தை  விசாரிப்பதுடன் விடைபெறுகிறார்கள்.
அன்று   இரவு  நானும்  மேமன்கவியும்  ஜீவாவை   சந்தித்த வேளையில்,   ஜீவாவை  சந்திப்பதற்கு  முத்து. முருகமூர்த்தி   என்ற விசேட   வைத்திய  நிபுணர்  கிழக்கு  மாகாணத்திலிருந்து  வந்தார். அவர்   எழுதிய ' நீரிழிவை  வேரறுக்க'  என்ற  நூலின்  வெளியீட்டு விழாவுக்கு   ஜீவாவை   அழைப்பதற்காகவே  அழைப்பிதழுடன் வந்திருந்தார்.   அவருக்கும்  அன்றுதான்  ஜீவாவின்  அஞ்ஞாத  வாசம் தெரிந்திருக்கும்.
நான்   தொகுத்து  வெளியிட்ட  நெய்தல்  நூலில்  ஜீவாவின்  படமும் அவர்பற்றிய   குறிப்புகளும்  இருக்கின்றன.  நீர்கொழும்பு பிரதேசத்தையும்   என்னையும்  ஈழத்து  இலக்கிய  உலகிற்கு அறிமுகப்படுத்திய  அவரை   நீர்கொழும்பு  விழாவில்  கனம் பண்ணவிரும்பியிருந்தேன்.   அவ்வாறு  அவரை  அழைத்தால் அவருக்கு   1970 - 1980   கால  கட்டத்தின்  புத்துயிர்ப்பு  நினைவுகள் மலர்ந்து   மீண்டும்  அவரை   உற்சாகப்படுத்தலாம்  என்பதே  எனது எண்ணமாக  இருந்தது.
"அவரை  தாராளமாக  அழைத்துச்செல்லுங்கள்..."  என்றுதான்  அவரது மருமகள்   சொன்னார்.

Mallikai Jeeva

ஆனால்  -  அவரது  எண்ணம்  வேறாக  இருந்தது.   அவர்  தாம் அவர்களில்  தங்கியிருப்பதாகவும்  வெளிப்பயணங்களில்  தனக்கு ஏதும்    நடந்துவிட்டால்... என்ன  செய்வது...? என்ற  தயக்கத்தையே மீண்டும்   சொல்லிக்கொண்டிருந்தார்.
சிட்னியில்   மறைந்த  எஸ்.பொ.  குறித்து  அடிக்கடி  கேட்டார். கஸ்தூரியார்   வீதியில்  எஸ்.பொ.வும்,   கணேசலிங்கனும்,  தானும் டானியலும்   ஒன்றாக  அமர்ந்து  தேநீர்  குடித்த  பழைய  நினைவுகளை   பகிர்ந்தார்.
எஸ்.பொ.வுடன்   பல   தடவைகள்  தான்  சண்டையிட்டு  பேசாமலும் இருந்திருக்கின்றேன்.  ஆனால்,  அவருடனான  நினைவுகளை  மறக்க முடியவில்லை.   பலரும்  போய்விட்டார்கள்.   ஒரு  வெற்றிடம் தோன்றியிருக்கிறது.   வெறுமை   தெரிகிறது.   எனச்சொல்லி  நீண்ட பெருமூச்சை   உதிர்த்தார்.
 விடைபெறும்பொழுது   மீண்டும் '' தமக்கு  ஒரு  மொபைல்  வேண்டும் " என்று   மறக்காமல்   நினைவுபடுத்தினார்.
அந்த   மொபைல்  தற்பொழுது  இயங்காமல்  வீட்டில் அவரைப்போன்று    ஓய்வு  எடுக்கிறது.
---0---




No comments: