மின்னொளி மண்கவ்விய வேளையதில்... எம்.கே.முருகானந்தன்.

.


மின்னொளி மண்கவ்விய வேளையதில்
என்னறையைக்  கவ்வியது
கண் மறையப் பேதலிக்கும் பேரிருள்
என்னவிது ஏதாயிற்றோவெனக்
உள்ளமதைக் குளறுபடியாக்கியது
இருட்டோ இன்னும் எதுவோவென
மருட்டி மனம் ஏங்கையில்
வெள்ளமென நுதல் வடிந்த வேர்வை
படிந்தது சட்டையெல்லாம்.


இன்னும் இருள் பொறுக்காதென
பத்த வைத்த மெழுகுவத்தியுடன்
அவசர விளக்கும் அணிசேர்க்க
இத்தனைநாள் புலனாகா அழுக்கெல்லாம்
என்னறையில் உறைந்திருத்தல் வெளிச்சமாயிற்று.
மூளியவள் மெழுகுச் சிரசாக என் மேசை
மாசு மறுவின்றி துலங்கும் காலம்
வருமொவென ஏக்கம் கொளலானேன்.
இருந்தாலும்….
உள்ளமதில் உறையும் கரு மாசெல்லாம்
தெள்ளனவே துலங்கிப் புலப்படவே
உள்ளொடுங்கி நாணலானேன்.

No comments: