அற்பாயுளும் மேதாவிலாசமும் முருகபூபதி



எமது  தமிழ்  சமுதாயத்தில்  எம்மவர்   மத்தியில்   அடிக்கடி  உதிர்க்கப்படும்  வார்த்தைகள் :  எல்லாம்  தலைவிதிப்படிதான்  நடக்கும்,   எல்லாம்  தலையெழுத்து.
அதாவது   இறைவன்   ஓர்   உயிரைப்படைக்கும்பொழுதே   அதன்  தலையில்  அதன் விதியை  எழுதிவிடுவானாம்.  அதன்   பிறகு  அந்தவிதிப்படிதான்  யாவுமே  நடக்குமாம் என்பது  நம்பிக்கை.
அதேசமயம்   விதியை  மதியால்  வெல்லமுடியும்   என்றும்   ஒத்தடம்தரும் வார்த்தைகளையும்    சொல்லிக்கொள்வார்கள்.
இந்த  ஆண்டின்   தொடக்கத்தில்   எதிர்பாராதவிதமாக   இரண்டாவது   தடவையும்;   சென்னைக்குச்     செல்லநேர்ந்தபோது    கன்னிமரா   நூல்நிலையத்தில்   அமைந்துள்ள   நிரந்தர     புத்தகக்கண்காட்சிக்குச்சென்று     சில   நூல்களை   வாங்கினேன்.


அதில்     ஒன்று     ஆல்பெர்   காம்யூ   எழுதிய   அந்நியன்    நாவல்.   சிறந்த பதிப்பகம்    எனப்பெயரெடுத்த   க்ரியா   அதனை    வெளியிட்டிருக்கிறது.   இந்த நாவல்   குறித்து   பலரும்   எழுதியிருக்கிறார்கள்.   1957   இல்   நோபல் பரிசுபெற்றுள்ள   காம்யூ,   1913   இல்   அல்ஜீரியாவில்    பிறந்திருக்கிறார்.   1960 இல்   ஒரு   வாகனவிபத்தில்   கொல்லப்பட்டிருக்கிறார்.   இந்த   ஆண்டு   (2013) அவரது   நூற்றாண்டு   காலம்.
உலகில்   47   ஆண்டுகள்தான்   வாழ்ந்திருக்கிறார்.
சுந்தரராமசாமியின்   ஜே.ஜே.  சில  குறிப்புகள்   நாவலும்   ஆல்பெர்   காம்யூவின் மரணம்   பற்றிய   செய்தியுடன்தான்   ஆரம்பிக்கிறது.   சுந்தரராமசாமி    தனது    நாவலின்    நாயகன்,   ஜோசஃப்   ஜேம்ஸ்   (ஜே.ஜே)   பற்றிச்சொல்லும்போது,   மேதாவிலாசத்திற்கும்   அற்பாயுளுக்கும்   அப்படி   என்னதான்   நமக்கு   எட்டாதபடி ரகசிய   உறவோ?   என்றும்   ஆதங்கப்படுகிறார்.   தமிழில்   பாரதி,   புதுமைப்பித்தன்,   கு.ப.ராஜகோபாலன்,   கு. அழகிரிசாமி,   மு. தளையசிங்கம்   என்று அற்பாயுளில்   மறைந்துவிட்ட   படைப்பாளிகளின்   பட்டியலையும்    தருகின்றார்.
ஆல்பேர்   காம்யூவின்   எதிர்பாராத   திடீர்   விபத்து   மரணம்,   எனக்கு   தமிழில் மேலும்    ஐந்து     படைப்பாளிகளை   நினைவுக்கு    கொண்டுவருகிறது.
தமிழகத்தில்    சுப்பிரமணிய   ராஜூ,    மேத்தாதாஸன்,    சு. சமுத்திரம்   இலங்கையில்   அங்கையன்    கைலாசநாதன்    லண்டனில்  நவசோதி.    இவர்கள்   ஐவரும்   வாகன    விபத்தில்    கொல்லப்பட்டவர்கள்.   சென்னையில்   சுப்பிரமணிய   ராஜூ    விபத்தில்    மறைந்த   இடத்தை   மல்லிகை    ஆசிரியர்    டொமினிக்ஜீவாவுக்கு    காண்பித்தவர்   கவிஞர்   மேத்தாதாஸன்.
1990   இல்   நான்   சென்னையில்   மேத்தாதாஸனை    மோட்டார்   சைக்கிளுடன்தான்   சந்தித்தேன்.   எனக்கு    வாகனங்களிலேயே   மோட்டார்சைக்கிள் என்றாலே   ஒருவகை    வெறுப்பு.   பல   மோட்டார்சைக்கிள்    விபத்துகளை    நேரில்   பார்த்தபிறகு   பல   நாட்கள்    நான்   உறக்கம்   இல்லாமல் தவித்திருக்கிறேன்.
மேத்தாதாஸனை    அன்று   சந்தித்தவேளையிலும்   பின்னர்   அவருடன்   சென்னையை   வலம்   வந்தபொழுதும்    எனது    பயத்தை    அவரிடம் சொல்லியிருக்கிறேன்.    அவர்    சிரித்தார்.   “ஏன்   சேர்…   பயப்படுகிறீர்கள். எல்லோரும்    ஒருநாளைக்குப்போகவேண்டியவர்கள்தானே…    எப்படிப்போனால்தான்    என்ன?”    என்று    என்னை    கேலிசெய்தார்.
நானும்    குடும்பத்தினரும்    சென்னையை    விட்டு    புறப்படும்தறுவாயில் தங்கியிருந்த    விடுதிக்கு    வந்து    விடைகொடுத்தார்.    அதன்   பிறகு   அவரை நான்    சந்திக்கவே    இல்லை.    சில   மாதங்களில்   அவர்   அதே மோட்டார்சைக்கிளில்    பயணிக்கும்போது    விபத்தில்   மறைந்தார்  என்ற  தகவல் கிடைத்தது.    பல   நாட்கள்   அவரது   மறைவை    நினைத்து    மனம்வெந்து அழுதிருக்கின்றேன்.     வாழவேண்டிய    இளம்குருத்து    அற்பாயுளில்    மறைந்தது. பெற்றவர்களுக்கு    ஆறுதல்கடிதம்தான்    எழுதமுடிந்தது.
சென்னை    அடையாறில்    மல்லிகை   25   ஆவது   ஆண்டு    மலர் அறிமுகநிகழ்வு    நடந்தபோது    சந்தித்து   நண்பரானவர்;தான்    படைப்பாளி சு.சமுத்திரம்.    இவரும்    ஒரு    வாகனவிபத்தில்    படுகாயமடைந்து மருத்துவமனையில்    அனுமதிக்கப்பட்டு        சிகிச்சை    பலனின்றி   மறைந்தார்.
நாமக்கல்லில்   படைப்பாளி   கு. சின்னப்பபாரதியை    சந்தித்தபோது   அவர்    சொன்ன   தகவல்கள்   என்னை    அதிர்ச்சிக்குள்ளாக்கியது.    சமுத்திரம்   விசேட கண்காணிப்பில்   சிகிச்சை    பெற்றிருந்தால்    உயிர்பிழைத்திருப்பாராம்.    அவருக்கு கலைஞர்    கருணாநிதி    மிகவும்    நெருக்கமானவர்.   கலைஞருடனான    தனது நட்புறவை    விரிவாக    ஒரு   நுலை   எழுதி   பதிவுசெய்தவர்   சமுத்திரம். கலைஞருக்கு    உரியநேரத்தில்    சமுத்திரம்    தகவல்    தந்திருப்பின்    அவர் விசேட    கவனிப்புக்கு    ஏற்பாடு    செய்திருப்பாராம்.
ஜெயகாந்தன்    சுகவீனமுற்றபொழுது    அவரை     அப்பல்லோ    மருத்துவமனையில்    அனுமதிக்கவும்    விசேட    சிகிச்சைக்கு    ஏற்பாடு    செய்யவும்    கலைஞர்    முன்னின்றவர்.    அதுபோன்று    சமுத்திரத்தையும்    அவர்    காப்பாற்றியிருப்பார்.    ஆனால்    சமுத்திரம்    அசட்டையாக    இருந்துவிட்டார்    என்று    சொல்கிறார்    சின்னப்பபாரதி.
கடல்காற்று    நாவல்   உட்பட    கவிதைகள்,    மெல்லிசைப்பாடல்கள்   பல எழுதியவர்    இலங்கை    ஒலிபரப்பு    கூட்டுத்தாபனத்தில்   பணியாற்றிய   அங்கையன்    கைலாசநாதன்.
பம்பலப்பிட்டியில்    வாகனவிபத்தில்    கொல்லப்பட்ட    ஒருவரின்   சடலம்   கொழும்பு   அரச   மருத்துவமனை  சவச்சாலையில்    அடையாளம்    காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது    என்ற    செய்தியினை    வீரகேசரியில்    ஒப்புநோக்கினேன்.  இரண்டு    நாட்களின்   பின்னர்   அங்கையனின்   மனைவிதான்  அடையாளம்   காட்டி சடலத்தை    பொறுப்பேற்றார்.
நண்பர்   நவசோதி   இலண்டனில்    வாகன    விபத்துக்குள்ளான  தகவல்  அறிந்தபின்பு    அவரது   குடும்பத்துக்கு    அனுதாபம்    தெரிவித்துவிட்டு    அவர் பற்றிய   நினைவுகளை    மெல்பனில்    ஒரு   வானொலியில்   பகிர்ந்துகொண்டதுடன் எனது    நூல்   ஒன்றிலும்    (நெஞ்சில்   நிலைத்த   நெஞ்சங்கள்)    அவரைப்பற்றி   பதிவு   செய்தேன்.
மரணம்    சொல்லிக்கொண்டு    வராது.   பிறப்பு    குறித்த    நாளையும் நேரத்தையும்    எம்மால்    முற்கூட்டியே    குறிக்க    முடியாதிருப்பதுபோலவே  மரணத்தையும்     சொல்லமுடியாதுதான்.
பட்டினத்தார்    பாடலை   அடியொற்றி    கண்ணதாஸன்    ஒரு    பாடலை பாதகாணிக்கை     படத்திற்காக    எழுதியிருக்கிறார்.
  இப்படித்தொடங்கும்:     ஆடிய ஆட்டம் என்ன…?     பேசிய வார்த்தை என்ன…?    தேடிய    செல்வம்    என்ன…?  கூடுவிட்டு    ஆவி   போனால்    கூடவே   வருவதென்ன…?
வாழ்க்கையின்   புதிர்   பிறப்பிலும்  மறைவிலும்  ஆழமாக  புதைந்திருக்கிறது.  அந்தப்புதிர்   பிறப்பிலும்    மறைவிலும்  துளிர்த்துக்கொண்டு  வெளியே    தெரிகிறது. ஆனால்    வாழும்    காலத்தில்  அந்தப்புதிர்    மறைந்தே    இருக்கிறது.
ஏராளமான   படைப்பாளிகள்,   கலைஞர்கள்    என்னதான்    புகழடைந்திருந்தாலும்  மக்களிடம்    பிரபலமடைந்திருந்தாலும்     துயரம்   மண்டிய    கசப்பான அனுபவங்களை    உள்வாங்கிக்கொண்டவர்களாகவே   தமது  வாழ்வை  கடந்து வந்திருக்கிறார்கள்.
படைப்புலகில்    லியோரோல்ஸ்ரோய்,   ஹெமிங்வே,    ஆங்கிலத்திரையுலகில்  சார்லி  சப்லின்,   மர்லின்   மன்றோ,   இந்தித்திரையுலகில்  குருதத் ,   மதுபாலா,   மீனாகுமாரி,    தமிழில்   தியாகராஜ    பாகவதர்,     சாவித்திரி,     சந்திரபாபு,     மலையாள   நடிகர்  விஜயன்,      மற்றும்   தற்கொலைசெய்துகொண்ட      ஷோபா,   படாபட் ஜெயலட்சுமி,    கோழிகூவுது விஜி,   ஸ்ல்க்சுமிதா,   என்று பலரதும்  அந்திமகாலம்     துயரம்கப்பிய    வரலாற்றையே    எமக்குத்    தந்துள்ளது.   (நடிகைகளின் தற்கொலைப்பட்டியல்   நீளமானது)
வசதியாக    வாழ்ந்திருக்கவேண்டிய    லியோரோல்ஸ்ரோய்   அநாதரவாக ஒரு ரயில் நிலையத்தில்  இறந்து   கிடந்தார்,    எத்தனையோ    விபத்துக்களில்    சிக்கி  உயிர்தப்பி    வாழ்ந்து,    இறுதியில்    இனி   வாழ்ந்து   என்ன   பயன்    என நினைத்து    தன்னைத்தானே    துப்பாக்கியால்    சுட்டுக்கொண்டு   மடிந்தார்    ஏர்ணஸ்ட்   ஹெமிங்வே,
திரையுலகில்    இலட்சம்    இலட்சமாக    சம்பாதித்த     தியாகராஜபாகவதர்    ஒரு   சத்திரத்தில்    அநாதராவாக  இறந்துகிடந்தார்.    ஜெயகாந்தன்     அந்தக்கலைஞனின்     மறைவை    பின்னணியாகக்கொண்டு    ஒரு     சிறுகதையே    படைத்திருக்கிறார்.
நாளை    மற்றுமொரு   நாளே,   குறத்தி   முடுக்கு   முதலான   நாவல்களையும்  சில   சிறுகதைகளையும்    எழுதியுள்ள    ஆற்றலும்    ஆளுமையும்   மிக்க   ஜி. நாகராஜனின்    அந்திமகாலமும்    மிகுந்த   கவலைக்குரியது.
இலங்கையில்     சிவரமணியும்    அவுஸ்திரேலியாவில்     வாசுதேவனும்  தற்கொலைசெய்துகொண்ட     கவிஞர்கள்.
இவ்வாறு    இங்கே   குறிப்பிடப்படும்    கலைஞர்கள்,   கவிஞர்கள்,   படைப்பாளிகள்  தலையில்    எழுதப்பட்ட   எழுத்து   இதுதானா?   அவர்கள்   தமது படைப்பிலக்கியம் மற்றும்    கலைவெளிப்பாடுகள்    ஊடாக   மக்களிடம்    வந்தவர்கள்.    மக்களிடம்  பேசப்பட்டவர்கள்.
மக்களை   தமது   எழுத்துக்களினால்   நடிப்பினால்   வசீகரித்த   இவர்களில்   சிலர்  வாகன    விபத்துக்களில்    கொல்லப்பட்டிருக்கிறார்கள்.   விபத்துக்கள்   எதிர்பாராதவை.    ஆனால்   தற்கொலைகள்    அவர்களாலேயே  உருவாக்கப்பட்டவை.  எதிர்பார்க்கப்பட்டவை.   தலைவிதிக்கும்     கணங்களுக்கும்   இடையே  ஒற்றுமை  இருக்கக்கூடுமா?  என்றும்  யோசிக்கவேண்டியிருக்கிறது.
தற்கொலைக்குத்தயாராகும்   ஒருவர்   அந்தக்கணம்   வேறுவிதமாகச்சிந்தித்திருந்தால்  சிலவேளை    உயிர்தப்பியிருக்கமுடியும்.
கணினி  வந்த   பிறகு  ஏராளம்    நன்மைகள்  இருப்பதாகவும்    உலகமே    கைக்குள்    அடங்கிவிட்டதாகவும்தான்   நம்பிக்கொண்டிருக்கிறோம்.    உடலை வருத்தாமல்    எளிதான    முறையில்    தற்கொலை    செய்து   கொள்வது  எப்படி?  என்றும்     பாடங்களை    இந்த    கணினி    நடத்துகிறது    என்ற    உண்மையை    சமீபத்தில்தான்    அறிந்தேன். 
இந்தக்கணினி   அறிவே  அற்ற   பாமரனான   ஏழை  விவசாயிகள்கூட   பட்ட கடனை  அடைக்க    முடியாமல்    தற்கொலை    செய்துகொள்வதையும்   விரக்தியின்  விளிம்பிற்குச்சென்று    தற்கொலை    செய்துகொள்பவர்களையும்   கருத்தில்கொண்டு   விழிப்புணர்வு   முகாம்களும்    நடத்தப்படுகின்றன.
ஆனாலும்     விதி    விளையாடுகிறது.    இறந்தவுடன்     “ எல்லாம் தலையெழுத்து,    விதிப்பயன்”   என்று    சொல்லிவிட்டு    அடுத்தபொழுதுக்கு    நகர்ந்துவிடுகிறோம்.
வாழ்க்கை   வாழ்வதற்குத்தான்.   வாழ     நினைத்தால்    வாழலாம்….வழியா   இல்லை  பூமியில்….. என்றும்  சொல்லிக்கொள்வோம்.
கழுத்திலே    சயனைற்    குப்பிகளை   அணிந்தவாறும்,    உடலிலே   குண்டுகளை பொருத்திக்கொண்டும்    தற்கொலைக்குத்தயாராகிய     போராளிகளின்    தலையெழுத்தும்   எம்மை   யோசிக்கவைக்கிறது.
நோக்கத்திற்கான   தற்கொலை,    நோக்கம்   எதுவும்   அற்ற   தற்கொலை   என்று பகுத்துப்பார்க்க    முடியாமலிருக்கிறது.
ஏனென்றால்   உயிர்   பெறுமதியானது.
மரணம்    எப்போது    வரும்   என்பது   தெரியாமலிருப்பதுபோன்றே…. மரணத்தின்  பின்னர்    அந்த    ஆத்மாவுக்கு    என்ன    நடக்கிறது    என்பதும்  தெரியாத  புதிரான    வாழ்வில்தான்    கணங்களை    கடந்து    செல்கின்றோம்.
மேலே    குறிப்பிட்ட    மேதாவிலாசம்   கொண்டிருந்து   அற்பாயுளில்  மறைந்தவர்களின்    ஆத்;மா   எம்மவர்    குறிப்பிடும்   மேல்   உலகத்தில்   சந்திக்க   நேர்ந்தால்   எப்படி    இருக்கும்    என்றும்   யோசிக்கின்றேன்.

                                      ----0----