இலங்கைச் செய்திகள்


மலையகத்தில் தொடர்ந்தும் அடைமழை; காசல்ரீ நீரத்தேக்கத்தின் கதவுகள் திறப்பு

மூவின மக்களும் ஒற்றுமையாக செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக மாற்றியமைக்கலாம் - சங்கரத்ன தேரர்

13ஆவது திருத்தம் தொடர்பில் தீவிர கரிசனை ,இலங்கையின் செயற்பாடு ஏமாற்றமளிக்கிறது : மன்மோகன் சிங் தெரிவிப்பு

13ஐ ஒழிப்பதற்கான தெரிவுக்குழுவில் முஸ்லிம் கட்சிகள் இடம் பெறக்கூடாது- முபாறக்

13ம் திருத்தச் சட்டம் ஓர் வெள்ளை யானை - லலித் வீரதுங்க

 13ஐ திருத்தாமல் வடக்கில் தேர்தல் நடந்தால் வீதியில் இறங்குவோம்:
=========================================================================

மலையகத்தில் தொடர்ந்தும் அடைமழை; காசல்ரீ நீரத்தேக்கத்தின் கதவுகள் திறப்பு

18/06/2013   மலையகப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கதவு ஆறாவது நாளாகவும் திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நீரேந்துப் பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்துவருவதால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் என்று மில்லாதவாறு உயர்ந்துள்ளது. இதனால் மவுசாகலை நீர்த்தேக்க்த்தில் இரண்டு வான் கதவுகள் 6 அங்குலம் வரையும் ஒரு வான் கதவு 12 அங்குலம் வரையும் திறக்கப்பட்டுள்ளதாவும் லக்ஷபான நவலக் ஷபான விமலசுரேந்திர, பொல்பிட்டிய, கெனில்வோன் ஆகிய நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அவற்றினை பயன்படுத்தி உச்ச அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாகவும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதேவேளை மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்தி என்பனவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  நன்றி வீரகேசரி   











மூவின மக்களும் ஒற்றுமையாக செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக மாற்றியமைக்கலாம் - சங்கரத்ன தேரர்


18/06/2013     மூவின மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக்கலாம் என கல்முனை ஸ்ரீ சுபத்ராராமய விகாரையின் விகாராதிபதியும், கல்முனை பிரதேச மட்ட சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான வண.ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
சிங்கள தலைவர்களுடன், சேர்.பொன்.இராமநாதன், அறிஞர் சித்திலெப்பை போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடியதன் விளைவாகவே இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அவ்வாறே மூவின மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக மாற்றலாம்.
இந்நாட்டில் முப்பது வருட காலமாக நடைபெற்ற கொடிய யுத்தத்தை இல்லாதொழித்து இலங்கை மக்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்வதற்கு வழிசமைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
நாம் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடின்றி இலங்கையர் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்பதே எனது அவாவாகும். சுனாமிக்குப் பின்னரே நான் கல்முனை ஸ்ரீ சுபத்ராராமய மஹா விகாரைக்கு வந்தேன். நான் கல்முனைக்கு வந்த பின்னரே தமிழ்மொழியை நன்றாக கற்றுக் கொண்டேன்.
கல்முனையில் வாழும் சிங்கள மக்களுக்கு தமிழ் நன்றாகத் தெரியும். அதேவேளை கல்முனையில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்களில் கணிசமானோருக்கு சிங்கள மொழி அறிவு இல்லாமை பெருங்குறைபாடாகும். இக்குறைபாட்டை நிவர்த்திச் செய்யவும் சகல மக்களுடனும் அன்னியோன்யமாக உறவை வளர்த்துக் கொள்வதும் காலத்தின் தேவையாகும் என்றார்.    நன்றி வீரகேசரி






13ஆவது திருத்தம் தொடர்பில் தீவிர கரிசனை ,இலங்கையின் செயற்பாடு ஏமாற்றமளிக்கிறது : மன்மோகன் சிங் தெரிவிப்பு

19/06/2013  இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் எம்மையும் சர்வதேசத்தையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான எமது கரிசனையினை ஏற்கனவே நாம் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்துவிட்டோம். அந்த விடயம் தொடர்பில் தீவிர கரிசனையினை நாம் கொண்டுள்ளோம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏனை சமூகத்துடன் தமிழ் மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கு உரித்டையவர்கள் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும். இதற்காக உரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுடில்லியிலுள்ள இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமப்பினர் நேற்று முன்தினம் மாலை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனையும் நேற்று பிற்பகல் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்தனர். நேற்றுமாலை இந்தியப் பிரதமருடனான சந்திப்பு இடம்பெற்றது.

இதில் இரா.சம்பந்தனுடன் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன். செல்வராசா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரிடம் கோரியுள்ளனர். இதன்போதே இந்தியப் பிரதமர் 13ஆவது திருத்தம் தொடர்பான இந்தியாவின் கரிசனை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தீவிர கரிசனையினை இந்தியா கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் எமக்கும் சர்வதேசத்திற்கும் ஏமாற்றத்தை தருவாதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
      நன்றி வீரகேசரி 





13ஐ ஒழிப்பதற்கான தெரிவுக்குழுவில் முஸ்லிம் கட்சிகள் இடம் பெறக்கூடாது- முபாறக்




19/06/2013     13ஐ ஒழிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் கட்சிகள் இடம் பெறக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது சம்பந்தமாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

இரண்டு மாகாணங்கள் விரும்பினால் இணையலாம் என்ற ஷரத்தை அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்களின் அனுமதியுடன் நீக்கிய அரசாங்கம் ஏனைய திருத்தங்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாக நிறைவேற்றிக்கொள்ளவுள்ளது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத்; தீர்வாக பல தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டும் அவை எவையும் சிறுபான்மை மக்களுக்;கு எதுவித நன்மையையும் கொண்டு வரவில்லை. இந்த நிலையில் இந்திய தலையீடு காரணமாக 13ஆவது திருத்தச்சட்டம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

மாகாணசபை ஆட்சி முறை மூலம் இனப்பிரச்சினை தீராத போதும் ஓரளவு பெயரளவிலான சில நன்மைகளாவது கிடைத்தன என்பதை மறப்பதற்கில்லை. இப்போது அவற்றையும் நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு இந்த பாராளுமன்ற தெரிவுக்குழு பயன்படுத்தப்படவுள்ளது.

நமது நாட்டின் பாராளுமன்ற தெரிவுக்குழு எவ்வாறிருக்கும் என்பதை கடந்த காலங்களில் கண்டுள்ளோம் ஹலால் பிரச்சினையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட முஸ்லிம் அமைச்சர்களை அதிகமாகக்கொண்ட அமைச்சர்கள் தெரிவுக்குழு கூட சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் போது 13ஆவது திருத்த சட்டத்தை மாற்றுவதற்கான தெரிவுக்குழு நிச்சயம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

ஆகவே வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளால் சுகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அதாவுள்ளா காங்கிரஸ், ரிசாத் காங்கிரஸ் என்பவை இந்த தெரிவுக்குழுவில் இடம்பெறுவது என்பது முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களின் கண்களைக் குத்துவதாகவே முடியும். ஆகவே இத்தெரிவுக்குழுவில் இடம்பெறுவதை மேற்படி கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது
                   நன்றி வீரகேசரி 







13ம் திருத்தச் சட்டம் ஓர் வெள்ளை யானை - லலித் வீரதுங்க


19/06/2013     13ம் திருத்தச் சட்டம் ஓர் வெள்ளை யானையாகும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த கால அனுபவங்கள் இதனை நிரூபித்துள்ளன. டுவிட்டர் ஊடாக அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ஓர் பிரஜையின் கோணத்திலிருந்து பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நிர்வாக ரீதியாக 13ம் திருத்தச் சட்டம் ஓர் வெள்ளை யானை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரப் பகிர்வானது கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மிகவும் தாழ்ந்தளவிலிருந்து அதிகாரம் பகிரப்பட வேண்டுமேன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராம ராச்சியம் மற்றும் பஞ்சாயத்து போன்ற நிர்வாகக் கட்டமைப்பு மூலம் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்போதும் அரசியல் சாசனத்திற்கு தலை வணங்குவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் சில விடயங்களை அமுல்படுத்த கால அவகாசம் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் தொடர்பிலான தேசிய செயற் திட்டம் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் புதிய இணைய தளமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உயர் அரசாங்க அதிகாரியொருவர் டுவிட்டர் போன்ற சமூக இணையதளமொன்று செவ்வியளித்த முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.    நன்றி வீரகேசரி








13ஐ திருத்தாமல் வடக்கில் தேர்தல் நடந்தால் வீதியில் இறங்குவோம்: விமல்

vimal veeravansa20/06/2013   அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை மறுசீரமைத்த பின்பே செப்டெம்பர் மாதத்தில்  வடக்கில் தேர்தல் நடத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டிலேயே எமது கட்சி  உள்ளது. அதனை மீறியும் அரசாங்கம் செயற்படும் பட்சத்தில் நாட்டில் பல  எதிர்ப்பு அலைகள் தோன்றும். மக்களை இதற்காக வீதியில் இறக்குவோம்' என்று  தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான  விமல் வீரவன்ச தெரவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளார்  மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தியா  சென்று இந்திரா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தாலும்  இந்தியாவின் லோக்சபாவின் கீழான  நிர்வாகத்தில் இலங்கை அரசாங்கமும்  ஐனாதிபதியும் இல்லை.

அப்படி அவர்கள் நினைத்தால் தற்போதைய ஐனாதிபதி அதற்காக அடிபணியப்  போவதுமில்லை. யுத்தம் நடைபெறும்போது எவ்வளவோ அச்சுறுத்தல்கள் வந்தபோதும்  ஐனாதிபதி அவற்றைக் கணக்கில் எடுக்காமல் யுத்தத்தை வெற்றியீட்டினார். அதே  போன்று இந்தியா இவ்விடயத்தில் கையடித்தால் அதனை அவர் கணக்கெடுக்கப்  போவதில்லை' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

'இந்த நாட்டின் பயங்கரவாதத்தை உருவாக்கியது இந்தியாவே. இந்தியாவின் 'ரோ'  அமைப்புடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளித்து  அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள். அதே விடுதலைப் புலிகளே  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தனர்.

இலங்கையில் 30 வருட கொடூர பயங்கரவாதத்தை உருவாக்கியவர்களும் இந்தியர்களே.  அந்த கொடிய பயங்கரவாத்தை வெற்றிகொண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தமிழ்த்  தேசிய கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகளின் ஒர் எஜென்சியாகவே நாங்கள்  அவர்களை பார்க்கின்றோம்' என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர், '13ஆவது சீர்திருத்தமானது நாடாளுமன்ற  தெரிவுக்குழு ஊடாகவே அதுவும் வட மாகாணசபைத் தேர்தலின் பின்னரே  மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார். இதில்  உங்களது நிலைப்பாடு என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வீரவன்ச, 'வடக்கு தேர்தலுக்கு முன் பொலிஸ், காணி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படல்  வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. மேல் மாகாணத்தில்கூட  முதலமைச்சரின் அனுமதிபெற்ற பின்பே மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்  நியமிக்கப்படுவதற்கான அதிகாரம் மாகாணசபைச் சட்டத்தில் உள்ளது. அதேபோன்று  வடக்கில் தமிழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டால் அவர் வடக்கில்  உள்ள இராணுவ முகாம்களை அகற்றும்படி உத்தரவிடுவார்' என்றார்.

இதேவேளை, '13ஆவது திருத்தத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களில் அரசு  திருத்தம் கொண்டுவந்தால் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்திலிருந்து  விலகுவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு நடந்தால் கிழக்கு மாகாண சபையிலும்  விரிசல் ஏற்படுமே?' என்று மற்றுமொரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'முஸ்லீம் காங்கிரஸ் கட்சி அரசின்  எந்த விடயத்திலும் ஆதரவு அளித்த கட்சி அல்ல. கிழக்கில் தனித்து  கேட்டார்கள். அங்கு மஹிந்தவின் ஆட்சியில்தான் பள்ளிவாசல்கள்  உடைக்கப்படுகின்றன என தெரிவிப்பார்கள். அரசுக்குள் வந்தபின் அவ்வாறு  பள்ளிகள் உடைக்கப்படவில்லை எனத் தெரிவிப்பார்கள்.

மறைந்த அமைச்சர் முஸ்லீம் காங்கிரஸை ஆரம்பித்ததே வட கிழக்கு  இணைந்தபோது  தான். அவர் கிழக்குடன் தெற்கு மக்கள் இணைந்து செயலாற்றவே அரசியலமைப்பை  மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். தற்பொழுது உள்ள தலைமைத்துவம்  இலங்கையில் உள்ள  தூதுவராலயங்;கள் நிகழ்ச்சி நிரல்களுக்கு  செயல்படுகின்றார்' எனத் தெரிவித்தார். நன்றி தேனீ