இலங்கைச் செய்திகள்

.

போர்க்குற்றங்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளது.

தனிப்பட்ட விஜயமொன்றின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கின்றார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர் அந்நாட்டுக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

அதே நேரம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதன் காரணமாக நிபுணர் குழு அறிக்கையின் விடயங்கள் தொடர்பில் அவரிடம் விசாரணையொன்றை மேற்கொள்ள அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (Department of Homeland Security) மற்றும் சட்டத் திணைக்களம் (Department of Justice) ஆகியன தீர்மானித்துள்ளன.


அது மாத்திரமன்றி அமெரிக்காவிலுள்ள மனித உரிமை அமைப்புகள் பலவும் தமது நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரைக் கைதுசெய்து விசாரிக்குமாறு கோரும் மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி தமிழ்வின்

த.தே.கூட்டமைப்பினரை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது! கெஹலிய - ஈ.பி.டி.பியுடனும் பேசுமாம் அரசு


இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அரசு தமிழ்க் கூட்டமைப்பு இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் இன்று நடைபெற உள்ளன. இந்த நிலையில், தீர்வு தொடர்பில் அரசு, ஈ.பி.டி.பி. கட்சியுடனும் பேசும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இன்றைய சந்திப்பில் அரசியல் தீர்வு பற்றியே பேசுவதாக கூட்டமைப்பு அரசு இடையே இணக்கம் காணப்பட்டிருந்தது.

அதேபோன்று ஈ.பி.டி.பியுடனும் அரசியல் தீர்வு குறித்தே அரசு பேசப் போகிறதாம் என்று அக்கட்சியின் செய்திக் குறிப்புத் தெரிவித்தது.

அரசின் ஓர் அங்கமாக ஈ.பி.டி.பி. இருந்தாலும் அரசு தம்முடனும் தீர்வு குறித்தும் பேசுமாம் என்று அந்த அறிக்கை முக்கியமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏற்க முடியாது என்றார். அவர்கள் அப்படிக் கூறித் திரிகிறார்கள். ஆனால் அந்த நிலையை நாங்கள் மாற்றிவிட்டோம்'' என்றார் அவர்.

அத்துடன் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள்தான் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். புலிகளின் மாயையில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி தமிழ்வின்

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு


தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த இலங்கையின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே பிரஸ்தாப வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை என்பது குறித்து கடும் தொனியில் இந்தியப் பிரதமர் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறைந்த பட்சம் எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று உறுதியாக வாக்களித்தால் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்குச் சார்பாக செயற்பட முடியும் என்று இந்தியப் பிரதமர் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான வாக்குறுதியை அளித்த பின்னரே நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இந்தியா ஓரளவுக்கு இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. ஆயினும் அதனை முழுமையாக ஆராய்ந்த பின்பே இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

நன்றி தமிழ்வின்

தமிழினத் துரோகிகள்.....!


இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபக்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபக்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத விநியோகம், கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.

இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மௌனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரபூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

"(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரபூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபட நாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு "இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை.

பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப்புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் டில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே?

இலங்கை அதிபர் ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகிகள் இவர்களே...!

தினமணி: தலையங்கம்




















No comments: