வலிநிவாரணிகள் (Pain Killers) - நல்லதும் கெட்டதும்

.

வலிநிவாரணிகள் (Pain Killers) - நல்லதும் கெட்டதும்

வலி நிவாரணிகள் பற்றி நிறையத் தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன.


வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கடுமையான இடுப்புவலியால் துன்பப் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தனக்கு Pain Killer மருந்து வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார்.

அதே வேளை முழங்கால் வலியுள்ள ஒரு அம்மா Diclofenac Sodium என்ற வலிநிவாரணி மாத்திரையை எந்த மருத்துவரின் சிபார்சுமின்றி மாதக்கணக்கில் தானாகவே உபயோகித்துக் கொண்டிருந்தார்.

இருவரும் தவற்றையே செய்கிறார்கள்.


வலிநிவாரணிகள் (Pain Killers) எனப் பொதுவாக அழைத்தாலும் இவை ஆங்கிலத்தில் Non-steroidal anti-inflammatory drugs என்றே மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது.

சுருக்கமாக NSAID என்பார்கள். ஸ்டிரொயிட் அல்லாத வலிநிவாரணிகள் எனலாம்.

பொதுவாக வலிநிவாரணி என அழைத்தாலும் இவை முக்கியமாக மூன்று வகைகளில் பயன் தருகின்றன.

இவை வாயினால் உட்கொள்ளக் கூடிய மாத்திரைகளாகவும், சிரப் மருந்துகளாகவும், கூட்டுக் குளிசைகளாகவும் (Capsules) கிடைக்கின்றன. அதேவேளை மலவாயிலில் உட்செலுத்தும் மருந்துகளாக (suppository) மற்றும் ஊசி மருந்துகளாகவும் (Injections) அவசியமானபோது மருத்துவர்களால் உபயோகிக்கப்படுகின்றன.

மருத்துவப் பயன்கள்

இவை பலவகையான மருத்துவப் பிரச்சனைகளுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

• வலி – குத்து, வலி, உழைவு, நோ எனப் பலவாறு அழைக்கப்படும் எல்லா வலி சார்ந்த அசௌகரியங்களையும் குறைக்கினறன. தசைப்பிடிப்புகள், தலைவலி, உடல்வலி, மாதவிடாய்க் குத்து, வயிற்று வலி, சிறுநீரகக் குத்து போன்ற அனைத்தையும் நீக்கும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு.
• காய்ச்சலைத் தணிக்வும் இவை பயன்படுத்தப்படுகிறன.
• அழற்சியைத் தணிக்க உதவும். உதாரணமாக மூட்டு வாதங்களின் (Rhematoid Arthritis) போது அவை அழற்சியுற்று வீங்கிச், சிவந்து, வலியைக் கொடுக்கும். இந்த அழற்சியைத் (inflammation) தணிக்கும் ஆற்றல் வலிநிவாரணிகளுக்கு உண்டு.
• மாதவிடாயின் போது கடுமையான குருதிப் பெருக்கு இருந்தால் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இவைக்கு இருக்கிறது.

எனவே இவை மிகுந்த பயனுள்ள மருந்துகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் அவற்றை எழுந்தமானத்திற்கு உபயோகிக்கக் கூடாது. அவற்றிற்கு பல பக்க விளைவுகள் உள்ளன.

அதிகம் ஏற்படும் பக்க விளைவுகள்

• நெஞ்செரிப்பு
• இரைப்பைப் புண்

சிலவேளைகளில் ஏற்படும் பக்க விளைவுகளாவன இரைப்பையில் ஏற்படும் புண்கள் மோசமாகி பின்வரும் விளைவுகள் ஏற்படலாம்.

• இரைப்பைப் புண்ணிலிருந்து இரத்தம் கசிதல்
• இரத்தசோகை - அவ்வாறு தொடர்ந்து இரத்தம் கசிவதால் ஏற்படும்
• இரைப்பையில் அல்லது உணவுக் கால்வாயில் துவாரம் விழுதல்.

மிகக் குறைவாக ஏற்படும் பக்க விளைவுகளாவன

• உயர்இரத்த அழுத்தம்
• இருதய வழுவல் (Heart Failure)
• மாரடைப்பு

சிறுநீரக வழுவல், ஈரல் பாதிப்பு போன்ற மிக ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால் மிகக் குறைவாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக அல்லது ஈரல் நோய் இருப்பவர்களே அத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

எனவே இத்தகைய மருந்துகளை மருத்துவ ஆலொசனை இன்றி உபயோகிப்பது நல்லதல்ல. அவ்வாறு உபயோகிக்கும்போதும் சிபார்சு செய்ததை விட அதிக காலத்திற்கு உபயோகிக்கக் கூடாது.

அவதானம் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட பாதிப்புள்ளவர்கள் வலிநிவாரணிகளை உபயோகிப்பதில் மேலதிக அவதானம் தேவை. இல்லையேல் இரப்பை புண் ஏற்படும் ஆபத்து அதிகமாகும்

• ஏற்கனவே நெஞ்செரிப்பு, புகைச்சல், வயிற்று வலி போன்ற உணவுக் கால்வாய்ப் பிரச்சனை உள்ளவர்கள்
• நீரிழிவு, உயர்இரத்த அழுத்த நோய், இருதய நோயுள்ளவர்கள்
• 65 வயதிற்கு மேற்பட்டவர்கள்
• புகைத்தல், அதிக மது பாவனையாளர்கள்
• அதிக அளவிலும், நீண்ட காலத்திற்கும் வலிநிவாரணி உபயோகிப்பவர்கள்

ஆஸ்த்மா நோயை சில தருணங்களில் தீவிரமாக்கலாம் என்பதால் அவர்கள் வலிநிவாரணிகளை அவதானத்துடன் உபயோகிக்க வேண்டும்.

கர்பமாயிருக்கும்போதும், கர்ப்பம் தரிப்பதை எதிர்நோக்கியிருக்கும் காலங்களிலும், பாலுட்டும் காலத்திலும் மருத்துவ ஆலோசனை இன்றி உபயோகிக்கக் கூடாது.

பல நாடுகளில் பின்வரும் வலிநிவாரணிகள் ibuprofen, naproxen, and aspirin. மருத்துவ ஆலோசனையின்றி நோயாளிகள் தாங்களே வாங்கி உபயோகிக்க முடியும்.

ஆயினும் diclofenac, indomethacin, mefenamic acid, meloxicam, celecoxib, nabumetone போன்றவற்றை மருத்துவ ஆலோசனையின்றி உபயோகிக்க முடியாது.

வலிநிவாரணிகளை உபயோகிப்பதில் சிக்கல் உள்ளவர்கள் பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரைகளை பயமின்றி உபயோகிக்க முடியும்.

நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

No comments: