உலகச் செய்திகள்

.

1. இந்திய தூதரகத்தின் அலட்சியம்-பாஸ்போர்டடைத் தொலைத்த சென்னை பெண் விமான நிலையத்தில் மரணம்

 2. தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கை; 130க்கும் அதிக இலங்கையர் கைது

1.   இந்திய தூதரகத்தின் அலட்சியம்-பாஸ்போர்டடைத் தொலைத்த சென்னை பெண் விமான நிலையத்தில் மரணம்

துபாய்: பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் பீபி லுமடா. 40வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து விமானம் சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.

தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.



இதனால் பீபியால் எங்குமே போக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலையை விளக்கி இந்தியத் தூதரகத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இதனால் ஐந்து நாட்களாக அந்த அப்பாவிப் பெண் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டிருந்தார்.

அவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தினர் அவருக்கு சாப்பாடு, தண்ணீர், படுக்கை உள்ளிட்டவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு உதவுமாறு கோரியுள்ளனர். ஆனால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே வந்து பார்க்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் பலமுறை இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. விமான நிலையப் போலீஸாரும் பலமுறை இந்திய தூதரகத்தை அழைத்தும் கூட யாருமே வரவில்லை. ஏன் இந்தியத் தூதரகம் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை என்றனர்.

எல்லாம் நடந்து முடிந்த பின்னர் பீபியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதர் அனில் வாத்வா கூறுகையில், இது மிகவும் சோகமானது. எக்ஸ்டி பாஸ் தருவதற்குள் அவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாக தாமதங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பீபியின் உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.

தனது நாட்டுக் குடிமகளைக் காக்கக் கூட முன்வராத இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல் சக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

2. தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கை; 130க்கும் அதிக இலங்கையர் கைது

தாய்லாந்தில், தாய்லாந்து இராணுவத்தினரும் கனேடியன் இன்டர்போல் பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 60 ஆண்கள், 50 பெண்கள், 7 கர்ப்பிணித் தாய்மார்கள், 13 குழந்தைக ளும் உள்ளனர்.இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும் கப்பலில் கனடாவிற்கு செல்வதற்காக வந்திருந்த அகதிகளும் கைது செய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக் கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை 6.30 மணியளவில் தாய்லாந்தின் ஒன்சபோன், சபான்மை, பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்று வட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள், தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்டர்போல் பொலிஸார் இவர்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன், சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்டர்போலும், தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களை அனுப்பி வைக்கும் பிரதான முகவர்கள், உதவி முகவர்கள், சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், நேற்றுக் காலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட வேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு, 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும் இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும் கனேடியன் இன்டர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.  நன்றி தேனீ

No comments: