அவுஸ்ரேலிய செய்திகள்

.
இனவெறிச் செயலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய போலீசார் 4 பேர் டிஸ்மிஸ்


இனவெறிச் செயலில் ஈடுபட்ட போலீசார் 4 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இனவெறி இ-மெயில்களை சுற்றுக்கு விட்ட 15 போலீஸ்காரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் போலீஸ் துறையில் வேலை செய்பவர்கள் மத்தியில் ஒரு இ-மெயில் மூலமாக ஒரு வீடியோ கிளிப்பிங் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது. அதில் ரெயிலில் கூட்டமாக இருக்கிறது. இதனால் ரெயில் கூரை மீதும் மக்கள் பயணம் செய்கிறார்கள். ரெயில் ஒரு நிலையத்தில் நின்ற போது கூரை மீது பயணம் செய்த ஒருவர் எழுந்து நிற்கிறார். அப்போது அவர் தலைக்கு மேலாக செல்லும் மின்சார கம்பியை தன் ஒரு கையால் பிடிக்கிறார். இதில் மின்சாரம் தாக்கி அவர் பலியாகிறார்.



இந்த காட்சியை ஆஸ்திரேலிய போலீசார் இ-மெயில் மூலம் சுற்றுக்கு விட்டனர். அதோடு அந்த வீடியோ காட்சிக்கு கீழே ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் பிரச்சினைக்கு இது தான் சரியான தீர்வு என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

மனிதாபிமானம் இல்லாமல் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்த இந்த குறிப்புக்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதரை அழைத்து இந்தியா தன் கண்டனத்தை தெரிவித்தது.

போலீஸ் அதிகாரிகளின் இந்த செயலுக்கு விக்டோரிய மாநில பிரதமர் ஜான் பிரம்பி கடும் கண்டனம் தெரிவித்தார். இது விக்டோரியா மாநில மக்களின் எண்ணத்துக்கு எதிரானது. மனிதாபிமானத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் விக்டோரியா மாநிலத்தில் இனவெறியுடன் கூடிய இந்த வீடியோ கேசட்டை சுற்றுக்கு விட்ட 4 போலீஸ் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்தது. இந்த வீடியோ காட்சியை சுற்றுக்கு விட்டது தொடர்பாக 15 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு அதிகாரி பதவி இறக்கம் செய்யப்பட்டார். 5 போலீசாருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 15 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் போலீஸ் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. விசாரணையில் 3 சூப்பிரண்டுகள் பிடிபட்டனர். போலீஸ் கம்ப்ïட்டர் சிஸ்டம் மூலம் இந்த இ-மெயில்கள் அனுப்பப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் இதில் பிடிபட்டனர்.

1 comment:

kalai said...

அவுஸ்திரெலியர்களைத் தாக்குவோம் என்று பால்தாக்கரே சொன்னாரே .அது இனவாதமில்லையா?.