உலகச் செய்திகள்

இஸ்ரேலிய தரைப்படை காசாவில் ஊடுருவி தாக்குதல்; 7,000 பேர் இதுவரை பலி 

ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் ஹிஸ்புல்லா தலைவர்கள் பேச்சு

ஹமாஸ் விடுவித்த இரு பெண்கள்; அவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டதாக தெரிவிப்பு - காசாவில் தொடரும் மனிதப் பேரவலம்!

உலகெங்கும் ஆர்ப்பாட்டம்

மத்திய கிழக்கில் அமெரிக்க ‘வான் பாதுகாப்பு’ அதிகரிப்பு

இம்ரானுக்கு பிணை மறுப்பு

இஸ்ரேலின் தரைப்படை போர் விமானங்களுடன் மத்திய காசாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் - தரைவழி தாக்குதலுக்கு ஒத்திகை: உயிரிழப்பு அதிகரிப்பு


இஸ்ரேலிய தரைப்படை காசாவில் ஊடுருவி தாக்குதல்; 7,000 பேர் இதுவரை பலி 

October 27, 2023 7:46 am 

இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவுக்கு முன்னேறி ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கும் நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“இது எப்போது, எப்படி அல்லது எத்தனை என்று நான் கூறமாட்டேன்” என்று கடந்த புதனன்று (25) தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு குறிப்பிட்டார்.

முழு முற்றுகையில் உள்ள காசா பகுதி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் ஏற்கனவே அந்தப் பகுதி பெரும் பேரழிவுகளை சந்தித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 200க்கும் அதிகமான பணயக்கைதிகளை பிடித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, அந்த பணயக்கைதிகளில் சிலரை கொல்லப்போவதாக எச்சரித்துள்ளது. இந்தப் பணயக்கைதிகளில் பாதிக்கும் அதிகமானவர்கள் 25 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் உயிரிழப்பு ஏழாயிரத்தை தாண்டிய நிலையில் இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் குறித்து மத்திய கிழக்கு தலைவர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே இஸ்ரேல் மீது மற்ற இடங்களில் இருந்து ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் குறித்து” பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதில் காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினர் அங்கிருக்கு பாதுகாப்பாக வெளியேறுவது, இஸ்ரேல் முடக்கி வைத்திருக்கும் அந்த குறுகிய கடலோரப் பகுதிக்கு தொடர்ந்து உதவிகள் செல்வது மற்றும் பலஸ்தீன மக்களுக்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு காசா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று அதிகாலை பாரிய ஊடுருவலை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிக பாதுகாப்புக் கொண்ட எல்லையைத் தாண்டி இஸ்ரேலிய கவச வாகனங்கள் காசாவுக்குள் ஊடுருவுவது மற்றும் அடுத்த கட்ட போர் நடவடிக்கைக்கு தயாராவதற்கு கட்டடங்களை தகர்க்கும் வீடியோவை இஸ்ரேல் வெளிட்டது. காசாவில் தாக்குதல்களை நடத்தி விட்டு இஸ்ரேலிய தரைப்படை அங்கிருந்து வெளியேறியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

“டாங்கிகள் மற்றும் தரைப்படை பல பயங்கரவாத செல்கள், உட்கட்டமைப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஏவுதளங்களை தாக்கின” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் தான் திட்டமிட்டிருக்கும் தரைவழி தாக்குதலை ஆரம்பிப்பதாக இது அமையவில்லை. அதற்கான முன்னேற்பாடாக இந்த ஊடுருவல் இருந்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம் காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் நேற்றைய தினத்திலும் நீடித்தது. புரைஜ் அகதி முகாமுக்கு அருகில் மத்திய காசா, கராரா கிராமத்தின் கிழக்கு பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமாக இருந்துள்ளன.

இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்புக்கு ஹமாஸ் நேரடியாக பதில் கூறாதபோதும், கிழக்கு புரைஜில் இஸ்ரேலிய ஹெலிகொப்டர் ஒன்றின் மீது தமது ஆயுதப் பிரிவு தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும் உலகில் அதிக சனநெரிசல் மிக்க பகுதி ஒன்றான காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 250 இலக்குதல் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளது.

காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 7,028 ஆக உயர்ந்திருந்ததோடு அதில் 2,913 சிறுவர்கள், 1,709 பெண்கள் மற்றும் 397 முதியவர்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் இந்தப் போர் வெடித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. இஸ்ரேல் நேற்றைய தினத்திலும் சுற்றிவளைப்புகளை நடத்தி நூற்றுக்கணக்கானோரை கைது செய்தது.

வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய போர் விமானம் வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதில் தாய் மூன்று மகள்கள் மற்றும் ஆண் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது.

1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது தமது பெற்றோர் அங்கிருந்து வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் என்று குறிப்பிட்ட தந்தை, என்ன நடந்தாலும் இங்கிருந்து வெளியேறப்போவதில்லை என்று குறிப்பிட்டார். கொல்லப்பட்ட தனது ஆண் குழந்தையை சுமந்தபடி அழுதுகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

“இவனுக்கு இரண்டரை மாதங்கள் தான் ஆகிறது. இவன் என்ன செய்தான்? இவன் கொலைகள் செய்தானா? யாரையாவது காயப்படுத்தினானா? யாரையாவது பிடித்து வைத்திருக்கிறானா? தனது வீட்டுக்குள் இருந்த அப்பாவிக் குழந்தை இவன்” என்று அந்தத் தந்தை குறிப்பிட்டார்.

வடக்கில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதி மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசாவில் உள்ள அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர் வயில் அல் டவுதாவின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவரது மனைவி, மகன், மகள் மற்றும் பேரக் குழந்தையும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் எரிபொருள் தீர்ந்து வரும் நிலையில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இதனால் காசா பகுதியில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை பெரிய அளவில் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று காசாவுக்கு எகிப்துடனான ரபா எல்லைக் கடவை வழியாக உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிய மேலும் 12 லொறிகள் வந்ததாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. போர் வெடித்தது தொடக்கம் காசாவுக்கு 74 உதவி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும் பெரும் உதவிகள் தேவைப்படும் நிலையில் இது கடலில் போட்டதற்கு ஒப்பானது என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

காசாவில் மனிதாபிமான விநியோகங்கள் மோசமான அளவுக்கு குறைந்துள்ளது. அங்கு மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் உலக நாடுகளின் முயற்சிகளும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.

நேற்று பாப்பரசர் பிரான்சிஸுடன் தொலைபேசியில் பேசிய துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் படுகொலைக்கு சமம் என்றும் சர்வதேச சமூகம் அமைதி காப்பது வெட்ககரமானது என்றும் தெரிவித்தார்.

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேற்று விவாதித்தனர். 27 நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற பலஸ்தீன ஆதரவு நாடுகள் மற்றும் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற இஸ்ரேல் ஆதரவு நாடுகள் இருக்கும் நிலையில் அந்த அமைப்பு இஸ்ரேல் மற்றும் காசா போரில் பிளவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் ஹிஸ்புல்லா தலைவர்கள் பேச்சு

October 26, 2023 4:47 pm 

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்ல பலஸ்தீன போராட்ட அமைப்புகளான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

ஹமாஸ் பிரதித் தலைவர் சாலிஹ் அல் அரூரி மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் சியாத் அல் நகாலாவை சந்தித்த நஸ்ரல்லா, காசாவில் போராட்டத்திற்கான உண்மையான வெற்றி ஒன்றை அடைவதற்கு தமது கூட்டணி மேற்கொள்ள வேண்டி நடவடிக்கையை மதிப்பீடு செய்ததாக ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான அல் மனார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

“இந்தக் கூட்டத்தில் சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் மற்றும் எதிர்ப்பு கூட்டணி என்ன செய்ய வேண்டும் என்பதை மதிப்பீடு செய்தது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஈரான், சிரியா, பலஸ்தீன போராட்டக் குழுக்கள், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் மற்றத் தரப்புகளையே கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





ஹமாஸ் விடுவித்த இரு பெண்கள்; அவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டதாக தெரிவிப்பு - காசாவில் தொடரும் மனிதப் பேரவலம்!

October 25, 2023 7:04 pm 

நன்றி தினகரன் 





உலகெங்கும் ஆர்ப்பாட்டம்

October 23, 2023 1:34 pm 

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் முற்றுகை தொடரும் நிலையில் உலகெங்கும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மத்திய லண்டனில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரமாண்ட பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தனர். காசா மீதான தாக்குதலை நிறுத்தவும் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். பலஸ்தீன கொடியை ஏந்தியபடி இவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

வடக்கு அயர்லாந்தின் முக்கிய நகரமான லண்டன் பெர்ரியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அயர்லாந்து குடியரசின் எல்லையில் டப்ளின் நகரம் நோக்கி ஆயிரக்கணக்கானோர், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி பேரணியில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் பல்வேறு பகுதிகளில், ‘நாங்கள் அனைவரும் பாலஸ்தீனர்கள்’ என்ற முழக்கத்தோடு மக்கள் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.

ஜெர்மனியில் 7,000 பேர் கலந்து கொண்ட போராட்டம் தியுசல்டார்ஃப்பில் நடந்ததாகத் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

ரோம், பார்சிலோனா, டொரண்டோ, நியூயோர்க், மலேசியா என உலகின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறித்துவர்கள் என பல்வேறு இன மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 





மத்திய கிழக்கில் அமெரிக்க ‘வான் பாதுகாப்பு’ அதிகரிப்பு

October 23, 2023 7:59 am 

மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவத்தின் தயார் நிலையை அதிகரிக்கும் வகையில் அந்த பிராந்தியம் முழுவதும் வான் பாதுகாப்பு அமைப்பை செயற்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உத்தரவிட்டுள்ளது.

பிராந்தியத்தில் விரைவில் மேலதிக தூருப்புகளும் நிலைநிறுத்தப்படும் என்றும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பட்ரோயிட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு படையணிக்கு மேலதிகமாக தாட் என அழைக்கப்படும் உயிர் வான் பகுதியை பாதுகாக்கும் அமைப்பும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படும் என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது. இந்த தாட் அமைப்பு குறுகிய மற்றும் மத்திய தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தும் திறன் கொண்டதாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியம் எங்கும் ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பென்டகனின் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் ஆரம்பித்தது தொடக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமெரிக்கா தனது இரு விமானதாங்கி கப்பல் மற்றும் போர் கப்பல்கள், ஜெட்களை இஸ்ரேலுக்கு நெருக்கமாக கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






இம்ரானுக்கு பிணை மறுப்பு

October 28, 2023 9:32 am 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பிணையில் விடுவிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

அரசாங்க இரகசியங்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் தூதர் ரகசியமாக அனுப்பிய கம்பிவடத் தகவலை பிரதமர் என்ற முறையில் அந்த ரகசியத்தைப் பாதுக்காக்காமல் பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக கான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யுமாறும் கானுக்கு பிணை வழங்குமாறும் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் நயீம் பாஞ்சதா தெரிவித்தார்.

பிரதமர் பதவியில் இருந்த கானுக்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார்.

பின்னர், லஞ்ச ஊழல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.  நன்றி தினகரன் 





இஸ்ரேலின் தரைப்படை போர் விமானங்களுடன் மத்திய காசாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் - தரைவழி தாக்குதலுக்கு ஒத்திகை: உயிரிழப்பு அதிகரிப்பு

October 28, 2023 9:42 am 

இஸ்ரேலிய தரைப்படை போர் விமானங்களின் உதவியோடு நேற்று (27) காசாவுக்குள் ஆழ ஊடுருவியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல் தொடர்ந்து இரண்டாவது நாளாகவே காசாவுக்குள் படைகளை அனுப்பியுள்ளது.

இந்தப் போர் 21 நாட்களைத் தொட்ட நிலையில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்று இடைவிடாது தொடர்ந்தது. மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழைப்பு விடுத்தபோதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களில் இருந்து பின்வாங்காது நாளுக்கு நாள் அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது.

காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 7000ஐ தாண்டி வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் ஆரம்ப நாட்களில் தினசரி 200 தொடக்கம் 300 பேர் வரை கொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு 700க்கும் அதிகமானோர் கொல்லப்படும் அளவுக்கு மோசடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் 400க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.

காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை கடைப்பிடித்து வரும் சூழலில் அங்கு மனிதாபிமான நெருக்கடியும் மோசமடைந்துள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இதுவரை அந்தப் பகுதியில் எகிப்துடனான ரபா எல்லை வழியாக 74 உதவி லொறிகள் நுழையவே அனுமதி கிடைத்துள்ளது. எனினும் இவை போதுமானதாக இல்லை என்று உதவிக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன. மோதல் வெடிப்பதற்கு முன்னர் தினசரி காசாவுக்கு சுமார் 500 லொறிகள் சென்றதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

காசாவில் இருக்கும் 35 மருத்துவமனைகளில் 12 மூடப்பட்டிருப்பதோடு எரிபொருள் தீர்ந்து வரும் நிலையில் தமது செயற்பாடுகள் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளால் மக்கள் விரைவில் மரணிக்க ஆரம்பிப்பார்கள் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. “காசா மக்கள் குண்டுகள் மற்றும் தாக்குதல்களால் மாத்திரம் உயிரிழப்பதில்லை. காசாவில் நிலவும் முற்றுகையின் விளைவால் மேலும் பலர் உயிரிழப்பார்கள்” என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசாரினி தெரிவித்துள்ளார்.

காசா எல்லையில் ஆயிரக்கணக்கான துருப்புகளை குவித்து வைத்திருக்கும் இஸ்ரேல் மத்திய காசா மீது குறுகிய காலத்திற்கு தரைவழியாக ஊடுருவிச் சென்றது. போர் விமானங்கள் மற்றும் ஆயுதமற்ற விமானங்களின் உதவியோடு தரைப் படை மத்திய காசாவில் கூடுதல் இலக்குகளில் சுற்றிவளைப்புகளை நடத்தியது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட கறுப்பு வெள்ளை படத்தில் கவச வாகனத் தொடரணி ஒன்றும் தாக்குதல் ஒன்றுக்குப் பின்னர் வானில் பெரும் புகைமூட்டம் எழுவதும் தெரிகிறது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகார் கூறும் போது, ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் அடுத்த கட்டப் போருக்கு தயாராவதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வரும் நாட்களில் காசாவில் பீரங்கி தாக்குதல்களை தொடரும் என்றார்.

இந்நிலையில் ஹமாஸின் மேற்குக் கான் யூனிஸ் படைப் பிரிவின் தளபதி மிதாத் மபஷரை தமது படையினர் கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அது கூறியது.

இதேவேளை போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்படும் வரை மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அதிகாரியான அபூ ஹமீதை மேற்கோள்காட்டி ரஷ்யாவின் கமர்சன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி கடத்தி வரப்பட்ட இந்தப் பணயக் கைதிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்கும் காலம் தேவைப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் 229 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகரி தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு இதுவரை நான்கு பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யா விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்திருக்கும் நிலையில் இஸ்ரேலிய படையினரால் நேற்று (27) மேலும் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஜெனின் பகுதியில் மூவரும், கல்கிலியாவில் ஒருவரும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி மோதல் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சராசரியாக மாதாந்தம் கொல்லப்படும் பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் கடந்த மூன்று வாரங்களாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் ஒன்றுக்கு மேற்பட்ட வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

வடக்கு இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா போராளிகள் ஊடுருவி தாக்குவதை தவிர்ப்பதற்கு இஸ்ரேல் படைகள் மரங்கள், புதர்களுக்கு தீ வைத்து அழித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் இஸ்ரேல் எல்லைக்கு அருகில் இருக்கும் எகிப்தின் டாபா நகரில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதல் ஒன்றில் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றுக் காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் அம்பூலன்ஸ் நிலை ஒன்று மற்றும் காசா மருத்துவமனை நிர்வாகத்திற்குள் இருக்கு கட்டிடம் ஒன்றில் ஏவுகணை விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





No comments: