நியூஸிலாந்து கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணை

 Saturday, September 4, 2021 - 8:42pm

நியூஸிலாந்து கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணை-Sri Lanka Police Investigating About Attacker of New Zealand-Auckland

நேற்றையதினம் (03) நியூஸிலாந்தின் ஒக்லண்டில் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவலுக்கமைய, சந்தேகநபர் கடந்த 2011ஆம் ஆண்டு மாணவராக இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் தொடர்பிலான மேலதிக தகவல்களை பெறுவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்புடையவர்களிடம் தகவல்களை பெற்று வருவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நியூஸிலாந்து பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளையில் 2016ஆம் ஆண்டளவில் 4 மாடிக் கட்டடமொன்றிலிருந்து வீழ்ந்த நிலையில், அவருக்கு உதவிய நபர்கள் ஈராக், சிரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் இவருக்கு மூளைச் சலவை செய்துள்ளார்கள் என காத்தான்குடியைச் சேர்ந்த அவரது தாயார் தெரிவிக்கின்றார். அதன் பின்னரே அவர் சமூக வலைத்தளங்களில் கடும்போக்குவாத கருத்துகளை பரப்பியதாக அவர் தெரிவிக்கிறார்.

இவ்விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபர், அந்நாட்டில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுதலையான நிலையில், அந்நாட்டு பொலிஸாரால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன் 

No comments: