பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 1 - C I D சங்கர் - ச . சுந்தரதாஸ்

.


ஆங்கில திரைப்படங்களில் மிகப்பிரபலமானது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் .கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு பல மொழிகளில் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன, அந்தவகையில் தமிழிலும் பல படங்கள் தயாரிக்கப்பட்டன. எம்ஜிஆர், சிவாஜி உட்பட பலர் இவ் வேடங்களில் நடித்த போதிலும் ஜெய்சங்கருக்கே இவ்வேடம் கண கச்சிதமாக பொருந்தியது, இதனால் ரசிகர்கள் அவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அழைத்தனர். அவ்வாறு அவர் நடித்து 1970 இல் வெளிவந்த படம் சிஐடி சங்கர். படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்றும் பல ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் பிரபல அரசியல் தலைவர் ரகுநாத் ஊர்வலமாக தொண்டர்கள் புடைசூழ அழைத்து வரப்படுகிறார், அப்போது ஒரு இளம் பெண் கையில் மாலையுடன் அவரை அணுகி மாலையை அவருக்கு போடுகிறாள் மறுவினாடி குண்டுவெடிக்க இவரும் இறக்கின்றார்கள் , இதைப் படித்தவுடன் உண்மையில் நடந்த சம்பவம் வாசகர்களுக்கு நினைவில் வரும் . 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம்தான் அது. 20 வருடங்களுக்கு முன்னரே இச்சம்பவம் சிஐடி சங்கர் படத்தில் காட்சியாக சித்தரிக்கப்பட்டிருந்தது.






தீவிரவாத நடவடிக்கை மூலம் தற்கொலைகளை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஒரு தீவிரவாத கும்பல் மேற்கொள்கின்றது அக்கூட்டத்தை ஒழிக்க சங்கர் புறப்படுகிறார் அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் சேர்கிறாள் . பலவித அச்சுறுத்தல்களை இவர்கள் எதிர் நோக்குகிறார்கள். இப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்தது அதன் அதிபர் சுந்தரம் படத்தை டைரக்ட் செய்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் சகுந்தலா என்ற நடன நடிகையை முதல்முறையாக கதாநாயகியாக அவர் அறிமுகம் செய்தார். இப்படத்தில் நடித்ததால் அவர் பெயர் சிஐடி சகுந்தலா என்று மாறியது. இவர்களுடன் தேங்காய் சீனிவாசன், மனோகர், ஜெய் குமாரி ஆகியோரும் நடித்திருந்தனர். தீவிரவாத கூட்டத்தின் தலைவர்களாக ஏ ஏ கே தேவரும், ஆனந்தனும் நடித்தனர். படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இருந்தன.




படத்திற்கான வசனங்களை ஏஎல் நாராயணன் எழுதினார். தன்னைத் தியாகம் பண்ண தெரிந்தவர்கள் தான் உலகத்தின் விதியை மாற்ற முடியும், மனிதன் ஒரு பிறவி அல்ல கருவி , சாவில்லாமல் சாம்ராஜ்யங்கள் அமைந்ததில்லை போன்ற வசனங்கள் கருத்தோடு அமைந்தன. கவிஞர் கண்ணதாசனின் ஞானத்தாலே கால்கள் பின்ன பின்ன, பிருந்தாவனத்தில் பூவெடுத்து, தைப்பூசத் திருநாளில் பாடல்கள் டிஎம்எஸ், சுசீலா குரலில் இனிமையாக ஒலித்தன. படத்திற்கு இசையமைத்தவர் வேதா . பாடல்களில் மட்டுமன்றி பின்னணி இசைக் கோர்வைகளிலும் கலக்கியிருந்தார் வேதா. வெற்றிப்படமாக அமைந்தது சிஐடி சங்கர்.



No comments: