வீரர்க்கொரு விளக்கு கவிஞர் த. நந்திவர்மன்




            பறந்தன பாரினில் பதினொரு ஆண்டுகள்
            இறந்தவர் தொலைந்தவர் எத்தனை ஆயிரம்
            மறந்திட முடியுமோ மடிந்தவர் நினைவினை?
            மறைந்தவர் வலியினில் மலருமோ புதுயுகம்?                    1

            நிறைந்திடும் வாழ்வென நிம்மதி வருமென
            குறைந்திடுந் துயரெனக் கூடிடுஞ் சுகமெனச்
            சிறந்திடுந் தமிழெனச் சீர்பல வருமென
            இறங்கினர் களத்தினில் எடுத்ததை முடித்திட.                   2

            கொடுமைகள் அழித்திடக் கொள்கையில் நின்றனர்
            விடுதலை வேண்டியே வீரராய் மாண்டனர்
            படுகுழி வீழ்ந்தனர் பதைத்திட இறந்தனர்
            தடுத்திட எவருமே தரணியில் வந்திலர்!                                   3


            பொன்னுயிர் நொடியினில் போய்விடும் அறிந்துமே
            தன்னுயிர் தந்தனர் தமிழினித் தழைத்திட
            மன்னுயிர் வாழ்ந்திட வரமென வழங்கிய
            இன்னுயிர் போற்றியே ஏற்றுவம் விளக்கையே!!                 4

           
            சிட்னி
            வைகாசி 2020





No comments: