இலங்கைச் செய்திகள்

தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து 

ரிஷாட்டுக்கு எதிரான விசாரணை நிறைவு

அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்

9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்... 

சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தேசியப் பட்டியல் ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அரசியல் பழிவாங்கல்; ரணில் விக்ரமசிங்கவுக்கு செப். 04, 07 இல் அழைப்பு

மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித பழிவாங்கல் ஆணைக்குழுவில்

அரசாங்கத்திற்கு நட்டம்; ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை

ஷானி அபேசேகர, SI ரோஹணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அங்கஜன் இராமநாதனின் நியமனம் SLFPக்கு கிடைத்த பெரும் கௌரவம்


தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து 

- வீட்டுக்கு பலத்த சேதம்  உடைமைகள் எரிந்து நாசம்
- நாசகார வேலையா? விசாரணை தொடர்கிறது 

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கொத்மலை - வேவன்டனிலுள்ள பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30அளவில் ஏற்பட்ட இத் தீ அனர்த்தத்தில் வீட்டின் கூரை உட்பட வீட்டின் பெறுமதிவாய்ந்த உடைமைகள் பல முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.  


நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆறுமுகன் தொண்டமானின் புதல்வனான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தனர்.  

இத் திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தீ அனர்த்தம் காரணமாக, வேவன்டண் இல்லத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹற்றன் சுழற்சி நிருபர்   நன்றி தினகரன் 






ரிஷாட்டுக்கு எதிரான விசாரணை நிறைவு

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது, ஆதரவாளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து செல்ல அரச நிதியை பயன்படுத்தியது தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர்.  

விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

ரிஷாத் பதியுதீன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பஸ்களை பயன்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 






அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்

அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு  இணை அமைச்சரவை பேச்சாளர்களாக அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 






எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்

➡️ பௌத்தத்திற்கு முன்னுரிமை; எந்தவொரு பிரஜைக்கும் மத சுதந்திரம்
➡️ அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும்
➡️ 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படும்
➡️ ஒரு நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கும் புதிய அரசியலமைப்பு
➡️ அமைச்சுக்கள், நிறுவனங்களில் வீண்விரயம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி
➡️ மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்களிடம் செல்ல நடவடிக்கை

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa(புகைப்படங்கள்: சுலோச்சன கமகே)

கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள் வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa

இன்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa

ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து எளிமையாக நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலம் போன்ற அம்சங்கள் நிகழ்வில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa

பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன மற்றும் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக ஆகியோர் வரவேற்றனர்.

பிரதான வாயிலில் பாடசாலை மாணவிகள் மங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரை வருமாறு,

கௌரவ சபாநாயகர் அவர்களே,
கௌரவ பிரதமர் அவர்களே,
கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே,
கௌரவ அமைச்சர்களே,
கௌரவ இராஜாங்க அமைச்சர்களே,
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே,

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து
சபாநாயகர் பதவிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோன்று இன்றைய தினம் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்களுக்கும் குழுக்களின் பிரதித் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa

2/3 வழங்கிய மக்களுக்கு நன்றி
ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். ஸ்திரமான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக 2/3 அதிகாரத்தை பெற்றுத் தருமாறு நாம் மக்களிடம் கேட்டிருந்தோம்.

வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2/3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதன் நட்பு அணிகளுக்கும் பெற்றுத் தந்த நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நான் முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

சர்வஜன வாக்குப் பலம் நாம் அனைவரும் மதித்துப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக உரிமையாகும். எனவே இந்த தேர்தலில் தமது பெறுமதியான வாக்கினை பயன்படுத்திய அனைத்து இலங்கை வாக்காளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa

வழங்கிய உறுதிமொழியை நிரூபித்திருக்கிறேன்
கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகப்பெரும் மக்கள் ஆணையை வழங்கியது என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவாகும். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என நான் வழங்கிய உறுதிமொழியை இதுவரையிலான எனது செயற்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறேன்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே பொறுப்பேற்றோம்
ஜனாதிபதி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையான காலம் எமக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலப்பகுதியாக இருந்தது. வீழ்ச்சியடைந்திருந்த ஒரு பொருளாதாரத்தையே நாம் பொறுப்பேற்றோம். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் நாம் சிறுபான்மையான ஒரு அரசாங்கத்துடனேயே செயற்பட வேண்டியிருந்தது.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa

கொவிட்-19 சவாலை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்
இதற்கு மேலதிகமாக எமக்கு இக்காலப்பகுதியில் முழு உலகையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் உலகின் முக்கிய நாடுகள் கூட முடங்கியிருந்த நிலையில் அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு எமக்கு இயலுமானது. நோய்த் தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிநாடுகளினதும் பாராட்டைப் பெற்றது.

நாட்டை நன்றாக நிர்வகித்துள்ளோம்; மக்கள் ஆணை சாட்சி
இந்த ஒன்பது மாதக் காலப் பகுதியில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நாம் நாட்டை நிர்வகித்த முறைபற்றி நாட்டு மக்கள் தெளிவுடன் உள்ளார்கள் என்பதை ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணிக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் மக்கள் ஆணை எடுத்துக்காட்டுகிறது.

அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு மக்கள் மதிப்பளித்து வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளாக பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்கிறோம். மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கு அப்போதுதான் முடியுமாக இருக்கும்.

அரசியலமைப்புக்கு அமைய நாட்டின்  ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்
எமது நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் எனது பதவிக்காலப் பகுதியில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளப்படுத்துவதாகவும் நான் உறுதியளித்திருக்கின்றேன். அதற்கு ஏற்ப அரச நிர்வாகத்திற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் முன்னணி பௌத்த பிக்குகளைக்கொண்ட ஆலோசனை சபை ஒன்றை அமைத்துள்ளேன். அதேபோன்று தொல்பொருள் பெறுமதிவாய்ந்த  இடங்களை பாதுகாப்பதற்கும் எமது பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் விசேட செயலணி ஒன்றை அமைத்துள்ளேன்.

பௌத்தத்திற்கு முன்னுரிமை; எந்தவொரு பிரஜைக்கும் மத சுதந்திரம்
பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை உறுதிசெய்யும் அதேநேரம், இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதுவும் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது.

எமது பாரம்பரிய மரபுரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கும் கிராமிய கலைகளை பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa

அச்சமின்றி வாழும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம்
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் காரணமாக நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது மக்கள் மத்தியில் நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தது. எமது அரசாங்கத்தின் முக்கிய கொள்கை நாட்டின் பாதுகாப்பாகும் என்பதை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையை மறுசீரமைத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி நாட்டின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்தவொரு பிரஜைக்கும் தனதும் தனது குடும்பத்தினதும் பாதுகாப்புப் பற்றி எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை நாம் மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறோம்.

பாதாள உலகம், போதைப்பொருளுக்கு எதிரான பயணம்
நான் உறுதியளித்தவாறு பொதுவான மக்கள் வாழ்க்கைக்கு தடையாக உள்ள பாதாள உலக செயற்பாடுகள், போதைப்பொருள் பிரச்சினை போன்ற சமூக சீரழிவுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக முறையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு இருப்பது மக்களின் நம்பிக்கை மேம்படுத்துவதற்கு காரணமாகியுள்ளது.

சட்டத்தை மதிக்கும் சமூகம் உருவாகின்றது
நாம் உறுதியளித்தவாறு ஒழுக்கமான, பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்பி வருகின்றோம்.

தகைமை கொண்டோரே அரச நிறுவனங்களுக்கு தலைமை
இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் தெளிவானதொரு மாற்றத்தை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பதற்காக அதுவரையில் இருந்துவந்த சம்பிரதாயங்களை மாற்றி நிபுணர் குழுவொன்றின் ஊடாக தகைமைகளை கண்டறிந்து நியமனங்களை மேற்கொள்ளும் முறையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள், தனக்கு வேண்டியவர்களை நியமிக்காது தொழில் வல்லுனர்கள், தொழில் முயற்சியாளர்கள், கல்வியியலாளர்களைக் கொண்ட அனுபவம் வாய்ந்த குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

இறக்குமதியை நிறுத்தி உற்பத்தி பொருளாதாரம்
அதேபோன்று நாம் உற்பத்தி பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளுக்காக அதிக விலையை பெற்றுக்கொடுத்துள்ளோம். ஏற்றுமதி பயிர்களை மீள் ஏற்றுமதி நடவடிக்கைக்காக இறக்குமதி செய்வதை நிறுத்தியும், இந்த நாட்டில் பயிரிட முடியுமானவற்றை இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்தியும் சுதேச விவசாயிகளை பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். விவசாயிகளுக்கு தேவையான உரத்தினை இலவசமாக வழங்கினோம். நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டிருந்த விவசாயக் காணிகளில் மீண்டும் பயிரிடுவதற்கு மக்களை ஊக்குவித்தோம். இவை அனைத்தின் ஊடாகவும் நாம் இந்த நாட்டின் விவசாயத்துறைக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம்.

வரிச் சலுகை; வட்டி விகித குறைப்பு
நாம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் சுதேச தொழில் முயற்சியாளர்களை இலக்காகக்கொண்டு வரிச் சலுகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். வியாபாரத் துறையை வலுவூட்டுவதற்காக வட்டி விகிதத்தை குறைத்தோம். உள்நாட்டு வர்த்தகர்கள், தொழிற்துறையாளர்களை பாதுகாப்பதற்காக போட்டித் தன்மை வாய்ந்த இறக்குமதிகளை மட்டுப்படுத்தினோம்.

நம்பிக்கைக்கு மதிப்பளிக்கிறோம்; அதனை வீணடிக்கமாட்டோம்
இந்த தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியிருப்பது இந்த வகையில் எங்களைப் பற்றி அவர்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையே காரணம் என்பது தெளிவனதாகும். நாம் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வோம்.
மக்கள் வழங்கிய ஆணையை மிகச் சரியாக புரிந்துகொள்வது இங்கு முக்கியமானதாகும். என்மீதும் பிரதமர் உள்ளிட்ட புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நாம் மதிக்கிறோம். மக்கள் இவ்வளவு பெரிய மக்கள் ஆணையை அரசாங்கத்திற்கு வழங்கி இருப்பது எதனை எதிர்பார்த்து என்பது பற்றி நாம் அறிவோம். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள் வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

பதவிகள் பொறுப்புகள் அன்றி வரப்பிரசாதங்கள் அல்ல
மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படை பொறுப்பு மக்கள் சேவையாகுமென்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த அனைத்து பதவிகளும் பொறுப்புக்களே அன்றி வரப்பிரசாதங்கள் அல்ல என்பதை நினைவில் வைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

மக்கள் என்னிடம் பொதுத் தேவைகளையே முன்வைத்தனர்
நான் இந்த தேர்தலில் எமது அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து அபேட்சகர்களுக்கும் ஆதரவு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றுப் பயணம் செய்தேன். அரசியல் கூட்டங்களுக்குப் பதிலாக இந்த சுற்றுப் பயணங்களின் போது நான் மக்களிடம் சென்று நேரடியாக அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தேன். மக்கள் முன் வைத்த கோரிக்கைகளில் மிகப் பெரும்பாலானவை பொதுத் தேவைகளேயன்றி தனிப்பட்ட தேவைகள் அல்ல. சுதந்திரம் பெற்று 72 வருடங்களின் பின்னரும் மக்களின் பெரும்பாலான சாதராணமான தேவைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.

காணிகளுக்கும், பயிர் நிலங்களுக்கும் முறையான உறுதி
பல ஆண்டுகளாக தாம் வாழ்ந்து வரும் காணிகளுக்கு உரிய உறுதிகள் கிடைக்கப்பெறாத மக்கள் உள்ளனர். நாம் அவர்களுக்கு உரிய முறைமைகளின் படி உறுதிகளை வழங்குவோம். உரிய மாற்றீடுகள் இன்றி பல பரம்பரைகளாக வாழ்ந்து வந்த, தாம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலங்களில் இருந்து எவரையும் வெளியேற்ற மாட்டோம்.

யானை - மனிதன் மோதலுக்கு நிலையான தீர்வு
யானைகள் - மனிதர்கள் மோதல் இன்று பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வொன்றை கண்டறிவதற்கு தற்போது நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியானதொரு இராஜாங்க அமைச்சு ஏற்படுத்தப்பட்டிருப்பது நிலையான தீர்வொன்று தேவை எனும் காரணத்தினாலாகும்.

குடிநீர் பிரச்சினைக்கு விசேட நிகழ்ச்சித்திட்டம்
நாடளாவிய ரீதியில் நம்ப முடியாதளவு அதிக சதவீதமான மக்கள் குடிநீர் இன்றி கஷ்டப்படுகின்றனர். நாம் இந்த மனிதாபிமான பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். ஒரு தேசிய கொள்கையாக அடுத்து வரும் சில ஆண்டுகளில் அனைத்து பிரதேசங்களுக்கும் குடிநீரை பெற்றுக்கொள்ள நாம் ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிப்போம்.

தாம் விரும்பம் எதிர்காலத்தை கட்டியெழுப்ப பிள்ளைகளுக்கு கல்வி
பெற்றேர்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வி பெறுவதற்கான பொருத்தமான பாடசாலைகளை பெற்றுத் தருமாறு கோருகின்றார்கள். போதுமானளவு தேசிய பாடசாலைகள் இல்லாத குறை எல்லா இடங்களிலும் உள்ளது. பெரும்பாலான பாடசாலைகளில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறை, போதுமானளவு விஞ்ஞான ஆய்வுகூடங்கள், வாசிகசாலைகள், விளையாட்டு வசதிகள் இல்லாமை பற்றி அடிக்கடி கூறக் கேட்கிறோம். பொருளாதாரத்திற்கு வினைத்திறனான பங்களிப்பை வழங்குவதற்காக விஞ்ஞான, தொழிநுட்ப பாடங்களை கற்குமாறு நாம் பிள்ளைகளிடம் கூறினாலும் அதற்கான அடிப்படை வசதிகள் பெரும்பலான பாடசாலைகளில் இல்லை.

இந்த நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் தாம் விரும்பும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கல்வியை பெற்றுக்கொள்வதற்கும் அவர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கு உதவுவதற்கும் அரசாங்கம் மேற்காண்டு வரும் செலவுகள் எதிர்காலத்திற்காக செய்யப்படும் முதலீடாகும். புதிய  பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளின் ஊடாக நாம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்போம்.

வைத்திய சேவையை முன்னேற்ற நடவடிக்கை
கிராமிய வைத்தியசாலைகளில் வளங்களும் வசதிகளும் மிகக் குறைவாக உள்ளன. வைத்தியர்கள், தாதிகள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகின்றது. சில பிரதேசங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இலவச சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்கும்போது ஏற்படும் இந்த நிலைமைகளை நாம் இல்லாமல் செய்வோம்.

ஆயுர்வேத மருத்துவத்தையும் சுதேச வைத்தியத் துறையையும் முன்னேற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

தேசிய மருந்து உற்பத்தி; மருந்து இறக்குமதி மோசடிக்கைக்கு நடவடிக்கை
அதிக அந்நியச் செலாவணியை செலவு செய்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக பல மருந்துகளை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம். மருந்து இறக்குமதியின்போது இடம்பெறுகின்ற பெரும் ஊழல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் காரணத்தினால் தான் மருந்து உற்பத்திக்கு தனியான இராஜாங்க அமைச்சொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது

விவசாயிகள் கேட்பதை வழங்குவோம்
இந்த நாட்டின் மக்களில் அதிகளவானவர்கள் இன்றும் சுயதொழில்களை செய்வதன் மூலமே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் விவசாயிகளாக உள்ளனர். அவர்கள் கேட்பதெல்லாம் உரிய காலத்திற்கு நீரையும் உரத்தையும் பெற்றுத் தருமாறு மட்டுமேயாகும். இந்த கோரிக்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் நாடளாவிய ரீதியில் குளங்களை புனரமைப்பதுடன், நீர்ப்பாசன அபிவிருத்திக்கு விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை நாம் முன்னெடுப்போம்.

தொழில்வாய்ப்புக்கு நீண்டகால, குறுகிய கால தீர்வு
வேலை வாய்ப்பின்மை இன்று இளைஞர் தலைமுறை முகங்கொடுக்கும் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாகும். இதற்காக நாம் குறுகிய கால, நீண்டகால பல தீர்வுகள் குறித்து கலந்துரையாடியுள்ளோம்.

பட்டதாரிகளிடமிருந்து வினைத்திறனான சேவை
நாம் தற்போது நாட்டில் வாழும் வறிய குடும்பங்களை இலக்காகக்கொண்டு ஒரு இலட்சம் தொழில்களை வழங்குவதற்கு நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். அதனோடு இணைந்ததாக 60,000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கும் அவர்களிடமிருந்து வினைத்திறனான சேவையை பெற்றுக்கொள்வதற்காக முறையான பயிற்சி ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தொழில்வாய்ப்பில் வறிய குடும்பங்களுக்கு முன்னுரிமை
அரச தொழில்களை வழங்கும்போது நாட்டில் மிகுவும் வறிய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று தொழில் வாய்ப்புகளை வழங்கும்போது அனைத்து மாகாணங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தேவையற்ற வகையில் ஆட்சேர்ப்பு கிடையாது
அரச நியமனம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் நாட்டுக்கு வினைத்திறனான சேவையை வழங்க வேண்டும். எனவே எந்தவொரு அமைச்சுக்கும் அல்லது நிறுவனத்திற்கும் தேவையற்ற வகையில் ஆட்சேர்ப்புகள் செய்யப்பட மாட்டாது.

தத்தமது துறைகளில் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுமாறு அனைத்து அமைச்சர்களிடமும் இராஜாங்க அமைச்சர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

தொழில் வழங்குவதல்ல தொழில் உருவாக்குவதே நோக்கம்
அனைத்து அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களில் அந்தந்த துறைகளில் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று குறித்த துறைகளில் சுயதொழில் மேம்பாட்டுக்கும் தொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எமது பொறுப்பும் கடமையுமாக இருக்க வேண்டியது தொழில்களை உருவாக்குவதேயன்றி தொழில்களை வழங்குவதல்ல.

புத்தெழுச்சியை ஊட்ட புதிதாக சிந்திக்க வேண்டும்
உள்நாட்டு மற்றும் பூகோள சவால்களை வெற்றிகொள்ளும் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்த வேண்டுமானால் நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். இம்முறை இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சுகளை ஒதுக்கும்போது கைத்தொழில்களை கருத்திலெடுத்துள்ளோம்
உண்மையான பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்துவதற்காக மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றின் தேவையை நாம் கண்டறிந்துள்ளோம். அமைச்சுக்களை ஒதுக்கும்போதும் அவற்றுக்கான விடயதானங்களை தீர்மானிக்கும் போதும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது தாக்கம் செலுத்தும் விவசாயம். பெருந்தோட்டத்துறை, மீன்பிடிக் கைத்தொழில் அதேபோன்று பாரம்பரிய கைத்தொழில்கள், சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவது சம்பந்தமாக கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் எமது அடிப்படை இலக்குகளாகும்.

வருமானத்தில் திருப்தியில்லை; தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிப்போம்
தற்போது எமது ஏற்றுமதி பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் திருப்திகரமான நிலையில் இல்லை.

தேயிலை பயிர்ச் செய்கையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் உதவிகளைச் செய்யும். மூடப்பட்டுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளின் காரணமாக அவர்கள் அதிக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன். முறைகேடுகளை ஒழித்து உயர் தரங்களுடன் கூடிய தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிப்போம். ‘Ceylon Tea’ வர்த்தக சின்னத்திற்கு உள்ள அங்கீகாரத்தை பலப்படுத்துவோம்.

ஏனைய பயிர்ச் செய்கையை ஊக்குவிப்போம்
தென்னையை புதிதாக பயிரிடுவதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவோம். இறப்பருக்கு உரிய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக  இந்நாட்டில் தயாரிக்கப்படும் இறப்பர் பாவனை, இறப்பர் சார்ந்த கைத்தொழில்களை ஊக்குவிப்போம். செம்பனை பயிர்ச் செய்கையை நாம் முற்றாக நிறுத்துவோம்.

மிளகு, கறுவா போன்ற ஏற்றுமதி பயிர் உற்பத்தியை நாம் ஊக்குவிப்போம். விவசாய உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதன் ஊடாக விவசாயிகளுக்கு ஸ்திரமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

அமைச்சுகளுக்கு பொறுப்புக்களை வழங்கும்போது நகர மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளை இனங்கண்டு அமைச்சுகள்
நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பல்வேறு துறைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும் அவர்களுக்கான விடயதானங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித வள அபிவிருத்தியை நாம் முன்னுரிமைக்குரியதாக இனங்கண்டு இருப்பதால் அமைச்சுக்களை ஒதுக்கும்போது கல்வித்துறையை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து, அதில் வேறுபட்ட பொறுப்புகளுக்காக நான்கு இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளோம். முன்பள்ளிப் பாடசலைகள், கல்வி மறுசீரமைப்பு, திறன் விருத்தி, அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளுக்கான கல்வி ஆகிய துறைகளுக்கு தனியான இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவற்றில் உள்ள முக்கியத்துவத்தின் காரணமாகவே ஆகும்.

கல்வி மறுசீரமைப்பு குறித்து விசேட கவனம்
எமது எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டுமாயின் தொழிநுட்ப கல்விக்கு விசேட கவனம் செலத்த வேண்டும். 06ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரை கல்வி மறுசீரமைப்பில் நாம் இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

உயர் தரத்தில் சித்தியடைந்த அனைவருக்கும் பல்கலை அனுமதி
உயர் தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், திறந்த பல்கலைக்கழக முறைமையை முன்னேற்றுவதற்கும் தொலைக்கல்வியை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்துறைகளை மறுசீரமைத்து இந்த பட்டப்படிப்புகள் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கக்கூடிய துறைகளாக உறுதி செய்யப்படும்.
மின்சாரத்தின் விலை நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் ஒரு முக்கிய காரணியாகும். எனவே மீள் பிறப்பாக்க, சக்தி வள உற்பத்தி மார்க்கங்களை மேம்படுத்துவதற்காக தனியானதொரு இராஜாங்க அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெறுமதி சேர்ப்பதற்காக புதிய தொழிநுட்ப பாவனைக்கும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் ஆக்கத்திறன்வாய்ந்த வகையில் புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிவதற்கும் வர்த்தகர்களுக்கு உதவுவதற்கும் குறித்த அமைச்சுக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அந்நியச் செலாவணிக்கு நடவடிக்கை
எமது நாடு இயற்கை வளம் நிறைந்த ஒரு வளமான நாடு என்ற போதிலும் பெறுமதி சேர்க்கும் கைத்தொழில்கள் இன்னும் சர்வதேச மட்டத்திற்கு முன்னேறவில்லை. இரத்தினக்கற்கள், கனிய மணல் போன்ற இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்யும்போது பெறுமதி சேர்த்து நாட்டுக்கு அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கைத்தொழில்களை ஊக்குவிக்க நடவடிக்கை
எமது பாரம்பரிய கைத்தொழில்களான பத்திக், சுதேச ஆடைகள், பித்தளை, பிரம்புகள், மட்பாண்டங்கள், மரப்பாண்டங்கள், இரத்தின கற்கள், ஆபரணங்கள் கைத்தொழிலை உரிய வகையில் முன்னேற்றுவதற்கும் சுயதொழில்களை ஊக்குவிப்பதற்கும் புதிய தொழில்களை உருவாக்குவதற்கும் வர்த்தக துறையை கட்டியெழுப்பி பெருமளவு வெளிநாட்டு வருமானத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும்.

நாட்டு மக்களில் 1/3 பகுதியினர் விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடிக் கைத்தொழில் ஆகியவற்றை ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர். நாம் இந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக சம்பிரதாய முறைமைகளை விஞ்சிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அணுகுமுறைகளின் தேவை உள்ளது. விவசாயத்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் மீன்பிடி, கடற்றொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளை நேரடியாக இலக்காகக் கொண்டு அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டிருப்பது இதற்குத் தேவையான உரிய கவனத்தை வழங்குவதற்கே ஆகும்.

விவசாயம் மற்றும் உற்பத்திகள் மேம்படுத்தப்படும்
உயர் தரம்வாய்ந்த விதைகளை உள்நாட்டில் உற்பத்திசெய்து, அவற்றை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த பொதியிடல் மற்றும் போக்குவரத்து முறைமைகளை அறிமுகப்படுத்தி வீண்விரயத்தை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். பசும்பால் உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தியையும் நாம் முன்னேற்றுவோம்.

நச்சுத்தன்மையற்ற உணவை உற்பத்திசெய்யும் நோக்குடன் அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையின் விவசாயத் துறையை முழுமையாக சேதன பசளைப் பாவனைக்கு மாற்றும் வகையில் உள்நாட்டில் சேதன பசளை உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

மீன்பிடிக் கைத்தொழில் முன்னேற்றப்படும்
மீன்பிடித் கைத்தொழிலில் பாரிய முன்னேற்றத்தை கொண்டுவர நாம் எதிர்பார்க்கின்றோம். கடலினால் சூழப்பட்டுள்ள எமது நாட்டுக்கு மீன் இறக்குமதியை நாம் நிறுத்த வேண்டும். மீன் பிடி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான புதிய தொழிநுட்பத்தையும் இயந்திரங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை நாம் அறிமுகப்படுத்துவோம். ஆழ்கடலில் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலநாள் படகுகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக அனைத்து மீன்பிடி துறைமுகங்களையும் நவீனமயப்படுத்துவதுடன், தேவைக்கு ஏற்ப புதிய துறைமுகங்களை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

மீன்வள சுரண்டல் தடுக்கப்படும்
சட்டவிரோதமான சர்வதேச பலநாள் படகுகளின் மூலம் இலங்கை கடற்பகுதியில் மேற்கொள்ளப்படும் சுரண்டலை நிறுத்துவோம்.

நன்னீர் மீன்வளர்ப்பு கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும் புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவது எமது திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இராஜாங்க அமைச்சர்கள் தங்கு தடையின்றி செயற்படலாம்
அனைத்து அமைச்சுக்களுக்கும் இராஜாங்க அமைச்சுக்களுக்கும் தமது விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்கள் தெளிவாக வேறுபடுத்தி வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களினால் குறித்த துறைகளின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுடன், இராஜாங்க அமைச்சுக்களினால் செயற்பாடுகள், வினைத்திறன், கண்காணிப்பை மேற்கொள்வது எதிர்பார்க்கப்படுகின்றது. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை தமது அமைச்சுக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாலும் நிதிப் பொறுப்பு தம்மிடம் உள்ள காரணத்தினாலும் இராஜாங்க அமைச்சர்களுக்கு தடையின்றி தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியும்.

அரச சேவை வினைத்திறனில்லை; மக்களின் குற்றச்சாட்டு களையப்படும்
அரச சேவையின் மூலம் தாம் எதிர்பார்க்கும் சேவை வினைத்திறனாகவும் உரிய வகையிலும் கிடைப்பதில்லை என பொதுமக்களிடம் குற்றச்சாட்டு உள்ளது. எனவே உங்களின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்களினால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை வினைத்திறனாகவும் உடனடியாகவும் பெற்றுக்கொடுக்குமாறு நான் அமைச்சர்களிடமும் இராஜாங்க அமைச்சர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன். மக்களுக்கு அல்லது அரசாங்கத்திற்கு எவ்வித பெறுமானத்தையும் கொண்டுவராத சில நிறுவன செயற்பாடுகளினால் ஏற்படுவது கால விரயம் மட்டுமே என நான் கடந்த காலத்தில் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு சென்ற வேலையில் கண்டுகொண்டேன். மக்களுக்கு சேவைகளை வழங்கும் போது பின்பற்றும் பாரம்பரிய முறைமைகளுக்கு பதிலாக நிறுவன செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொண்டு மக்களுக்கு இலகுவாகவும் விரைவாகவும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய முறைமைகளை நீங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக முடியுமானளவு புதிய தொழிநுட்ப தீர்வுகளை கண்டறிய வேண்டும்.

ஊழல், வீண்விரயத்தை ஒழிக்க உறுதியளித்துள்ளோம்
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் வீண்விரயத்தையும் ஊழலையும் ஒழிப்பதாக நாம் மக்களுக்கு உறுதியளித்திருந்தோம். இது எம் அனைவரினதும் முக்கிய பொறுப்பாகும். அனைத்து அமைச்சுக்கள், நிறுவனங்களில் வீண்விரயத்தையும் ஊழலையும் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். வீண்விரயம், ஊழலுடன் சம்பந்தப்படுபவர்களுக்கு அவர்களது தராதரங்களை பொருட்படுத்தாது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நான் பின்னிற்க மாட்டேன்.

முன்னேற்ற நிலை அறியப்பட்டு அமைச்சுகளில் மாற்றம் செய்யப்படும்
அரசாங்கம், அமைச்சு மற்றும் அரச துறையின் ஊடாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதன் முன்னேற்ற நிலைமைகள் தொடர்ச்சியாக மீளாய்வுசெய்யப்படும். ஏதேனும் ஒரு அமைச்சு அந்த இலக்குகளை அடைவதில் பின்னிற்குமாயின், அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான மாற்றங்களை செய்வதற்கு நான் ஒருபோதும் பின்னிற்க மாட்டேன்.

மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி மக்களிடம் சென்று குறைகளை அறிய வேண்டும்
தற்கால அரசியல் கலாசாரத்தில் பெரும்பாலும் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் மக்களிடம் செல்வதை விட்டுவிடுகின்றனர் என்பது அண்மைக் காலத்தில் நான் நாடளாவிய ரீதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் மக்கள் முன்வைத்த மனக்குறைகளில் இருந்து தெரியவந்தது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி மக்களிடம் சென்று அவர்களது உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியலமைப்பு உறுதியின்மையால் பல்வேறு பிரச்சினைகள்
ஒரு ஜனநாயக நாட்டின் வெற்றிக்கு அதன் அரசியலமைப்பே அடிப்படையாகும். 1978 முதல் 19முறை திருத்தப்பட்டுள்ள எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற தன்மை, சிக்கல்கள் காரணமாக தற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் உறுவாகியுள்ளன.

நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பு கொண்டு வரப்படும்
அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறு, 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர் அனைவருடனும் இணைந்து நாட்டுக்கு தேவையானதும் பொருத்தமானதுமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதன் போது இந்நாட்டின் அனைத்து மக்கள் சம்பந்தமாகவும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்குவோம்.

விகிதாசார சாதக பண்புகள் பாதுகாக்கப்பட்டு தேர்தல் முறையில் மாற்றம்
தெளிவான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாத, தீவிரவாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ச்சியாக அடிபணியும், நிலையற்ற பாராளுமன்றம் ஒரு நாட்டுக்கு பொருத்தமானதல்ல. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் போது தற்போதைய தேர்தல் முறைமையில் மாற்றங்களை செய்யவேண்டியது அவசியமாகும். விகிதாசார தேர்தல் முறைமையில் உள்ள சாதகமான பண்புகளை பாதுகாக்கும் அதேநேரம் பாராளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்யும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

எனது நாட்டை நான் நேசிக்கிறேன்
நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாடு குறித்து பெருமையடைகிறேன். எனக்கு எனது நாடு பற்றிய ஒரு தொலைநோக்குள்ளது. எமது நோக்கம் வினைத்திறன் மிக்க பிரஜை, மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்கப்பண்பாடான சமூகத்தைக் கொண்ட சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதாகும். இதுவரை நாம் மேற்கொண்ட அனைத்து செயற்பாடுகளையும் போன்று, இதன் பின்னரும் செயற்படுவதற்காக எதிர்பார்க்கும் நடவடிக்கைகளை திட்டமிடுவதும் இந்த நோக்கங்களின் அடிப்படையிலேயாகும்.

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது, நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வோம்
நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை வந்தடைந்துள்ளோம். மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும் மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது இந்த நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால தலைமுறைக்காக தற்கால தலைமுறை அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
இது எம் அனைவரினதும் தாய்நாடு. எனவே இனம் மதம் கட்சி பேதமின்றி நாம் அனைவரும் நாட்டுக்காக ஒன்றுபடவேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது.

மக்களுக்கு நாம் உறுதியளித்த சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக என்னுடன் ஒன்றிணையுமாறு நான் உங்கள் அனைவருக்கும் நட்புக் கரம் நீட்டி அழைப்பு விடுக்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்!   நன்றி தினகரன் 







9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்... 

9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்... (PHOTOS)-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa-Tea Time

இன்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொள்கைப் பிரகடன உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ தேனீர் உபசரிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகளுடன், ஜனாதிபதி அளவளாவினார்.   நன்றி தினகரன் 






சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய

புதிய பாராளுமன்றத்தில் உயர் பதவிகள்;

குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 09 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். நேற்றைய தினம் நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவும்  பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் அத்துடன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

ஒன்பதாவது பாராளுமன்றம் நேற்றுக் காலை 9. 30 மணிக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தலைமையில் கூடியது.

அதனையடுத்து ஜனாதிபதியின் செய்தியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க சபையில் அறிவித்ததுடன் அதனைத் தொடர்ந்து 9ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான பெயர்களை முன்மொழியுமாறு சபையில் கேட்டுக்கொண்டார்.

அதற்கிணங்க சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் பதவிக்கு பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிந்தார். மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை வழி மொழியுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கோரியபோது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார அதனை வழிமொழிந்தார்.

சபாநாயகர் பதவிக்கு வேறு பெயர்கள் பிரேரிக்கப்படாததால் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் அறிவித்தார்.

அதனையடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் எழுந்து சென்று அவரை அழைத்து வந்து சபையின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் சபாநாயகருக்கு கட்சிகளின் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை சிறு உரைகள் மூலம் தெரிவித்துக் கொண்டனர்.

வாழ்த்துக்களுக்கு பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிரதி சபாநாயகராக ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு கோரியதையடுத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கேகாலை மாவட்ட எம்.பியான ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை முன்மொழிந்தார்.

அதனை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வழிமொழிந்தார். வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்கு ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு சபாநாயகர் கோரியதையடுத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அங்கஜன் இராமநாதனின் பெயரை அப்பதவிக்காக முன்மொழிந்ததுடன் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க அதனை வழிமொழிந்தார்.

வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம் - நன்றி தினகரன் 






தேசியப் பட்டியல் ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் நெருக்கடி தீரும் வரையில், தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதை நிறுத்தி வைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை நியமிப்பதில் தாமதம் ஏற்படுமென அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.  நன்றி தினகரன் 







அரசியல் பழிவாங்கல்; ரணில் விக்ரமசிங்கவுக்கு செப். 04, 07 இல் அழைப்பு

- ஹக்கீம், பொன்சேகா, சம்பந்தனுக்கு செப். 09 அல்லது 11 இல் ஆஜராக அழைப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம், 7ஆம் திகதிகளில், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடுகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர், வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21)  முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஊப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் மற்றும் குழு செயலாளர் ஆனந்த விஜேபால ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி அல்லது, 11ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.   நன்றி தினகரன் 







மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித பழிவாங்கல் ஆணைக்குழுவில்

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (21)  முன்னிலையாகியுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.  நன்றி தினகரன் 







அரசாங்கத்திற்கு நட்டம்; ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கும் மற்றும் அவ்வருடத்தின் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மோதறை மீன்பிடி துறைமுகத்தை, தனியார் நிறுவனமொன்றுக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு விடுவதற்காக மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் சபையை ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்போதைய மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக 05 குற்றச்சாட்டுகளின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனையோராக மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே மற்றும், அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நில் ரவீந்திர முனசிங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






ஷானி அபேசேகர, SI ரோஹணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஷானி அபேசேகர, SI ரோஹணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு-Shani Abeysekara SI Nishantha Silva

- சுவிஸ் சென்ற நிஷாந்த சில்வாவை கைது செய்ய பிடியாணை

சாட்சியங்களை உருவாக்கி நீதிமன்றத்தை திசை திருப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (20), கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இவர்களை முன்னிலைப்படுத்தியபோது, இவ்விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக பல நபர்களை  பயன்படுத்தி சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் ஷானி அபேசேகர மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.   

இது தொடர்பாக ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டதோடு, அவருடன் இணைந்து போலியான சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர்  ரோஹண மெண்டிஸ் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, CIDயின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவையும், இவ்வழக்கின் சந்தேகநபராக பெயரிட்டு, அவரை கைது செய்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, சுவிஸ்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்    நன்றி தினகரன் 






அங்கஜன் இராமநாதனின் நியமனம் SLFPக்கு கிடைத்த பெரும் கௌரவம்

தயாசிறி ஜயசேகர சபையில் புகழாரம்

யாழ். மாவட்டத்திலிருந்து முதன் முறையாக லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவாகி குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று  உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பிரதிக் குழுக்களின் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களே நீங்கள் அந்த ஆசனத்தில் வீற்றிருக்கும் போது பேசக் கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.

முதல் தடவையாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தல் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவானமை எனக்கு பெருமிதமளிக்க கூடிய விடயமாகும்.

அது நாட்டுக்கும் பாரிய பாக்கியமாகும். தேசியக் கட்சியொன்றிலிருந்து போட்டியிட்டு வடக்கிலும் கிழக்கிலும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் நன்றிகளை கூறிக் கொள்கின்றேன். அத்துடன் பிரதித் தவிசாளராக நீங்கள் நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்  - நன்றி தினகரன் 






No comments: