இலங்கைச் செய்திகள்


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பூட்டு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பூட்டு

சவால்களை எதிர்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் தயாராகுங்கள்

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த எம்மால் முடியும்

யாழில் கொரோனாவின் பாதிப்பை உணரவில்லை; பரவினால் பாரதுரமானது

ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி!



யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பூட்டு



உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நேற்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபை இது தொடர்பில் நேற்று அறிவித்தது. 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்ந்து இயங்கும்.இருந்தாலும் சில விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 
ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இன்று (16) முதல் இரண்டு வாரக்காலத்திற்கு தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.  
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.    யாத்திரைகளை தவிர எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உள்ளூர் யாத்திரை, சுற்றுலா மற்றும் பயணங்களை தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.   அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.    நாட்டினுள் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் முகமாக பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர கேரிக்கை விடுத்துள்ளார்.  நன்றி தினகரன் 









கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பூட்டு






வெளிச் செல்லும், பயண வழிமாற்ற, சரக்கு விமானங்கள் சேவையில்
நாளை (18) நள்ளிரவு (19) முதல் 31 ஆம் திகதி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தறையிறங்குவது இடைநிறுத்தப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
அத்துடன் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் விமானங்கள், பயண வழிமாற்ற விமானங்கள் (Transit) ஆகியன தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன சரக்கு விமானங்களின் (Cargo) சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு வாரங்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இலங்கைக்கு வரவிருந்த அனைத்து விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.அத்தோடு இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்ற 891 பயணிகளை இரண்டு விசேட விமானங்கள் மூலம் விரைவாக இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.   நன்றி தினகரன் 










சவால்களை எதிர்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் தயாராகுங்கள்






நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
பருப்பின் விலை 65 ரூபா
ரின் மீன் விலை 100 ரூபா
நாம் சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார். அதற்காக ஒன்றிணைந்த செயற்பாடு எமக்கு முக்கியமாகிறது. இத்தகைய தருணத்தில் நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,....
நாம் தேர்தல் நடத்தி புதிய நிலையான அரசாங்கமொன்றை ஸ்தாபித்து புதிய வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி சுபிட்சமான நாடு என்ற கொள்கையின் கீன் மக்களுக்கு வாக்குறுதியளித்தற்கிணங்க நிவாரணங்களை வழங்குதல், வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல், விவசாயத் துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள அனுபவமுள்ள அரசியல்வாதியான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு என்னோடு இணையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இத்தகைய தருணத்தில் அரசாங்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது எமக்குள்ள முக்கிய பொறுப்பாகும். எத்தகைய காரணத்துக்காகவும் அரசாங்கம் சீர்குலைவதற்கு இடமளிக்க முடியாது. நாம் தூரநோக்கின்றி செயற்பட்டால் மக்களின் சாதாரண இயல்பு வாழ்க்கை முழுவதுமாக சிதைந்துவிடும். தலைவரென்ற வகையில் ஆத்ம நம்பிக்கையுடன் செயற்படுவது முக்கியம். அதற்கிணங்க மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை உருவாக்கக் கூடாது.
நாம் இத்தகைய தருணத்தில் மேற்கொள்ளவேண்டியது நாட்டிற்குள் கொரோனா வைரஸ் உள்வருவதும் நாட்டில் அவை பரவுவதற்கும் இடமளிக்காது அதனை கட்டுப்படுத்துவதாகும். அதற்காக மேற்கொள்ளவேண்டிய அனைத்தையும் நாம் இனங்கண்டு செயற்படுத்தி வருகின்றோம். அதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். நாம் இதற்கு முன்பும் சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளோம். நாம் சவால்களுக்கு முகங்கொடுக்க தயார். அதற்காக ஒற்றுமையே எமக்கு அவசியமாகிறது. இத்தருணத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
நேற்று (17) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் ஒரு கிலோ பருப்பு உச்ச சில்லறை விலை 65 ரூபாவுக்கும் அதேபோன்று டின்மீன் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அதற்கான பணிப்புரைகளை நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளேன். மேலும் பல நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
நாட்டின் வர்த்தக முயற்சிகளுக்கு பெரும் சுமையாகியுள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கான காலத்தை ஆறு மாதங்களுக்கு நிறுத்துவதற்கு நான் பணிப்புரை விடுப்பேன்.அதேபோன்று வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு 4% வட்டியை மாத்திரம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நாட்டு மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதற்கு நான் உறுதியளிக்கின்றேன். உங்களதும் என்னுடையதுமான நாடு இன்று பாதுகாப்பாகவேயுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போது 43 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அதில் 19 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்கள். ஏனையோர் தனிமைப்படுத்தலுக்கு முன்பதாகவே இலங்கை திரும்பியவர்களாவர். அரசாங்கமென்ற வகையில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை முறையாக முன்னெடுத்துச் செல்வது எமது பொறுப்பாகும். மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)   நன்றி தினகரன் 











கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த எம்மால் முடியும்






சவால்களை எதிர்கொள்ள நாம் தயார். மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படுத்த வேண்டாம்!
சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் அனுமதியுடனும் இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும் தாய்மார்களே, தந்தைமார்களே, பிள்ளைகளே..நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுவது கொரோனா வைரஸ் என்ற COVID -19 வைரஸ் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றி உங்களை தெளிவுபடுத்துவதற்கேயாகும்.
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகத்தின் அவதானம் செலுத்தப்பட்டதோடு, சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் 34 பேரை இலங்கைக்கு அழைத்து வர நான் முடிவெடுத்தேன். அந்நேரம் எந்வொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரும் இலங்கையில் பதிவு செய்யப்படாது இருந்தாலும், இந்த வைரஸினால் எதிர்காலத்தில் ஏற்பட முடியுமான ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதற்காக ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசேட தேசிய செயலணி குழுவொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவராக இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த சீன பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அவரை உடனடியாக ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் பெப்ரவரி 19ஆம் திகதியாகும் போது முழுமையாகக் குணமடைந்து இலங்கையிலிருந்து தனது நாட்டுக்குச் சென்றார்.
விசேட விமானமொன்றின் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் மத்தளை விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு தியத்தலாவையில் விசேடமாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் முகாமில் 14 நாட்கள் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாதுகாப்பாக தமது வீடுகளுக்குச் சென்றனர்.
இக்காலத்தில் விமான நிலையத்தினூடாக வருகை தருபவர்களின் சுகாதார நிலைமை தொடர்பாக அடிப்படை பரிசோதனைகளை விமான நிலையத்திலேயே மேற்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெப்ரவரி 26ஆம் திகதி தொற்றுக்குள்ளான சீனப் பெண் அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒரு மாத காலம் வரை வேறு எந்தவொரு நோயாளி பற்றியும் அறியக் கிடைக்கவில்லை. சீனாவிற்கு வெளியே வேறு நாடுகளிலும் வைரஸின் தாக்கம் பரவியதன் காரணமாக இத்தாலி, தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளை 14 நாட்களுக்கு கண்காணிப்புக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தீர்மானம் மார்ச் மாதம் 19ஆம் திகதி எடுக்கப்பட்டது. இதன்படி கந்தகாடு, மட்டக்களப்பு கண்காணிப்பு நிலையங்களுக்கு பயணிகளை உள்வாங்குதல் ஆரம்பமாகியது. இது ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இத்தாலி அல்லது கொரியாவிலிருந்து வருகை தந்த ஒரு சிலர் அதற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்ததோடு கண்காணிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வழியில் திரும்பிச் செல்லவும் ஒரு சிலர் முற்பட்டனர்.மார்ச் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார். அவர் இத்தாலி சுற்றுலா குழுவொன்றிற்கு வழிகாட்டக் கூடிய சுற்றுலா ஆலோசகராவார்.
கண்காணிப்பு நிலையத்தினுள் மற்றும் அதற்கு வெளியே எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் மூலம் மேலும் பல தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, தற்போது 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஜேர்மனியிலிருந்து வருகை தந்த நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவரும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புபட்டிருந்தவர்களாக இருந்தமை மிக முக்கிய விடயமாகும்.
மார்ச் 13ஆம் திகதி முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து வருகை தருபவர்களும் கண்காணிப்புக்கு உள்வாங்கப்படுவது ஆரம்பமானது.
இவற்றுள் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிட்சலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியாவும் ஒன்று சேர்ந்தது.
தற்போது இங்கிலாந்து, பெல்ஜியம், நோர்வே, கனடா, கட்டார் மற்றும் பஹ்ரேன் போன்ற நாடுகளிலிருந்து வருகை தருபவர்களும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நாளை முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து சுற்றுலா பயணிகளும் வருகை தருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 10ஆம் திகதி கந்தகாடு மற்றும் புணானை கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 16 கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
​இன்று காலை ஆறு மணியாகும் போது 1882 பயணிகள் இக்கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 92 பேர் தற்போது பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எமக்கு தற்போது காணப்படும் அடிப்படைப் பிரச்சினை என்னவெனில் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்குள் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்த நாடுகளிலிருந்து 2000 பேரளவில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையாகும்.
தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றுக்குள்ளான 34 பேரில் 19 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பது கண்காணிப்பு நிலையங்களிலிருந்தாகும். அவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள். ஏனையோர் கண்காணிப்பு நடவடிக்கைக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்தவர்கள் அல்லது வருகை தந்தவர்கள் மூலம் தொற்றுக்குள்ளானவர்கள்.
நாம் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்த அனைவரும் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களை இனங்கண்டு அவர்களின் வீடுகளிலேயே சுயகண்காணிப்புக்குட்படுத்த தீர்மானித்துள்ளோம்.
இதற்காக பொலிஸார், முப்படையினர், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதோடு, அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனைய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள இலங்கையர்களை பொறுப்புடன் செயற்படுமாறும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
​ைநாம் அரசாங்கத்தினால் விசேட விடுமுறையை வழங்கியதற்கான காரணம் வைரஸ் தொற்று பரவுவதை குறைப்பதற்காகவாகும். அதன் உரிய பயன்பாட்டை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பயணங்கள், கூட்டாக ஒன்று சேர்தல் மற்றும் விழாக்களிலிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை நாம் மேற்கொண்டிருந்த செயற்பாடுகள், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் இப்பிரச்சினையை முழுமையாக கட்டுப்படுத்த எம்மால் முடியும்.
அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து முன்னெடுக்க வழியமைப்பது எமது அடிப்படை பொறுப்பாகும். மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும்.
நாட்டில் சில மாகாணங்களில் தற்போது வரட்சி நிலவுகின்றது. அப்பிரதேச மக்களுக்கு நாம் குடிநீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பல பிரதேசங்களில் சிறுபோக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்க சேற்றுப் பசளை வழங்கப்பட வேண்டும். மேலும் பல பிரதேசங்களில் அறுவடை மேற்கொள்வதனால் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரக்கறிகளை உரிய நேரத்தில் கொள்வனவு செய்யாதவிடத்து மரக்கறி விவசாயிகள் பாதிக்கப்படுவர். அதேபோன்று மரக்கறிகளை தொடர்ச்சியாக சந்தைக்கு கொண்டு சேர்ப்பதும் அவசியமாகும். அதேபோல் வாழ்க்கைச் செலவையும் நாம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
அரச ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடாதவிடத்து அவை அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். அனைவரின் மீதும் அவதானத்தை செலுத்தியே நாம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். நவம்பர் 16ஆம் திகதி நாம் பெற்ற வெற்றியின் பின்னர் அதிகாரம் குறைந்த அரசாங்கம் ஒன்றை எம்மால் உருவாக்க முடிந்தது. நான் பதவிக்கு வரும் போது கடந்த அரசாங்கத்தின் மூலம் வரவுசெலவு திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. நாடு இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றின் மூலமே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்வேறு அத்தியாவசிய கொடுப்பனவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு அனுமதி பெற்றிருக்கவில்லை. உரம், மருந்து வகைகள், உணவு வழங்குனர்கள் மற்றும் நிர்மாணத்துறையினருக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. நாம் இதற்காக இடைக்கால நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக் கொள்ள முயற்சி எடுத்தோம். அதற்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலைமையின் கீழ் நான் உங்களுக்கு வாக்களித்த பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமல் போனது. அதிகாரம் குறைந்த அரசாங்கத்தினால் இந்நிதியை பாராளுமன்றத்தில் முன்வைத்து அனுமதியைப் பெற முடியாது.அதனால்தான் எனக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து உறுதியான புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக தேர்தலை நடத்த உத்தேசித்தோம்.
பாராளுமன்றத்தைக் கலைத்ததுடன், அரசியலமைப்பின் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்திற்கமைய நான் இடைக்கால நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதியளித்தேன். அதன்படி அத்தியாவசிய செலவுகளுக்காக நிதிக் கொடுப்பனவுகள் வழங்க ஆரம்பித்தோம். அதனாலேயேதான் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதற்கும் எம்மால் முடியுமாகவிருந்தது.
அதனால் தேர்தல் ஒன்றை நடத்தி புதிய நிலையான அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைத்து 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் நான் உங்களுக்கு வழங்கிய வாக்கின் பிரகாரம் நிவாரணங்களை வழங்குதல், தொழில் வழங்குதல், விவசாயத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அதனால் அனுபவ முதிர்ச்சியுள்ள அரசியல்வாதியான, மக்கள் மனங்களை வெற்றி கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பலமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எம்மோடு ஒன்றிணையுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இச்சந்தர்ப்பத்தில் எமது பொறுப்பானது அரசாங்கத்தை உரிய முறையில் நடத்திச் செல்வதாகும். எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தை செயலிழக்கச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. நாம் தூரநோக்கின்றி செயற்பட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிப்படையும். தலைவர்கள் முழுமையான நம்பிக்கையோடு செயற்பட வேண்டும். மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது.
நாம் இச்சந்தர்ப்பத்தில் நாட்டினுள் வைரஸ் உள்நுழைதல் மற்றும் அதை நாட்டிற்குள் பரவுவதற்கு உள்ள சந்தர்ப்பத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக செய்ய வேண்டியவைகளை நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு முன்னெடுத்திருக்கின்றோம். அதற்காக அவசியமான அதிகாரங்களை செயலணிக்கு வழங்கியுள்ளோம்.
நாம் இதற்கு முன்னரும் சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றி பெற்றுள்ளோம்.
நாம் சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார். அதற்காக எமக்கு அவசியமானது ஒற்றுமையாகும். அதனால் இச்சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்கிடையில் மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்துவதற்காக அவர்களின் நுகர்வு நிலையை உறுதி செய்வதற்கு நான் உத்தேசித்துள்ளேன். அரிசி வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே நிலைபெறச் செய்துள்ளோம். நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக அமையாதவாறு அரச சேவைகள், வங்க நிதி நடவடிக்கைகள், போக்குவரத்து செயற்பாடுகளை குறைந்தளவிலானோரைக் கொண்டு முன்னெடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வியாபார நிலையங்களுக்கும் இன்று இரவு முதல் பருப்பு ஒரு கிலோவை அதிக பட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று ரின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்கு பாரிய பாரமாகக் காணப்படும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீளப் பெற்றுக் கொள்வதை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதேபோன்று வங்கியினால் வழங்கப்படும் பணி மூலதனம் 4% வட்டிக்கு பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் பங்கம் ஏற்படாதவாறு செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன். உங்களதும் எனதும் நாடு இன்று பாதுகாப்பானது.  நன்றி தினகரன் 












யாழில் கொரோனாவின் பாதிப்பை உணரவில்லை; பரவினால் பாரதுரமானது




யாழ்.மாவட்டத்தில் மக்கள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான பாதிப்பை உணர்ந்து கொள்ளவில்லை. அதுவே மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பாதகமாக அமையும் வாய்ப்புக்கள் உள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எமது மாவட்டத்தில் உள்ளவர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. 100 வீதம் வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு தாக்கினால் எதுவுமே செய்ய முடியாது. அந்த தாக்கம் மேலும் அதிகரித்தால் எதிர்கொள்ள மருத்துவ வசதிகள் கூட இல்லை எனவே வரும்முன் காப்பதே வழி என அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவ அதிகாரிகள் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்,
மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடாதீர்கள் என அரசு தொடர்ந்து எச்சரிக்கிறது. அதற்கமைய இலங்கையில் பிற மாவட்டங்களில் மக்கள் நடமாட்டத்தை பெருமளவில் குறைத்துள்ளனர். ஆனால் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மிகச் சாதாரணமாக நடமாடி திரிகிறார்கள். அரசாங்க ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட விடுமுறையை சுற்றுலாக்களில் செலவிடலாம் என நினைக்கிறார்கள். பொது இடங்களில் குடும்பமாக கூடுகிறார்கள்.
யாழ்ப்பாண மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்பதுபோல் அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் அது ஆபத்தானது. பலாலி விமான நிலையம் ஊடாக மட்டும் 60ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் வந்துள்ளனர். கொழும்பு ஊடாக நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் வந்திருக்கின்றனர்.
அவர்கள் தற்போதுதான் கண்காணிக்கப்படுகின்றார்கள். அவர்கள் கொரோனா நோயாளிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் நோய் கடத்துபவர்களாக இருக்க மாட்டார்கள் என கூற முடியாது. மேலும் வெளிநாட்டவர்கள் பலர் தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு நிகராக இலங்கையில் பரவி வருகின்றது. இலங்கையில் செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் 500 தான் உண்டு.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் 20 கட்டில்கள் மட்டுமே உள்ளன. தனியான அவசர சிகிச்சை பிரிவு கிடையாது. அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் கிடையாது.
பிரத்தியேகமாக இந்த சிகிச்சை நிலையத்துக்கு மருத்துவர்கள், தாதியர்கள், ஒதுக்கப்படவில்லை. இருக்கும் மருத்துவர்களும், தாதியர்களுமே பணியாற்ற வேண்டும். மருத்துவர், தாதியர்களுக்கு தற்காப்பு உடைகள், முகக்கவசங்கள், காலணிகள் போதுமான அளவில் இல்லை. தேசிய அளவில் அடிப்படை ஆரம்ப சிகிச்சைக்கான மருந்து கிடையாது.
ஒட்டுமொத்தமாக இலங்கை இன்றளவும் வளர்ந்துவரும் நாடு. சீனா அல்லது இத்தாலி போன்ற வளர்ச்சியடைந்த நாடு அல்ல.
பரப்பளவில் குறைந்த மிகச் சிறிய நாடு. எனவே வரும் முன்னர் முடியுமான வரையில் பாதுகாத்து கொள்வதே சிறந்தது. நோய் பரவல் தீவிரமானால் தற்போது இத்தாலி எடுத்துள்ளதைபோல் பலரை காப்பாற்ற முடியாமல்போகும் என்றனர்.
பருத்தித்துறை விசேட நிருபர் -  நன்றி தினகரன் 











ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி!



ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி!-Election Will Not be Held on Apr 25-Mahinda Deshapriya
பொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்தப்படமாட்டாது என அறவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை எந்த காரணத்திற்காகவும் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு இன்று நண்பகலுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் கருதி தேர்தல்கள் ஆணைக்குழு இம்முடிவை எடுத்தள்ளதாக, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, சட்ட திட்டங்களுக்கு அமைய குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
ஆயினும் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து இரு வாரங்களின் பின்னர், மார்ச் 26 இற்குப் பின் தேர்தல் நடாத்தக்கூடிய சூழல் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான திகதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு தேர்தலை நடாத்த முடியுமாயின், குறித்த திகதி, ஏப்ரல் 25 இற்குப் பின்னர், 14 வேலை நாட்களுக்குப் பிறகு வரும் ஒரு வேலை நாளாக அமையலாம் என அவர் இதன்போது தெரிவித்தார்.  நன்றி தினகரன் 












No comments: