கொல்லுங் கொரோனா - கவிஞர் த. நந்திவர்மன்



கிருமி கொரோனா எம்மைத் தாக்கக்
      கிலிதான் பிடித்து வாழ்கின்றோம்
இருமல் வந்து இறக்கும் நோயால்
      இதயங் கலங்கி நிற்கின்றோம்
செருமல் கேட்டால் கூட நாங்கள்
      செத்தோம் என்றே நினைக்கின்றோம்
வருமோ வருமோ என்றே பயந்து
      வாழ்வை இழந்து நிற்கின்றோம்.          1

எதனால் இந்த நிலைமை எமக்கு
      என்றே எண்ணிப் பார்த்தோமா?
முதலில் அதனை நினைத்துப் பார்த்து
      முழுதாய் வாழ முனைவோமா?
இதயந் தன்னில் அதனை ஏற்று
      இனிதாய் வாழ நினைப்போமா?
அதனை இல்லை என்றே மறுத்து
      அவனி மழுதும் அழிப்போமா?                  2


மனித நேயங் கொண்டு வாழ
      மறந்து பகையை வளர்த்தோம்நாம்
புனிதர் பேரால் மதத்தைச் சொல்லிப்
      புவியில் கொலைகள் செய்தோம்நாம்
இனிதாம் உலகின் இயற்கைப் பொருளை
      எமதே என்றே அழித்தோம்நாம்
மனதில் பொறாமை, கோபம், ஆசை
      மறுத்து வாழ மறந்தோம்நாம்.                  3

இறைவன் தந்த இந்த உலகின்
      இயல்பை மாற்ற நினைத்தோம்நாம்
குறைகள் வளர்த்துக் குணங்கள் இழந்து
      கொள்கை இன்றி வாழ்ந்தோம்நாம்
துறைகள் தோறும் வேட்கை யாலே
      முறைகள் மாற்றத் துணிந்தோம்நாம்
இறைவன் கோபங் கொண்டால் எல்லாம்
      பொடிதான் என்றே மறந்தோம்நாம்.       4

துன்பந் தொலைக்கும் வழியே இன்றித்
      துவண்டு நிற்கும் மனிதர்காள்!
முன்பு வாழ்ந்த வாழ்வில் மாற்றம்
      முடிவாய்க் காண முயல்வீரோ?
இன்ப வேட்கை, பகைமை வளர்த்து
      இயற்கை அழித்து வாழ்வீரோ?
அன்பை வளர்த்து ஆசை அறுத்து
      அகிலங் காத்து வாழ்வீரோ?               5


சிட்னி – அவுத்திரேலியா
பங்குனி 2020











No comments: