என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர்: தஸ்லிமா

.

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார்.
நாத்திகரான எழுத்தாளர் தபா பாபா என்ற பிரபல இணையப் பதிவர் கடந்த 2013-ல் நடந்த ஷபாக் போராட்டத்துக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க வாழ் வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராய் (42) தனது சொந்த நாட்டில் நடந்த புத்தக கண்காட்சிக்கு பங்கேற்க சென்றபோது சந்தேக அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இவர் தீவிரவாதத்துக்கு எதிராகவும் நாத்திக கருத்துகளையும் தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வந்தவர். தனது எழுத்துக்களுக்காக பல முறை அச்சுறுத்தல்களை சந்தித்தவரும் ஆவார். வங்கதேசம் இஸ்லாமியச் சமூக்த்தை சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமாவுக்கு மட்டுமல்லாமல், மற்ற மாற்றுச் சிந்தனை எழுத்தாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் நாடாகவே திகழ்கிறது.



சமீப காலங்களில் அந்நாட்டில் எழுத்தாளர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அல்லது அவர்கள் படுகொலைக்குள்ளாகும் சூழல் நீடிக்கிறது.
வங்கதேசம் மட்டுமல்லாமல் திசையெங்கும் சுதந்திர சிந்தனையாளர்களுக்கு எழும் அச்சுறுத்தல் குறித்தும் படுகொலைக்குள்ளான எழுத்தாளர் அவிஜித் ராய் குறித்தும் தி இந்து (ஆங்கிலம்) செய்தியாளர் சுவோஜித் பக்சியிக்கு தஸ்லிமா நஸ்ரினின் பிரத்யேகப் பேட்டி:
அவிஜித் ராய் குறித்து...
எனக்கு எழுத்தாளர் அவ்ஜித் ராயை நீணட காலமாக தெரியும். நாத்திகர்களின் எழுத்துக்களை பெரும்பாலான பத்திரிகைகள் புறக்கணிப்பதால், அவர்களில் எழுத்துக்களை சமூகத்துக்கு கொண்டு செல்ல, அவர் முக்த் - மோனா என்ற வலைப்பூவை அவர் ஏற்படுத்தினார். முக்த் - மோனா அனைவருக்கும் கண்ணாடி ஜன்னல் போன்ற வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருந்தது.
அதில் இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மத கோட்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பவும் ஆக்கபூர்வமான கருத்து வெளிப்பாடுகளுக்கு வழி வகுக்கவும் இடம் இருந்தது. பின்னர், முக்த் - மோனாவில் இடம்பெற்ற பதிவுகளை புத்தகங்களாக வெளியிட்டார்.
அவிஜித் ராய் ஒரு அறிவியல் எழுத்தாளர், சுதந்திர சிந்தனையாளர், நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவு கொண்டவர். அனைத்துப் பிரச்சினைகளுக்கு விவாதங்கள் மற்றும் முறையான அணுகுமுறையுடனே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியவர்.
வங்கதேசத்தில் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கான இடம் பறிக்கப்பட்டபோது, அவர்களுக்கான பாதையை ஏற்படுத்தியவர் அவிஜித் ராய். வங்கதேச எழுத்துலகத்துக்கு அவரது பங்களிப்பு எடை போட முடியாதது.
சுதந்திர எழுத்தாளர்களுக்கான சூழல் எந்த நிலையில், எப்போது சுருங்கியது?
1980-ல் லெப்டினென்ட் ஜெனரல் ஹுசைன் முகமது எர்ஷத் தலைமையிலான ராணுவ ஆட்சியின்போது, வங்கதேசத்தை இஸ்லாமிய நாடாக மாற்ற மதசார்பற்ற அரசியலமைப்பு சட்டம் கைவிடப்பட்டது. இதற்காக 69,70-களில் நடந்த போராட்டங்களில் நானும் பங்கேற்றிருந்தேன். அப்போதைய சூழல் வேறாக இருந்தது.
மக்களால் கருத்துக்களைக் கூற முடிந்தது. பெண்கள் புர்கா அணிவது அரிதாகவே இருந்தது. ஆனால் இப்போது சமூகம் மெல்ல மாறிவிட்டது.
உதாரணத்துக்கு, அப்போது நான் எழுதிய நாத்திக சிந்தனை கருத்துக்கள் பத்திரிகைகளில் பிரபலமாக வெளியிடப்பட்டன. இப்போது அதற்கு சாத்தியமே இல்லை. கருத்துச் சுதந்திரம் என்பது இப்போது அன்னிய சொல்லாகும்.
இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன?
இந்த மாற்றத்துக்கு முற்போக்கு சமூகங்களுக்கு ஓரளவு பொறுப்பு இருக்கிறது. 1994-ல் நான் வங்கதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போது ஒட்டு மொத்தச் சமூகமும் அமைதியாக இருந்தது.
அப்போது இவர்கள் குரல் எழுப்பியிருந்தால் இப்போது அவிஜித் ராய் போன்ற எழுத்தாளரை நாம் அடிப்படைவாதத்துக்கு பறிகொடுத்திருக்க மாட்டோம். இஸ்லாமியத்துக்கு எதிராக பேசியதாக அகமது ஹைதர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்.
வங்கதேசம் மொழி அடிப்படையான நாடா அல்லது மத அடைப்படையான நாடா என்பது தான் இப்போதையே பிரச்சினை. மதசார்பற்ற வங்காள மொழி அடிப்படை நாடாகவே வங்கதேசம் இருந்தது.
1952 வரை வங்காள இஸ்லாமியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் அனைவரது விருப்பமும் தங்களது மொழி வங்காளமாக இருக்க வேண்டும் என்பது தானே தவிர, உருது மொழிக்கு விருப்பப்படவில்லை.
பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து எங்களது சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டை போட்டவர்களே, இப்போது வங்கதேசத்தை இஸ்லாமியமாக்குகின்றனர்.
அறிவுஜீவிகளையும் சுதந்திர சிந்தனையாளர்களையும் அவர்கள் கொலை செய்கின்றனர். பாகிஸ்தான் முற்றிலும் இஸ்லாமியமயமான நாடு. ஆனால் வங்கதேசத்தின் அரசியல் சாசனம் மதச் சார்பற்றது.
மதச் சார்பற்ற கல்வியே இந்தச் சமூகத்துக்கு தேவை. மதராஸாக்களின் போதனை அல்ல. மதப் பிரிவினைவாதிகளின் இருப்பிடமாக வங்கதேசம் மாறுவதை அனுமதிக்கக் கூடாது.
இஸ்லாமியத்தின் மீதான உங்களது விமர்சனம் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறதே?
மதம் பெண்களை துன்புறுத்துகின்றது. சட்டங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
கல்வி, திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை தேவை. மத்தின் பேரில் பெண்கள் மீது கல்லெறிவதை நிறுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன். இது யாரை ஆத்திரமூட்டுகிறது.
நாகரீகமடையும் நாடுகள் அனைத்தும் மத்தையும் நாட்டையும் பிரித்தே பார்க்கின்றது. மற்ற மதங்களுக்கு இருக்கும் இதே நிலை இஸ்லாமியத்துக்கு மட்டும் விதிவிலக்கானது அல்ல.
மதசார்பற்ற மனிதாபிமானத்தை வலியுறுத்தும் எனது கருத்து ஆத்திரமூட்டுவதாக இருந்தாலும் அதில் தவறில்லை.
உங்களது எழுத்துக்கள் அடிப்படைவாதத்தை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறதே?
நான் அல்ல. அரசு தான் அடிப்படைதத்தை வலுவாக்குகிறது. மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. அரசு தான் என்னை குறி வைக்கிறது.
அதே போல, உங்களது இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துக்களால், இந்தியாவில் உள்ள வலதுசாரிகளையும் வலுப்படுத்துகிறீர்கள் என்று உங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது?
மடத்தனமானது. நான் அனைத்து மதத்தையும் விமர்சிக்கிறேன். குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோதும் எதிர்த்தேன். இந்து மத சாமியார்களையும் எதிர்த்தேன். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை நடந்தபோதும் எதிர்த்தேன்.
கிறிஸ்தவர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் எதிர்த்தேன். 'பீகே', 'வாட்டர்', 'தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்' போன்ற படங்களின் எதிர்ப்பையும் எதிர்த்தேன். அதனால் என்னை இஸ்லாமியர் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு நாத்திகர்.
இந்தியாவில் நாத்திகர்கள் நரேந்திர தபோல்க்கர், கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டபோது நீங்கள் அமைதி காத்தீர்களே?
யார் சொன்னது? நான் இதற்கு எனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தேன். அதற்கு வலதுசாரி அமைப்புகள் என்னை தூற்றினர். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதமே மிகப் பயங்கரமான அச்சுறுத்தல்.
உங்களது எழுத்துக்களில் இஸ்லாமியம் மேற்கத்திய சித்தாந்த அடிப்படையில் இருப்பதாக பார்க்கப்படுகிறதே? இதற்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் தருகின்றதா?
இஸ்லாமியர்களுக்கு சுயச் சிந்தனை இருக்கக் கூடாதா? இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா? மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல்லாத அறிவுஜீவிகள்தான் தகுதிபடைத்தவர்களா? இதுவே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கூற்று.
வங்கதேசத்தின் எதிர்காலம் என்ன?
இஸ்லாமிய தீவிரவாதிகளை நியாயப்படுத்தினால் வங்கதேசம் மிகப் பெரிய பேரழிவை சந்திக்கும். இப்போது இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினைகள் தீரப் போவதாக தெரியவில்லை. வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.
© தி இந்து ஆங்கிலம்
-தமிழில்: பத்மப்ரியா

Nantri http://tamil.thehindu.com/

No comments: