சங்க இலக்கியக் காட்சிகள் 48- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
அரசே இது சரியா? அவள் வாடுதல் முறையா?
அவன் நாடாளும் மன்னவன். எல்லோருக்கும் நல்லவன். குடிமக்கள் யாவரும் குறையின்றி வாழும் வகையில் செங்கோலோச்சி வருகின்றான். இருளைப் போக்கி உலகிற்கு வெளிச்சத்தைத் தருகின்ற பகலவனைப் போல, தீயவர்களை நீக்கி, தன்னை நாடிவருபவர்களுக்கு நிழல்போல ஆதரவு தருகின்றான். நீதி வழுவாதவன் என்று எல்லோரும் அவனைப் போற்றுகின்றனர். பொய் என்பதை அறியாது, உண்மையையே பேசுகின்ற உயர்ந்தவனாக அவன் திகழ்கின்றான். எப்படிப்பட்டவர்களின் துன்பங்களையும் களைந்து எல்லோருக்கும் நல்லதையே செய்கின்றான். இவ்வாறு குடிமக்கள் அனைவரையும் முறை செய்து காப்பாற்றும் அந்த மன்னனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். மன்னனும் அவனின் காதலியும் ஒருவரையொருவர் உளமாரக் காதலிக்கிறார்கள். அவள் மன்னனிடம் தன் உள்ளத்தை மட்டுமன்றித் தன்னையே ஒப்படைத்து விட்டாள். அடிக்கடி அவளின் இருப்பிடம் சென்று அவளோடு இன்புற்று வந்த மன்னவன் இப்போது சிலநாட்களாக அவளிடம் செல்வதில்லை. அதனால் அவள் துன்பமடைகின்றாள். காரணம்


என்னவென்று தெரியாமல் கலங்குகின்றாள். யாரிடமும் பொய் பேசாதவன் என்று புகழப்படும் மன்னன்ää தன்னை விரும்புவதாகத் தன்னிடம் மட்டும் பொய்சொல்லி விட்டானோ என்று தவிக்கின்றாள். குடிமக்கள் யாவரதும், குறைகேட்டுத் தீர்த்துவைக்கும் அவன் தன்னை மட்டும் துன்பத்தில் ஆழ்த்தி தவறுசெய்கின்றானே என்று வெதும்புகின்றாள். அவளின் வேதனையை அறிந்த அவளின் தோழி அவளுக்கு ஆறுதல் சொல்லிப்பார்க்கிறாள். “மன்னவன் தவறானவன் அல்ல. அரசாளும் மன்னனுக்கு ஆயிரம் கடமைகள் இருக்கும். ஏதோ அரசாங்க அலுவல்கள் காரணமாகவே அவன் வராமல் இருக்கிறான் விரைவில் வரவான் நீ கலங்காதே” என்றெல்லாம் அவளிடம் சொல்லிப் பாரக்கிறாள். ஆனால்ää நாளாக நாளாக தலைவியின் நிலைமை மோசமாகின்றது. உள்ளத்தின் துயரத்தால் உடலும் நோயுறுகிறது. அவளது கை வளையல்கள் கழன்று விழுகின்ற அளவுக்கு உடல் மெலிந்து விடுகிறது. இனியும் பொறுப்பதற்கில்லை என்றெண்ணிய தொழி மன்னனிடம் செல்கின்றாள். தோழியின் நிலைமையைபற்றிச் சொல்கிறாள். “உலகிற்கெல்லாம் நல்லது செய்கின்ற நீ உன்னை நம்பித் தன்னைக் கொடுத்த என் தோழியை இப்படி வருத்தலாமா? இது உனது புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விடாதா?” என்று அவனிடம் நயமாகக் கேட்கிறாள்.  மன்னனிடம் அவனது பெருமையையும்ää தன் தோழியின் நிலைமையையும் நல்லமுறையிலே எடுத்துரைக்கிறாள். தலைவிக்காக மன்னனிடம் தூதுசென்ற தோழி, மன்னனைப் பார்த்து அவனது இதயத்தைத் தொடுகின்ற வகையில் கேள்விக்கணைகளை இதமாகத் தொடுக்கின்ற இந்தக்காட்சியை வெளிப்படுத்துகின்ற பாடல் வருமாறு:

பாடல்:
ஈண்டு நீர்மிசைத் தோன்றி இருள்சீக்கும் சுடரே போல்
வேண்டாதார் நெஞ்சுஉட்க வெருவந்த கொடுமையும்
நீண்டு தோன்று உயர்குடை நிழல்எனச் சேர்ந்தார்க்குக்
காண்தகு மதிஎன்னக் கதிர்விடு தண்மையும்
மாண்டநின் ஒழுக்கத்தால் மறுவின்றி வியன்ஞாலத்து

யாண்டோரும் தொழுதேத்தும் இரங்குஇசை முரசினாய்!
ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந்தவ முதல்வன்போல்
பொய்கூறாய் எனநின்னைப் புகழ்வது கெடாதோதான்
நல்கிநீ தெளிந்தசொல் நசைஎனத் தேறியாள்
பல்இதழ்மலர் உன்கண் பனிமல்கக் காணுங்கால்?

சுரந்தவான் பொழிந்தற்றாச் சூழநின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோதான்
கலங்கு அஞர் உற்று நின்கமழ்மார்பு நசைஇயாள்
இலங்குகோல் அவிர்தொடி இறைஊரக் காணுங்கால்?

உறைவரை நிறுத்தகோல் உயிர்திறம் பெயர்ப்பான்போல்
முறைசெய்தி எனநின்னை மொழிவது கெடாதோதான்
அழிபடர் வருத்தநின் அளிவேண்டிக் கலங்கியான்
பழிதபு வாள்முகம் பசப்புஊரக் காணுங்கால்?

ஆங்கு,
தொன்னலம் இழந்தோள் நீ துணைஎனப் புணர்ந்தவள்
இன்னுறல் வியன்மார்ப! இனையையால் கொடிது என
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே!

(கலித்தொகை, மருதக்கலி பாடல் இல: 35 பாடியவர்: மருதன் இளநாகனார்)

கடலில் இருந்து எழுந்து இந்தப் பூமியின் இருளைப் போக்குகின்ற சூரியனைப் போன்றவன் நீ. வேண்டாதவர்களின் நெஞசங்களைக் கலங்கச் செய்யும் கொடூரமான ஆற்றல் நிறைந்தவன் நீ. நீண்டு உயர்ந்த குடையை உடைய உன் ஆட்சியினைத் தமது நிழலாக எண்ணிவந்தவர்களுக்கு, கண்களால் காணக்கூடியதாக விளங்கும்  மதியின் குளிர்மையான கதிர்களைப் போல அருள்பவன் நீ. மாட்சிமை நிறைந்த உனது அரசியல் ஒழக்கத்தினால் இந்தப் பரந்த உலகத்தினை தவறில்லாமல் பேணி, எல்லோரும் தொழுது போற்றும் விதமாக வெற்றிமுரசுடன் வீற்றிருப்பவன் நீ. கடுந்தவமியற்றும் முனிவரைப்போலவே எவரிடத்திலும் நீ பொய்சொல்லமாட்டாய் என்று, எவ்வித சந்தேகமும் இல்லாமல் உலகத்தவர்கள் உன்னைப் புகழ்கின்றார்கள்.

ஆனால்,அன்புகொண்ட நீ சொன்ன வார்த்தைகளை, தன்;மீது விருப்பத்துடன் கூறிய வார்த்தைகள் என்று எண்ணியவள் என் தோழி. பலஇதழ்களைக்கொண்ட நீல மலரைப்போன்ற, மைதீட்டப்பெற்ற அவளின் கண்கள் கண்ணீர் சொரிவதை நான் காண்கின்றேன். இந்தச் செய்கையினால் உனது புகழ் கெட்டுவிடாதா?
நறுமணம் வீசுகின்ற உனது மார்பை விரும்பிய என் தோழி உள்ளம் கலங்கிää நோயுற்று வாடுவதினால், அவள் அணிந்திருந்த வளையல்கள் முன்னங்கைகளிலிருந்து கழற்று வீழ்வதை நான் காண்கின்றேன். வானத்திலிருந்து நீர்சுரந்து மழையாகப் பொழிவதைப்போலää உன்னை நாடியவர்கள் எல்லோருக்கும் அவர்கள் கேட்டவற்றை விரும்பியவாறு கொடுக்கும் தன்மையுயடையவன் நீ என்று சொல்லப்படுவது இனிமேல் உனது இந்தச் செய்கையால் கெட்டுவிடாதா?
உயிர்களின் காலஎல்லைக்கேற்ப எவ்வித பாரபட்சமும் இல்லாது அவற்றை கொண்டுபோகின்ற கூற்றுவனைப்போல தவறேதுமில்லாமல் அறத்தின் வரையறைப்படி நீ செங்கோலோச்சுகின்றாய் என்று சொல்கின்றார்களேää நெஞ்சத்தை அழிக்கும் நினைவுகள் வருத்த உனது தயையை வேண்டி அவள் கலங்குகின்றபோது அவர்களது அந்தச் சொற்கள் பொய்த்துவிடாதோ?
எப்படிப்பட்டவர்களின் தன்பங்களையும் நீக்கி அவர்களுக்கு அருள்புரிகின்ற அரசர் பெருமானே!
அகன்ற மார்பை உடையவரே! நீயே தனது ஒரே துணையென உன்னோடு கூடியவள். தன்னை இழந்தவள். அத்தகையவள் துன்பமடைவது கொடுமையல்லவா? இதை நான் வந்து உன்னிடம் கூறுவதும், உனது அருளுக்காக இரந்து வேண்டுவதும் தேவையா? (என்று மன்னிடம், அவனோடு உறவுகொண்ட தலைவிக்காக அவளின் தோழி முறைப்படுவதாக அமைந்த செய்யுள் இது)
----------     ----------     -----------

No comments: