அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தீமூட்டித் தற்கொலை

.
ஜூன் 1, 2014
 
அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை காலை தன்னைத்தானே தீமூட்டிய நிலையில் சாலையால் சென்றவர்களால் மீட்கப்பட்ட லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ்ப்புகலிடக் கோரிக்கையாளர் பின்னர் உலங்கு வானூர்தி மூலம் மெல்பேண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டார். 95 சதவீதம் எரிகாயங்களுக்குள்ளான அவர் உயிருக்குப் போராடிய நிலையில் 01-05-14 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார்.
அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அதிகளவு மனவழுத்தம், எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை, மீளவும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படுவோமென்ற பயம் போன்றவை இவற்றுக்குக் காரணமாகவிருக்கின்றன.
லியோ குறித்து அவரது நெருங்கிய நண்பர் பிருந்தன் குறிப்பிட்டபோது,

“தடுப்பு முகாமிலிருந்தே எனக்கு அவரை நன்கு பழக்கம். மிக அருமையான மனிதன். யாருக்கும் என்னேரமும் உதவி செய்யும் பழக்கமுள்ளவர். சமூகத்துக்கு எம்மால் எப்போதும் பயன்பாடு இருந்துகொண்டே இருக்க வேண்டுமென்ற கொள்கையுள்ளவர். மிகவும் கலகலப்பாகவும் உற்சாகமாகவுமே எப்போதும் காணப்படுவார். தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி சமூகத்துள் விடப்பட்டபோதும் அவர் மிக நன்றாகவே இருந்தார். பின்னர் காலம் போகப்போக அவரது புகலிடக் கோரிக்கை தொடர்பான சாதகமான பதில்கள் இல்லாமற் போக அவரது மனநிலை பாதிப்படையத் தொடங்கியது. அடிக்கடி தன்னைத் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பயத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். ஒருகட்டத்தில் தீவிர மனவழுத்தத்துக்கு உள்ளாகிச் சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது. அவரது சிரிப்பும் உற்சாகமும் குன்றினாலும் வழமைபோல் மற்றவர்களுக்கு உதவிசெய்யும் அவரது பணி தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. இந்நிலையில் அவரது தற்கொலை என்பது எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது. தனது புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு தான் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவேனென்ற பயமே அவரது இந்த முடிவுக்குக் காரணமாக இருக்க முடியுமென்று நான் நம்புகிறேன்.’ என்று தெரிவித்தார்.
இன்னொரு நண்பர் செந்தில் லியோ பற்றிக் குறிப்பிடும்போது,
‘துன்பப்படும் மக்களுக்கு உதவுவதை ஒரு செயற்பாடாகவே கொண்டிருந்தவர் லியோ. தடுப்பு முகாமுக்குள்ளிருந்த வெளிவந்த ஓராண்டு காலம் மற்றவர்களுக்கு உதவுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.அடிக்கடி இரத்ததானம் வழங்கிக்கொண்டிருந்தார். இந்தியாவில் கடினவாழ்க்கையை எதிர்கொண்டிருக்கும் குழுந்தைகள் சிலருக்கான பணஉதவிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். இதைவிட கிழமைதோறும் ஒருநாள் முதியவர்களைப் பராமரிக்கும் வயோதிப இல்லத்துக்குச் சென்று தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தார். தனக்குரிய ஆங்கில அறிவை வைத்து ஏனைய புகலிடக் கோரிக்கையாளருக்கு தன்னாலான உதவிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட அற்புதமான லியோ இப்படியொரு முடிவை வரித்துக்கொண்டது எமக்கெல்லாம் வருத்தமும் அதிர்ச்சியும்தான்.’ என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடம்போது, ‘லியோவின் இறப்பின்பின்னரும் அவர் கொடையாளியாகவே இருக்கின்றார். அவரது இதயம் உட்பட ஐந்து உறுப்புகள் அவரது குடும்பத்தினரால் தானமளிக்கப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டார்.

Nantri:sankathi24

1 comment:

Anonymous said...

Very sad