உருப்படியாக ஒரு தமிழ் சினிமா

.
Photobucketஎப்போதுமே அது அப்படித்தான் நிகழ்கிறது. வருடம் பூராவும் சேற்றில் இறங்கி வேலை செய்து அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயக் கூலிகளால் வருடத்திற்கு ஒருமுறைதான் நெல்லுச் சோறு சாப்பிட முடிகிறது. செங்கற்களையும் சிமெண்ட்டையும் மூச்சு வாங்க மேலே சுமந்துச் சென்று அண்ணாந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை உருவாக்கும் தொழிலாளர்கள் தங்க ஒழுகும் குடிசைதான் வாய்த்திருக்கிறது. பளபளப்பான வணிக வளாகத்தின் தங்க நகைக் கடையில் வேலை செய்யும் சிறுமியின் காதில் ஆறு ரூபாய்க்கு வாங்கிய ஜிமிக்கிதான் தொங்குகிறது.

மற்றவர்களுக்கெல்லாம் பட்டுச் சேலை நெய்து தரும் நெசவாளர்கள் தங்களுக்கென ஒரு பட்டுச் சேலையை சொந்தமாக்கிக் கொள்வது என்பது எவ்வளவு சாத்தியமற்றதாக இருக்கிறது என்கிற யதார்த்தக் கொடுமையை நம்முன் வைக்கிறது பிரியதர்ஷனின் திரைப்படம் - 'காஞ்சிவரம்' .

1920 - 1948-களின் காலகட்டத்தில் பயணிக்கும் இந்தப் படம் சிறையிலிருந்து இரண்டு நாள் சிறப்பு அனுமதியின் பேரில் செல்லும் வேங்கடத்தின் நினைவலைகளின் மூலம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.



வேங்கடம் (பிரகாஷ் ராஜ்) ஓர் சிறந்த பட்டு நெசவாளன். நெசவாளியான தன் தந்தையின் மரணத்திற்குக் கூட அவர் மீது போர்த்த பட்டுத்துணி இல்லாத வறுமை. பட்டுப் புடவைகள் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும்பான்மையும் முதலாளிகளுக்கே போகிறது. நெசவாளர்களுக்கு சொற்ப கூலிதான் தரப்படுகிறது. தனக்கு வரப்போகும் மணமகள் பட்டுப்புடவையுடன் வரவேண்டும் என்பது வேங்கடத்தின் கனவு. ஆனால் யதார்த்தமான சூழல் அதற்கும் ஒத்துழைக்கவில்லை.

வேங்கடத்திற்கும் (பட்டுப்புடவை இல்லாத) அன்னத்திற்கும் (ஷ்ரேயா ரெட்டி) நடக்கும் திருமணத்தினால் பெண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய பெண்ணின் திருமணத்தை பட்டுப்புடவையுடன்தான் நடத்துவேன் என்கிற வாக்குறுதியை குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் ஊரார் முன்னிலையில் வெளிப்படுத்துகிறான் வேங்கடம். சாத்தியப்படாத வாக்குறுதியாக இருக்கிறதே என்கிற அவநம்பிக்கையை அவன் மனைவி உட்பட மற்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதற்கென தான் பல வருடங்களாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சில்லறைக் காசுகளை மனைவியிடம் காட்டி அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அந்தப் பணத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது தங்கைக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

தனது மகளுக்கு எப்படியாவது ஒரு பட்டுச் சேலையை சம்பாதித்து விட வேண்டுமென்பது வேங்கடத்தின் ஆசை. வெறி எனக்கூடச் சொல்லலாம். இதற்காகத்தான் அந்தத் தவறைச் செய்கிறான். தன்னுடைய வேலையிடத்தில் இருந்து திரும்பும் போதெல்லாம் பட்டு நூற்கற்றை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு திருடி வருகிறான். சிறிது சிறிதாக தன் மகளுக்கான கனவுச் சேலையை ரகசியமாக நெய்கிறான். நோய்வாய்ப்படும் மனைவி இடையில் இறந்து போகிறாள். அந்த ஊருக்கு வரும் ஒரு எழுத்தாளனின் மூலம் கம்யூனிசத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகளினால் முதலாளியுடன் முரண் ஏற்படுகிறது. வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய நண்பனின் மகனுக்கே தன் மகளை நிச்சயம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கெனவே தீர்மானித்திருந்த படி மகளுக்கு சீதனமாக பட்டுச் சேலை ஒன்றை தருவதாக வாக்களிக்கிறார் வேங்கடம். ஆனால் சேலை முக்கால்வாசிதான் நிறைவடைந்திருக்கிறது.

பிறகு?....

வேங்கடம் தன் மகளுக்கான பட்டுச் சேலையை நெய்து அளித்தாரா? அவர் ஏன் சிறைக்கு செல்ல நேர்கிறது என்பதோடு மனத்தை உலுக்கிப் போடும் அந்த கிளைமாக்சையும் அறிய படத்தை நீங்கள் காணவேண்டும்.

()

வட இந்தியாவில் நானா படேகர், நஸ்ரூதீன் ஷா போன்றவர்கள் இருப்பது போல நமக்கு ஒரு பிரகாஷ் ராஜ் இருப்பது குறித்து நாம் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் திரைப்பட விழாக்களில் சிறந்த படைப்புகளைப் பார்க்கும் நம் இயக்குநர்கள் அதை செயல்படுத்தாமல் இந்த மாதிரியான நடிகர்களை typical பாத்திரங்களில் மாத்திரம் பயன்படுத்தி மாற்றுச் சிந்தனையை, கதைப் போக்கை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள் என்பது வேதனையை ஏற்படுத்தக் கூடியது. இவ்வளவு சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.

இந்தப் படம் முழுவதையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். திருமண வயது மகள் கொண்ட தந்தையின் தோற்றத்தையும் உடல் மொழியையும் திருமணமான புதிதில் இருக்கிற இளமையையும் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரின் நுட்பமான பாவங்கள் நம்மை கலங்கடிக்கிறது. கிழட்டு வயதிலும் தம்மை இளமையான கதாநாயகன்களாக முன்நிறுத்திக் கொள்ளும் காமெடியர்களுக்கு மத்தியில் கதையின் போக்கிற்கு தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் பிரகாஷ் போன்ற நடிகர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள். இயக்குநர்களும் அம்மாதிரியான நடிகர்களை நிறையப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கவர்ச்சி பிம்பமாக ஆரம்பத்தில் அறியப்பட்ட ஷ்ரேயா ரெட்டி சிறந்த பாத்திரங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களைப் போலவே இதிலும் சிறிது நேரத்திற்கே வந்து போனாலும் தான் தோன்றுகிற காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வேங்கடத்தின் மகளாக வரும் பெண்ணும் (ஷம்மு) நண்பராக வரும் நடிகரும் (கூத்துப்பட்டறை நடிகர்) தம் பங்களிப்பை சிறப்பாக நிகழ்த்தியிருக்கின்றனர்.

()

சாபு சிரிலின் art direction குறித்து நிச்சயம் சொல்லியேயாக வேண்டும். இதே பிரியதர்ஷனின் கூட்டணியில் உருவான 'சிறைச்சாலை' படத்திலேயே தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்து விட்டவர் இதிலும் அதைத் தொடர்கிறார். 1900-களில் புழங்கியிருக்கும் பொருட்களை நிறைய உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஊருக்கே முதன் முதலாக வரும் மோட்டார் கார், ஒரு ரூபாய் நோட்டு, பழைய அணா நாணயங்கள், கிணற்று ராட்டினம், சைக்கிள் விளக்கு, கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்சண விற்பனையாளனின் கூடை, பித்தளை பாத்திரங்கள் போன்றவை செயற்கையாக பார்வையாளனின் முன்வைக்கப்படாமல் காட்சிகளின் போகிற போக்கில் கண்ணில் தெரிகின்றன.

இசையைப் பற்றின அடிப்படை ஞானம் எனக்கில்லா விட்டாலும் இளைய ராஜாவின் பின்னணி இசையை என்னால் நுட்பமாக உணர முடியும். சமீபத்தில் பார்த்த 'சேது' படத்தில் சில விநாடிகளே தோன்றும் ஒரு மயிற்தோகைக்கு அவர் அளித்திருக்கும் அந்த இசை அவருக்கு மாத்திரமே சாத்தியம். இந்தப் படத்திற்கு M.G. ஸ்ரீகுமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை பல காட்சிளுக்கு மிகப் பொருத்தமாக இழையோடியிருக்கிறது. குழந்தை பிறந்திருக்கும் விழாவில் பாடப்படும் அதே பாடலை கிளைமாக்ஸ் காட்சியிலும் பயன்படுத்தியிருப்பது நம்மை கலங்க வைக்கிறது. திருவின் காமிரா 40-களின் காலகட்டத்திற்கு ஒத்திசைவான ஒளியைப் பயன்படுத்தி எந்த வித gimmics-ம் இல்லாமல் இயல்பாக பயணிக்கிறது.

அடிப்படையில் இந்தப்படம் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய நெசவாளர்களின் வறுமையைப் பற்றியும் தென்னிந்திய உழைப்பாளர்களிடையே கம்யூனிசம் முதன்முதலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அதன் வீழ்ச்சி குறித்தும் மெல்லிய குரலில் பேசுகிறது. தங்களின் கோரிக்கைகளுக்காக முதலாளியிடம் விடாப்பிடியாக போராடும் வேங்கடம், தன்னுடைய மகளுடைய திருமண நாள் நெருங்கியவுடன் பட்டுச்சேலை கனவு நிறைவேறி விடாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்று சில தோழர்களின் பகைமையைப் பெறுகிறான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தை அன்றைய அரசு எவ்வாறு மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது என்பதையும் இந்தப்படம் பேசுகிறது.

நாள் முழுக்க தறியில் அவர்கள் அவதிப்பட்டு பட்டுச்சேலையை உருவாக்கி மற்றவர்களை மகிழ்வித்தாலும் அவர்களின் வாழ்க்கை பட்டுச்சேலை மாதிரி வழுவழுப்பாக இல்லாமல் மிக்க வறுமையுடன் கரடுமுரடாகத்தான் இருக்கிறது என்பதை இந்தப்படம் எந்தவித பிரச்சாரத்தொனியுமின்றி இயல்பாகச் சொல்கிறது. பிரியதர்ஷன் இந்தப்படத்தை மிகச் சிரத்தையாக உருவாக்கியிருக்கிறார். காலவாக்கில் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் இரண்டையும் இணைக்கும் காட்சிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியிருக்கிறார். வணிக நோக்கத்துக்கோ அல்லது விருது வாங்கும் நோக்கத்கோ அல்லாமல் தன்னுடைய 9 வருட கனவை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய ஆத்ம திருப்திக்கு இந்தப்படத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.

IFFI, Toronto உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடமிருந்து பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளது.

()

அடுத்த முறை ஒரு பட்டுப்புடவையை வாங்கும் போதோ அல்லது உடுத்தும் போதோ அதற்காக அழிக்கப்பட்ட பல உயிரினங்களோடு அதை உருவாக்கினவனின் வியர்வையையும் சற்று நினைவு கூர்வது நலம்.

(பண்புடன் குழுமத்தின் ஆண்டுநிறைவையொட்டி அதில் பிரசுரமான இந்தப் பதிவு இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி: பண்புடன்)

No comments: