இலங்கைச் செய்திகள்


வடக்குத் தேர்தல் செப்டெம்பர் இறுதி வாரத்தில் நடைபெறும் சாத்தியம்

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத்தங்களை மேற்கொள்வதற்கோ இடமளியோம்

விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டார் மைக்கல் ஏவின்

இந்தியா இலங்கைக்கு முதுகை திருப்பினால் அவர்கள் சீனாவை அணுகி விடுவார்கள் - இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

தமிழினி விடுதலை
  
போதுமிந்தப் பாராமுகம்!

துரிதமாக வளர்ச்சிகண்டு வரும் கிழக்குப் பல்கலைக்கழகம்

மன்னார் ஆயர் புதிய பிரபாகரனா?: சேனாவின் கருத்துக்கு த.தே.கூ. கண்டனம்
========================================================================
வடக்குத் தேர்தல் செப்டெம்பர் இறுதி வாரத்தில் நடைபெறும் சாத்தியம்

25/06/2013   வட மாகாண சபை தேர்தல் செப்டெம்பர் மாதம் முதல் இருவாரத்திற்குள் நடத்துவது சாத்தியமற்ற விடயமாகும். ஏனெனில், போதிய கால அவகாசம் இல்லை. ஆனால், செப்டெம்பர் 21அல்லது 28ஆம் திகதியே சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசு அறிவிப்பின் பின்னரே ஏனைய விடயங்களை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது  நன்றி வீரகேசரி  














13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத்தங்களை மேற்கொள்வதற்கோ இடமளியோம்



25/06/2013   13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுவுமில்லை என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ராஜித சேனரத்ன, டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கூட்டாக சூளுரை விடுத்தனர்.

இலங்கையை பாதுகாக்க சீனா ஒருபோதும் முன்வரமாட்டாது என்பதை சிங்கள அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைச்சர்கள் தெரிவித்தனர்.

மாகாண சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசுக்கூடாக ஐக்கிய இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சமசமாஜக்கட்சி அலுவலத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே இது தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர,

13ஆவது திருத்தம் மக்கள் ஆதரவுடன் கொண்டுவரப்படவில்லை. எனவே, அதனை ஒழிக்கவேண்டுமென அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச உட்பட சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அரசியல் அமைப்பில் 18 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆனால், இத்திருத்தங்கள் எதற்கும் மக்கள் ஆதரவு பெறப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவே பெறப்பட்டுள்ளன.

அன்று இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தீர்த்துவைத்தார். அதன் பின்னர் 1983 வரை இந்தியா எமது பிரச்சினையில் தலையிடவில்லை. ஸ்ரீமாவோ அன்று அந்தப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் இன்று ஈழப்பிரச்சினை அகலவத்தைவரை வந்திருக்கும்.

இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவின் தலையீடு இருக்கத்தான் செய்கிறது. பிரபாகரன் உயிரிழக்கும் வரை இந்திய மத்திய அரசாங்கமோ கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இலங்கைக்கு எதிராக எதனையும் பேசவில்லை. யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவு அளப்பரியதாகும். அன்று இதனை புகழ்ந்தனர். ஆனால், இன்று இந்தியாவின் 13ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் கச்சதீவு உடன்படிக்கை தானாகவே செயலிழந்துவிடும். இலங்கையின் பாதுகாப்புக்கு சீனா உதவியளிக்கும் என்பதில் எந்தவிதமான நிச்சயமும் இல்லை. ஏனெனில், அண்மையில் இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட சீனாவின் புதிய பிரதமர், வரலாற்று நட்புறவுடனான இரண்டு நாடுகள் இணைந்துள்ளன. இனிமேல் நாம் இருவரும் இணைந்து தீர்மானங்கள் எடுப்போம் என கூறியுள்ளார். எனவே, சீனா எமக்கு உதவுமென்பதில் எந்தவித உண்மையும் இல்லை.

26 வருடங்களுக்கு பின் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனை எதிர்ப்பதன் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுவதை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும்.

அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண

மாகாண சபை முறைமையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அதற்காக 13ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திருத்தம் கொண்டுவந்த பின்னர் விடுதலைப் புலிகளை தவிர ஏனைய அனைத்து ஆயுதக் குழுக்களும் ஜனநாயக அரசியலில் இணைந்தன. எனவே, 13ஆவது திருத்தத்தை பலப்படுத்தி வடமாகாண தேர்தலை நடத்த ேவண்டும்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன

13ஆவது திருத்தச் சட்டம் வட பகுதி மக்களுக்கு வழங்கிய உணவாகும். ஆனால், அதனை பறித்தெடுத்து தென் மாகாணத்தில் 16 வருடங்களாக அனுபவித்து வந்தனர். இன்று வட மாகாண ்தமிழ் மக்களுக்கு உரித்தான 13ஆவது திருத்தச்சட்டம் வழங்கப்பட தீர்மானித்திருப்பதை எதிர்ப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?

இத்திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுமில்லை.

அமைச்சரவையில் இதற்கு எதிராக அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் குரல் கொடுக்கையில் எந்தவொரு சிரேஷ்ட அமைச்சரும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதுதான் உண்மை.

இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் முன்னாள் தூதுவர் நிரூபமா ராவ் வழங்கிய விருந்துபசாரத்தின்போது யுத்தத்தை முடிப்பதற்கு சீனாவும் இந்தியாவும் சம அளவில் எமக்கு உதவி செய்தன. ஆனால், சீனா அதற்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டது. ஆனால், இந்தியாவோ அதற்காக ஒருசதத்தையும் பெறவில்லையெ ன பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆனால் இதனை வெளியே சொல்ல முடியாது. ஏனென்றால், தமிழக அரசின் எதிர்ப்புக்கள் கிளம்பும் என்றும் அவர் தெரிவித்தார் என்றும் அமைச்சர் ராஜித கூறினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களாக ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர , வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி





விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டார் மைக்கல் ஏவின் 25/06/2013     மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் விக்கிர உடைப்பு இடம்பெற்ற குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் பிரிவின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அரசியல் அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

இதன்போது இவர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்விடயமாக தெரிவித்ததாவது!

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே கடந்த சில காலங்களாக ஆலயங்களில் கொள்ளையிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று அம்பாறை, திருகோணமலை போன்ற வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலயங்களிலும் நடைபெற்றிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கொள்ளைகள் சார்பாக ஆலய தர்மஹர்த்தாக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறையிடுகின்றனர். அதேவேளை பொலிஸார் ஆலயங்களுக்கு வருகை தந்து பார்வையிடுகின்றனர். ஆனால் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதானமான எந்த கொள்ளைச் சம்பவம் சார்பாகவும் அதாவது ஆலய விக்கிரம் உடைக்கப்பட்டவை சார்பாகவோ? தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டவை சார்பாகவோ? யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது. அதற்கு பிற்பாடு அதுசார்பாக அவர்கள் விசாரணை நடத்துவதுமில்லை.

கடந்த வருடம் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் பெருந்தொகையான நகைகள் இரவு வேளையிலே களவாடப்பட்டது. ஆனால் அதன் முறைப்பாடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உண்டு. ஆனால் இதுவரை எந்தவித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கௌ;ளவில்லை.

நானும் இவ்விடயமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றேன். ஆனால் இதுசார்பாக எந்த நடவடிக்கையையும் இன்னும் எடுத்ததாக அறியவில்லை.

அத்தோடு இவ்வாலயம் உட்பட மாங்காடு பிள்ளையார் ஆலயத்திலும் இந்து விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு, தங்க இயந்திரத் தகடுகள் கொள்ளையிடப்பட்டிருந்தது. குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. யுத்த காலத்திலே இச்சம்பவம் இடம்பெறவில்லை. தற்போதைய காலத்திலே தான் இவ்வாறான சம்பவம் இடம்பெறுகின்றமை இந்து மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி






இந்தியா இலங்கைக்கு முதுகை திருப்பினால் அவர்கள் சீனாவை அணுகி விடுவார்கள் - இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

25/06/2013  இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையோன தந்திரோபாய உறவு மற்றும் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்த தொலை நோக்கு விளைவுகளை நன்கு ஆராய்ந்த பின்னரே இலங்கைக்கு எதிரான எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியாவின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைக்கான இணையமைச்சர் ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்திய இராணுவ வசதிகளைப் பயன்படுத்தி இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோரின் மனோ உணர்வுகளை நான் மதிக்கின்றேன். ஆயினும் இந்தியா அவர்களுக்கு முதுகைத் திருப்பினால் அவர்கள் சீனாவையே அணுகுவதற்கு விருப்பம் கொள்வரென்பதை நீங்கள் மறுக்கக் கூடாது. இலங்கையின் நெருங்கிய அண்டை நாடென்ற வகையில் ‘‘இது இந்தியாவுக்கு நல்ல சகுனமாக இருக்காது’’ .
பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ள எல்லைப் புறங்களில் இந்தியா ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பாக்கு நீரினைப் பகுதியில் அமைதியைக் குலைக்கக்கூடிய நிலைவரமொன்றை உருவாக்க இந்தியா விரும்பவில்லையெனவும் கூறிய நாச்சியப்பன்.
இலங்கைக்கு எதிரான எந்தத் தீர்மானமும் இலங்கைத் தமிழர்கள மற்றும் இந்தியாவில் வாழ்ந்துவரும் தமிழ் அகதிகள் மீது நேரடியான தாக்கமொன்றைக் கொண்டிருக்கவே செய்யுமெனவும் தமிழ்நாட்டில் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இருந்திருந்தபோதிலும் கடந்த காலத்தில் இலங்கையில் தோன்றியிருந்த யுத்த நிலைமைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கைத்தொழில் வளர்ச்சியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன எனவும் குறிப்பிட்டார்.
கைத்தொழில் அபிவிருத்திக்கென அமைதியான சூழல் கொண்ட அயல் நாடொன்றைக் கொண்டிருத்தல் அவசிமென்பதை வலியுறுத்திய அவர், தென் மாவட்டங்களில் வர்த்தக முதலீடுகளை மேற்கொவதற்கு கைத் தொழில் அதிபர்கள் அச்சங் கொண்டிருந்ததாகவும் தூத்துக்குடியில் துறைமுகமொன்றும் மதுரையில் சர்வதேச விமான நிலையமொன்றும் தூத்துக்குடியில் இன்னுமொரு விமான நிலையமும் இருந்த போதிலும் தங்களால் முதலீட்டைக் கவர்ந்து கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி








தமிழினி விடுதலை
thamilini3தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.  கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார். தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்க அரசியல் முக்கியஸ்தர்கள் முன்வந்துள்ளனர் என்றும் தேர்தலை இலக்கு வைத்தே அவரது விடுதலையும் அமையப்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அந்த வாய்ப்பினை தமிழினி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார். நன்றி தேனீ 











போதுமிந்தப் பாராமுகம்!

இலங்கை அரசியல் சட்ட 13-ஆவது திருத்தத்தை சில மாற்றங்களுக்கு உட்படுத்தும் வேலைகள் இலங்கையில் மிகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

1987-இல் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையொப்பமிட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் தர ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்காக அமல்படுத்த வேண்டிய 13-ஆவது சட்டத்திருத்தத்தை கடந்த கால் நூற்றாண்டாக இலங்கை அரசு அமல்படுத்தவே இல்லை. தற்போது அதன் ஷரத்துகளை நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

இம்மாதம் 18-ஆம் தேதி, இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதுதில்லியில் பிரதமர் மன்மோகனைச் சந்தித்து, 13-ஆவது சட்டத்திருத்தம் நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று கோரியபோது, பிரதமர் தெரிவித்த கருத்து, ""இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டுவிட மாட்டோம், பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்பதுதான்.

இந்திய அரசு, இது தொடர்பாக இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. அந்தக் கடிதம் வழக்கமான, எந்தவிதமான தாக்கத்தையும் அல்லது நிர்பந்தத்தையும் இலங்கை அரசுக்கு ஏற்படுத்தப்போவதில்லை.

சில தினங்களுக்கு முன்பு 13-ஆவது சட்டத்திருத்தத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை செய்ய நாடாளுமன்ற தேர்வுக்குழு அமைத்தார்கள். இதில் தமிழ்த் தேசிய கூட்டணி உள்பட பல கட்சிகள் உறுப்பினர்களாக இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டன. தற்போது (ஜூன் 26-ஆம் தேதி), 13-ஆவது சட்டத்திருத்தத்தில் உட்பிரிவுகள் திருத்தம் குறித்த கருத்துரு இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு வேண்டுமென்றே இவ்வாறு நீதிமன்றத்தையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறது என்று கருத இடமிருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டின்போது, 13-ஆவது சட்டத்திருத்தத்தை இந்தியா வலியுறுத்தினால், "'அது நீதிமன்றத்தின் கருத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது'' என்று சாக்குப்போக்கு சொல்ல வசதியாக இத்தகைய நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியிருக்கக்கூடும்.

மேலும், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தாலும் சிறுபான்மை முஸ்லிம்களில் பலரும் உயர்கல்வி பெற்றவர்களாகவும், அரசியல் அறிவு கொண்டவர்களாகவும் வளர்ந்து நிற்பதை சிங்களர்கள் புதிய பிரச்னையாகக் கருதுகிறார்கள். இந்நிலையில், தமிழக முஸ்லிம் அமைப்புகளை இலங்கைத் தமிழ் எம்பி-க்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியிருப்பதும், "நாம் தமிழர் கட்சி' மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதும் இலங்கை அரசுக்கு அச்சத்தைத் தந்துள்ளது. தமிழர்கள், முஸ்லிம்கள் என, எந்தச் சிறுபான்மையினருக்கும் மாகாண அளவில் முழுஅதிகாரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக, 13-ஆவது சட்டத்திருத்தத்தில் உட்பிரிவுகள் மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இவை எதுவாக இருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மீறுகின்ற செயலாகத்தான் இது இருக்கும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் உட்பிரிவுகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இந்தியாவின் ஒப்புதல் பெறாமல் இத்தகைய திருத்தம் செய்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆனால் இலங்கை அரசு தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

13-ஆவது சட்டத்திருத்தத்தில், மாகாண இணைப்பு அல்லது உருவாக்கம் அங்கு வாழும் மக்கள் கருத்தின்படி அமைய வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இது தொடர்பாக மாகாண ஆளுநருக்கு அளிக்கப்படும் அதிகாரத்தைக் குறைத்து இந்த முடிவுகள் எடுக்கும் அதிகாரம் அதிபரின் அதிகாரத்துக்கே உள்ளதாக உட்பிரிவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதை இலங்கைத் தமிழர் அமைப்புகள் கண்டிக்கின்றன. இது சிறுபான்மையினராக உள்ள தமிழர்களை மேலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கை என்கிறார்கள்.

ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தன கையெழுத்திட்ட 13-ஆவது சட்டத்திருத்தமே ஒரு கேலிக்கூத்து என்று சில தமிழர் அமைப்புகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மாகாணத்தின் முதல்வர், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தாலும், மாகாண ஆளுநர் சிங்களராக நியமிக்கப்பட்டால், அவர் அரசின் முடிவுகளுக்கு அனுமதி அளிக்கமாட்டார். மேலும், மாகாண அமைச்சரவையைக் கலைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இருக்கிறது என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கையெழுத்தான நேரத்திலேயே நீர்த்துக்கிடந்த 13-ஆவது சட்டத்திருத்தத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்ய இலங்கை அரசு துடிக்கின்றது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறி, 13-ஆவது சட்டத் திருத்தத்தில் இலங்கை தன்னிச்சையாக மாற்றங்கள் செய்யுமெனில், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெருத்த அவமானம்தான் மிச்சமாகும். மற்ற நாடுகள் இந்தியாவை கிள்ளுக்கீரையாக நினைக்க வைக்கும். ஆகவே, இந்தியா இந்த விவகாரத்தில் மிகவும் கறாராகச் செயல்பட்டாக வேண்டும்.

அண்டை நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலைபுதைத்து நிற்பதுபோல இனியும் இந்தியா நிற்குமேயானால், சர்வதேச அரங்கில் நமக்கிருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விடும். ஆப்கானிஸ்தான் பற்றியும், மியான்மர் பற்றியும் கவலைப்படுவதை விட்டுவிட்டு, நமக்குத் தலையிட அதிகாரமுள்ள இலங்கைப் பிரச்னையில் நாம் தலையிட்டுத் தமிழர்களுக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் நியாயம் பெற்றுத் தந்தாக வேண்டும்.

தினமணி தலையங்கம்  நன்றி தேனீ








துரிதமாக வளர்ச்சிகண்டு வரும் கிழக்குப் பல்கலைக்கழகம்

-அதிரதன்

east unversityகிழக்குப் பல்கலைக்கழகமாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமாக பல கல்விமான்கள் இருந்துள்ளார்கள். தற்போதைய நிலையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைகள் முக்கியமானவையாகவும், முன்னேற்றமானவையாகவும் பார்க்கப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது தொடர்பிலும், தற்போதைய பல்கலைக்கழ அபிவிருத்திகள் தொடர்பிலும் இந்தக்கட்டுரையில் ஆராயலாம்.

மட்டக்களப்பு மாத்திரமல்ல வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பிரதேசங்களுமே கல்வி மற்றும் பொருளாதாரம் என அனைத்து விடயங்களிலும் கடந்த 30 வருடங்களாக அழிவுகளையும், பின்னடைவுகளையும் இன்னல்களையும் சந்தித்திருக்கின்றன.

இக்காலத்தில் பெருந்தொகையானவர்கள் காணாமல் போனதும், கொல்லப்பட்டதும், நாட்டை விட்டு ஓடியதும் என பல்வேறு விவகாரங்களும் நடந்து முடிந்திருக்கின்றன. ஏதோ கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்கில் அமைதி நிலை ஏற்பட்டு நிம்மதிப் பெருமூச்சொன்று விடப்பட்டு மக்கள் நிமிர்ந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கூட தமிழ் மக்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருந்தனர். இதில் முயற்சிகளை மேற்கொண்ட பல்கலைக்கழகம் என்ற வகையில், கிழக்குப் பல்கலைக்கழகம் முதலிடத்தில் இருந்தது என்றுகூடச் சொல்லலாம்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தருக்கு இருந்த வெற்றிடம் பதில் உபவேந்தரால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனாலும், கடந்த 14 மாதங்களுக்கு முன்னர்தான் கனடாவில் வசித்து வந்த கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா உப வேந்தராக நியமிக்கப்பட்டார்.

இவர் நியமிக்கப்பட்ட பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகமானது பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டுவருகிறது. கடந்த வருடங்களை விடவும் இந்த வருடத்தில் ஒரு தொகை மாணவர்கள் அதிகமாகவும் உள்வாங்கப்பட்டனர். மேலதிகமாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கென விடுதிகளை அமைக்கும் பணிகள் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கென புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விடுதிப் பிரச்சினைகள் மற்றும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்ற குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டாலும் அவற்றை நிவர்த்தி செய்தவதற்கான வேலைகளை பல்கலைக்கழக நிருவாகம் மேற்கொண்டு வருகிறது. நடைபெற்று வரும் அபிவிருத்திகள் குறித்து கருத்து வெளியிட்ட கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கென (Faculty of Health care sciences) மாணவர் விடுதிகள் இல்லை. தற்பொழுதுதான் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் விடுதி அமைக்கப்பட்டு வருகிறது.

அதனால் நாங்கள் மட்டக்களப்பு நகரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து விடுதிகளாக பிள்ளைகளுக்கு வழங்கியிருக்கிறோம். வந்தாறுமூலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை விடவும் இவர்களுக்கு நல்லவகையான விடுதி ஏற்பாடுகளே செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் கடந்த வருடத்தினை விடவும் அதிகமாக 80 மாணவர்கள் சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். விடுதி வசதி தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடம் சேர்க்கப்பட்ட மேலதிக மாணவர்களுக்காக அரசாங்கத்தால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 4 பில்லியனில் 300 மில்லியன் ரூபா எமது பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 80 மாணவிகள் தங்கக் கூடிய செமி பேர்மனற் கட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதி இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெறும். அதன் பின்னர் விடுதிகளுக்காக பயன்படுத்தப்படும் வாடகை வீடுகள் ஆண்கள் விடுதிகளாகப் பயன்படுத்தப்படும். இதன் பின்னர் 2 - 3 வருடங்களுக்கு மாணவர் விடுதிப் பிரச்சினைகள் இருக்காது, அந்த இடைவெளிக்குள் பிள்ளையாரடியில் மாணவர் விடுதி வேலைகள் நிறைவடைந்துவிடும்.

அது தவிர வந்தாறுமூலையிலுள் பிரதான பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. வந்தாறுமூலை யுத்தகாலத்தில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட அபிவிருத்திகள் கிடைக்கப் பெறாத ஒரு ஐசலேற்றட் (Isoletted) பிரதேசம் என்ற வகையில் அங்கு பெரிய வீடுகளை வாடகைக்குப் பெறுவதிலும் சிரமம் காணப்படுகிறது. அங்குள்ள விடுதியில் 750 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதியில் 1200 மாணவர்கள் தங்கியுள்ளனர். அது தவிரவும் வீடுகளும் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளன.

இங்குள்ள நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சரவை விடுதிகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. அத்துடன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 150 தொடக்கம் 200 மாணவர்கள் தங்கியிருக்கக் கூடிய இரண்டு செமி பேர்மனற் விடுதிகள் 69 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளன. அதே நேரம் கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்திற்கு 31 மில்லியனும், திருமலைக்கு 15 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிரவும், 70 மில்லியன் ரூபாவுக்கும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் மாவர்களுக்கான உள்ளக விளையாட்டரங்கம், விரிவுரை மண்டபங்கள், பரீட்சை மண்டபங்கள் ஆகியன இன்னும் இரண்டு 3 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளன.

35 வருடங்களாக யுத்தப் பாதிப்புகளுக்குள் இருந்து வந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு அரசாங்கம் தாராளமான நிதி ஒதுக்கீடுகளை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தந்து வருகிறது. அந்த வகையில் நிறைவு பெற்ற என்னுடைய 14 மாத பதவிக்காலத்தில் இந்த நிதிகள் மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி வேலைகளை துரிதமாக மேற்கொள்ள முடிகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும், உயர் கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் ஆகியோருக்கும் நன்றிகளை இந்தவேளையில் தெரிவித்தே ஆக வேண்டும்.

அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சவால்களாக மக்களுடைய மனங்களிலுள்ள யுத்தக் கொடுமைகளால் உருவான மனக் கசப்புகளே இருக்கின்றன. ஆனாலும் தற்போது தமிழ் - சிங்கள மாணவர்களிடையே இன உறவு மேம்பட்டு பிரச்சினைகள் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி வேலைகளாக பிள்ளையாரடியில் 360 மில்லியன் செலவில், மாணவர் விடுதி சுற்றுமதில் நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கென 199 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர்களுக்கான விரிவுரை, கிளினிக், மற்றும் ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய பிரிவு ஒன்று (Profesorial Unit) அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் அந்த வேலைகள் ஆரம்பிக்கப்படும். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கென தனயான தொகுதியாக இது இருக்கும்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 7ஆவது உப வேந்தராகப் பொறுப்பேற்ற கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவின் 14 மாத பதவிக்காலத்தில் இதுவரை 250 மில்லியன் செலவிலான உயிரியல் பீடத்துக்கான கட்டடம் அமைக்கப்பட்டு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

150 மில்லியன் செலவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம்புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக சுற்றுமதில், நல்லையா மண்டபம், வெள்ளப் பாதிப்பிலிருந்து தடுக்கும் வகையில் வடிகாலமைப்பு, பழைய கட்டடங்கள் புனரமைப்பு என்பன நடைபெற்றுள்ளன.

அவை தவிரவும், நூலகக் கட்டடத் தொகுதி, கலைப்பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டடம் என்பன 500 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் கடந்த காலத்தில் இருந்து வந்த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதிலுள்ள தாமதங்கள் நீக்கப்பட்டு பரீட்சை முடிவடைந்து 6 வாரங்களுக்குள் முடிவுகளை வெளியிடும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

3 தசாப்தங்களுக்கும் மேலாக இன்னல்களையும் நெருக்குதல்களையும், சந்தித்துக் கொண்டிருந்த ஒரு பல்கலைக்கழகத்தினை குறுகிய காலத்துக்குள் மீண்டும் தூக்கி நிமிர்த்துவது சாதாரணமான விடயமல்ல. அந்த வேலையை கொஞ்சம் கொஞ்சமாகச் செய்துவரும் நிர்வாகத்துக்கு தோள் கொடுக்க வேண்டியது பாகுபாடுகள் இன்றி ஒட்டு மொத்த தமிழச் சமூகத்தின் கடமையாகவே பார்க்கப்படுகிறது.

-தமிழ்மிரர் -  நன்றி தேனீ






மன்னார் ஆயர் புதிய பிரபாகரனா?: சேனாவின் கருத்துக்கு த.தே.கூ. கண்டனம்

27/06/2013      புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு செயற்பட்டுவருகின்றார் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வண்மையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததையடுத்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு, தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தார்.

ஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த பொதுபல சேனா என்ற இந்த இனவாத அமைப்பு தற்போது தமிழ் மக்களுக்கும் எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்காலம் முதல் குரல்கொடுத்து வருகின்றது. இதையே மன்னார் ஆயரும் செய்து வந்தார். இவ்வாறு தமிழ் மக்களுக்கு பக்கபலமாக செயற்பட்டு வரும் மன்னார் ஆயரின் செயற்பாட்டை பொதுபல சேனா என்ற இந்த இனவாத அமைப்புக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் இதன் எதிரொலியாக அரசாங்கத்திலும் இருந்து மன்னார் ஆயருக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையிலேயே பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த இனவாத கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு இவர் கூறியுள்ள கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது.

மன்னார் ஆயர் தமிழர் என்பதால் இவ்வாறான இனவாத கருத்துக்களை கூறிவருதோடு இவருக்கு எதிராக செயற்பட்ட சிங்கள ஆயர்கள் ஒன்றுப்பட்டு குரல் கொடுக்க வேண்டும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ள மன்னார் ஆயர் மக்களின் உரிமைகளுக்காக செயற்படக் கூடாது என எங்கும் கூறவில்லை. எனவே பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பின் கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
     நன்றி வீரகேசரி



No comments: