தமிழ் சினிமா

தீயா வேலை செய்யனும் குமாரு 

கொலிவுட்டில் 'கலகலப்பு' கொமெடி படத்தைத் தொடர்ந்து 'தீயா வேலை செய்யனும் குமாரு' படம் மூலம் தீப்பொறி கிளம்ப மற்றும் ஒரு நகைச்சுவை வெற்றிப்படத்தை தந்திருக்கிறார் சுந்தர்.சி.
பாட்டன் காலத்திலிருந்து பாரம்பரியமாக காதல் திருமணம் செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் சித்தார்த்.
ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இவரால் மட்டும் காதலில் வெற்றி காண முடியவில்லை.
இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் பற்றி விளக்குகிறார்கள்.
மறுநாள் வேலைக்குப் போகும் சித்தார்த் அங்கு புதிதாக இவரது கம்பெனியில் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார்.
அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ், ஹன்சிகாவுடன் நெருங்கி பழகுகிறார்.
இதைக்கண்ட சித்தார்த், எப்படியாவது ஹன்சிகா தன்னை காதலிக்க வேண்டும் என்று தனது அக்கா கணவரிடம் ஆலோசனைக் கேட்க, அதற்கு அவர் சந்தானத்தின் முகவரியைக் கொடுத்து ஹன்சிகாவை அடைவதற்காக தேவையான அனைத்து உதவிகளை செய்வார் என்று அனுப்பி வைக்கிறார்.
சந்தானத்தை சந்திக்கும் சித்தார்த், தனது நிலைமையை சொல்லி புலம்புகிறார். இதற்கு சந்தானம் பணம் வாங்கிக் கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
இதிலிருந்து இவர்கள் இருவரும் செய்யும் கலாட்டாக்களால் திரையரங்குக்குள் சிரிப்பொலி அதிர்கிறது.
ஒரு கட்டத்தில் சித்தார்த்துக்கு சந்தானம் கொடுக்கும் ஐடியா, கணேஷ்- ஹன்சிகா இருவரும் காதலிப்பதற்கு காரணமாகிறது.
இதனால் விரக்தியடைந்த சித்தார்த் தற்கொலை முயற்சிக்குச் செல்கிறார். மீண்டும் சந்தானம் அறிவுரை வழங்கவே கணேஷ்- ஹன்சிகா காதல் முறிகிறது.
இந்த சூழலில் சந்தானத்தின் தந்திரமான ஆலோசனையால் ஹன்சிகா, சித்தார்த் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர்.
இருவரையும் சந்தானம் ஒன்றாக சேர்த்து பார்த்தவுடன் மனமுடைந்து காதலை பிரிக்க திட்டமிடுகிறார்.
இருவரையும் சந்தானம் ஏன் பிரிக்க நினைக்கிறார்?. இவர் சதியில் இருந்து சித்தார்த்- ஹன்சிகா காதல் மீண்டதா? என்பது மீதிக்கதை.
கதாநாயகன் சித்தார்த், முதலில் சாதுவாக தோன்றி பின்னர் சந்தானத்துடன் இணைந்தவுடன் பாவப்பட்ட முகத்துடன் அடிக்கும் லூட்டிகள் திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.
ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் சிக்கென்றும் தோன்றுகிறார். கணேஷின் காதலை ஏற்றுக்கொண்டு பிறகு அதை பிரேக்அப் செய்வது போன்ற காட்சிகள் சிறப்பு. அவரது கன்னக்குழியில் ரசிகர்களை விழச்செய்திருக்கிறார்.
மோக்கியாவாக வரும் சந்தானம் தான் கூறும் ஒவ்வொரு கருத்துக்களையும் லோக்கல் ஏரியா லாங்குவேஜை சொல்லி விளக்குவது திரையரங்கை அதிரவைக்கிறது.
''நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ள நாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது'' என்பது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் எண்ணில் அடங்காதவை.
"ஆர்யாவுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு காதல் டிப்ஸ் தந்தவன் நான்" என்பதில் தொடங்கி சித்தார்த்தின் காதலுக்கு அவரது அக்கா-தங்கை, அத்தான்கள் என்று அனைவரும் உதவுவதை பார்த்து, "இது குடும்பம் அல்ல விக்ரமன் படம் " என்று கமெண்ட் அடிப்பது வரை சந்தானத்தின் ‌ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கே சிரிப்பில் அதிர்கிறது.
ஹன்சிகாவை காதலிப்பவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் மொட்டை பாஸ்கி, எப்.எம். பாலாஜி, விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி உள்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.
படம் முழுக்க சந்தானத்தை பயன்படுத்தி திறன்பட காட்சிகளை அமைத்து படத்தில் தொய்வில்லாம் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். இதற்காக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபிஅபர்நாத்தின ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி.
'தீயா வேலை செய்யனும் குமாரு' - 'திரையரங்கமே அதிருது பாரு'
நன்றி விடுப்பு

No comments: