இலங்கைச் செய்திகள்

.
நெடுந்தீவில் மாணவி படுகொலை; அரசியல் பிரமுகர் கைது : மக்கள் ஆர்ப்பாட்டம்!


யாழ்ப்பாணத்தில் பாலியல் ரீதியாக சிறுவர்கள் துஷ்பிரயோகம் அதிகரிப்பு


'பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்' : மகளிர் தின சிறப்புக் கட்டுரை


தமிழ்க் கூட்டமைப்பினை பிளவுபடுத்தி உறுப்பினர்களை உள்வாங்க அரசு முயற்சி

நெடுந்தீவில் பாடசாலை மாணவி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் அரசியல் பிரமுகர் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுந்தீவில் பருவமடையாத மேற்படி பாடசாலை மாணவியைக் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


நெடுந்தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யேசுதாஸன் லக்சிகா (வயது 12 ) என்ற மாணவியின் படுகொலையின் பிரதான சந்தேக நபரே இவராவார்.

இவர் ஏற்கனவே துப்பாக்கி முனையில் இரண்டு பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இந்நபரை விடுவிக்காது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி நெடுந்தீவு மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து நெடுந்தீவில் நேற்று பதற்ற நிலை காணப்பட்டது.
நன்றி வீரகேசரி


யாழ்ப்பாணத்தில் பாலியல் ரீதியாக சிறுவர்கள் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
Tuesday, 06 March 2012

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாக சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 65 பேரும், வவுனியாவில் 39 பேரும், முல்லைத்தீவில் 32 பேரும், கிளிநொச்சியில் 28 பேரும், மன்னாரில் 15 பேரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உடல் ரீதியான துஷ்பிரயோகம் வவுனியாவில் அதிகம் பதிவாகியுள்ளது.


வவுனியாவில் 45 பேரும், முல்லைத்தீவில் 32 பேரும், யாழ்ப்பாணத்தில் 12 பேரும், மன்னாரில் 11 பேரும், கிளிநொச்சியில் 2 பேரும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இளவயது திருமணங்கள் யாழ்ப்பாணத்தில் 14 நடைபெற்றுள்ளன.

முல்லைத்தீவில் 18 பேரும், மன்னாரில் 8 பேரும், கிளிநொச்சியில் 4 பேரும்,. வவுனியாவில் ஒருவருமாக வட மாகாணத்தில் 45 இளவயதுத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றுடன் குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட 15 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்ப்பாணத்தில் 13 பேரும், மன்னாரில் 2 பேருமென அறியப்பட்டுள்ளதாக சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.


நன்றி தினக்குரல்


'பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்' : மகளிர் தின சிறப்புக் கட்டுரை

இன்று 101 ஆவது சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

1911 ஆம் ஆண்டு, முதன் முதலாக ஜெர்மனியில் மார்ச் 19 அன்று நூற்றுக் கணக்கான உழைக்கும் மகளிர், ஆடவருக்கு இணையான ஊதியம் கோரி வீதியில் இறங்கி நடத்திய போராட்டத்தின் விளைவே மகளிர் தினம் உதயமாகக் காரணமானது. 1977ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச்சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.

இவ்வருடம் 'கிராமியப் பெண்களை வலுவூட்டல் - பட்டினி, வறுமை ஒழிப்பு' என்பதை தொனிப்பொருளாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இன்று சகல துறைகளிலும் ஆணுக்கு நிகராக மகளிர் கோலோச்சுவதைக் காண்கின்றோம். வீட்டினுள் பெண்களைப் பூட்டி வைத்த காலம் இன்று மலையேறி விட்டது. ஏட்டுக் கல்வியுடன் நின்று விடாது அதன் மூலம் சிறந்த நல் தொழில் துறைகளில் தம்மை ஈடுபடுத்தி வெற்றி வாகை சூட மகளிர் முனைப்புக் காட்டுகின்றனர்.

மேலும் பெண்கள் தமது ஆளுமையை வளர்த்து முடிவெடுக்கும் தன்மை கொண்டோராகவும் மிளிர்கின்றனர். தரை, கடல், ஆகாயம் என துறைசார் ரீதியாக அதீத வளர்ச்சி பெற்றோராகவும் உலகின் சில நாடுகளது ஆட்சியாளர்களாகவும் விளங்குகின்றனர்.

இதேவேளை பால்நிலைச் சமத்துவம் பற்றியும் இங்கு நோக்குதல் தகும். அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர். இலங்கையைப் பொறுத்த வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சொல்லுந்தரமன்று. அண்மையில் நெடுந்தீவில் இடம்பெற்ற பாடசாலைச் சிறுமி லக்ஷினி மீதான வல்லுறவுப் படுகொலை வக்கிர உணர்வு கொண்ட மனிதர்(?)களும் வாழும் உலகில் மனித உரிமை பற்றிப் பேச வேண்டிய நிலையில் மகளிர் உரிமை பற்றிப் பேச முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

பெண்களைக் கொடுமைப்படுத்துவோருக்குக் கடூழிய சிறைத்தண்டனை வழங்கும் சட்டவிதியைக் கொண்டுவரவுள்ளதாக எமது நாட்டின் பெண்கள்,சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போரின் பின்னரான வாழ்க்கைச் சூழலில் வட,கிழக்கில் வாழும் பெண்கள் தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த தினந்தோறும் ஒரு போராட்டமே நடத்துகின்றனர்.

போர் மற்றும் இதர காரணிகளால் இலங்கையில் 5,03684 விதவைகள் வாழ்வதாகக் கணக்கெடுப்பு கூறுகின்றது. தமது ஜீவனோபாயத்துக்காக கோழி, ஆடு வளர்ப்பு, தையல் தொழில், கயிறு திரித்தல், கைப்பணிப் பொருள் தயாரித்தல் போன்ற சுயதொழில்களில் ஈடுபட்டு பொருளாதார மீட்சிக்கும் இவர்கள் பாடுபடுகின்றனர். இத்தகைய விதவைகளுக்கு உதவி செய்திடும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் போற்றுதற்குரியவர்கள்.

மலையக யுவதிகளில் பலர் பொருளாதார நலன் கருதி தலைநகருக்கும் வெளிநாடுகளுக்கும் படையெடுக்கின்றனர். தலைநகரில் ஆடைத் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரிகின்றனர்.

சமீப காலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாகச் சென்று உயிரிழந்தவர்களும் பாலியல் ரீதியான கொடுமைகட்கு உள்ளாகியவர்களும் கிராமப் புறங்களிலிருந்து சென்ற பெண்களாகவே உள்ளனர். இவர்களால் இவர்களைச் சார்ந்து வாழ்ந்த குடும்பங்கள் பணத்தையும் உறவையும் இழந்து வேதனையுடன் காலம் கடத்துகின்றன. வறுமையில் வாடும் கிராமியப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற சமூகத் தொண்டு நிறுவனங்கள் முன்வரல் வேண்டும்.

மேலும் பெண்களை போகப் பொருளாகக் காட்டி பணமீட்டும் தொழில்துறையாக தென்னிந்திய சினிமா மாறி விட்டது. ஆடைக் குறைப்பு, கவர்ச்சி உடை என சினிமாப் பாடல் காட்சிகள், பாலியல் உணர்வைத் தூண்டி பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் புரியக் காரணமாகின்றன. இவ்வாறான காட்சிகளைத் தடைசெய்ய சட்ட விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கிராமப் புறப்பெண்களுக்கு தொழில் நிறுவனங்களில் தொழில் பாதுகாப்பும் வறுமையில் உழலும் பெண்களுக்கு சுய தொழில் ஊக்குவிப்பு, வங்கிக் கடன் வழங்கிட சம்பந்தப்பட்டோர் ஆவன செய்தால்தான் இத்தினத்தின் நோக்கம் அர்த்தமுள்ளதாகும்.

தமிழகத்தில் ஒரு வங்கி அதிகாரி கிராமமொன்றில் வீடு வீடாகச் சென்று துணையின்றி வாழும் பெண்களுக்கு வங்கிக் கடன் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய வீடியோ காட்சியை அண்மையில் பார்க்க நேர்ந்தது. இவ்வாறான நிலை அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய தினத்தின் தொனிப்பொருளுக்கு ஒப்ப கிராமியப் பெண்களை வலுவூட்டி வறுமையை ஒழிக்க கை கொடுக்கும் கைகளாக மாற நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுவோம்.
கி.லக்ஷ்மன் சிசில்
வீரகேசரி


தமிழ்க் கூட்டமைப்பினை பிளவுபடுத்தி உறுப்பினர்களை உள்வாங்க அரசு முயற்சி
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப்பினர்களை உள்வாங்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருகின்றது. இந்த நிலையானது அரசியலுக்கு சாதகமாக அமைந்தாலும் நாட்டிற்கு பேராபத்தாகவே அமையும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். ஜெனீவா சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தவறான வியூகங்களை வகுத்து வருகின்றது. இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள கூட்டமைப்பினரின் உதவியை நாட நினைப்பது கோழியை பாதுகாக்க நரியிடம் கொடுத்ததைப் போன்ற விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர தொடர்ந்தும் கூறுகையில்: ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கடுமையாக செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் முக்கிய காரணமாகும். தனி நாட்டுக் கொள்கையை அரசியல் ரீதியாக மேற்குலக சக்திகளின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள சம்பந்தன் குழு செயற்படுகின்றது. இந்த நிலையில் தற்போது அரசாங்கம் கூட்டமைப்பினரை இணைத்துக்கொண்டு ஜெனீவா பிரச்சினையை சமாளிக்க முடியும் என்று அரசு தவறான சிந்தனையில் செயற்படுகின்றது. இதற்காக கூட்டமைப்பின் உறுப்பினர்களை எவ்வாறேனும் உள்வாங்க வேண்டும் என்ற போக்குடன் அரசாங்கம் செயற்படுகின்றது. இது நாட்டிற்கு ஒவ்வாத விடயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டிற்கு நன்மைகளை பெற்றக் கொடுக்கும் என்று நம்ப முடியாது. ஏனெனில், நாட்டிற்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை மேற்கொள்ள மேற்குலக நாடுகள் முயற்சிக்கையில் இதற்கு மேலும் துணை போகும் நிலையில் கூட்டமைப்பு 47 நாடுகளுக்கு இலங்கைக்கு எதிராக செயற்படுமாறு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்தும் நாட்டிற்கு எதிராக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசுடன் இணைத்துக்கொண்டு நாட்டை பாதுகாக்க முயற்சிப்பது முட்டாள்தனமாகும் என்றார்.


No comments: