துர்க்கை அம்மன் கோயிலில் புனித தீர்த்தத் திருவிழா!


 

 .                        
துர்க்கை அம்மன் கோயிலில் நடந்தேறிய மாசி மகம் புனித தீர்த்தத் திருவிழா!

                      வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி.

சோதிடப்படி 11 ஆம் இராசியாகிய கும்பராசியில் சூரியபகவான் சஞ்சாரஞ்செய்யும் மாதம் மாசிமாதம். இந்த மாதத்தில் கும்பராசியின் எதிர் இராசியாகிய சிங்கராசியில் (சூரியனுடைய வீட்டில்) சந்திரன் சஞ்சாரஞ்செய்யும் நட்சத்திரங்கள் மகம் பூரம் உத்திரம்(முற்பகுதி); ஆவனவாகும். சந்திரனைவைத்துச் சூரியன் திருஸ்டிக்கும் காலம் பூரணை நாள்களாகக் கருதப்படுகின்றன.
இதில் பிரதானமாக மகம் நட்சத்திரம் என்பது துர்க்கைக்கு உரிய சிறந்த நட்சத்திரமாகக் கருதப்படுவதால் மாசி மகம் உலகிலுள்ள எல்லா அம்மன்கோயில்களிலும் முக்கியமாகத் துர்க்கையம்மன் கோயில்களிலும் விசேட தீர்த்தத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
சிட்;னி – “றீஜன் பார்க்”கில் எழுந்தருளியிருக்கும் சிறீ துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவம் சென்ற மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை மிகவுஞ் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்ததை எல்லோரும் அறிவீர்கள். மார்ச் மாதம் 7ஆம் திகதி புதன்கிழமை மாசி மகம் புனித தீர்த்தத் திருவிழா அம்மன் திருவருளால் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.






மாசிமகத் தீர்த்தத்தன்று காலையிலிருந்து கோயில் என்றுமில்லாத அளவிற்குக் களைகட்டத் தொடங்கியதைக் காலை பத்;து மணியளவில் கோயில் வளாகத்துள்ளே
அடியெடுத்துவைக்கும் அடியார்கள் அறியக் கூடியதாக இருந்தது. கோயில் வாளாகத்தில் நாட்டப்பட்டிருந்த வாழைகளும் தொங்க விடப் பட்டிருந்த மலர்ச் சரங்களும்  வரவேற்றன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த செயற்கைத் தண்ணீர்த் தொட்டி புனித தீர்த்தத்திற்குத் தயார் நிலையில் காணப்பட்டது. அம்மனின் அருளாற்றலைப் பிரதிபலிக்கும் மெல்லிசைப் பாடல்கள் காற்றோடு கலந்துவந்து செவிக்கின்பம் அளித்துக்கொண்டிருந்தது.
அடியார்களைத் துர்க்கை அம்மன் எவ்வளவு தூரம் ஈர்த்துள்ளாள் என்பதை கோயிலில் நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் எடுத்துக்காட்டியது. ஏல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிப் பிரவாகம்! மலேசிய தவில் சக்கரவர்த்தி – மலேசிய கலைமாமணி ரீ. ஏ. கருணாகரன் (மலேசியா கண்ணன்) மு. செந்தில் முருகன் அவர்களுடன் உள்ளுர்க் கலைஞர்களான நாதஸ்வர இசைமணி திரு ராகவன் தவில் நாதமணி திரு ரூபதாஸ் நாதஸ்வர வித்துவான் திவாகரன் சிட்னி தவில் மேதை திரு வைத்தீஸ்வரன் ஆகியோரின் மங்கள இசையுடன் துர்க்கை அம்மனுக்கு பூசை ஆரம்பமாகியது. தனக்கேயுரிய தனித்துவமான முறையில் சிவத்திரு செந்தில் சாம்பசிவக் குருக்கள்  அவர்கள் மந்திரங்களை மிகவும் சுத்தமாக உச்சரித்தவண்ணம் “மும்மை மாமல மூடிய மூவுயிர் செம்மை எய்திச் சிவனடி சேர்த்திட இம்மை அம்மை எழுமையும் காத்தருள்” அம்மை துர்க்கைக்குச் செய்யப்பட்ட பூசையைத் தொடர்ந்து செந்தில் குமார் குருக்கள் அவர்கள் பஞ்சபுராணத்தைக் கணீரென்ற குரலில் அழகாகப் பாடியதும் பஞ்சாலார்த்தி காட்டப்பட்டது. சூலாயுத அமைப்பில் வண்ணநிறப் பூக்;களால் அலங்கரிக்கப்பெற்ற பின்சோடனை அழகைக் கூட்டிநிற்க மஞ்சள்நிறப் பட்டுடுத்தி ஒரு வலக்கையில்
சூலாயுதமும் மறு வலக்கரத்தில் சக்கரமும் இடக்கையொன்றில் சங்கும் தாங்கி மறு இடக்கையால் அடியாருக்கு வரதஞ்செய்ய அழகொழுகும் திருக்கோலத்தோடு தீர்த்தமாடப் புறப்பட்ட காட்சி எல்லோரையும் கவர்ந்தது. அம்பாளுக்குக் குருக்கள்மார்களின் கைவண்ணத்தில் அமைந்;த சாத்துப்படி மிகவும் பிரமாதமாக இருந்தது. அம்பாள் தீர்த்தத்தொட்டியை அடைந்ததும் அடியார்கள் ஓம் சத்தி ஓம் சத்தி எனப் பரவச ஒலி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். சில கிரிகைகளுக்குப் பின்னர் சூலாயுதத்திற்கு அபிடேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து செந்தில்குமார் குருக்கள் சூலாயுதத்துடன் தீர்த்தத் தொட்டிக்குள் இறங்கி மூன்றுமுறை வலம் வந்து புனித நீரில் சூலாயுதத்தை நீராட்டினார். பத்;திப் பரவசத்தில் அடியார்களின் கண்கள் பனித்தனவெனலாம். அடியார்களுக்குச் சிலர் தீர்த்தமாடிய புனித நீரை அள்ளி அள்ளித் தெளிப்பதில் மகிழ்ச்சி கண்டனர்.  கோயிலைச்சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலுக்குள்ளே முறையாக அம்மனுக்கு அபிடேகம் செய்யப்பட்டது. மறுபடியும் நன்று அணியப்பெற்ற சாத்துப்படி கண்களைக் கவர்ந்தது. பின்னர் நிகழ்த்தப்பட்ட பூசையைத் தொடர்ந்து திருமதி கனகாம்பிகை ஜெகநாதன் அவர்கள் பத்திததும்பப் பஞ்சபுராணத்தை ஓதியதும் பூசை நிறைவுற்றது.

சிவத்திரு செந்தில் சாம்பசிவக் குருக்கள் அவர்கள் ஆசியுரைவழங்கும்பொழுதும் ஆலய தர்மகர்த்தா திரு மகேந்திரன் அவர்கள் சிற்றுரை ஆற்றும்பொழுதும் கோயில் வளர்ச்சிக்கு அடியார்களின் ஒற்றுமையான பங்களிப்பின் அவசியத்தை விரிவாக விளக்கினார்கள். அத்துடன் விக்கிரகங்கள் -மண்டபத்தூண்கள் ஆகியவற்றிற்கு உபயதாரராக
( Sponsors) முன்வந்து நிதியுதவியை அளித்து விரைவிலே அம்மனுக்கு ஓர் பிரமாண்டமான கோயிலைப் பூர்;த்தி செய்யும்பணிக்கு உதவுமாறு அன்புக் கோரிக்கை விடுத்தனர்.   திருநீறு தீர்த்தம் சந்தனகுங்கும பிரசாதம் வழங்கியதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. T S S Money Transfer  நிறுவனத்தினால் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அம்மனின் அடியார்கள் சிறந்த ஒரு தீர்த்தத் திருவிழாவைக் கண்குளிரக் கண்ட நிறைந்த மனதுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.
இந்த நிகழ்வை ஒஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி அஞசல் செய்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

தீர்த்த உற்சவத்தின் தார்ப்பரியம்

இறைவன் உயிர்களுக்கு அருளும்வண்ணம் இயற்றும்
ஐந்தொழில்களின் பாவனைகளாகக் கருதப்படும் திருவிழாக்கள் சைவக் கோயில்களில் தொன்று தொட்டுக் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன அல்லவா? கோயில்களுக்குச் சிறப்பைத் தரும் இத்திருவிழாக்கள் அடியார்களின் அகத்தூய்மையையும் புறத் தூய்மையையும் வளர்த்து இறையுணர்வை ஊட்டுகின்றன. உத்தமமான  யாகம் எனப் பொருள்படும் மகோற்சவத்தில் கொடியேற்றமும் அதற்கு முன்னுள்ள கிரிகைகளும் இறைவனின் படைத்தல் தொழிலைப் பாவனையாகக் காட்டுகின்றன. இதை அடுத்துவரும் திருவிழாக்கள் காத்தலையும் தேர்த்திருவிழா அழித்தலையும் சூர்ணோச்சவம் மறைத்தலையும்; தீர்த்தோற்சவம் அருளலையும் குறிப்பனவாகும்.
“மன்னுயிர்கள் பேரின்ப வாரிதியிற் படிதலெனப்
பன்னுமொரு பாவனையாம் பத்தாநாள் விழாவன்றே
- ……………………………”
இவ்வாறு தீர்த்தத் திருவிழாவை  ‘நிலைபெற்ற உயிர்கள் பேரின்பப் பெருங்கடலில் மூழ்குதல் என்று சொல்லப்படும் ஒரு பாவனையேயாம்’ என்று ஈழத்துச் சிதம்பரபுராணத்தில்  புலவர்மணி இளமுருகனார் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூருகிறேன். மேலும் திருவிழாக்கள் சாம்பவி தீக்கை எனப்பட்டு வழிபடுவோருக்கு மலநீக்கத்தையும் திருவடிப் பேற்றையும் நல்குமென்று ஆகமங்கள் கூறுகின்றன. எனவே மானிடப் பிறவியின் பயனை அடையத் துணைசெய்யும் திருவிழாக்களின் தத்துவங்களை அறிந்து நல்வழியில் நடப்போமாக!. இளைய சந்ததியினருக்குத் திருவிழாக்களின் தத்துவங்களைத் தெரியப்படுத்துவதுடன் அவர்களை இறை பணியிலும் இறை வழிபாட்டிலும் ஈடுபடச் செய்வதும் சைவப் பெரியோர்களினதும் பெற்றோரினதும் தலையாய கடமை அன்றோ?.




No comments: