.
காற்றசைத்துப் பார்க்கும் காலம்
பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில்
துளித் துளியாய் திணறும்
ஓவியம் தீட்டும்
தூரத்து மின்னல்
ஆகாயம் கிழித்துக் குமுறிட
அதிவேக விலங்கொன்றென
மழை கொட்டும் பொழுதொன்றில்
வனாந்தரங்களைத் திசைமாற்றவென
எத்தனிக்கும் அதே காற்று
செட்டைகளைத் தூக்கி நகரும்
வண்ணத்துப் பூச்சிக்கு
ஏரி முழுவதும் குடித்திடும் தாகம்
சோம்பலில் கிடத்தியிருக்கும்
உடலுக்குள் உணர்த்தப்படும்
தூரத்து ரயிலினோசை
மழை, காற்று, குளிர்
விழிகள் கிறங்கியே கிடக்கும்
பணி நாள் காலை
கடிகாரத்திலிருந்து உதிர்கின்றன
காலத்தின் குறியீடுகள்
துளித் துளியாய்
- எம்.ரிஷான் ஷெரீப்
2 comments:
Very Good
Nalla kavithai Sorry I don't know how to write in tamil
Post a Comment