இலங்கைச் செய்திகள்

.
கனேடிய தமிழ் கணவர் “வெள்ளைவேனில்” மனைவியை கடத்திச் சென்று கொலை

நேற்று யாழில் தாய் மற்றும் 15வயது சிறுவன் ஒருவனையும் வெள்ளை வேனில் கடத்திச் சென்ற சம்பவம், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கடத்தி செல்லப்பட்ட 24 மணித்தியாலத்தினுள் யாழ். தலைமையத்தை சேர்ந்த படைவீரர்களால் சிறுவன் காப்பாற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரனைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்யும் முயற்சியில் படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-




கொலையாளியாக சந்தேகப்படும் கனடா பிரஜா உரிமைப்பெற்ற செல்வதுறை குகதாஸ் என்பவர் தனது 15வயது மகனை கடத்திச் செல்லும் நோக்குடனும், தனது மனைவியை கொலை செய்யும் நோக்குடனும், மார்ச் மாதம் 1ஆவது வாரம் இலங்கையை வந்தடைந்த்தாக தெரியவந்துள்ளது. இதை மேற்கொள்ள ஒரு சில நாட்கள் கொழும்பில் தங்கியிருந்து திட்டம் தீட்டிய இவர், இதை மூடி மறைக்க, அடிக்கடி மக்களால் பேசப்படும் “வெள்ளை வேன் ஆட் கடத்தல்”” சம்பவத்தை பயன்னடுத்தவும் திட்ட மிட்டுள்ளார்.

இதற்காக கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் “வெள்ளை டொல்பின் வேன்””(253-3852) ஒன்றை இவர் பெற்றுள்ளார், பின்பு வவுனியாவில் இருந்து இரண்டு உதவியாளர்களை பெற்றுக் கொண்டு, ஞாயிற்றுக் கிழமை(மார் 6) குகதாஸ் சாந்தினி(மனைவி) வயது 37, மற்றும் குகதாஸ் ரூபன்(மகன்) வயது 15, ஆகிய இருவரும் வசிக்கும் மீசாலையை வந்தடைந்துள்ளனர்.

இது வரை கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் செல்வதுறை வெளிநாட்டுக்கு சென்ற காலம் தொட்டு சாந்தினி அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இச் சந்தேக நபர்கள் மீசாலை கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, கொலை செய்யப்பட்ட சாந்தினியின் மாமாவின் வீட்டை வந்தடைந்து, பலாத்காரமாக சாந்தினியையும், அவரது மகனையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் நிகழ்ந்து ஒரு சில நிமிடங்களில், விடுதலைப்புலி ஆதரவாளர்கள் “வெள்ளை வேனில் ஆட் கடத்தல்”” இடம்பெற்றுள்ளது என்று வதந்தியை பரப்பத் தொடங்கினர்.

இதையறிந்த யாழ் தலைமையக படையினரும், 52ஆவது புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இச் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

செல்வத்துறை கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, சாவகச்சேரி பகுதியில் புதர்கள் நிறைந்த பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்று,மகனை இருவர் வேனிள் வைத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன், சாந்தினியை வேனை விட்டு வெளியே இழுத்துச் சென்று சைக்கிள் சைனால் சாகும் வரை அடித்துள்ளார்.

சாந்தினியை கொலைசெய்யும் வரை, ஏனைய இரு உதவியாளர்களும் ரூபனை மிரட்டி வைத்திருந்தனர். இக் கொலையாளிகள், பின்பு யாழ் கச்சேரி பகுதியில் ரூபனை விடுவித்துள்ளனர்.

செல்வதுறையை கைதுசெய்த பாதுகாப்பு படையினர், அடுத்த மணித்தியாலத்தில் 15 வயது சிறுவனை காப்பாற்றியதுடன், இவ் வேனின் சாரதி, ராஜா எனவும் அடையாளம் கண்டனர்.

தமது சொந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இராணுவத்தின் பெயரை பயன்படுத்தி “வெள்ளை வேனில் ஆட்கடத்தல்” என்ற ஒரு கற்பனை நாமத்தை சூட்டும் தந்துரோபாயத்தை சிலர் அடிக்கடி மேறகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி.விடிவு



சிறிதரன் எம்பி மீது கைக்குண்டு தாக்குதல் _


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்பி மீது கைக்குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிதரன் எம்பி எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

நொச்சிகாமம் பகுதியில் வைத்து  7ம் திகதி பகல் 12.15 மணியளவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. எவ்விதம் உயிர் சேதமும் ஏற்படாத போதும் வாகனம் கடும் சேதத்திற்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நொச்சிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி இணையம்


"தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அரசியல் தீர்வு குறித்தே அரசுடன் பேச்சுவார்த்தை'

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் உட்பட நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பாகவுமே அரசுடனான பேச்சுகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் இந்தத் தேர்தல் அறிக்கை 6ம் திகதி  கல்முனையில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

கல்முனை வை.எம்.சீ. ஏ. மண்டபத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றதுடன், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு வைத்தார்.

இந்தத் தேர்தல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் 2010 ஏப்ரல் திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிந்து ஓராண்டு நிறைவுக்குள் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், எம்மக்கள் பேரவலவாழ்வை ஒருகணம் எண்ணிப்பார்ப்போம்.

தமிழ் மக்களின் பேரவல வாழ்வு:


குறிப்பாக வடக்கு,கிழக்கில் வாழ்ந்த மக்கள் கடல்கோள் பேரலைக்குள் மூழ்கி அந்த அழிவிலிருந்தும் பேரவலத்திலிருந்தும் ஐந்து ஆண்டுகளாகியும் மீட்சி கொள்ளவில்லை. போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்த பொழுதிலும் தமிழ்ப் பிரதேச மக்கள் அந்தப் பேரவலத்திலிருந்து 22 மாதங்கள் கடந்த பின்னும் மீளமுடியவில்லை. தங்கள் வாழ்விடங்களில் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படவில்லை. வாழ்வாதாரங்களைத் தானும் மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை.

போர் முடிந்துவிட்டதென்ற செய்தியைவிட அந்த முடிவின் விளைவுகள் பாரதூரமானவையாகவுள்ளன. அதன் விளைவுகள் வரலாற்று ரீதியான பாரம்பரியமிக்க தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளங்களையும் அத்திபாரத்தையும் அழித்தும் தகர்த்தும் வருகின்றன. இரண்டாவது உலகப்போர் முடிவடைந்ததும் ஜப்பான் நகரங்களான ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகளின் விளைவுகள் இன்றுவரை மனித குலத்தின் கருவறை வரை பாதிப்பை ஏற்படுத்தி வருவதைப்போன்று இலங்கையில் வன்னிப்போரின் முடிவுகள் தமிழ் மானுடத்தையும் அதன் ஆன்மத்தையும் பாதித்து வருகின்றமையை நாம் அனுபவித்து வருகின்றோம். அரை நூற்றாண்டுக்கும் மேலான பேரினவாத சித்தாந்தம் பரிணாமத்தினாலும் விரிவாக்கப்பட்ட அதன் அடிப்படையிலான ஆட்சி அதிகார இராணுவ நிர்மாணத்தினாலும் தமிழ்மொழி,கலை,பண்பாடு மற்றும் வாழ்விடங்கள் சிதைக்கப்படுகின்றன. பெரும்பான்மைத்துவச் செறிவைக் கொண்ட தமிழ் மக்களின் கட்டமைப்பையும் குடிமக்கள் பரம்பலையும் மாற்றியமைக்கும் சிறுபான்மைப்படுத்தும் விதத்தில் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இராணுவப் பாதுகாப்புடன் இராணுவக் குடியிருப்புகளும் எங்கும் எதிலும் இராணுவத் தலையீடும் அரச நிறுவனங்களின் நிர்வாகம் இராணுவமயப்படுத்தப்படுதலும் சிங்களக் குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும் புத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்தமயமாக்கலும் பொருளாதாரச் சுரண்டல்களும் சூறையாடல்களும் தாராளமாகவே தமிழ்பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடப்பாடு


இவற்றிலிருந்து தனித்துவமிக்க தமிழ்த் தேசிய இனமும் அதன் மொழி இன அடையாளங்களும் கலை,பண்பாடு உள்ளிட்ட வாழ்விடங்களும் அதன் அரசியல் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசரமும் அவசியமும் தமிழ்ப் பிரதேச மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கான மீள் எழுச்சித் திட்டங்களுக்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு ஜனநாயக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றித் தமிழ்த் தேசிய இனத்தின் விடிவுக்கும் விடுதலைக்கும் தன்னாட்சிக்குமான இலக்குடன் எம் மக்கள் மத்தியில் வேலை செய்யவும் முன்னெடுக்கவும் வேண்டியுள்ளோம்.

மக்களின் தெளிவான தேர்வும் எமது நன்றியும்
இதன் அடிப்படையிலும் எதிர்நோக்கிலும் 2010 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கான எமது தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டது. மனிதாபிமானம், மனித உரிமைகள்,ஜனநாயக விழுமியங்கள்,சுயநிர்ணய உரிமைத்தத்துவம் உட்பட அடிப்படை அரசியல் உரிமைகள் மீறப்பட்டிருந்த நிலைமைகளிலும் ஜனநாயக ஒளிக்கீறு தென்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மக்கள் முன் எம்மை ஒப்படைத்துள்ளோம். மக்களுக்காக எம்மை அர்ப்பணித்திருக்கின்றோம். மக்களுக்கான அடிப்படை அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தும் போராடியும் உள்ளோம்.

இவ்வாறு ஜனநாயக ஒளிக்கீறு தென்பட்ட 2010 பொதுத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்குப் பெரும்பான்மையுடன் வாக்களித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்தமைக்காக நாம் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்பொதுத் தேர்தல் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை ஏற்று அளித்த தீர்க்கமான தீர்ப்பானது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்களின் பற்று உறுதிமிக்க கொள்கைத் திட்டத்தையும் இலட்சியப் பற்றையும் அதனை நிறைவேற்றும் திடசங்கற்பத்தையும் தெட்டத் தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தன. இதனை இந்தியா உள்ளிட்ட சர்வதேச அரசுத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களும் நேரடியாக வரவேற்றன.

மேலும், குறிப்பாகக் கிழக்குப் பிரதேசத் தமிழ் மக்கள் சென்ற பொதுத் தேர்தலில் (2010) தெளிவான, தீர்க்கமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். அரசு தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிக்கும் நடவடிக்கையை எடுத்திருந்த பொழுதும் நாம் ஒரே தாய் மக்கள்,ஒரே தமிழர் தாயக மக்கள்,நாம் இதயபூர்வமாய் உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஒன்றுபட்டு நிற்கிறோம் எனும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இவற்றுக்காக எம் மக்கள் மீதான விசுவாசமும் நன்றியும் எம் நெஞ்சமெல்லாம் பூரித்து நிற்கின்றது.

இதன்பால் தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தையும் தனித்துவத்தையும் மக்களிடமே உரித்தாயுள்ள இறைமையையும் சுயநிர்ணய உரிமைத்தத்துவத்தையும் வாழ்வுரிமையையும் பேணிப் பாதுகாக்கும் உரிமையும் பொறுப்பும் அனைத்து மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசத்தில் அவர் தம் வாழ்விடத்தில் தம்மைத் தாமே ஆளும் அடிப்படை உரிமையைப் பிரயோகித்து தன்னாட்சியை நிறுவவும் நிலை நாட்டவும் பாதுகாக்கவும் தமிழ் மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதியான பற்றையும் கடப்பாட்டையும் திடசங்கற்பத்தையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்ததைப் போன்று இந்த உள்ளூர் ஆட்சி அதிகாரசபைத் தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். இது மக்களுக்கு உரித்தான ஜனநாயகக் கடமையாகும்.

இவ்வாறு ஜனநாயக விழுமியங்களுக்கூடாக மக்களை அணி திரட்டுவதும் அடிமட்டத்திலிருந்தும் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதும் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் கொள்கை மற்றும் தீர்மானங்களையும் வென்றெடுப்பதற்காக வேதான் இதன் பொருட்டு மனிதாபிமானப் பணிகளில் ஸ்ரீலங்கா அரசுடன் சுமுக உறவைப் பேணுவதுடன், தேசிய மற்றும் உள்ளூர் ஆட்சி அரசியல் மற்றும் அபிவிருத்தியில் இக்கால கட்டத்திலும் வெற்றிகரமாகச் செயற்பட முடியும் என்பதை உறுதிப்படுத்தும் தேர்தலாக இதனை நாம் நோக்குகின்றோம்.

அரசுடன் பேச்சு


இதன் காரணங்களில் இன்று பலமிக்க முழுநிர்வாக அதிகாரத்தையும் பாராளுமன்றப் பெரும்பான்மைத்துவமிக்க பலத்தையும் கொண்ட ஜனாதிபதியும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தையைத் தொடக்கியுள்ளமையை அறிவீர்கள். அப்பேச்சுவார்த்தையில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் எனும் பெயரிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் மீட்கப்படுதல், வலி.வடக்கு,சம்பூர் உள்ளிட்ட பிரதேசங்களிலும் வன்னியிலும் கிழக்கிலும் தங்கள் சொந்த நிலங்களில் மீளக்குடியேறுதல்,வாழ்வாதாரங்களின் மீள்கட்டுமானம், மீள்நிர்மாணம்,சரணடைந்தவர்கள்,காணாமல்போன இளைஞர்,யுவதிகள் மற்றும் நீண்டகாலம் நீதிமன்றக் காவலில் சிறைகளிலுள்ளோர் விடுதலை மற்றும் புனர்வாழ்வு.

நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு என்பன தொடர்பாகவே பேச்சுகள் இடம்பெறுகின்றன.

இதன் பொருட்டு தமிழ் மக்களினதும் தமிழ்,முஸ்லிம் மக்களின் அரசியல் கட்சிகளுடனும் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வொன்றுக்கான ஒன்றுபட்ட அடிப்படைக் கொள்கைத் திட்டமொன்று உருவாக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதையும் அறிவீர்கள். 13 ஆவது அரசியல் திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவோ, அடிப்படையாகவோ அமைய முடியாது. அதற்கப்பால் சென்று அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிப்பின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றினைக் குறித்த ஒரு காலகட்டத்தினுள் எட்டவும் அதனை நடைமுறைப்படுத்தவும் நாம் இடையறதா தீர்க்கமான தீர்மானத்தைக் கொண்டுள்ளோம். இந்த முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினதும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினதும் அனுசரணை உண்டு என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அரசுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சின் பொழுது,

1. உயர் பாதுகாப்பு வலயம்
2. மீள்குடியேற்றம்
3. சிறைகளிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்,யுவதிகள் தொடர்பில் அரசு எழுத்து மூலம் எமக்கு ஓரளவு சாதகமான பதிலைத் தந்துள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசை வற்புறுத்தி வருகின்றோம். நாம் எடுத்து வரும் ஈடுபட்டு வரும் இந்த முயற்சிகளுக்கு எம் தமிழ் மக்கள் பூரணமான ஒன்றுபட்ட ஆதரவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இவ் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலிலும் ஆதரவு வழங்க வேண்டும் எனத் தங்கள் பாதம் தொட்டு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தரகு அரசியல் முகமும் தமிழர் பிரதிநிதிகள் புறக்கணிப்பும்


எம் தமிழ் மக்கள் சென்ற பொதுத் தேர்தலில் தெளிவான, தீர்க்கமான ஒரு தீர்ப்பை வழங்கிய பொழுதிலும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக அரசாங்கத்தின் இன்னொரு முகம் தரகர்களையும் அமைச்சர்களையும் தமிழ்ப் பிரதேசத்தில் நியமித்து தமிழ் மக்களிடையே அபிவிருத்தியென்ற போர்வையில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதையும் அறிவீர்கள். முகாம்களிலிருந்த எம் மக்களைப் பார்வையிட்ட கூட ஓராண்டுக்கும் மேலாக அரசு எம்மை அனுமதிக்கவில்லை என்பதையும் அறிவீர்கள். அந்த அகதி மக்களை மீள்குடியேற்றம் என்று காடுகளுக்குள் கொண்டு போய்விட்ட பொழுதுதான் அந்த மக்களைப் பார்க்க முடிந்தது. எம் மக்கள் கண்ணீரைத் துடைக்கவும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் இராஜதந்திரிகளிடம் புலம்பெயர்ந்த மக்களிடமும் மனிதாபிமான உதவிகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைத்துவம் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து பேச்சு நடத்தியது. அவ்வாறு கிடைத்த மனிதாபிமான உதவிகளை மக்களுக்கு வழங்கும்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்கவும் தரகு அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அறிவீர்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டும் அதேவேளை,இத்தகைய தரகு அரசியலை எம் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றோம்.

ஜனநாயக விழுமியங்களைப் பேணும் பொறுப்பு


இத்தேர்தலின் மூலம் நீண்டகாலம் நடைமுறையற்றிருந்த ஜனநாயக விழுமியங்களை மீளப் பேணவும் உள்ளூர் அரசியல் தலைமைத்துவத்தை அத்திபாரத்திலிருந்து கட்டியெழுப்பவும் உள்ளூர் அபிவிருத்தி நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரசபை மூலம் முன்னெடுக்கவும் தேவையான அரசியல் ஜனநாயக அதிகாரத்தையும் உரிமையையும் எம்மக்கள் பெற முடியுமென அறுதியிட்டுக் கூறுகின்றோம்.

உள்ளூர் அதிகாரசபைகளுக்கு அதிகாரம்:
அடிமட்டத்திலுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைகள் கல்வி,சுகாதாரம்,தாய் சேய் நலப்பராமரிப்பு, வாழ்விழந்த பெண்கள் மேம்பாடு மற்றும் சட்டம்,ஒழுங்கு உள்ளிட்ட அதிகாரங்களும் மூலவளங்களின் பயன்பாடு உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களின் மீது திட்டமிடல், அபிவிருத்தி செய்தல்,வேலைவாய்ப்பு வழங்கல் என்பன மீது அதிகாரங்களும் நிதிமூலங்களும் ஒதுக்கீடுகளும் என்பன பற்றியும் எதிர்காலத்தில் சட்ட அதிகாரமுள்ள சபைகளாக உள்ளூர் அதிகாரசபைகள் வலுவடையவும் முயற்சிகள் எடுக்கப்படும்.

உள்ளூர் அதிகாரசபைகளுக்கு மேலும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு (உதாரணமாக இங்கிலாந்தின் கவுன்ரி கவுன்சில் முறை உள்ளிட்ட ஏனைய தேசங்களில் உள்ளவாறும்) நாம் நடவடிக்கையெடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றப் பிரதேசத்தினது தேவைகளையும் அபிவிருத்திப் பணிகளையும் இனங்கண்டு அவற்றை நிறைவேற்றும் வகையிலே ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்துக்கான நோக்கங்கள், இலக்குகள் என்பனவற்றை தனித்தனியாக வாக்காளப் பெருமங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். அதற்குத் தேவையான பொருத்தமான நிபுணத்துவத்தையும் திரட்டி வழங்கவும் எண்ணங்கொண்டுள்ளோம்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நாம் முன்னெடுத்து வரும் உரிமைக்குரலுக்கு உரம் சேர்க்கவு வலுச்சேர்ப்பதற்கும் இந்த நாட்டிலேயே எமது உள்ளூராட்சி மன்றங்கள் மீண்டும் முதன்மை நிலையைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்க வேண்டும்.

எனவே, தமிழ் மக்களின் இலட்சியச் சின்னம் வீட்டுக்கு நேரே புள்ளடியிட்டும் அத்துடன், தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு தங்கள் விருப்பு வாக்குகளை வழங்கியும் சகல உள்ளூராட்சி அதிகாரசபைகளிலும் எமது அணிகளை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களுக்கு உரித்தான ஒவ்வொரு வாக்கையும் தவறவிடாது. அதிகாலையிலே எழுந்து உரிய வாக்களிக்கும் நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதை தங்கள் உரிமையைக் கடமையை உறுதி செய்து வெற்றிபெறுமாறு இரு கரங்கூப்பி வேண்டி நிற்கின்றோம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி தினக்குரல்




No comments: