செல்வச்சந்நிதி முருகனைச் சந்தித்தேன்

.                                                                                                   கானா பிரபா 

அரிவரியில் சமயபாடத்தில் இருந்து என் க.பொ.த உயர்தரவகுப்பில் இந்து நாகரீகத்தை ஒரு பாடமாக எடுத்தது வரை செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் பற்றிப் படித்தும் கேள்விப்பட்டும், ஏன் எமது யாழ்ப்பாணத்து மண்ணில் இருந்தும் கூட என் வாழ்நாளில் சென்றிராத கோயில் இது. நான் இந்த ஆலயத்துக்கு இத்தனை ஆண்டுகாலமாகப் போகாததற்குக் காரணம் "ஷெல்"வச் சந்நிதியாக இருந்ததே ஆகும். இம்முறை என் தாயகப்பயணத்தில் கண்டிப்பாகச் செல்வச் சந்நிதியானைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். கூடவே செல்வச் சந்நிதி ஆலயத்தின் மகோற்சவ காலம் கூட இது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு ஓட்டோவைப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொள்கிறேன். இணுவிலில் இருந்து செல்வச் சந்நிதி ஆலயம் சென்று திரும்ப 1100 ரூபா என்கிறார் ஓட்டோ நண்பர்.




அந்த இனிய நாளும் வந்தது. காலை ஏழுமணிக்கு நம் பயணம் ஆரம்பமாகியது.
இணுவில் ஆஸ்பத்திரி எல்லாம் கடந்து, உரும்பிராய்ப் பக்கமாகச் செல்லும் வீதியால் போகின்றது ஓட்டோ. இரண்டு மருங்கிலும் தோட்டங்கள் தோட்டங்கள் தோட்டங்கள் தான். செம்பாட்டு மண்ணின் தலையில்.

பச்சை நிற தலையலங்கர ஸ்லேட்களைச் செருகியது போல பசுமை பூத்திருக்கின்றன தோட்டக் காணிகள். நடு நடுவே அந்தத் தோட்டக்காரர்கள் பாவிக்கும் பூச்சி மருந்துகள், பசளை வகைகளுக்கான விளம்பரங்களும் கூட சிறு பலகைகளில் நட்டு முளைத்திருக்கின்றன. நீர்வேலி கடந்து அச்சுவேலிப் பக்கமாகப் பயணிகிறது ஓட்டோ.
"தம்பி! அச்சுவேலிப் பெட்டையள் நல்ல வடிவானவை அத்தோட படிப்பிலும் சூரிகள் பெரும்பாலும் இவையள் வேலை செய்வது கவுண்மெண்ற் உத்தியோகத்திலை தான்" என்று ஓட்டோக்காரர் தன் ஓட்டோகிராப் காலத்தை நினைவு படுத்தினார். அச்சுவேலிக்காரர் இதை வாசிச்சா மனசுக்குள் சந்தோசப்படுங்கோ ;)

கொஞ்சத் தூரம் போனதும் பாதையின் இரு பக்கமும் பெரும் வாய்க்கால் இருந்த சுவடு தெரிகின்றது. "இந்த வாய்க்காலால் தான் முன்னை நாளேல்லை என்றுமே வற்றாது இருக்கும் நிலாவரைக் கிணறு மூலம் தோட்டக் காணிகளுக்கு நீர் பாய்ச்சுவது வழக்கம், அறுந்து போன சண்டை தொடங்கினதும் எல்லாம் போச்சு" என்று ஓட்டோக்காரர் புலம்பினார்.

நிலாவரைக்கிணறு என்று பெரிய பெயர்ப்பலகை தெரிகிறது, அந்தக் கிணற்றைச் சுற்றி இராணுவத் தடுப்புச் சுவர்கள் போடப்பட்டு இராணுவத்தினர் நிற்கின்றார்கள் என்பதால் கிணற்றைப் பார்க்கும் ஆசையை என் மனக்கிணற்றுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். நம் பயணம் தொடர்கிறது உடம்பெல்லாம் புண்ணான குண்டு குழிகளால் ஆன றோட்டில் குலுங்கிக் குலுங்கி ஆட்டம் போட்டுப் பயணிக்கிறது ஓட்டோ.
"இப்ப தான் கன வருஷத்துக்குப் பிறகு தொண்டமானாறுப் பாலப்பக்கமாக உள்ள வீதியை ஆமி திறந்திருக்கு. இதுக்கு முதல் வல்லை வெளியால் தான் வரவேணும்" என்று ஓட்டோக்காரர் சொல்லவும் முன்னே பொலிஸாரின் ஒரு சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்படுகிறது. எங்கே போகிறோம் எத்தனை பேர் என்ற விபரங்களை ஓட்டோக்காரரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டதும் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகிறது. தொன்டமானாறுப் பாலத்தைக் கடக்கிறோம். வழியெங்கும் இராணுவத் தடுப்பரண்கள். தூரத்தே சந்நிதியிதான் கோபுரம் தெரிகிறது.




கோயிலை அண்மித்ததற்கு சமிக்ஞையாக ஓட்டோ மெல்லத் தன் ஓட்டத்தை நிறுத்தி நிதானிக்க இறங்கி நடக்கிறேன் கூடவே அப்பாவும் அம்மாவும். சந்நிதிக் கோயிலின் தீர்த்தக்கரையாக தொண்டமானாறு அகலத் தன் வாயைத் திறந்து நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. கேணிப் படிகளைக் கடந்து நீரில் கால் அலம்பலாம் அதை விட அந்த விசேஷம் அங்கேயே தீர்த்தமாடி மகிழலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் தீர்த்தமாடுவோம் என்று நினைத்து ஆலயக் கிணற்றில் கால் அலம்பச் செல்கிறேன். "தம்பி என்ன கால் கழுவவோ" என்று வாஞ்சையோடு ஒரு பக்தர் கேட்டு அள்ளிய கிணற்றுத் தண்ணீரைத் தான் பாவிக்காமல் என் கால்களுக்குப் பாய்ச்சுகிறார். நன்றிப் பெருக்கோடு கோயிலை நோக்கி விரைகிறேன்.


இது நாள் வரை புகைப்படங்களில் பார்த்த அதே பழமையும் எளிமையும் தவழும் ஆலயமாகச் செல்வச் சந்நிதி ஆலயம் திகழ்கின்றது. மகோற்சவ காலம் என்ற மேலதிக பகட்டுமில்லாத அநியாயத்துக்கும் அமைதி தவழும் உறைவிடமாக இருக்கின்றது.


மருதர் கதிர்காமர் என்ற மீனவரிடம் சிறுவனாக வந்து அருள்புரிந்த முருகப்பெருமான் தொண்டமானாறு ஆற்றங்கரையில் இருந்த பூவரசமரத்தடியில் ஆலயம் அமைத்து வழிபடுக என்ற கட்டளைப் பிரகாரம் தானே பூசகராக மாறி இந்தத் திருத்தலத்தை எழுப்பி வழிபட்டது வரலாறு. ஈழத்தில் இரண்டு கோயில்களில் மட்டுமே வாயை வெள்லைத் துணியால் கட்டி வழிபடும் வழக்கம் உண்டு. ஒன்று கதிர்காமத்தில், அங்கே வேடுவ மரபில் வந்த கப்புறாளைகள் பூசகராம இருந்து இறைபணி ஆற்றவும், செல்வச் சந்நிதியில் மருதர் கதிர்காமர் என்பவரின் மீனவ மரபில் வந்தோர் "கப்பூகர்" என்று இதே மாதிரியான வாய் கட்டிப் பூசை செய்யும் வழிபாட்டை நடாத்துகின்றார்கள்.

வடமராட்சிப்பகுதியில் நாதஸ்வர தவில் கலைஞர்கள் அரிதாகவே இருக்கின்ற காரணத்தினாலோ என்னவோ, காவடியாட்டம், பால்காவடி மற்றும் கோயிலின் மேளம் எல்லாமே மேலே இருக்கும் மேளக்காரர் வாசிக்கும் மிருதங்க வடிவிலான தோல் வாத்தியமே பாவிக்கப்படுகின்றது. 

கோயிலைச் சுற்றி வந்து வழிபாடு நடத்திப் பின் ஆலயத்திண்ணையில் அமர்கின்றேன்.கோயில் மணியை ஒரு பக்தை இழுத்து அடிக்க பறை முழங்க பக்தர்களின் அரோகரா ஒலி விண்ணை எட்டுகிறது. பூசை ஆரம்பமாகிச் சுவாமி வீதிவலம் வருகின்றார்.

நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் எனவும் மாவிட்டபுரம் கந்தனை அபிஷேகக் கந்தன் எனவும் சிறப்பிப்பது போலச் செல்வச் சந்நிதிக் கந்தனை அன்னதானக் கந்தன் என்று சிறப்பித்து மகிழ்வர்.காரணம் நிதமும் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு முகம் கோணாது அமுதும் அன்னமும் படைத்து வரும் மரபு தொன்று தொட்டு நிலவி வருகின்றது. நான் காலையில் சென்று மதியத்துக்கு முன்னதாகவே கிளம்பி விட்டதால் அந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிட்டவில்லை. அன்னதானத்தில் பலாச்சுளைளையும் இடுவார்கள் என்பது இனிப்பான கொசுறுச் செய்தி.

உள்ளூரில் இருக்கும் வைரவர் கோயில்கள் முதல் கிடுகுக் கொட்டிலில் இருந்த கோயில்கள் எல்லாம் டொலர்களாலும் யூரோக்களாலும் மாடமாளிகைகளாக எழுந்தருளி நிற்கையில் பழமையும் எளிமையும் கொண்டு அருள் பாலிக்கும் செல்வ சந்நிதியான் என் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றான். இந்தப் பதிவைப் போடும் இன்றைய நாள் செல்வச் சந்நிதி முருகன் ரதமேறித் தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தேர்த்திருவிழா நாள் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வச் சந்நிதி ஆலயம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள
செல்வச் சந்நிதி முருகனைச் சந்தித்த நிறைவில் திரும்புகிறேன் வீடு நோக்கி.

இடையராய் வந்து கதிர்காமரை இரட்சித்த முகமொன்று
கதிர்காமம் தன்னில் பூசைமுறை காண அழைத்த முகமொன்று
கதிரமலைக் கொடியேற்றச் சென்றமுகமொன்று
களைத்துத் துவையல் உண்ண ஓடிவந்த முகமொன்று
அடியார்க்கு அன்னதானம் அளிக்கும் முகமொன்று
புண்ணியனார் சமாதி கண்ட பூவரச மரத்தருகே -
கோயில் கொண்டு வீற்றிருந்த முகமொன்று
ஆறுமுகமமாகி வள்ளி தெய்வமங்கையுடன் 
வேலாகி நிற்க அடியவர்களும் தேவர்களும் 
அகமகிழ்ந்து வாழும் செல்வச் சந்நிதி வேலவா சரணம்



கோயிலின் அதிகாரபூர்வ மேளம் இதுதான், கூடவே வாசிப்பவரும்








மெய்ப்பொருள் தேடும் ஆடுகள் 




நன்றி http://kanapraba.blogspot.com

2 comments:

kirrukan said...

சந்நிதியானுக்கு அரோகரா.....இந்த முறை சம்பளத்தில நிதி கொஞ்சம் அதிகமாக தா சந்நிதியானே.....

சந்நிதியானை தரிசிக்க வசதி செய்து தந்த காணா வுக்கு அரோகரா

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT ARTICLE...THANKS PRABA...WRITE MORE...!!!