ஆண்கள் அறிக ! - கவிதை - தாமரை

காதல் சொல்லும் கணத்தில்கூட
முதல் காதலிக்கான கவிதை
வாசிக்கபடுகிறது.

கல்யாணத்துக்கு நெருங்கும்
பழுத்த காதலிகளிடம்
இன்னும் வயதுக்கு வராத
உங்கள் தங்கையின்
திருமணத்தைப்பற்றிப் பதறுகிறீர்கள்...

உங்களை நம்பி ஓடி வந்து
மாலை மாற்றிக்கொண்டவளிடம்
'என் அம்மாவைவிட்டு
வந்துவிட்டேனே' என்று
புலம்புகிறீர்கள்....

அடுப்படியில் வெந்து விறுவிறுக்க
மனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை
உறிஞ்சிக்கொண்டே,
'என் அம்மா வைத்தால்
ஊரே மணக்கும்' என்கிறீர்கள்...

'என் மனைவிக்கு மிகவும் பிடித்தது
மல்லிகைப் பூ' என்று
கைம்பெண்ணிடம் பூ வாங்கும்போது
முணுமுணுக்கிறீர்கள்....

வாழ்வின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டு இருப்பவளிடம்
எப்படி உங்கள் பெண் குழந்தைகள்
தேவதைகளாக இருந்து
உங்களைக் காக்கிறார்கள்
என்று வியக்கிறீர்கள்...

மரணப் படுக்கையில் இருப்பவளிடம்
உங்கள் மனைவி பிரசவத்தில்
பிழைத்த கதையையும்
விபத்தில் சிக்கியவளிடம் உங்கள்
குருதிக் கொடையால் கண் விழித்த
கல்லூரிப் பெண்கள்பற்றியும்  
விவரிக்கிறீர்கள்....

பிள்ளையற்றவளிடம் உங்கள்
பாட்டி பெற்ற பதினாறைப்
பட்டியலிடுகிறீர்கள்....

நாட்டியக்காரியின் வீட்டை
நாடி வந்துவிட்டு
அவள் காலை நக்கிகொண்டே
உங்கள் வீட்டு 'குத்து விளக்கை' எண்ணிக்
கண்ணீர் உகுக்கிறீர்கள்...

காதலோடு நீகள் பேச ஆரம்பிக்கும்
ஒரு பொழுதேனும் இடைமறித்து
'அந்த மகிழம்பூ மரத்தடியில் வைத்து
மகேந்திரன் கொடுத்த முத்தத்துக்கு
ஈடாகாது எதுவும்' என்று
சொல்ல வேண்டும்.

கண்ணகிகளை மாதவியாக்கும்போது
நீங்கள் நகுலன் அல்லது
சகாதேவனாகிறீர்கள்.

இடம் பொருள் ஏவலற்றுப்
பிற பெண்களைப்பற்றிப் பேசும்
ஆண்கள் அறிக,
உங்களுக்கான முத்தம்
வேறொரு உதட்டில்
இடப்பட்டுவிட்டது.!

நன்றி /ularuvaayan.blogspot.com

1 comment:

kirrukan said...

பெண்னே உன்
முதல் முத்தம்
வேறொரு உதட்டிலாகட்டும்
ஏன் உன்
முதல் உடலுறவு கூட
வேறொரு உடலுறவாகட்டும்
மறந்திடு எல்லாவற்றையும்
இப்பொழுது இணைந்திடு
என் இச்சைக்காக