உஷா ஜவாகரின் நூல் வெளியீடு ஓர் பார்வை

ஓர் இரம்மியமான சூழலில் 12-06-2010 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தமிழ்க் கல்வி நிலையம் ஹோம்புஷ் மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்துடனும் அவுஸ்திரேலிய தேசிய கீதத்துடனும் விழா சிறப்பாக ஆரம்பமாகியது. அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்களில் ஓருவரும் ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய தலைவரும் ஓர் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவருமாகிய திரு திருநந்தகுமார் அவர்களின் தலைமையில் ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய அதிபர் திரு திருமதி தேவராஜா அவர்கள் மங்கள விளக்கேற்றி வைக்க மங்களகரமாக தொடர்ந்தது நூல் வெளியீட்டு விழா.


தமக்கே உரிய பாணியில் அழகு தமிழில் அற்புதமாக தலைவர் அவர்கள் தமது தலைமை உரையை நிகழ்த்தினார்கள். “இந்து மதம் ஓர் ஆழமான பார்வை” எனும் அமரர் திரு ஏகாம்பரநாதன் எழுதிய நூலைப்பற்றி அவர் ஆரம்ப காலங்களில் சுற்றுலா துறையில் பணியாற்றி வந்தமையால் சுற்றுலா பயணிகள் இந்துமதம் பற்றி கூறும் கருத்துக்களையும் ஆலயங்களை, குறிப்பாக இந்து ஆலயங்களைப்பற்றி அவர்கள் கூறும் கூற்றுகளை உள்வாங்கி அவர்களின் கருத்துக்களுக்கு தாம் கூறிய பதில்களையும் நூல் ஆசிரியர் மனதில் கொண்டு “இந்து மதம் ஓர் ஆழமான பார்வை” எழுதியுள்ளதாக முகவுரையில் கூறியுள்ளதாக குறிப்பிட்டு நூலின் அறிமுக உரையை ஆற்றுமாறு ஸ்ரீசோம நிர்மலேஸ்வரகுருக்கள் அவர்களை அழைத்ததோடு இந்துசமயம் சம்பந்தமான விடயங்களை அவற்றின் பொருள் விளங்காமலும் செய்யலாமா? என்ற கேள்விக்கு ஸ்ரீநிர்மலேஸ்வரகுருக்கள் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று ஓர் அன்பான வேண்டுகோளோடு அமர்ந்து கொண்டார்.


இந்துமதம் ஓர் ஆழமான பார்வை எனும் நூலின் அறிமுகவுரையை ஸ்ரீநிர்மலேஸ்வரகுருக்கள் அவர்கள் உலகும் உற்பத்தியாளரும் என தொடங்கி இறைவன் எம்முன் இருக்கிறார் வரை ஒன்று முதல் ஐம்பது வரையான அத்தியாயங்களில் நூலாசிரியர் நூலின் பெயரிற்கேற்ப ஆழமாக பார்வையை செலுத்தியிருக்கிறார் என பேச்சை ஆரம்பித்தார்.


தரமான நூல்களை மட்டும் தரும் மணிமேகலை பிரசுரமாக வெளிவந்திருப்பது மிகச்சிறப்பு என்பதை சுட்டிக்காட்டினார். கறுப்பு வெள்ளை பசுக்களின் பால் வெள்ளையாக இருப்பதுபோல் மதங்கள் யாவும் ஓரே விடயத்தைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. எனவே மதமாற்றம் என்பது ஓர் திரிசங்கு நிலையாகும் கடவுள் ஒன்றே என்பது உண்மை.
முற்பிறப்பு கொள்கை கன்மம் மறுபிறப்பு என்பனவும் வலியுறுத்தப்படுகிறது. குற்றம் புரிந்தவர்கள் வெளி உலகில் நன்றாக இருப்பது போல் தோன்றினாலும் மனதளவில் நன்றாக இருப்பது இல்லை.

நாங்கள் மனச்சாட்சி என்று கூறுகின்றோம். உடம்பின் உள்ளே மனதை காட்டிவிடத்தான் முடியுமா? எனவே மனங்கள் ஆத்மா ஆகவே இறைவன் எனும் தத்துவத்தை அழகாக கோடிட்டு காட்டுகிறார்.

அவதாரம் என்பது உயர்ந்த நிலையில் உள்ள ஒன்று தன்னிலை விட்டு ஆன்மாக்களுக்காக இறங்கி வருதலாகும் என்பதும் பல தெய்வவழிபாடும் சிறப்பாக காணப்படுகிறது. ஒருவர் தகப்பனாக கணவனாக மகனாக மருமகனாக மாமனாக தாத்தாவாக பேரனாக இருப்பது போன்று இறைவன் ஒருவர் ஆன்மாக்களுக்காக பலவடிவம் ஏற்கிறார். மனதை ஒருநிலை படுத்த உருவவழிபாடு தேவை என்பதுவும் சொல்லப்படுகிறது. தியானத்திற்கு ஓர் மணிக்கூட்டை உதாரணமாக காட்டி ஒரு நிமிடம் சாவி கொடுத்தால் ஒரு கடிகாரம் இருபத்தினாங்கு மணி நேரம் ஓடுவது போல் ஒரு நிமிடம் தியானம் செய்தால் பழக்கத்தில் பல நிமிட நேரம் தியானம் செய்யலாம். அதனால் மனஅமைதி ஏற்படும். “அருணகிரியாருடைய சரணகமலாலயத்தை அரை நிமிட நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க”- எனும் கூற்றும் நோக்கற்பாலதாகும். தியானம் மட்டுமே கடவுளை அணுக பாலமாக அமையும் என்பதனை நூல் ஆசிரியர் ஆணித்தரமாக எடுத்துத் தந்துள்ளார்.

இவை மட்டுமின்றி புராணம், இதிகாசம், வேதம், ஆகமம், உபநிடதம், சைவசித்தாந்தம், வீபூதி, உருத்திராட்சம், சிவசின்னங்கள், ஓம்பிரணவம் என பலவகையிலும் இந்துமதத்தின் சிறப்புக்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.
பிதுர்க்கடன் தொர்புலத்தார் தெய்வவழிபாடு பற்றியும் குறிப்பிட தவறவில்லை. இந்து மதத்தினுடைய பலவழிகளும் ஆங்காங்கே காணப்படும் சைவநாற்பாத தத்துவங்களும் இந்துக்கள் இப்படித்தான் வாழவேண்டுமென்பதை எடுத்துக்காட்டி நிற்கின்றன. காரணம் இல்லாமல் காரியம் இல்லை எனும் கருத்து இங்கு சாலப் பொருந்தும் என்பதை அறிமுகவுரையில் ஆழமாக கூறினார்.




இந்து மதம் பற்றி அறிய விரும்பும் ஒருவருக்கு வரப்பிரசாதமாக அமைவது இந்து மதம் ஓர் ஆழமான பார்வை எனும் இந்நூல் என நிர்மலேஸ்வரக்குருக்கள் கூறி தமது உரையை நிறைவு செய்தார்.



சிதைகிறதே செந்தமிழ் எனும் உஷா ஜவாகர் எழுதிய கவிதை நூல் அறிமுக உரையை இன்பத் தமிழ் ஒலி வானொலியின் கருத்துக்களம் எனும் நிகழ்ச்சியின் ஒலிபரப்பாளரும் தமிழ் ஆர்வலருமாகிய திரு மகேந்திரன் சத்தியபாலன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.


மரபுக் கவிதைகள் பற்றியும் பழைய கவிதை மரபிற்கும் இன்றைய சூழலில் வரும் கவிதைகள் பற்றியும் பல விளக்கங்களை ஆதார பூர்வமாக சுட்டிக் காட்டினார். சிதைகிறதே செந்தமிழ் எனும் கவிதையில் அந்நியன் கற்கிறான் அன்னைத் தமிழை, ஆசையை கேட்கிறான் ஆசைத் தமிழை அன்னியனைப் பார்த்து நம்மவரும் செந்தமிழின் பெருமை பேசலாம் புகழ் பாடலாம் எனும் வரிகள் மனதை கவர்ந்தன


மாமேதைக்கு ஓர் அஞ்சலி, இளவரசிக்கு ஓர் அஞ்சலி எனும் இரு விடயங்கள் நூலின் கடைசியில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்பத் தமிழ் ஒலி வானொலியில் இசைச் சித்திரமாக வந்தமை என்பதனையும் குறிப்பிட்டு பாராட்டுகளையும் சொல்லி நிறைவு செய்தார். ஹோம்புஷ் தமிழ் பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் செல்வி கஸ்தூரி முருகவேலும், செல்வன் டினோசன் தர்மகுலசிங்கமும் சிதைகிறதே செந்தமிழ் எனும் கவிதை நூல் பற்றியும், செல்வன் ஜெயமனோகர் கலைச்செல்வன் குறும்புக்கார இளவரசியும் கனிவான தேவதையும் பற்றி ஆய்வுரை செய்தார்கள். மாணவர்கள் தமிழ் மொழியில் சிறப்பாக பேசியது பாராடிற்குரியதாகும்.

இன்பத் தமிழ் ஒலியைச் சேர்ந்த திருமதி திலகா பிரபாகரன் அவர்கள் குறும்புக்கார இளவரசியும் கனிவான தேவதையும் எனும் உஷா ஜவாகர் அவர்கள் எழுதிய சிறுவர் கதைகள் பற்றிய சிறப்பான ஆய்வுரையை நிகழ்த்தினார்கள். நூலிலுள்ள குறை நிறைகளை ஆராய்ந்து சீர்தூக்கி பேசினார். கதைத் தொகுப்பை பத்தாக அதிகரித்திருக்கலாமெனவும் கதைகளில் காணப்பட்ட சில சொல் பொருள் பிழைகளையும் சுட்டிக் காட்டி உரையை நிறைவு செய்தார்.



 
இதனை தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது திரு திருமதி ஜவாகர் அவர்களிடம் இருந்து முதற் பிரதியை ஸ்ரீ நிர்மலேஸ்வரக் குருக்கள் பெற்றார். தொடர்ந்து ஸ்ரீ இரகுநாதன் குருக்கள் ஸ்ரீ ரவிக் குருக்கள் ஆகியோர் சிறப்பு பிரதிகளை பெற்றனர். தமிழ் ஆர்வலர்கள், பெரியவர்கள், மாணவர்கள் எனப் பலரும் பிரதியை பெற்றுக்கொண்டனர்.


இதனை தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது திரு திருமதி ஜவாகர் அவர்களிடம் இருந்து முதற் பிரதியை ஸ்ரீ நிர்மலேஸ்வரக் குருக்கள் பெற்றார். தொடர்ந்து ஸ்ரீ இரகுநாதன் குருக்கள் ஸ்ரீ ரவிக் குருக்கள் ஆகியோர் சிறப்பு பிரதிகளை பெற்றனர். தமிழ் ஆர்வலர்கள், பெரியவர்கள், மாணவர்கள் எனப் பலரும் பிரதியை பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து அபிராமி குமார தேவன் அவர்களின் மாணவர்களின் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலைய மாணவர்கள் கவிதைகள் கதைகளை சபையோருக்கு பேசி காட்டினார்கள். நன்றி உரையுடன் விழா நிறைவு பெற்றது. நூல்வெளியீட்டு விழாவின் சிறப்பு அம்சமாக மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொண்டமை அமைந்தது. நிறைந்த குளிரிலும் நீண்ட வார விடுமுறையில் நிகழ்ந்த சிறப்பான நிகழ்ச்சிகளின் மத்தியிலும் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு நடை பெற்றமை பாராட்டிற்குரியதாகும். இந்நிகழ்ச்சியில் ஓர் பெண்ணின் வெற்றிக்கு பின்னர் ஓர் ஆண் இருப்பதை காண முடிந்தது. எனவே திரு ஜவாகர் அவர்கட்கும் திருமதி உஷா ஜவாகர் அவர்கட்கும் எமது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
நன்றி
சோம நிர்மலேஸ்வரக் குருக்கள்.

உஷா ஜவாகரின் புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் தொடர்புகொள்வதற்கு
 PO Box 2141 Homebush West NSW 2140 U. Javakhar 0425332804

No comments: