பிரபல வங்காள இயக்குனர் புத்ததேவ் தாஸ்குப்தா காலமானார்

.

பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென உயிரிழந்ததால் நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்காலி மொழி திரைப்பட மூத்த இயக்குனர் புத்ததேவ் தாஸ்குப்தா(77). இவர் தனது படைப்புகளால் 12 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். நாடு முழுவதும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. பெங்காலி மொழி திரைப்பட இயக்குனரான புத்ததேவ் தாஸ்குப்தாவின் முதல் திரைப்படமான துாரத்வா, 1978ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின் ஏராளமான திரைப்படங்களை இயக்கினார். ஹிந்தியிலும், இரண்டு திரைப்படங்களை இயக்கினார்.

பக்தேவ் தாஸ்குப்தாவின் குறிப்பிடத்தக்க படங்களில் பாக் பகதூர், லால் தர்ஜா, கலாபுருஷ் மற்றும் தஹேதர் கதா ஆகியவை அடங்கும். இவரது ஐந்து படங்கள் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளன. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில், ஸ்பானிஷ் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இயக்குனர்கள் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், மிருனால் சென் திரைப்படங்களின் வரிசையில் புத்ததேவ் படங்களும் சிறப்பு கவனம் பெற்றன. 12 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.கோல்கட்டாவில் உள்ள காலிகாபூர் என்ற இடத்தில், மனைவி சோஹினியுடன் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 



இவர் சிறுநீரக கோளாறு காரணமாக பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கோல்கட்டாவில் நேற்று திடீரென காலமானார். நேற்று காலை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, துாக்கத்திலேயே உயிர் பிரிந்தது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புத்ததேவின் மறைவுக்கு திரையுலகினர் வேதனையும், அதிர்ச்சியும் தெரிவித்து உள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் புத்ததேவ் தாஸ்குப்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments: