அகிலத்தைக் காத்துவிட அனுப்பிடுவாய் நற்தூதுவனை ! கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ...... அவுஸ்திரேலியா

 

வெள்ளப் பெருக்காலே வேதனைகள் ஒருபக்கம்

வெந்தணலால் பலவுயிர்கள் கருகுகிறார் ஒருபக்கம்

நொந்திடுவார் நிவாரணத்தில் சுகம்காண்பார் மறுபக்கம்

சந்ததும் துன்பமாய் விளைகிறதே பலபக்கம்  !

 

பேயெனவே வெறியாடும் பெருநோயோ ஒருபக்கம்

பெரிதாக மனமெண்ணா வர்க்கமோ மறுபக்கம்

நோயெதிர்ப்பு திட்டத்தில் நயம்காண்பார் ஒருபக்கம்

தாறுமாறாய் பிரச்சினைகள் சமூகத்தைக் கலக்கிறதே !

 

எதிர்ப்பதனைக் கொள்கையாய் கொண்டிருப்பார் ஒருபக்கம்

எல்லாமே தாமென்று எண்ணிடுவார் மறுபக்கம்

தலைக்கனத்தால் அரசுதனைக் குலைத்திடுவார் ஒருபக்கம்

தறிகெட்டு சமுதாயம் தாடுமாறிக் கிடக்கிறதே !

 

உயிர்காக்கும் பணிகளிலே உருகுகிறார் ஒருபக்கம்

உன்னதத்தை வாழ்வாக்கி உழைக்கின்றார் ஒருபக்கம்

நலனனைத்தும் தமக்கென்று நினைக்கின்றார் மறுபக்கம்

நாநிலத்தில் நாளுமே பெருகிறதே துயரநிலை !

 

உபதேசம் செய்வாரை ஒதுக்குகிறார் ஒருபக்கம்

உண்மைதனை குழியிட்டுப் புதைக்கின்றார் மறுபக்கம்

அறவுணர்வை மறுத்துரைப்பார் பெருகுகிறார் ஒருபக்கம்

அகிலத்தில் கஷ்டமெலாம் அதிகரித்தே நிற்கிறது !

 

வேதனையும் சோதனையும் மிகுந்திருக்கு மேதினியில்

வேடிக்கை எனநினைப்பார் நாளுமே பெருகுகிறார்

ஆதியொடு அந்தமிலா அரும்பொருளே ஆண்டவனே

அகிலத்தைக் காத்துவிட அனுப்பிடுவாய் நற்தூதுவனை !

No comments: