எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 12 படைப்புக்கு களம் இல்லை ! விருதுபெற்றால் மாத்திரம் செய்தி !! சுமைகளைச் சுமந்த “ சுமையின் பங்காளிகள் “ முருகபூபதி


டலும்  கடல்  சார்ந்த  நிலமும்  நெய்தல்  என  அழைக்கப்படுகிறது. ஐந்து   திணைகளில்  ஒன்றென  நெய்தல்  கருதப்பட்டாலும்,  இந்தத் தொன்மையான  தகவல்  ஏதும்  தெரியாமல் -  மழைக்கும் பாடசாலைப் பக்கம்   ஒதுங்காமல்  உழைப்பும்,  பரிசுத்த  வேதாகமும்தான் வாழ்க்கை   என  வாழ்ந்த  மக்கள்  மத்தியில்  பிறந்து,  கடலின் அலையோசையை  தினம்  தினம்  கேட்டவாறே   வளர்ந்தேன்.   எங்கள் வீட்டிலிருந்து  பார்த்தால்  கடல்  தெரியும்.   சிறுவனாக இருக்கும்பொழுது   எனது  விளையாட்டு  மைதானம்  எங்கள் கடற்கரைதான். இந்து சமுத்திரத்தாயின்   அரவணைப்பில்  வாழ்ந்த  கடற்றொழிலாளர் குடும்பத்துப் பிள்ளைகள்  எனது  பால்யகாலச்சிநேகிதர்கள். அவர்களின்  பேச்சுமொழியை   சிறுவயதிலேயே உள்வாங்கிக்கொண்டேன். சூரியன்   அஸ்தமிக்கும்  ரம்மியமான  காட்சியையும் அந்தக்கடற்கரையில்  நடு  இரவு  கடற்தொழிலுக்கு  புறப்படவிருக்கும் அந்த   ஏழை மீனவர்கள்,    மீன்பிடி  வலையில்  மீன்களினாலும் கடல்   பாறைகளினாலும்  அறுந்துபோன  நூல்களை இணைத்துக்கொண்டிருக்கும்  காட்சியையும்

  ரசிப்பேன். அதற்கு அவர்கள் தங்களது மொழியில்   “ வலை பொத்தல்  “ என்பார்கள்.   எதற்கெடுத்தாலும்  “ என்னத்தை செல்லிய சோமலமாதாவே.  என்ர ஆண்டவரே…  “ என்பார்கள்.  என்னை மிகவும் கவர்ந்த மொழிவழக்கு.  அவர்களுக்கு கோபம் வந்தால், கெட்ட வார்த்தைகள் தாராளமாக வயது வித்தியாசமின்றி உதிரும்.  அவர்களுடன் பேசும்போது, அவர்களின் மொழிவழக்கிலேயே பேசுவேன். அதனை அவர்கள் ரசிப்பார்கள்.   “  என்ர சோமலமாதாவே… நீங்க… எங்களைப்போலவே பேசிய எலா…. “ எனச் சொல்லி சிரிப்பார்கள்.  எழுத்தாளனாக  நான்  உருவானபொழுது,   நீர்கொழும்பு பிரதேசத்தின்   வீரகேசரி  நிருபராகவும்  பணிதொடங்கினேன் என்பதை முன்னரே  சொல்லியிருக்கின்றேன்.    ஒரே சமயத்தில்  ஊடகவியலாளனாகவும்  படைப்பாளியாகவும்  என்னை வளர்த்துக்கொண்டமையால்   இன்றளவும்  இந்தப்பணிகள்  எனது ஆழ்ந்த   நேசத்துக்குரியன. முதல்  கதையான கன்னிப்படைப்பு  கனவுகள்  ஆயிரத்திற்கு  கிடைத்த  வரவேற்பினால்  மேலும்  சில சிறுகதைகளை   எழுதினேன்.   1975  ஆம்  ஆண்டிற்குள்  ஒரு தொகுதிக்குப்போதுமான   கதைகள்  எழுதிவிட்டேன். எனது   கதைகளைத் தொடர்ந்து  படித்து  ஊக்கமளித்த  மல்லிகை ஆசிரியர்   டொமினிக் ஜீவா,    ஒருநாள்  என்னை  சந்தித்தபொழுது சிறுகதைத்தொகுதியை   வெளியிடுமாறு  ஆலோசனை  வழங்கினார். 

ஆனால்,  அதற்குப்போதிய  பண  வசதி  என்னிடம்  இல்லை.  இந்தத் தொடரின் முன்னைய 

அங்கங்களில்   குறிப்பிட்ட எனது  மாமா  முறையான  உறவினர் மயில்வாகனன்  அவர்கள்  சாந்தி  அச்சகம் நடத்திக்கொண்டிருந்துவிட்டு,    சுகவீனம்  காரணமாக  அதனை  எனது நண்பர்கள்   யோகநாதன்,   நவரத்தினராசா  ஆகியோரிடம்  குத்தகை அடிப்படையில்   ஒப்படைத்தார். யோகநாதன்,    இலங்கை  சினிமாஸ்  லிமிடெட்டுக்குச் சொந்தமான  நீர்கொழும்பு  ராஜ்  சினிமா  தியேட்டரில்  இரவில்  ஓப்பரேட்டராக பணியாற்றிக்கொண்டு   சாந்தி  அச்சகத்தை  மேற்பார்வை  செய்தார். நவரத்தினராசாவுக்கு   அச்சுக்கோர்த்த  அனுபவம்  இருந்தது.   அவர் கொழும்பில்   சிலோன்  தியேட்டர்ஸ்  நிறுவனத்தின் அச்சகத்தில்  பணியாற்றிய  அனுபவசாலி. இந்த   நண்பர்களுடன்  இணைந்து  நாம்  முன்னர்  கல்வி  கற்ற விஜயரத்தினம்   மகா  வித்தியாலயத்தின்  பழைய மாணவர் மன்றத்தையும்   அந்தக்காலப்பகுதியில்  தொடக்கியிருந்தோம். நீர்கொழும்பின்   வீரகேசரி  நிருபராக  பணியாற்றிக்கொண்டே  நேரம் கிடைக்கும்   சந்தர்ப்பங்களில்   சாந்தி  அச்சகத்தில்  அச்சுக்கோர்த்துப் பழகினேன்.   அத்துடன்  அங்கு  பிரசுரங்கள்  இதழ்கள்,    மலர்கள்

அச்சாகும்பொழுது   ஓப்புநோக்கியிருக்கின்றேன். அந்த    நண்பர்களிடம்  எனது  நூல்  வெளியிடும்  விருப்பத்தைச் சொன்னபோது   அவர்கள்  அச்சிட்டுத்தருவதற்கு  சம்மதித்தார்கள்.   சில  கதைகளை  நானே   அச்சுக்கோர்த்தேன்.   அங்கிருந்த செல்வராஜா   என்ற  அச்சுக்கோப்பாளரும்  உதவினார்.   அப்பொழுது அந்த    அச்சகத்தில்  திக்குவல்லை  எழுத்தாளர்  சங்கத்தின்  இளம் எழுத்தாளர்   ஒருவரின்  கவிதைத்தொகுப்பும்   புத்தளம் தில்லையடிச்செல்வனின்  விடிவெள்ளி  கவிதை    இதழும்  எழுத்தாளர்  சாந்தனின்  ஒரே ஒரு ஊரிலே  சிறுகதைத்தொகுதியும் கவிஞர்   ஈழவாணனின்  அக்னி  புதுக்கவிதை   இதழும் அச்சாகிக்கொண்டிருந்தன. அதனால்   எனது  தொகுதி  வெளிவருவதில்  சற்று  தாமதம்  ஏற்பட்டது. கொழும்பில்  கல்வி  வெளியீட்டுத் திணைக்களத்தில்  அப்பொழுது பணியாற்றிய  ஓவியர்  ரமணி  எனது  நூலுக்கு  முகப்போவியம் வரைந்து    தந்தார்.  எனது  முதல்  கதை   கனவுகள் ஆயிரம்.   அதனைத்தொடர்ந்து,   தரையும்  தாரகையும் ,  நான் சிரிக்கிறேன்,   அந்தப்பிறவிகள்,   எதற்காக?,   நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன,    சுமையின்   பங்காளிகள்,  விழிப்பு, விடிவைநோக்கி,   பேரலைகள் 

மடிகின்றன  முதலான  சிறுகதைகளை 1972 - 1975   காலப்பகுதிக்குள்   எழுதியிருந்தேன்.     வாழ்க்கை  அனுபவம்  மட்டுமல்ல  சுமைகளும்  நிரம்பியதுதான். அந்தச்சுமைகளை  பங்கேற்றுக்கொள்பவர்கள்  பலதரப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்கள்.   எனது  சுமையின்  பங்காளிகள், கடலை  நம்பி   வாழும்  ஏழைக்குடும்பத்தின்  கதை.   கணவன்  தனது உழைப்பின்   வருமானத்தை  குடித்தும்   சூதாடியும்   சீரழிக்கின்றான்.   இரண்டு குழந்தைகளுடன்   குடும்பச்சுமையை  ஏற்று  பரிதவிக்கும்  அந்த மனைவி   வருமானத்திற்காக  கசிப்பு (கள்ளச்சாராயம்)  விற்பனையில் ஈடுபடுகிறாள்.   அந்த  வருமானத்தையும்  அந்தக்கணவன் சுரண்டப்பார்க்கின்றான்.   இதனால்  அந்தக்குடிசையில்  சண்டை வருகிறது.    கணவனின்  சொற்பவருமானத்தை  நம்பி  தானும்  தனது குழந்தைகளும்   வாழவில்லை  என்ற  இறுமாப்புடன்  மனைவி சத்தம்போடுகிறாள்.    வீட்டில்  சட்டி  பானைகளும்   ஆயுதமாகின்றன. வீட்டை விட்டு    வெளியேறும்  குடிகாரக்கணவன்,  மனைவி  என்றும் பாராமல்   ஆணவத்தினால்  அவளுக்கு  பொலிஸிடம்  தண்டனை தேடித்தருவதற்காக  பொலிஸில் மனைவியின் இரகசிய கள்ளச்சாராய விற்பனை பற்றி புகாரிடுகின்றான். பொலிஸ்  வந்து  அவளை  ஜீப்பில்  ஏற்றிச்செல்கிறது.  ஊரே  வேடிக்கை பார்க்கிறது.    யாரோ ஒருத்தி  கைதட்டிச்சிரித்து உரத்து,               “ ஐயோ பாவம்… பொம்பிளை… ஜீப்பில  “ ஏறுறாள் எனச்சொன்னதும்,  அவள் 

 தர்மாவேசத்துடன் “  ஓமடி நான் ஏறுவன்தான். சும்மா இல்லடி, பொலிஸ் காவலோடதான்டி நான் போறன்…. பொலிஸ் காவலோட போற பொம்பிளை நான் மட்டுமாடீ   “ என்று கத்துவாள்.    சனம் சிரிக்கும். அக்காலத்தில் எங்கள் தேசத்து பெண்பிரதமரும் பொலிஸ் காவலுடன்தான் பயணிப்பார்.  குழந்தைகள்   மண்ணில்  விழுந்து  புரண்டு   அழுது புலம்பும்.   ஒரு  நாள்  கடக்கிறது.   விடிந்ததும்  குழந்தைகள் பசியில்   தாயைத்தேடுகின்றன.   குழந்தைகளின்  பசியைப்போக்க வழிதெரியாத   தந்தையான  அந்தக்குடிகாரக் கணவன்,   ஆழ்ந்து யோசிக்கின்றான்.   தனது  தவறை  உணர்ந்து,   மனைவியை சரீரப்பிணையில்   எடுத்துவருவதற்கு  பொலிஸ்   நிலையம் செல்கின்றான். இக்கதை   உண்மைச்சம்பவம்.   எனது  வீட்டருகில்  நடந்தது. அந்தக்குழந்தைகளின்   கண்ணீரைத்துடைத்து,  கடையில்  பாண் வாங்கிக்கொடுத்திருக்கின்றேன்.  அந்தக்கதை   நண்பர்  ஈழவாணனுக்கு  நன்கு  பிடித்துக்கொண்டது. அதனையே   தொகுதிக்கு  தலைப்பாக  வைக்குமாறு 

சொன்னார். ஓவியர்   ரமணி  அந்தக்கதைக்கு  ஏற்ற  நவீன  ஓவியம்  வரைந்து தந்தார்.    அந்த  ஓவியத்தை  கொழும்பில்  புளக்செய்து  நூலை அச்சிடக்கொடுத்தேன். கையில்   பணம்  இல்லாமல்  எப்படியோ  அந்த  நூலை வெளிக்கொணர்ந்தேன்.   நூல்  வெளியீட்டு  விழா  நடத்தினால்  பணம் கிடைக்கும்   என்று  நண்பர்கள்  ஆலோசனை  சொன்னார்கள். மண்டபத்திற்கு   கொடுப்பதற்கும்  வாடகைப்பணம்  இல்லை.  நீர்கொழும்பு   விஜயரத்தினம்  மகா  வித்தியாலயத்தின்  அப்போதைய அதிபர்   வ. சண்முகராசா  கலை,  இலக்கிய  ஆர்வலர்.   அவரிடம்  எனது நிலைமையைச் சொன்னேன்.   அவர்  பாடசாலை  மண்டபத்தில் நடத்துவதற்கு   முன்வந்ததுடன்,   நிகழ்ச்சிக்கும் தலைமைதாங்குவதற்கும்    சம்மதித்தார்.    அழைப்பிதழும்  அச்சிட்டேன். அவருடைய    தலைமையில்  29-11-1975  ஆம்  திகதி  எனது  முதலாவது சிறுகதைத்தொகுதி   சுமையின்  பங்காளிகள்  வெளியீட்டு   விழா நடந்தது.   எனது  ஆரம்ப  வகுப்பு  ஆசிரியர்  அல்பிரட்  நிக்கலஸ் மாஸ்டர்,    அக்னி  ஆசிரியர்  ஈழவாணன்,    மல்லிகை  ஆசிரியர் டொமினிக்ஜீவா,   பூரணி  ஆசிரியர்  என்.கே. மகாலிங்கம்,   எமது நீர்கொழும்பு   இலக்கிய  வட்டத்தின்  தலைவர்  மு. பஷீர்  ஆகியோர் உரையாற்றினர். பேசுவதாக இருந்த மேலும் சிலர்  தொலைவினால் இறுதிநேரத்தில் வரமுடியவில்லை. நண்பரும்    பின்னாளில்  தினபதி,   சிந்தாமணி   பத்திரிகையாளராக பணியாற்றியவருமான   செ. செல்வரத்தினம்  வரவேற்புரையும் கொழும்பு   விவேகானந்தா  கல்லூரி  அதிபராக  இருந்த  வ. நடராசா வாழ்த்துரையும்   நிகழ்த்தினர். எமது   ஊர்ப்பிரமுகர்கள்  ஜெயம்  விஜயரத்தினம்,   அ.வே. தேவராசா, பத்மநாதன்   செட்டியார்  ஆகியோர்  சிறப்புப்பிரதிகள் பெற்றுக்கொண்டு   வாழ்த்தினார்கள். குறிப்பிட்ட

நிகழ்ச்சியின் அழைப்பிதழை இன்றளவும் பாதுகாத்து வைத்திருக்கும் புத்தளத்தில் வதியும் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார், சமீபத்தில் அதனை தமது முகநூலில் பதிவேற்றியிருந்ததாக பல நண்பர்கள் தெரிவித்து, அந்த  இணைப்பினை எனக்கு அனுப்பியிருந்தார்கள்.   அடுத்தடுத்த   வாரமே  மல்லிகை  ஜீவா  - யாழ்ப்பாணம்  வீரசிங்கம் மண்டபத்தில்   எனது  நூலுக்கு  அறிமுகவிழா  ஏற்பாடு  செய்து அழைப்பிதழும்    அச்சிட்டு,   என்னை   வரவழைத்தார்.   நான்    1963  முதல்  1965  இறுதிவரையில்  யாழ்ப்பாணத்தில்   ஸ்ரான்லிக் கல்லூரியில்  ஆண்கள்  விடுதியில் தங்கியிருந்து    படித்திருக்கின்றேன்.   எனக்கு  அங்கு  சொந்த பந்தங்கள்   எனச்சொல்லிக்கொள்ள  எந்த  உறவும்  அன்று இருக்கவில்லை.  அதனால் Home sick  இல்   அங்கு  வாடிக்கொண்டிருந்துவிட்டு நீர்கொழும்புக்கு   திரும்பி  வந்து  படிப்பைத்தொடர்ந்தேன். 1965   இல்  வடபகுதியை  விட்டு  ஒரு  மாணவனாக  வெளியேறிய  நான், 1975   இல் -  பத்து  ஆண்டுகளின்  பின்னர்  ஒரு  எழுத்தாளனாக அங்கே  திரும்பிச்சென்றேன்.  ஜீவா ரயில் நிலையம் வந்து அழைத்துச்சென்றார்.  யாழ்ப்பாணத்தில்    எனது  நூலின்  அறிமுக  விழா ஈழத்தின்  மூத்த எழுத்தாளர். ஆசிரியர் சு. இராசநாயகம் தலைமையில்  நடந்தது.     அவர்தான்   தற்போது கொழும்பு  தினக்குரல்  ஞாயிறு  இதழின்  ஆசிரியராக பணியாற்றும்  எனது நண்பர்  பாரதியின்   தந்தை.    அந்த  விழாவில்தான்  பெரியவர் இராசநாயகத்தை   முதல்  முதலில்  சந்தித்தேன். எனது கதைகளை ஏற்கனவே படித்திருக்கும் அவர்,  என்னை முதிர்ந்த தோற்றத்தில்தான் கற்பனை செய்துவைத்திருந்தார்.   தமது தலைமையுரையில்  தனது கணிப்பு தவறானது,  முதிர்ச்சியான கதைகளை எழுதுபவர்கள் எல்லோரும் வயதாலும் முதிர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடலாகாது என்றார்.   அந்த   விழாவில்  மௌனகுரு,   செம்பியன் செல்வன்   ஆகியோர்  உரையாற்றினார்கள்.  சோஷலிஸ யதார்த்தப்பார்வை பற்றியெல்லாம் பேசினார்கள்.  எனக்கும் எங்கள் ஊர் மீனவமக்களுக்கும் அது என்ன சாமான்..?  என்பது தெரியாது! யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த   பல  எழுத்தாளர்கள்  அன்று  வந்து  எனக்கு அறிமுகமானார்கள்.    இலக்கிய   விமர்சகர்   ஏ.ஜே. கனகரத்னா  எனது நூல்   பற்றி  அடுத்து  வந்த  மல்லிகை  இதழில்  விமர்சனம் செய்திருந்தார்.    எனது  நூல்  வெளியிட்டிலிருந்து  கிடைத்த   பணத்தை   அச்சகத்திற்கு கொடுத்தேன்.    அன்று  எனது  நூலின்  இலங்கை  விலை  நான்கு  ரூபா. மொத்தம்  87  பக்கங்கள்.   எனது  தொகுதி  வெளிவருமுன்னரே  எனது கதைகளைப்படித்திருந்த   சிலர்  இதழ்களில்  தமது  மதிப்பீட்டை எழுதியிருக்கிறார்கள். எனது   முதல்  குழந்தைக்கு  ஈழத்து  இலக்கிய  உலகில்  நல்ல வரவேற்பிருந்தது.   அதனைப் படித்திருந்த  தமிழ்நாட்டின்  பிரபல இலக்கியவிமர்சகர்   பேராசிரியர்  நா. வானமாமலையும்  சிலாகித்து விமர்சனக்குறிப்பு   எழுதியிருக்கிறார். 1976   ஆம்   ஆண்டு  ஒரு  நாள்  மாலை  ஏழு  மணியளவில்  எனது  நண்பர் செ.செல்வரத்தினம்   தனது  சைக்கிளில்  ஓடி வந்து  சொன்ன  செய்தி எனக்கு   இன்ப  அதிர்ச்சி  தந்தது. எனது   நூலுக்கு  அந்த  ஆண்டுக்கான  சாகித்திய விருது கிடைத்திருப்பதாக   சில  நிமிடங்களுக்கு  முன்னர்  இலங்கை வானொலி   ஆறு மணி   செய்தியில்  சொல்லப்பட்டதாக  அவர் தெரிவித்தார். என்னால்   அதனை  நம்பமுடியவில்லை.   செய்தி  கேட்பதற்கும்  வீட்டில் வானொலிப்பெட்டி    இல்லாத  ஏழ்மை  தாண்டவமாடிய  காலம்.   அன்று   இரவு  பக்கத்து  வீட்டுக்குச்சென்று,  இரவு  ஒன்பது  மணி செய்தியில்   எனது  நூலுக்கு  கிடைத்துள்ள  விருது  பற்றிய  செய்தியை கேட்டேன். சாகித்திய  விழா  எமது  ஊருக்கு  அருகாமையில்  அத்தனகல்லை தொகுதியில்   பத்தலகெதர  என்ற  ஊரில் ஆசிரியபயிற்சிக்கல்லூரியில்  நடந்தபொழுது,   இலங்கையின்  அன்றைய முதல்  ஜனாதிபதி  வில்லியம்  கொபல்லாவ  சாகித்திய விருதுக்கான  காசோலையை   வழங்கினார். அந்த   நிகழ்ச்சிக்கு  செல்வதற்கும்  என்னிடம்  பணம்  இருக்கவில்லை. எனது   அக்காதான்  பஸ்  செலவுக்கு  பணம்  தந்து  அனுப்பினார்.  கணினி,    மின்னஞ்சல்,   டிஜிட்டல்  அச்சுமுறை   இல்லாத அந்தக்காலத்தில்   எனது  முதல்  நூல்  ஒவ்வொரு  எழுத்துக்களாகக் கோர்க்கப்பட்டு   வெளியானது.   ஆனால்,  இன்று  நிலைமை  முற்றாக மாறியிருக்கிறது. இறுதியில்   சுமையின்  பங்காளிகள்  நூலின்  பிரதிகள்   எதுவும் கையில்   இல்லாத  நிலைக்கும்  நான்  வந்திருக்கின்றேன்.  சுமார்  ஐநூறு பிரதிகள்தான்  அச்சிட்டேன்.   சில  பத்திரிகைகளுக்கும் விமர்சனத்திற்காக   கொடுத்தேன்.   ஆனால்,  எந்தப்பத்திரிகையிலும் அப்பொழுது   விமர்சனம்    வரவில்லை.   எனது முதல் நூலுக்கு    பத்திரிகை ஊடகங்களில்    கிடைத்த  அங்கீகாரம்  அவ்வளவுதானாக்கும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். இத்தனைக்கும் நான் அப்போது வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர்.  எமது ஊர் இருந்த  கம்பகா மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கெல்லாம் சென்று செய்தி சேகரித்து எழுதப்போகும்போது ஏனைய பத்திரிகை நிருபர்களுடன் எனக்கு நட்புறவு ஏற்பட்டது. அந்த நட்பின் செல்வாக்கினை பயன்படுத்தியாவது, எனது முதல் நூலுக்கு வீரகேசரி உட்பட,  தினகரன், சிந்தாமணியில்  நூல் அறிமுகத்தை அல்லது விமர்சனத்தை வரச்செய்திருக்கலாம். ஆனால்,  இலங்கை வானொலி கலைக்கோலம் நிகழ்ச்சியில் சுமையின் பங்காளிகள் பற்றிய விமர்சனம் ஒலிபரப்பானதாக எனது செவிக்கு தகவல் எட்டியிருந்தது. வீட்டில் வானொலி இருந்தால்தானே அதனை கேட்டிருக்கமுடியும்.!?    ஆனால்,  எனக்கு  சாகித்திய விருது   கிடைத்தவுடன்   பத்திரிகைகளில்  முன்பக்கத்தில்   விருது பெறும்    படத்துடன்   செய்திகள்  வெளியாகியிருந்தன. ஒருநாள் வீரகேசரியில் செய்திகள்  எழுதியதற்கான எனது கூலியை ( கூலி என்றுதான் சொல்லவேண்டும்.  நாம் எழுத்தூழியம் செய்து  குறைந்த கூலி பெற்றவர்கள் ) வாங்கச்சென்றபோது, வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால், அருகே அழைத்து எனது கைபற்றி குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். குறிப்பிட்ட  சாகித்திய விருதுபெற்ற சுமையின் பங்காளிகள் தொகுதியில் இடம்பெற்ற நம்பிக்கைள் நம்பிக்கையற்றன என்ற சிறுகதையை அவர் வீரகேசரியில் பிரசுரிக்க ஏற்கவில்லை. ஆனால்,   அதனை நாடகமாக்கியபோது இலங்கை வானொலியில்  சங்கநாதம் என்ற இளைஞர்களுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய  வி. என். மதியழகன் ஏற்று ஒலிபரப்பியதுடன் இருபது ரூபா சன்மானமும் கிடைக்கச்செய்தார். சுமையின் பங்காளிகள் வெளியான தருணத்தில், அதன் ஒரு பிரதியை எடுத்துச்சென்று ஏரிக்கரையில் (Lake House ) தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதனிடம் நேரில் கையளித்தேன். அவ்வேளையில் அவரைப்பார்க்க கொழும்பு நாடகக்கலைஞர்    கலைச்செல்வன் வந்திருந்தார். எனது நூலின் அட்டையையும் பக்கங்களையும் புரட்டிப்பார்த்த ஆசிரியர்,  அதனை எனது முன்னிலையிலேயே வந்திருந்த கலைச்செல்வனிடம் கொடுத்துவிட்டார். அந்த கலைச்செல்வன் கூட அந்த நூல் பற்றி எங்கும் எழுதவில்லை.  இந்தச்செய்திகளை என்னிடமிருக்கும் நினைவாற்றலினால் மறக்காமல் சொல்லிவருகின்றேன்.  தேசிய சாகித்திய விழாவில்தான்  கலாசார திணைக்கள செயலாளர் கே.ஜி. அமரதாசவை முதல் முதலில் சந்தித்தேன்.  அந்தப்பரிசை வாங்கச்செல்லும்போது எங்கள் வீட்டிலிருந்தும் எவரும் வரவில்லை. அந்த விழா நடந்த  ஊருக்கு என்னுடன் வழித்துணைக்கு வந்தவர் தமிழ் அபிமானி  வண.  பண்டிதர் ரத்னவன்ஸ தேரோ. அவ்வேளையில் எனக்கும் எழுத்தாளர் சாந்தனுக்கும், சிறுகதை இலக்கியத்திற்காகவும்  செங்கை ஆழியானுக்கு  நாவலுக்காகவும் ஆத்மஜோதி முத்தையா, மற்றும்  தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி அதிபர். த. சண்முகசுந்தரம் ஆகியோருக்கும் பரிசு கிடைத்தது. அவர்களது உறவினர்களும்  வந்திருக்கவில்லை. இந்த இலட்சணத்தில்தான்   இருந்தது ஈழத்து எழுத்தாளர்களுக்கான அவரவர் குடும்பங்களின் அங்கீகாரம் !  ஆனால்,  இந்த குடும்ப உறவுகள் பின்னாளில்,  தங்களது சமூக அந்தஸ்திற்காக   “ தாம் இந்த எழுத்தாளரின் – இந்தக் கலைஞரின் உறவினர்  “  என்று தம்பட்டம் அடிக்கமாத்திரம் தவறுவதில்லை. அத்தகைய தம்பட்டங்கள் பலரை எனது உறவினர் வட்டத்தில் கண்டிருக்கின்றேன். பாரதி காலம் முதல்  தமிழ் எழுத்தாளனுக்குரிய அங்கீகாரம் அவரவர் குடும்பங்களில் இப்படித்தான் இருக்கிறது.  1987   இல்  அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்து  சுமார் 11 வருடங்களின்   பின்னர்  நீர்கொழும்பு  திரும்பியபொழுது என்னைச்சந்திக்க  வந்திருந்த  ஊடகவியலாளர்  கலாநெஞ்சன் ஷாஜகானிடம்   என்வசம்  சுமையின்  பங்காளிகள்  நூலின்  பிரதிகள் எதுவும்   இல்லை  என்று  கவலை   தெரிவித்தேன்.   அவர்  மறுநாள் திரும்பி   வந்து  தன்னிடமிருந்த  பிரதியை -                      "  நூலின்  ஆசிரியருக்கே இந்த   நூல்  அன்பளிப்பு"   என்று    எழுதி  ஒப்பமிட்டு  தந்தபொழுது நெகிழ்ந்துவிட்டேன்.  பின்னர்   அந்தத்தொகுதியின்  உதவியுடன்  இரண்டாவது  பதிப்பை 2007   ஆம்  ஆண்டு  எமது  குடும்பத்தின்  முகுந்தன்  பதிப்பகத்தின் சார்பில்     கணினியில்  அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றேன்.   இதனை  கணினியில்  பதிவுசெய்து  தந்தவர்   அவுஸ்திரேலியாவில்  இந்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி மறைந்த எனது ஆழ்ந்த நேசத்திற்குரிய நண்பர் கலைவளன்  சிசு. நாகேந்திரன். குறிப்பிட்ட  இரண்டாம்   பதிப்பை   கொழும்பில்  கிறிப்ஸ்  பதிப்பகம்  திரு. கிருஷ்ணமூர்த்தி   அச்சிட்டுத்தந்தார்.   இதற்கான  அட்டைப்படம் நீர்கொழும்பு   கடற்கரைக்காட்சி.   அந்த  ஒளிப்படத்தை எடுத்துத்தந்தவர்  நீர்கொழும்பைச்சேர்ந்த   நண்பர்   நாகேந்திரன்.  கனடாவில் வதியும் எழுத்தாள நண்பர் அ. முத்துலிங்கம்,  அந்த நூலைப்படித்துவிட்டு,  “ உங்களுடைய சிறுகதை தொகுப்பினை இப்போதுதான் வாசித்து முடித்தேன். சுமையின் பங்காளிகள் என்ற கதை அருமையானது. ஒரு கணவனே தன் மனைவியை பொலிசில் பிடித்துக்கொடுப்பான் என்பது மனதை வதைத்தது. உங்கள் உதவியால் கதைகளை நேரம் கடந்தாலும் படிக்க முடிந்தது.  “ என்று 08/05/2009 ஆம் திகதி எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். 1975  இல்  எனது  முதலாவது  நூல்  சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுப்பு    வெளியானது.     தற்போது என்னிடத்தில் இந்த நூலின் இரண்டாவது பதிப்பும் இல்லை. ! இதன்பின்னர்    இதுவரையில்   இருபத்திநான்கு    நூல்களை   வரவாக்கிவிட்டேன். எனினும் -  எனது  முதல் நூல்  வெளியீட்டு  அனுபவம்,   பல  முதல்  நிகழ்வுகள் வாழ்வில்   மறக்கமுடியாதிருப்பது  போன்று  நினைவில்  இன்றும் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. சுமைகள்   வாழ்வில்   சுகமானவை.    சுமையின்   பங்காளிகள் நினைவும்    துயரங்களைக்கடந்து    சுகமானவை. ( தொடரும் ) 







No comments: