இலங்கைச் செய்திகள்


பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு.!

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? : வெளிவராத உண்மைகள் : தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ 

கோத்­தா­வுக்கு விசேட நீதி­மன்றம் அறி­வித்தல்

இலங்கையில் அறிமுகமானது Street View

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு இந்தியாவும், இலங்கையும் இணக்கம் 




பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு.!



21/03/2016 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் இன்று மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார். 

இதனையடுத்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூபாலப்பிள்ளை பிரசாந்தன் நீதிமன்றின் உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 













புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? : வெளிவராத உண்மைகள் : தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ 


22/03/2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்டகுறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி கூட்டுறவுக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 3.0 மணியளவில் கவிஞர் பொன். காந்தன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.



புத்தகத்தின் சில பகுதிகள்
தலைவரைப்பற்றியது :-
“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;
“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”
தமிழினியின் கருத்தாக:-
“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார். அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது. 2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதூர், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது. புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.”

 “
 எதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி::-
“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப்பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப்போல சுதாகரித்துக் கொண்டேன். சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார். அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.
சளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது. அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிக இயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது. அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்
யுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான்:-
மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;
“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள், இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான் அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப்போகுது, யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதை கூறுவதற்காகத்தான்”.
அத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒரு வார்த்தை கூறப்படவில்லை. பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-
விதுஷா தமிழினியிடம்கூறியது :-
“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா. ”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”
“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்..:: “   நன்றி வீரகேசரி 








கோத்­தா­வுக்கு விசேட நீதி­மன்றம் அறி­வித்தல்


23/03/2016 பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களை மேற்­கொள்ள நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிறப்பு மேல் நீதி­மன்றம் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு நீதி­மன்றம் அறி­வித்தல் விடுத்­துள்­ளது.
விசேட மேல் நீதி­மன்றின் ஆணை­யாளர் ஐராங்­கனி பெர்­னாண்டோ இதற்­கான அறி­வித்­தலை விடுத்­துள்ளார். எதிர்­வரும் மே மாதம் 3 ஆம் திகதி இவ்­வாறு மன்றில் ஆஜ­ராகி சாட்­சி­ய­ம­ளிக்­கு­மாறு சிறப்பு மேல் நீதி­மன்­றினால் அறி­வித் தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ரஜ­ப­க்ஷவை கொலை செய்­வ­தற்­காக கொழும்பு, பித்­தல சந்­தியில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலை நடத்­திய குண்­டு­தா­ரிக்கு உதவி ஒத்­தா­சை­களை செய்த குற்றச் சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ள ஐவ­ருக்கு எதி­ரான வழக்கில் முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்சியாக சாட்சியமளிக்கவே கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இந்த அறிவித் தல் விடுக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 







இலங்கையில் அறிமுகமானது Street View

23/03/2016 இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.
இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும்.
கூகுள் இன்று இலங்கையில் வெளியிட்டுள்ள இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே பாவணைக்கு உள்ளது. 
கிடைக்கும் பாதை படத்தை(Street view)  மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல விரும்பும்இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம்(Google Maps) தெரிவிக்கிறது.
கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நிலை படங்களைக் அணுக முடியும், அல்லது  வரைபடத்தின் கீழ் வலது மூலையிலிருக்கும் மஞ்சள் "pegman" Icon அழுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்று கொள்ளலாம்.

நன்றி வீரகேசரி 








பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு இந்தியாவும், இலங்கையும் இணக்கம் 

23/03/2016 பலாலி விமான நிலையத்தை மேலதிக காணிகளை சுவீகரிக்காமல் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கு இந்தியாவும், இலங்கையும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப் பகுதியிலுள்ள மக்கள் மேலதிக காணி சுவீகரிப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையிலேயே விமான நிலையத்தை காணிசுவீகரிப்பின்றி தரமுயர்த்துவதற்கு இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஏ. நடராஜனை மேற்கோள்காட்டி  இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
இந்திய விமான நிலைய அதிகார சபைக்யின் ஐந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பலாலி விமான நிலையத்தின் களநிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது இவ்வாறிருக்க எதிர்கால நெரிசல்கள் மற்றும் பாரியளவிலான விமானங்களை தரையிரக்கக்கூடிய வசதி என்பவற்றை கருத்திற்க் கொண்டே பொதுவாக விமானநிலையங்கள் அமைக்கப்படுவதுன்டு. ஆனால் காணி அபகரிப்பு தொடர்பான சர்ச்சைகள் இல்லாமல் ஏதாவது விரைவான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் தற்போது காணப்படுகின்ற ஓடுபாதையினை நீடிக்காமல் வசதிகளை மேம்படுத்துவதே ஒரே மார்க்கமாகும் என்று இந்தியாவின் மற்றுமொரு துறைசார்ந்த அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.
பலாலி விமானநிலையத்திற்கு அருகிலிருக்கின்ற மக்கள் விமான நிலைய விஸ்தரிப்பின் போது தமது காணிகள் அபகரிக்கப்பட்டு விடுமமா என்ற அச்சத்திலிருக்கின்றனர். மேலும் விமானநிலையத்தில் அபிவிருத்தியானது மேலதிக  காணி அபகரிப்பின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமென வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் அண்மையில் தெரிவித்திருந்தார். 
பலாலி விமானநிலையத்தின் தற்போதைய ஓடுபாதையானது 2.3 கிலோமீற்றர் தூரம் கொண்டதாகும். சாதாரணமாக போயிங் 717 ரக விமானங்களை தரையிறக்கும் வசதி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி