இலங்கைச் செய்திகள்


எதிர்க் கட்சித் தலைவர்- தோமஸ் சந்திப்பு

இடம்பெயர்த 23 பேர் நாடு திரும்பினர்..!

பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுப்பு

பரராஜசிங்கத்தின் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது : சந்திரகாந்தன்

பிரதீப் மாஸ்டர், கஜன் மாமாவுக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்  கெஹேலிய 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மஹிந்த

விமல் ஊழலில் ஈடுபட்டமை உறுதி

பசிலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நத்தார் விழா

எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்






எதிர்க் கட்சித் தலைவர்- தோமஸ் சந்திப்பு





15/12/2015 நாட்டிற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் இன்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க இலங்கைக்கு இடையிலான நல்லுறவை பேணும் வகையில் திருகோணமலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே இருவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஏ.புஸ்பகுமார உட்டப பலர் கலந்து கொண்டனர்.  




நன்றி வீரகேசரி









இடம்பெயர்த 23 பேர் நாடு திரும்பினர்..!

15/12/2015  நாட்டில் இடம்பெற்ற கடந்த யுத்த காலத்தின் போது இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியைச் சேர்ந்த 23 பேர் இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இதுவரை காலமும் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தங்கியிருந்துள்ளனர்.
அவர்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி










பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுப்பு



14/12/2015 முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் இரண்டு மகள்களையும் பார்வையிடுவதற்காக ஜனநாயக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகவினால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணபத்தையே அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது.
 ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் போர்க் குற்றச் செயல் விசாரணை  அறிக்கையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதையடுத்தே இவருக்கான வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி











பரராஜசிங்கத்தின் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது : சந்திரகாந்தன்

16/12/2015 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினாருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்  போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.
 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் திருப்பலி பூசையில் ஈடுபட்டுக்கொணடிருந்த நாடாளுமன்ற உறப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தினுள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மிக வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். 
இக் கொலைச் சம்பவத்திற்கும் எனக்கும் எனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதனை கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக கிறிஸ்த்தவ மக்கள் நன்கு அறிவார்கள்.
கிழக்கு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நான் நிரபராதியாக வெளியில் வருவேன்
தற்போது ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தினை சாதகமாக்கிக் கொண்டு என்மீது சேறுபூச முற்படுவது திட்டமிட்ட நாகரிகமற்ற அரசியல் பழிவாங்கல் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்வார்கள்.
தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்றோ இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் பௌத்தம் என்றோ ஒருபோதும் வேற்றுமை பார்ப்பவன் நான் அல்ல. உலக மக்களின் விடியலுக்காய் உயிர்ப்பித்த யேசுபாலகன் பிறந்த இம் மாத்தில் மக்களுக்காய் அர்ப்பணிபபுடன் சேவையாற்றிய என்னை கைது செய்து சிறையில் தள்ளி அரசியல் பழி தீர்க்க முற்படுவதனை எந்த மட்டக்களப்பு கிறிஸ்த்தவர்களும்; ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி









பிரதீப் மாஸ்டர், கஜன் மாமாவுக்கு விளக்கமறியல்

16/12/2015 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோருக்கான விளக்கமறியல் இம் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் இவ்விரண்டு சந்தேக நபர்களும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மாதம் 7.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில்  04.11.2015 அன்று மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் புதன்கிழமை  இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் முன்னிலையில் இவர்களிருவரையும் ஆஜர்படுத்திய போது இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.  

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  2005ஆம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலய தேவலாயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி











ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா


17/12/2015 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விசாரணைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    நன்றி வீரகேசரி









ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்  கெஹேலிய 


17/12/2015 முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி







ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மஹிந்த


17/12/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில்  சுயாதீன தொலைக்காட்சியில் பிரசுரமான விளம்பரங்களுக்கு கட்டணம் செலுத்தாமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி






விமல் ஊழலில் ஈடுபட்டமை உறுதி


17/12/2015 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊழலில் ஈடுபட்டமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி









பசிலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை


17/12/2015 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.    நன்றி வீரகேசரி








மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நத்தார் விழா

20/12/2015 கிறிஸ்து பிறப்பை கொண்டாட இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடு செய்து கோலாகல நத்தார் விழா மாநகரசபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையல் நடைபெற்றது. 

இவ்விழாவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.சுவர்ணராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய அவர், தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்கின்ற வேத வாக்கியத்திற்கேற்ப இயேசுவை விசுவாசிக்கும் யாரையும் அவர் மறப்பதில்லை. மிகவும் எளிய நிலையில் உள்ள யாவரையும் நாம் கனம் பண்ணவேண்டும் அதனால்தான் இயேசு மாட்டுத் தொழுவத்தில் மிகவும் எளிமையாகப் பிறந்தார். ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டு போர் செய்யும் போர் வீரர்கள் நத்தார் பண்டிகை காலத்தின்போது துப்பாக்கிகளை கீழே வைத்து விட்டு மதுரசம் மற்றும் இனிப்புப் பண்டங்களைப் பரிமாறி இயேசுவின் தியாகம் மற்றும் அன்பு என்பவற்றை வெளிப்படுத்தும் நோக்ககோடு போர் மௌனித்து இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி







எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்

18/12/2015 யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்  ஐங்கரநேசன்,
2004 ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியதால் சுமார் ஒரு மணித் தியாலத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சுனாமியால் உடமைகள், உயிர்கள் என பல அழிவடைந்தன. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் நாம் மீளவில்லை. எனவே 26 ஆம் திகதியை நாம் 'பேரழிவு கட்டுபாடு நாள்" என பிரகடனம் செய்துள்ளோம்.
இதேவேளை இலங்கையில் எதிர்காலத்தில் காலநிலையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இயற்கை பேரழிவுகள் என்பது புதிதல்ல. எனினும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் பூமியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 
மேலும் உலகில் உள்ள எரிமலைகள் பல வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் பூமியில் வெப்பநிலை அதிகரித்துள்ள அதிக மழை பெய்யும் நிலையும் ஏற்பட்டு வெள்ளமும் ஏற்படுகின்றது. இந்த நிலைமையே அண்மையில் சென்னையில் ஏற்பட்டிருந்தது.

எனவே இயற்கை பேரழிவுகளிருந்து எம்மை பாதுகாத்துகொள்ள இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் இருப்பதோடு இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.   நன்றி வீரகேசரி