.
சிங்காரிதான் காவேரி - காவேரிதான் சிங்காரி
( கடந்தவாரத் தொடர்ச்சி )
நனவிடை தோய்தலில் வீரகேசரி - தினக்குரலின் ஊடகவியலாளர்
தனபாலசிங்கம்
என்னையும் தனபாலசிங்கத்தையும் செய்தி ஊடக வாழ்க்கைக்கு திசை திருப்பிய ஒருவரும் இருக்கிறார்.
அவர்தான் நண்பர் ஆ. சிவநேசச்செல்வன். தற்பொழுது கனடாவில் வதியும் அவர் 1983 இல் வீரகேசரியில் பிரதம ஆசிரியருக்கு வெற்றிடம் வந்தபொழுது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நூலகராக இருந்துவிட்டுவந்து இணைந்துகொண்ட விரிவுரையாளர்.
அவரை எனக்கு ஏற்கனவே கைலாசபதி யாழ். பல்கலைக்கழகத்தில் தலைவராக இருந்தபொழுது நடத்திய தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு காலத்திலிருந்து நன்கு தெரியும். அவர் வீரகேசரியில் இணையும்பொழுது நானும் ஆசிரிய பீடத்திலிருப்பதாகத்தான் நம்பிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்ற முதல் நாள் ஒரு திங்கட்கிழமை. அன்று எனக்கு விடுமுறைநாள். என்னைத் தேடியிருக்கிறார்.
நான் ஆசிரிய பீடத்தில் இல்லை, ஒப்புநோக்காளர் பிரிவில் இருப்பது , அறிந்து மறுநாள் நான் பணிக்கு வந்ததும் தமது அறைக்கு அழைத்து உரையாடிவிட்டு முகாமையாளருடன் கலந்துபேசி எனக்கு எந்த நேர்முகப்பரீட்சையும் நடத்தாமல் துணை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். அன்று முதல் அவருடனும் இதர ஆசிரிய பீடத்தவர்களுடன் தொடர்ச்சியாக சகோதர வாஞ்சையுடனான நட்புறவை இன்றுவரையில் பேணிவருகின்றேன்.
பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன் அப்பொழுது செய்தி ஆசிரியராக இருந்த ' நடா ' நடராஜா வாரவெளியீட்டுக்குப்
பொறுப்பாக இருந்த பொன். ராஜகோபால் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளனாக பணிதொடர்ந்தபொழுது ஒரு நாள் நண்பர் தனபாலசிங்கம் பற்றி சிவநேசச்செல்வனிடம் பிரஸ்தாபித்தேன். தனபாலசிங்கத்திடம் நல்ல ஆற்றல் இருக்கிறது. நிறைய வாசிப்பவர். அவரையும் பயன்படுத்துங்கள் என்றேன். சிவநேசச்செல்வனுக்கு பீக்கிங் சின்னத்தம்பியையும் நன்கு தெரியும். நான் சொல்லி மறுகணம் தனபாலசிங்கத்தை தமது அறைக்கு அழைத்தார். தனமும் ஆசிரியபீடத்துக்கு வரப்போவது அறிந்த அங்கிருந்த சிலர் முகம் சுழித்தனர்.
தொடர்ந்தும் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து ஆட்களை ஆசிரியபீடத்திற்கு எடுத்தால் தமது இமேஜ் பாதிக்கப்பட்டுவிடும் என்ற தயக்கம்தான் அந்த முகச்சுழிப்புக்குக் காரணம்.
ஏற்கனவே முன்னர் ஸி.எஸ். காந்தி என்பவரையும் ஆசிரியபீடம் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து எடுத்திருந்ததை அவர்கள் மறந்திருந்தார்கள். காந்தி மூத்த மலையகப்படைப்பாளியும் தொழிற்சங்கவாதியும் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான எழுத்தாளர் சி.வி. வேலுப்பிள்ளையின் நெருங்கிய உறவினர். அத்துடன் கவிஞர். முன்னர் அந்த ஆசிரியபீடத்தில் அன்ரன் பாலசிங்கம், கலாநிதி காசிநாதன், எழுத்தாளர்கள் சட்டநாதன்,
செ. கதிர்காமநாதன் ஆகியோரும் பணியாற்றியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த வ.ரா. அவர்களும் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
புதுமைப்பித்தனுக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் தமது குடும்பத்தைவிட்டு இலங்கைவருவதற்கு விரும்பவில்லை. இப்படி ஒரு பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட வீரகேசரியில் நான் 1983 இலும் நண்பர் தனபாலசிங்கம் 1984 இலும் ஆசிரியபீடங்களுக்குள் பிரவேசித்தோம்.
வட - கிழக்கில் நீடித்துக்கொண்டிருந்த போர் நடவடிக்கை தொடர்பான செய்திகளை நான் எழுதியபொழுது, தனபாலசிங்கம் வெளிநாட்டுச் செய்திச்சேவைகளான பி.ரி.ஐ. ரோய்டர் முதலானவற்றிலிருந்து கிடைக்கப்பெறும் ஆங்கிலச்செய்திகளை மொழிபெயர்த்துக்கொடுத்தார்.
பல நாட்கள் நடு இரவுவேலை முடிந்து வீடு திரும்பமுடியாமல் ஆசிரியபீடத்தின் மேசைகளிலேயே காகிதங்களை விரித்து, பத்திரிகைப் பிரதிகள் பிணைத்துவைத்துள்ள பெரிய பைல்களை தலைக்குவைத்துக்கொண்டு படுத்துறங்குவோம்.
மறுநாள் அங்கேயே குளித்துவிட்டு வழக்கம்போல் ஆமர் வீதியில் காலை உணவு முடித்து, மீண்டும் வேலைக்கு வரும்பொழுது தனபாலசிங்கம் கொட்டாஞ்சேனைக்குச்
சென்று மீண்டும் திரும்பிவருவார்.
அன்று குறைந்த வருமானம்தான். வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி வாழ்ந்தோம். ஆனால், எமது வசந்த காலங்கள் அவை. " இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே நண்பனே... நண்பனே..." என்று உரத்துப்பாடத்தோன்றுகிறது.
தனபாலசிங்கம் அழகாக மொழிபெயர்ப்பார். இவருடைய மொழிபெயர்ப்பினால் கவரப்பட்ட ஒருவர் அடிக்கடி வீரகேசரி அலுவலக வாசலில் தோன்றுவார். ஆனால், உள்ளே வரமாட்டார். அதற்கு வேறும் சில காரணங்கள் இருந்தன என்று தற்பொழுது கனடாவில் வதியும் முன்னாள் வீரகேசரி விளம்பர - விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் சொல்வார்.
அந்த மனிதர்தான் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் தலைவர் குமார் பொன்னம்பலம். தாம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எடுத்துவந்து தனபாலசிங்கத்திடம் கொடுத்து மொழிபெயர்த்து வாங்கிச்செல்வார்.
இந்தத்தொடர்பையும் எனக்கு உதவி செய்வதற்காக தனபாலசிங்கம் பயன்படுத்தியிருக்கிறார். அரியாலையைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர் தடுப்புக்காவலில் இருந்தபொழுது அவரை விடுவிக்க சில சட்ட ஆலோசனைகளை குமார்பொன்னம்பலத்திடம் அழைத்துச்சென்று பெற்றுக்கொடுத்தார்.
தனபாலசிங்கம் எனக்குச்செய்த மற்றும் ஒரு முக்கிய உதவியை மறக்கவே முடியாது.
1985 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக சோவித்துக்கு செல்லும் அழைப்பு எனக்கு கிடைத்தது. அவ்வேளையில் மாஸ்கோவில் சர்வதேச மாணவர் இளைஞர் விழாவும் மாநாடும் சோவியத் அதிபர் கொர்பச்சேவ் தலைமையில் நடந்தது. ஆனால், வீரகேசரியில் அன்று இருந்த நிருவாக இயக்குநர் எனக்கு மாஸ்கோ சென்று திரும்பி வருவதற்கு லீவு அனுமதிக்க மறுத்ததுடன் - வழக்கமாக அவ்வாறு வெளியே பிரதிநிதிகளாக தெரிவாகி செல்பவர்களுக்குத்தரப்படும் சன்மானம் ஐம்பது டொலர்கள் தருவதற்கும் மறுத்துவிட்டார். நான் எனது சொந்த லீவில் செல்வதற்கு மாத்திரம் அனுமதி தரப்பட்டது.
அம்மகாநாட்டிற்கு செல்லும் வெளிநாட்டுப்பிரதிநிதிகள் அங்கத்துவப்பணமாக 100 ரூபிள்கள் செலுத்தவேண்டும். அப்பொழுது ஒரு அமெரிக்க டொலர் ஏழு ரூபிள்கள் பெறுமதியானது.
வீட்டில் எனது குழந்தைகளுக்கு பால் மாவு வாங்கிக்கொடுப்பதற்காகவே வாரம் ஒரு தடவை 15 ரூபாவுக்கு வீரகேசரியில் கட்டுரைகளும் மித்திரனில் புனைபெயரில் தொடர்கதையும் எழுதிக்கொண்டிருந்த நான், அவ்வளவு பணத்திற்கு எங்கே செல்வேன். அந்த எதிர்பாராத பயணத்தை தவிர்க்கவே விரும்பினேன். எனது நிலையறிந்த நண்பர் தனபாலசிங்கம் தனது வீட்டுக்கு அனுப்புவதற்காக சேமித்துவைத்திருந்த பணத்தைத்தந்து என்னை மாஸ்கோவுக்கு விமானம் ஏற்றிவிட்டார்.
ஆயினும் அந்தப்பணத்தை காலம் கடந்துதான் 1987 இல் அவுஸ்திரேலியா வந்த ஆண்டு அலுவலக ஒளிப்படப்பிடிப்பாளர் நண்பர் சுரேந்திரன் ஊடாக சேர்ப்பித்தேன். ஏனென்றால் 1977 இல் கொழும்புக்கு வந்திருந்த தனபாலசிங்கத்திடம் பல ஆண்டுகள் வங்கிக்கணக்கும் இருக்கவில்லை.
1985 ஆம் ஆண்டளவில் தனபாலசிங்கம் ஆங்கில ஆசிரியர்களுக்கான விண்ணப்பத்தை கல்வி அமைச்சு கோரியபொழுது அதற்கு விண்ணபித்து தெரிவானார். அத்துடன் அவருக்கு உடனடியாகவே ஆசிரிய நியமனமும் கிடைத்தது. ஆனால், வீரகேசரி ஆசிரியபீடத்திலிருந்த ஆ. சிவநேசச்செல்வன், பொன். ராஜகோபால், நடராஜா ஆகியோரும் தோழர் சண்முகதாசனும் அதனை விரும்பவில்லை. திறமையுள்ள பத்திரிகையாளனை அவர்கள் இழக்கவிரும்பவில்லை.
" அந்த ஆசிரியப்பணிக்குச்சென்றால்
பத்தோடு பதினொன்றாக ஆசிரிய உலகில் காணமல்போய்விடுவாய்
" - என்றே அவர்கள் அறிவுறுத்தினார்கள். கோழி மேய்த்தாலும் அரசாங்கத்தின் சம்பளத்தில் மேய்க்கவேண்டும் என விரும்பும் யாழ்ப்பாணத்தின் சராசரிப் பெற்றோர்களுக்கிருந்த எண்ணம்தான் அவருடை தந்தை வீரகத்திக்கும் இருந்தமை இயல்பே.
அவர் பொன். ராஜகோபாலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகனை அந்த ஆசிரிய நியமனத்தை ஏற்குமாறு சொல்லுமாறு தூண்டினார். அதற்கு, " எதிர்காலத்தில் ஊடகத்துறையில்
தனபாலசிங்கம் பிரகாசிக்கும் சந்தர்ப்பத்தை இழப்பதை தான் விரும்பவில்லை " என்றார் ராஜகோபால். அதற்குத் தந்தையார் வீரகத்தி, "
எங்கே சம்பளம் எடுத்தாலும் ஒன்றுதான். சிங்காரிதான் காவேரி. காவேரிதான் சிங்காரி " என்று பாடினார்.
முடிவில் தனபாலசிங்கம் ஆசிரியப்பணிக்குச்சென்று சில நாட்களிலேயே திரும்பி வந்து மீண்டும் பத்திரிகையில் இணைந்தார்.
நானும் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் அவருடன் தொடர்பில் இருந்தேன். எதிர்பாராதவிதமாக அங்கு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. சாமி என்ற வர்த்தகப்பிரமுகர் தினக்குரல் பத்திரிகையை மட்டக்குளியில் தொடங்கியபொழுது வீரகேசரியிலிருந்து ராஜகோபால் தலைமையில் பலரும் விலகி தினக்குரலுக்குச் சென்றனர். அப்பொழுது சிவநேசச்செல்வனும் அங்கிருந்து விலகி ஒரு ஊடகக்கல்லூரயில் விரிவுரையாளராக இணைந்திருந்தார்.
இரவுபகலாக தினக்குரலின் வளர்ச்சிக்காக அங்கு இணைந்துகொண்ட அனைவரும் பாடுபட்டனர். இப்படி ஒரு நிலைமை முன்னர் உபாலி விஜேவர்த்தனா என்ற பிரபல வர்த்தகரினாலும் நிகழ்ந்திருக்கிறது.
அவர் விஜேவர்த்தனா குடும்பத்தில் நேர்ந்த சுமுகமற்ற நிலையால் The Island திவயின, சித்திர மித்ர ( சித்தரக்கதை இதழ்) முதலான பத்திரிகைகளை தொடங்கியபொழுது விஜேசோமா என்ற புகழ்பெற்ற கேலிச்சித்திரக்கலைஞர் உட்பட பலர் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்திலிருந்து விலகிவந்து உபாலியின் பத்திரிகையில் இணைந்தனர். அவ்வாறு வீரகேசரியிலிருந்து அங்கு சென்றவர்தான் தற்பொழுது கனடாவில் வதியும் புகழ்பெற்ற ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ்.
ஊடகத்துறையும் பருவகாலம் போன்று மாறிக்கொண்டிருப்பது. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளிலிருந்தெல்லாம் பலரும் - வருவார்கள். --- செல்வார்கள். நிருவாகங்கள் மாறும். காலம் கடந்து வீரகேசரியின் நிருவாக பீடத்திலும் மாற்றங்கள் வந்தன.
முன்னர் ஒரு காலகட்டத்தில் ஏரிக்கரை (Lake House) பத்திரிகை நிருவாகத்திலிருந்து மூத்த பத்திரிகையாளரான எஸ்மண்ட் விக்கிரமசிங்கா ( தற்போதைய பிரதமர் ரணிலின் தந்தை) பாலச்சந்திரன், க. சிவப்பிரகாசம்,
து. சிவப்பிரகாசம் ஆகியோரை வீரகேசரிக்கு அழைத்துச் சென்றார்.
அக்காலப்பகுதியில் வீரகேசரியிலிருந்து ஜோதி, நவீன விஞ்ஞானி உட்பட சிங்கள, ஆங்கில இதழ்களும் வெளியாகின. ஆனால் காலம்மாறியது. இன்றைய அதிபர் திரு. குமார் நடேசன் அவர்களின் நிருவாகத்தில் வீரகேசரியுடன் மேலும் பல இதழ்கள் வண்ண வண்ண பதிப்பில் வெளிவருகின்றன.
தினக்குரலில் தனபாலசிங்கம் முதலில் செய்தி ஆசிரியராகத்தான் இணைந்தார். அப்பொழுது அதன் ஆசிரியராக இருந்த பொன். ராஜகோபால் ஊடகக்கல்லூரியிலிருந்து ஆ. சிவநேசச்செல்வனையும் அழைத்து பிரதம ஆசிரியராக்கினார். இவர் விலகி மீண்டும் ஊடகக்கல்லூரிக்கு விரிவுரையாற்றச்சென்றதும்,
செய்தி ஆசிரியராக இருந்த தனபாலசிங்கம் பிரதம ஆசிரியரானார். இடையில் பொன். ராஜகோபாலும் மறைந்தார்.
தனபாலசிங்கம் தினக்குரலில் ஆசிரியத்தலையங்கமும் தொடர்ந்து எழுதினார். முன்னர் இவர் வீரகேசரியில் பணியாற்றியபொழுது பல சந்தர்ப்பங்களில் வீரகேசரி, மித்திரன் நாளேடுகளிலும் ஆசிரியத்தலையங்கம் எழுதி அனுபவம் பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக தினக்குரலிலும் எழுதினார்.
எளிமையிலும் செம்மையாக வாழ்ந்த எனது நண்பரின் முதலாவது நூல் ஊருக்கு நல்லது சொல்வேன் கொழும்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் நடந்தபொழுது என்னையும் வந்து பேசுமாறு அழைத்திருந்தார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மண்டபம் நிறைந்திருக்க நடந்த அந்த வெளியீட்டு அரங்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள், மற்றும் மனோ கணேசன் உட்பட பல ஊடகவியலாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். தினக்குரலில் தனபாலசிங்கம் தொடர்ந்து எழுதிய ஆசிரியத்தலையங்கங்களின் தொகுப்பு ஊருக்கு நல்லது சொல்வேன். அந்த விழாவில் கலந்துகொண்ட அவருடைய தந்தையார் அன்று தனது மகனை மற்றவர்கள் உள்ளத்தால் " சான்றோன் " எனக்கேட்ட நிலையில் பெருமிதத்துடன் இருந்தார். ஆனால், அந்தக்காட்சியைப்
பார்ப்பதற்கு சண்முகதாசனும் ராஜகோபாலும் இல்லை.
அந்த மேடையில் தனபாலசிங்கம் தன்னை ஊடகத்துறைக்குள் அழைத்த சிவநேசச்செல்வனுக்கும்,
அரச ஆசிரிய உத்தியோகத்திலிருந்து மீட்டு எடுத்து மீண்டும் பத்திரிகை உலகத்திற்கு அனுப்பிய தந்தையாருக்கும் உரியமுறையில் மரியாதை செலுத்தினார்.
அந்த நூலை புரவலர் புத்தக பூங்காவின் சார்பில் பதிப்பித்து வெளியிட்டவர் புரவலர் ஹாஷிம் உமர். ஆசிரியத்தலையங்கங்களை தேர்வுசெய்து தொகுத்தவர் கலைச்செல்வன். அந்த நூலுக்கு தமிழ்நாடு நாமக்கல் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதும் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து மற்றுமொரு ஆசிரியத்தலையங்கத்தொகுப்பு நோக்கு என்ற நூலையும் வெளியிட்டார். இதனை கொழும்பு குமரன் புத்தக இல்லம் பதிப்பித்துள்ளது.
தற்பொழுது 85 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வீரகேசரி நிருவாகத்தின் கீழ் தினக்குரலும் பயணிக்கிறது.
தனபாலசிங்கம் வீரகேசரி குழுமத்தின் மற்றுமொரு வெளியீடான சமகாலம் என்ற அரசியல் விமர்சன இதழின் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
நண்பர் மல்லிகை ஜீவாவுக்கு 80 வயது பிறந்ததும் அவரை வாழ்த்தி தினக்குரலில் விரிவான ஆசிரியத்தலையங்கம் எழுதினார். இந்த மரபு தமிழக பத்திரிகை உலகில் இருக்கவில்லை. அங்கும் இந்து, தினமணி,
தினகரன், தினத்தந்தி,
உட்பட பல ஏடுகளும் கட்சிகள் சார்ந்த ஏடுகளும் வெளியாகின்றன. சிலவேளை கட்சித்தலைவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு அந்த கட்சி ஏடுகள் ஆசிரியத்தலையங்கங்கள் எழுதியிருக்கலாம் ( உதாரணம்: கருணாநிதியின் முரசொலி) ஆனால் , ஏனையதேசிய நாளேடுகளில் அந்த மரபு நான் அறிந்தவரையில் இல்லை.
தினகரன் ஆசிரியராக இருந்த (அமரர்) சிவகுருநாதனும் அவ்வாறு மல்லிகை ஜீவாவுக்காக ஆசிரியத்தலையங்கம் எழுதியிருக்கிறார்.
நாம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தியன்றும் தனபாலசிங்கம் மாநாட்டை வரவேற்று ஆசிரியத்தலையங்கம் எழுதினார். பின்னர் 2011 ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மாநாடு தொடங்கியவேளையிலும் எழுதி எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
தோழர் சண்முகதாசன் நினைவாக சண் முன்னர் எழுதிவைத்திருந்த கார்ல் மாக்ஸ் பற்றிய ஆக்கங்களையும் தொகுத்து வெளியிடுவதில் முன்னின்றார். இவ்வாறு தனபாலசிங்கம் மேற்கொண்ட பணிகளை எழுதிக்கொண்டே இருக்கலாம்.
முன்னர் வீரகேசரியில் எம்முடன் ஒப்புநோக்காளராக பணியாற்றிய நண்பர் பிரணதார்த்திஹரன் பின்னர் தினக்குரல் ஆசிரியபீடத்தில் இணைந்து, சிறிதுகாலத்தில் செய்தி ஆசிரியராகவும் தற்பொழுது ஆசிரியத்தலையங்கங்களும் எழுதும் பிரதம ஆசிரியராகவும் பணி தொடருகின்றார்.
இவரைப்போன்றே எம்முடன் ஒப்புநோக்காளராக
பணியாற்றிய சிவராஜா தற்பொழுது வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றுகிறார். முன்னர் அங்கு அச்சுக்கோப்பாளராக இருந்த நண்பர் நெவில் அந்தனி தற்பொழுது அங்கு விளையாட்டுத்துறை செய்திகள் எழுதும் ஊடகவியலாளராக அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கும் வந்து விளையாட்டுத்துறை செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.
இந்தத்தகவல்கள் கூறும் வலிமையான செய்தியை இந்தப்பத்தியை வாசிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.
ஆற்றலும் உள்ளார்ந்த திறமைகளும் மிக்கவர்கள் சரியாக இனம் காணப்பட்டு, ஆக்கபூர்வமான திசையில் அழைத்துச்
செல்லப்பட்டால் அவர்களினால் நாட்டுக்கும் சமூகத்திற்கும்தான் நன்மைகள் அநேகம். எனவே எவரையும் புறம்ஒதுக்காமல், அவரவர் ஆற்றல்களை இனம்கண்டு வளர்த்துவிடவேண்டியது மூத்ததலைமுறையினரின் தார்மீகக் கடமையாகும்.
சமூகத்திற்காகப் பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும்தான் படைப்பாளிகளினதும் ஊடகவியலாளர்களினதும் பிரதான கடமை என்பதையும் புரிந்துகொண்டு பணிதொடரும் பொழுது, தமது பணிகள் வெற்றுப்புகழாரங்களுக்கானது
அல்ல என்ற தெளிவும் உள்ளத்தில் இருக்கவேண்டும்.
நண்பர் தனபாலசிங்கத்தைப்போன்று பல ஆளுமைகளின் வாழ்வும் பணிகளும் இன்றைய தலைமுறைகளுக்கு குறிப்பாக ஊடகத்துறைக்கு வருவதற்கு ஆர்வம் காண்பிப்பவர்களுக்கு பாடநூலாகத்திகழும். ஏனென்றால் தனபாலசிங்கம் போன்றவர்கள் இந்த ஊடகத்துறையில் பிரவேசித்த காலத்தில் கணினி இல்லை. மின்னஞ்சல இல்லை,
கைத்தொலைபேசி, ஐபேட், ஸ்கைப், முகநூல்,
டுவிட்டர் என்று எவையும் இருக்கவில்லை. கையில் இருந்தது காகிதமும் பேனையும்தான். ரோய்டரையும்,
பி.டி.ஐ. யையும் வானொலிகளையும்
தொலைபேசிகளையும் மாத்திரமே நம்பியிருந்தார்கள்.
இன்றுபோல் இலகுவான Download Journalism அன்று இருக்கவில்லை.
எனது இனிய நண்பர் தனபாலசிங்கம் பல்லாண்டு வாழவேண்டும் என வாழ்த்துகின்றேன்.