தமிழ் சினிமா

கண்ணா லட்டு தின்ன ஆசையா

பாக்யராஜ் இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ என்ற பழைய படத்தின் கதைதான் என்றாலும், திரைக்கதையை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
சந்தானம், பவர் ஸ்டார், சேது என்று மூன்று இளைஞர்களும் எதிர் வீட்டுக்கு குடிவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள்.
விசாகா ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.
நாயகியை கவர்வதற்காக பழைய படத்தில் மூன்று பேரும் நாயகியின் அம்மா, அப்பா, தாத்தா மூலம் விதவிதமான டெக்னிக்குகளைக் கையாள்வது போலவே, இந்தப் படத்திலும்.
ஆனால் ஒரிஜினல் படத்தில் இருந்த உயிர்ப்புடன் கூடிய நகைச்சுவை இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.
விசாகாவை கவர்வதற்காக, அவருடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று ஓவ்வொருவரையும் மூவரும் ஐஸ் வைக்கிறார்கள்.
இறுதியில், விசாகா யாரை காதலிச்சார்? முடிவு என்ன ஆச்சு? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.
படத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம்.
சீனிவாசன் அழுகிற போஸை படமெடுத்து அவரிடமே காட்டுவார் சந்தானம். அவர் இன்னும் அழுதபடி, 'நல்லால்ல' என்று சொல்ல.. 'தெரியுதுல்ல' என்பார்.
இப்படி படம் முழுக்க சந்தானம் தன் பெஸ்ட் ஒன் லைனர்களை அள்ளிவிட்டுக் கொண்டே இருக்கிறார்.
பவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’ பாடலுக்கு நடனம் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப் பயிற்சி மேற்கொள்வது என்று அசத்துகிறார்.
"என் கிட்ட இல்லாததது சிம்புகிட்ட என்னமா இருக்கு" என்று பவர்ஸ்டார் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.
சந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.
இந்த படத்தின் மூலம் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் சேதுவுக்கு ஓரளவு நடிப்புக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அழகான கதாநாயகி விசாகா நன்றாகவும் நடித்திருக்கிறார்.
சங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு.
கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் கொமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.
படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை கொமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.
பழைய படத்தோடு ஒப்பிட்டு பார்க்காமல் புதிய படமாக பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம்.
தமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் லட்டு தின்ற திருப்தியுடன் படம் நிறைவடைகிறது.

No comments: