கவலை. -குட்டிக்கதை


.
செல்வந்தர்  ஒருவருக்கு எப்போதுமே கவலை. ஒரு நாள் அவர், துறவி ஒருவரைச் சந்தித்தார்.
""சுவாமி! பணம் நிறைய வைத்துள்ளேன்.ஆனாலும் மனதில் நிம்மதியில்லை. கவலையைப்  போக்கவும் நிம்மதி பிறக்கவும்  வழி சொல்லுங்கள்,'' என்றார்.
""உன்னிடம் பணம் நிறைய இருக்கிறதல்லவா! கடமையுணர்வுடன், எதிர்பாராமல் மனப்பூர்வமாக தானம் செய்,'' என்றார் துறவி.
செல்வந்தரும்  தானம் செய்ய ஆரம்பித்தார். தினமும் துறவியைச் சந்தித்து, ""சுவாமி! இன்று ஆயிரம் ரூபாய் தானம் செய்தேன், இன்று பள்ளிக்கூடத்துக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன், இன்று ஒரு ஏழை ஒருவருக்கு  பசுமாடு வாங்கிக் கொடுத்தேன், இன்று ஆலயத்திற்கு  நூறு லிட்டர் எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன், இன்று பத்துப்  பேருக்கு அன்னதானம் வழங்கினேன், இன்று ஏழைகளுக்கு    உடுப்பு வழங்கினேன் ஆனாலும், பலன் ஏதும் தெரியவில்லையே,'' என்று சொல்வார்.
துறவி சிரிப்பாரே தவிர பதில் சொல்லமாட்டார்.
ஒருமுறை லட்சம் ரூபாயை அநாதை இல்லத்திற்கு தானம் செய்துவிட்டு துறவியிடம் வந்தார்.
""சுவாமி! ஒருவேளை குறைந்த தானம் செய்ததால், என் மனதில் நிம்மதி வரவில்லை என நினைத்து, இன்று அதிக பணத்தை தானம்    செய்தேன். ஆனால், மனம் என்னவோ சஞ்சலத்தில்தான் இருக்கிறது,'' என்றார்.
துறவி அவரிடம், ""வெயிலில் போய் சற்று நில்லும்,'' என்றார்.செல்வந்தரும் நின்றார். கால் சுட்டது. ""சுவாமி, கால் சுடுகிறதே,'' என்றார்.
""உமது நிழல் தரையில் விழுகிறதா?'' என்றார் துறவி.

""ஆம்'' என்ற செல்வந்தரிடம், ""வெயிலில் இருந்து தப்ப உமது  நிழல் மீது காலை ஊன்றும்,'' என்றார். செல்வந்தரும் காலை ஊன்ற நிழல் சற்று தள்ளிப்போனது.
""செல்வந்தரே! உமது நிழல் கூட இந்த உலகத்தில் உமக்கு உதவவில்லை. நீர் சேர்த்து வைத்துள்ள பணம் எவ்வகையில் உதவும்!
எதிர்பார்த்து உதவி செய்யும் எந்த காரியமும் இப்படித்தான்.நாம் செய்யும் தானத்தை, பிறருக்குச்  செய்யும் உதவியை  கடமையுணர்வுடன் மனப்பூர்வமாய் உள்ளன்போடு செய்தல் வேண்டும்.அப்படிச் செய்தால் கவலை போய், நிம்மதி தானாக வரும்.நாமாக  அதைத் தேடி அலைய  வேண்டியதில்லை என்றார்""

செல்வந்தர் சொன்னார், சுவாமி ! தாங்கள் எதையுமே எதிர்பாராமல்தான்  இந்த தவ வாழ்க்கையை  மேற்கொண்டீர்களா?என்று கேட்டார்.

எதிர்பார்த்துச் செய்வது தவமும்  அல்ல துறவும் அல்ல.துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் எவருமே யாசிப்பதற்காக  துறவறம் மேற்கொள்வதில்லை,தவமும் செய்வதில்லை.துறவு என்பது கடமையறம், இதை உணராதவர்களே அறியாமையில் சிக்கித் தவிக்கிறார்கள். கடமையறம் உணராத  மனிதர்கள்  இறைவனை வணங்கும்போது பிரதிபலனை எதிர்பார்த்து வணங்குகின்றார்கள்.எனக்கு சுகத்தைக் கொடு, பணத்தைக் கொடு, பிள்ளையைக் கொடு என சுயநலத்துடன் வேண்டுதல் நடத்துகிறார்கள். நாமே இறைநிலையின் அங்கமாக இருப்பதை உணர்ந்தபின் யாரிடம் நாம் கையேந்தி  யாசிப்பது?.அணுவிற்குள்ளும்  இறைத்தன்மையை உணர்ந்தோர், அணுத் துகள்களில் பரிபூரணத்தை உணர்ந்தோர் கடமையுணர்வுடன்  வாழப்  பழகிக்கொள்வார்கள் என்றார் துறவி.

சுவாமி! நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க? தனது அடுத்த கேள்வியைக் கேட்டார்  பணக்காரர்.

மனிதன் தனியாக இல்லை, சமுதாயத்தின் அங்கமாகவே இருக்கிறான், மற்றவர்களைச் சார்ந்தே இருக்கிறான்.ஒருவரை ஒருவர் இணைந்து பிண்ணப்பட்டதுதான் நாம் காணும் சமுதாயம்.செயல் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் உதவி செய்பவன், உதவி பெற்றும் செல்வான் என்றார் துறவி.
விளக்கம் பெற்ற சந்தோசத்தோடு, செல்வந்தர்  துறவியை வணங்கிவிட்டு,  உள்ளன்போடு மனப்பூர்வமாய் எளியோருக்கு உதவிசெய்யக் கிளம்பினார்.   

"கவலை ஏன் " என்பதை வேதாத்திரி மகரிஷி பின் வருமாறு விளக்குகிறார்:
பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்பனவற்றில் பேராசை கொண்டு, கற்பனையால் சில வரவுகளை எதிர்பார்ப்பார்கள் அல்லது பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது இறையாற்றலின் திருவிளையாடலாக இருக்கிறது. இந்த உண்மையறியாமல் செயலின்றிக் கற்பனையால் ஒரு விளைவை எதிர்பார்ப்பதும், கடமைக்கும் உறவுக்கும் பொருந்தாமல் பிறரிடமிருந்து ஒன்றை எதிர்பார்ப்பதோ அல்லது ஆசையின் பெருக்கத்தால் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதோ வெற்றியடைவதில்லை. இது இயற்கை நியதி. சிந்தனையின்றி இயற்கையின் நியதிப்படி அமைந்த விளைவுகளை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்பார்த்த ஆசையையும் அப்படியே வைத்துக் கொண்டு, ஏமாற்றத்தையும் ஒப்புக் கொள்ளாமல், ஏற்படும் மனப்பிணக்கு தான் கவலை. இங்கு கடமைகளை ஒட்டி, செயல்களையொட்டித் திட்டமிட்ட விளைவுகளை எதிர்பார்ப்பது தவறாகாது. இது கடமையைச் சார்ந்ததாகும்.

No comments: