அவுஸ்திரேலியாவில் 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

.
மாலதி முருகபூபதி


அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 12 ஆவது விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணி வரையில் மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. சிறிகந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

சிறுவர் அரங்கு, மாணவர் அரங்கு, கருத்தரங்கு, கவியரங்கு, நூல் வெளியீட்டு அரங்கு, கலையரங்கு உட்பட ஏழு அரங்குகளில் நடைபெறவுள்ள பன்னிரண்டாவது தமிழ் எழுத்தாளர்விழாவில் ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளும் தமிழ் ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா?’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு இங்கு வதியும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழை ஒரு பாடமாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள அனுபவம் என்று கருதப்படுகிறது.


இந்நாட்டில் பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சைக்கு தாய்மொழியான தமிழையும் ஒரு பாடமாகப்பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்களும் அவர்களைப்பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் பயனுள்ள கருத்துக்களை கேட்டறிவதற்கு இக்கருத்தரங்கு சிறந்ததொரு வாய்ப்பாக அமையும்.

மெல்பன், கன்பரா, சிட்னி முதலான நகரங்களிலிருந்து வருகைதருபவர்கள் இக்கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளனர். தமிழில் சிறுகதை, கவிதை, நாவல், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், மற்றும் நுண்;கலைகள் தொடர்பான கருத்துரைகள் இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

சிறுவர் அரங்கு மற்றும் மாணவர் அரங்குகளும் இங்கு தமிழைப்பேசும், பயிலும் சிறார்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். எனவே மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

இதர நிகழ்ச்சிகள்

“ புலம்பெயர்ந்ததால் தமிழர்கள் நாம் நிலை உயர்ந்தோமா?” என்ற தலைப்பிலான கவியரங்கும், நிருத்தா இந்தியன் பைன் ஆட்ஸ் வழங்கும் நடன நிகழ்ச்சியும், திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களின் நெறியாள்கையில், சிட்னிக் கலைஞர்கள் தயாரித்தளிக்கும் மஹாகவியின், “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்ற குறு நாடகமும் இடம்பெறுகின்றன.

நூல்வெளியீடு


இனவிடுதலைப்போரில் களமாடி விதையாகிப்போன பெண்போராளிகளின் ‘பெயரிடப்படாத நட்சத்திரங்கள்’ கவிதைத்தொகுப்பு நூலும் வனொலி மாமா ந. மகேசன் எழுதிய ‘திருக்குறளில் புதிய தரிசனங்கள்’ நூலும் இவ்விழாவில் வெளியிடப்படவுள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘ஜீவநதி’ கலை,இலக்கிய மாத இதழின் அவுஸ்திரேலிய சிறப்பிதழும் இந்த எழுத்தாளர்விழாவில் வெளியிடப்படும். ‘ஜீவநதி அவுஸ்திரேலிய சிறப்பிதழில்’ தரமான பல படைப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சிறப்பிதழும் இங்குள்ள உயர்தரவகுப்பு தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள பல தகவல்களைக் கொண்டுள்ளது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக இராப்போசன விருந்து இடம்பெறும்.





No comments: