ஈகைப் பெருநாள்!

.
31/8/2011

ஏழை மக்களுக்கு உணவளிக்குமாறு வலியுறுத்துகிறது ஃபித்ரா கடமை!
நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறிய போது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளைக் கொண்டாடி வந்தனர். அதிலொன்றை வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி,

"நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள்" என்றார்கள். இந்த நபிமொழி அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

ஃபித்ரா கடமை

பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி அவர்கள் அறிவுறுத்தினார்கள். நபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி,

"தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதி)

நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத் துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவுவூத்)

நபி காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு 'ஸாவு' ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம்" என நபித்தோழர் அபூசயீத் அல்குத்ரி ரலியல்லாஹு அன்ஹு கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூ தாவூத், போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம்பழம் ஆகியவற்றை 'தர்மமாக'க் கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

"நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்“. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர் ஆன் 3:93)

நாம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92 நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்குக் கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.



வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப் பெருநாள் எனப் பெயரானது.

நன்றி வீரகேசரி

No comments: