உலகச் செய்திகள்

.
* கடாபி குடும்பத்தினர் அல்ஜீரியாவுக்குத் தப்பியோட்டம்! _

* அமெரிக்காவில் 'ஐரீன்' சூறாவளி: இலங்கையருக்கு பாதிப்பு இல்லை

* லிபியாவில் ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

*  கடாபியின் எழுச்சியும் வீழ்ச்சியும் -என்.கிருஷ்ணராஜா





கடாபி குடும்பத்தினர் அல்ஜீரியாவுக்குத் தப்பியோட்டம்! _
30/8/2011

கடாபியின் மனைவி, அவரது மகள் மற்றும் மகன்மார் அல்ஜீரியாவுக்குத் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் கடாபி தொடர்பில் அந்நாட்டு அமைச்சு எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

அதேவேளை, கடாபி குடும்பத்தினருக்குப் புகலிடம் அளித்தமைக்கு லிபிய கிளர்ச்சியாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடாபியின் மனைவி சபியா, மகள் ஆயிஷா, மகன்மார்களான மொஹமட், ஹனிபல் மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகியோரே லிபியாவை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கடாபி மற்றும் அவரது மற்றைய மகன்மார்களான ஷாடி, சயிப் அல் இஸ்லாம் ஆகியோர் தென் திரிபோலி நகரான பானி வாலிட்டில் உள்ளதாக இத்தாலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி இணையம்

அமெரிக்காவில் 'ஐரீன்' சூறாவளி: இலங்கையருக்கு பாதிப்பு இல்லை _

28/8/2011

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப்ப குதியில் ஏற்பட்டுள்ள ‘ஐரீன்’ சூறாவளி அபாயத்தினால் இலங்கையருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சுமார் 20 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

அத்திலாந்திக் சமுத்திரத்தில் தோன்றிய ‘ஐரீன்’ என்ற சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை நேற்று சனிக்கிழமை தாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த ‘ஐரீன்’ சூறாவளி மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவின் கிழக்கு பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றில் ஆபத்தான பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 8 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தங்களில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க், நியூஜேர்ஸி, வேர்ஜினியா, மேரிலண்ட், வடகரோலினா கனெக்டிகட், டெலாவர் ஆகிய 7 மாநிலங்களிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க்கின் பிரதான 5 விமான நிலையங்களும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை சுமார் 7000 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம், தகவல்களை அறிந்து கொள்வதற்காக 0012023520355 என்ற தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி இணையம்

லிபியாவில் ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் _


31/8/2011
லிபியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியால் கடந்த ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லிபிய தலைவர் கடாபிக்கு எதிராக கடந்த பல மாதங்களாக தொடர் தாக்குதல் இடம்பெற்று வந்தது. இதன்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறிருக்க திரிபோலியில் உள்ள மக்கள் குடிநீர் உட்பட எதுவும் இன்றி பட்டினியால் பெரும் துன்பத்தை எதிர்நோக்குகின்றனர். திரிபோலி பகுதிக்குச் செல்லும் குடிநீர் கடாபியின் படைவீரர்களால் மூடப்பட்டுள்ளதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு , ஐ.நா உட்பட ஏனைய அமைப்புகள் உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது

நன்றி வீரகேசரி

கடாபியின் எழுச்சியும் வீழ்ச்சியும்  -என்.கிருஷ்ணராஜா

அரபு நாடுகளின் நட்சத்திரமாக ஒரு காலத்தில் புகழப்பட்ட லிபிய தலைவரின் 42 வருட கால ஆட்சி முடிவை எட்டிவிட்டது. கடந்த வாரங்களில் கடாபி ஆட்சியின் எதிர்ப்பாளர்கள் லிபியாவின் திரிபோலி நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் கடாபியின் அதிகாரம் லிபியாவில் மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் பூரணமாக அற்றுப் போயுள்ள நிலையில் கேணல் கடாபி தலைமறைவாகியுள்ளார்.

கடாபியின் வருகை

அரபு முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட லிபியா - வட ஆபிரிக்கா நாடுகளில் ஒன்று. வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் ரோமப் பேரரசு, ஒட்டமான் பேரரசு, இத்தாலி ஆகியவற்றின் ஆட்சிக்குக் கீழ் வந்த லிபியா, இரண்டாம் உலக யுத்த முடிவில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய இராணுவ ஆட்சியின் கீழ்வந்தது. 1951இல் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய லிபியாவில் மன்னராட்சி ஏற்படுத்தப்பட்;டது.

இரத்தம் சிந்தாத இராணுவ புரட்சி மூலம் மன்னர் இட்ரிஸை 1969இல் பதவியிலிருந்து அகற்றிய இராணுவ கப்டனான முவமர் கடாபி நாட்டின் அதிபரானார். அப்போது அவருக்கு 27 வயது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு

கடாபி பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே லிபியாவிலிருந்து பிரிட்டிஷ், அமெரிக்க இராணுவ தளங்களை அகற்றினார். எண்ணெய் நிறுவனங்ளுடன் புதிய ஒப்பந்தங்களை செய்ததன் மூலம் லிபியாவின் எண்ணெய் வருமானத்தை அதிகரித்துக் கொண்டார். இத்தாலியின் ஆட்சிக்குட்பட்டிருந்த 1911-1943 காலப்பகுதியில் லிபியாவில் குடியேறியிருந்த 20,000 இத்தாலியர்களை கடாபி 1970இல் நாட்டைவிட்டு வெளியேற்றினார்.

எண்ணெய் கம்பனிகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனாலும் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்ததனாலும் லிபிய மக்களின் தலாவீத வருமானம் பெருமளவு அதிகரிப்பை கண்டது.

பொதுநல நடவடிக்கைகள்

கடாபி ஆழ்துளை கிணறுகளை அமைத்து நகரப்புறங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். லிபியாவில் பெற்றோலிய இரசாயன கைத்தொழில்கள், உருக்கு மற்றும் சீமெந்து கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தார்.

இலவச கல்வி, மருத்துவம், முதியோர் கவனிப்பு என பல சமூக நலச் செயல்களில் முதலீடு செய்தார். சகலருக்கும் வீடு என்னும் திட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் கூடார வாழ்வை லிபியாவிலிருந்து அகற்றினார். சகலருக்கும் வீடு வழங்கும்வரை தன்னுடைய தாயாரை கூடாரத்திலேயே தங்க வைத்தார்.

அரேபிய ஒன்றியம்

ஐரோப்பிய யூனியனை ஒத்த அரேபிய ஒன்றியத்தை அமைப்பது இவரது இலட்சியமாக இருந்தபோதும் அதற்கு ஆதரவு கிட்டவில்லை. அயல்நாடான டுனீஸியாவை இணைத்து ஓர் அரசாக்கும் இவரது எண்ணமும் கைகூடவில்லை. மக்காவை உலக முஸ்லிம்களின் பொதுச் சொத்தாக்க வேண்டுமென்று கூறியதன் மூலம் சவுதி அரேபியாவின் பகையை சம்பாதித்துக் கொண்டார்.

புரட்சியை பரப்புதல்

பாரஸீக நாடான ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் பலவும் கூட்டு சேர்ந்தபோது கொள்கையின் அடிப்படையில் ஈரானுக்கு ஆரவாக செயற்பட்டவர் கடாபி.

சர்வதேச ரீதியில் கிளர்ச்சிகளுக்கும் சுதந்திர போராட்டங்களுக்கும் ஆதரவு அளித்ததன் மூலம் கடாபி தேவையில்லாத பல பகைகளை தேடிக்கொண்டார். 1970 இன் பிற்பகுதிகளில் பிற நாட்டு கிளிர்ச்சியாளர்களுக்கு லிபியாவில் பயற்சி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐரிஸ் குடியரசு இராணுவம், வெனிசூலா கிளர்ச்சிக்காரர் ஆகியோருக்கு கடாபி ஆதரவு வழங்கினார்.

இஸ்லாம் மீது அதிக விருப்பமும் நாட்டமும் இருந்தபோதிலும் கடாபி மத தீவிரவாதியல்ல. பெண் விடுதலைக்கும் பெண்களின் சமூக பங்கெடுப்பிற்கும் ஆதரவு கொடுத்தார். லிபிய இராணுவத்தில் நன்கு பயற்சியளிக்கப்பட்ட பெண்கள் இருந்தனர்.

சர்வதேச பயங்கரவாதம்

லிபியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான பகைமைக்கு நீண்டகால வரலாறு உள்ளது. 1986இல் பெர்லினில் கிளப் ஒன்றில் லிபிய ஏஜென்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் முகமாக அப்போது ஜனாதிபதியாக இருந்த றொனால்ட் றீகன் - லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசினார். இத்தாக்குதலின் போது கடாபியின் வளர்ப்பு மகள் உட்பட 60 லிபியர்கள் கொல்லப்பட்டனர்.

லிபிய ஏஜென்டுகள் ஸ்கொட்லாந்து நகரமான லொக்கபி மேலாக பறந்து கொண்டிருந்த Pan Am Flight 103 என்னும் விமானத்தை சுட்டு விழுத்தினர். இதன்போது பயணிகள், விமானப் பணியாளர்கள் 270 பேர் கொல்லப்பட்டனர்.

சஹாரா மீது பறந்துகொண்டிருந்த UTA Flight 774, லிபியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட போது 170 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

கடாபியின் மறுபக்கம்

பல வருடங்களாக கேணல் கடாபி மக்களின் விருப்பத்துக்குரிய தலைவனாக இருந்துள்ள போதிலும் இவரது வன்முறைகள் இவர் மீது மறையாத வரலாற்றுக் கறையாக இருக்கும் என்பது உண்மையே. 1974 – 1976 காலப்பகுதியில் இவர் பொது இடத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தூக்குத் தண்டனை முறையை நடைமுறைப்படுத்தினார்.

மறியலிலிருந்து 1100 அதிருப்தியாளர்களை சுட்டுக்கொல்லும்படி 1996இல் கட்டளையிட்டதன் மூலம் தனது ஈவிரக்கமற்ற இன்னொரு பக்கத்தை உலகறியச் செய்தார்.

அடங்கிப் போதல்

சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவித்தமைக்காக 1986இல் லிபியா மீது ஐ.நா பொருளாதாரத் தடை விதித்தது. இத்தோடு கடாபியின் துணிச்சலும் தீவிரமும் குறையத் தொடங்கின.

2003இல் லொக்கர்பி விமானத் தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட, லிபியாவில் மறியலிலிருந்த இரண்டு லிபிய பிரஜைகளை முவம்மர் கடாபி பிரித்தானியாவிடம் 1999இல் ஒப்படைத்தார். அத்துடன், 2003இல் இதே சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடாக கடாபி 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கினார்.

இதன்பின் கடாபி - அமெரிக்காவிடமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமும் நல்ல பிள்ளையாகவே நடந்து கொண்டார். 2006இல் அமெரிக்கா, லிபியாவுடன் முழுமையான இராஜதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டது. சர்வதேச விவகாரங்களில் இந்த நாடுகளுக்கு எதிராக கருத்துக் கூறுவதைக் கூட கடாபி தவிர்த்துக் கொண்டார். இவ்வாறெல்லாம் கடாபி இவர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாலும் சந்தர்ப்பம் கிடைத்த போது பழையதை மறக்காமல் மேற்கத்தைய நாடுகள் இவரை பழி வாங்கிவிட்டன என்றே கூற வேண்டும்.

உள்நாட்டு எதிர்ப்பு

லிபியாவின் வடமேற்கு பிராந்தியங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதன் காரணமாக வடமேற்கு நகரங்களில் மக்களின் குடித்தொகை அதிகரித்தது. இதனால் நகரமயமாதலுடன் தொடர்பான பல பிரச்சினைகள் தோன்றின. கிழக்குப்பகுதி கவனிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கருதியதால் அதிருப்திகள் பரவின.

கடாபி - மக்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கு தடைவிதித்தார். தனியார் உடைமைகள் சிலவற்றை தேசியமயமாக்கினார். வெளிநாட்டு, உள்நாட்டு வர்த்தகத்தை அரசே நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். கடாபிக்கு எதிரான கலகங்கள் மிக மோசமாக ஒடுக்கப்பட்டன. இவையே லிபிய மக்களில் ஒரு பகுதியினராவது இவருக்கு எதிரான கலகங்களில் ஈடுபட காரணமாயின.

லிபியாவுக்கு அண்மையிலுள்ள எகிப்து, டுனீஸியா ஆகிய நாடுகளில் மக்களின் கிளர்ச்சியினால் சர்வாதிகார தலைவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்ட உதாரணங்களும் உள்நாட்டில் கடாபிக்கு எதிராக காணப்பட்ட எதிர்ப்புணர்வுகளும் லிபியாவில் கிளர்ச்சியை தூண்டின.

தலையீடு

இந்த கிளர்ச்சிகளை அடக்குவதற்கு கடாபி மேற்கொண்ட மோசமான வன்முறையே கடாபியை கவிழ்ப்பதற்கு காத்திருந்த நேட்டோ நாடுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.

பெப்ரவரி 2011 இல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் கடாபியின் ஈவிரக்கமற்ற வன்முறைக்கு பலியாகினர்.

கடாபியின் ஆட்சிக்கு எதிராக கலகங்களை தூண்டுவதில் சி.ஐ.ஏ.யும் தனது கைவரிசையை காட்டியது. சி.ஐ.ஏ. கிழக்குப்பகுதி கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டது. சி.ஐ.ஏ. இவர்களுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்தது. தகவல் தொடர்பு வசதிகளும் சி.ஐ.ஏ.யினால் செய்து கொடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பங்கு

லிபியாவின் வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. 2011 மார்ச் 18 இல் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே லிபிய அரசு கிளர்ச்சியாளருக்கு எதிரான தன்னுடைய இராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. அதன் பின்பும் ஐ.நா. ஆதரவுடன் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் லிபியா மீதான தாக்குதலை தொடங்கின.

2011 மார்ச் 19ஆம் திகதி முதல் அமெரிக்க - பிரெஞ்சு படைகளால் தொடங்கப்பட்ட லிபியா மீதான தாக்குதலுக்கு Operation Odessy Daw என பெயரிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கண்டித்திருந்தாலும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பிரயோகிக்கவில்லை.

கடந்த ஐந்து மாதங்களில் நேட்டோ 7,500 விமான தாக்குதலை லிபியாவில் மேற்கொண்டது.

ஜூன் மாதத்தில் சர்வதேச குற்றச்செயல் நீதிமன்றம் கடாபியின் மீதும் அவரது மகன் சைப் அல் இஸ்லாம் மீதும் மனித இனத்துக்கெதிரான குற்றச்செயலுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.

முடிவு

திரிப்போலி நகரம் முழுவதும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். கடாபியின் மகன் தொடர்ந்து போரிடும் படி தனது ஆதரவு படைகளை கேட்டுள்ள போதும் லிபியாவில் விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போவது நிச்சயம்.

இதன் பின் லிபியாவில் பல புதிய பிரச்சினைகள் தோன்றலாம். கிளர்ச்சியாளர்கள் யாவரும் ஒரே கொள்கை அணியில் உள்ளவர்கள் அல்ல. ஒருவேளை லிபியாவின் ஆட்சியதிகாரம் தலிபான் போன்ற அடிப்படைவாதிகள் கைவசம் போகுமாயின் கடாபியின் ஆட்சியை எண்ணி ஏங்கும் நிலைமை லிபிய மக்களுக்கு ஏற்படலாம்.

நன்றி: தமிழ்மிரர் (நன்றி தேனீ)




No comments: