அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் கலாசார மகாமண்டபம் - கோலாகலத் திறப்பு விழா -- ஒரு கண்ணோட்டம்! ……….. வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி.

.                                                        
                                                                     வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி 
                                                             
புலம்பெயர் தமிழரின் பங்களிப்பில் தமிழரின் புகழ்பாடும் மகாமண்டபம்!
அவுஸ்திரேலியத் தமிழருக்கு இதுவரை ஒரு சிறந்த கலாசார மகாமண்டபம் இல்லையே என்ற நெடுநாட்குறை சொற்பதங்கடந்த கற்பகதேவி அருளால் நிவர்த்தி! அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் திறமைக்கும் செயற்பாட்டிற்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த பாராட்டு!.



ஆம் … கலைநிதியாய், கற்பகமாய், மந்திரவேதாகமத்தின் வடிவுடைய மகிடாசுர மர்த்தினி தமிழோங்கத் தளியோங்கச் சைவமோங்க ‘றீயன்ஸ்பார்க்’ பதியமர்ந்த சிறீதுர்க்கை அம்மனுக்கு, கவின்மிகு சிட்னி நகரிலே ஒரு பிரமாண்டமான திருக்கோயில் அமையத் திருவருள் பாலித்துள்ள வேளையில் அப்பெருங் கோயிலின் முதற் கட்டமாக ஆலயத்துடன் கூடிய மகா மண்டபக் கட்டிட வேலைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை 13ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு சம்பிரதாயத் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடந்தேறியது எல்லோரும் அறிந்ததே. சிட்னியிலுள்ள கோயில்களிற் சிறப்புச்செய்யும் நாதஸ்வர வித்துவான் திரு சத்தியமூர்த்தி தவில்வித்துவான் ரூபதாஸ் குழுவினரின் மங்கல வாழ்த்தொலி முழங்க முன்னாள் மந்திரியும் தற்காலிக ஓபன் பாராளுமன்ற அங்கத்தவருமாகிய மதிப்பிற்குரிய பாபரா பெரி அவர்கள் மகிழ்ச்சி ததும்பப் புன்னகை பூத்தவண்ணம் மகாமண்டபத்தைச்; சம்பிரதாயப்படி, நாடாவைத் துண்டித்துத் திறந்து வைத்தார். பக்தர்கள் கைதட்டி அம்மனைப் பத்தியொடு நினைந்து ஆரவாரஞ்செய்ய ஆலயத் தலைவர் திரு இரத்தினம் மகேந்திரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி செல்லம்மா இரத்தினம் அவர்கள் இரண்டாவது நாடாவைத் துண்டித்து மண்டபத்தைத் திறந்து வைத்து எல்லோரையும் பார்த்து நன்றியொடு வணக்கம் செய்தார்.




பெருந்திரளாகக் காத்திருந்த பக்தர் கூட்டமானது, பலராலும் பெரிதும் விதந்துரைக்கப்பெற்ற மண்டபத்தை - அவுஸ்திரேலியாவிலே முழுக்க முழுக்கத் தமிழரின் ஒத்துழைப்போடு, விழுமிய கலாசாரம் தழுவிய பாரம்பரியம் ஓம்பிவரும் தன்னேரில்லாத் தமிழரின் புகழ்பாடச் சொற்ப காலத்திற்குள் முளைவிட்டெழுந்த மகாமண்டபத்தைப் - பார்க்க விறுவிறுப்பாக உள்ளே நுழைந்தார்கள். எல்லோரின் கண்களும் விலாசமான 800 இருக்கைகளுடன் கூடிய எழிலுருக் கொண்ட மண்டபத்தைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியாற் பனித்தனவென்றே கூறலாம். எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி பிரவாகமெடுத்தது.

மண்டபத்தினுள்ளே பக்தர்கள் நிறைந்ததும்; துர்க்கையம்மன் ஆலயம் ஆரம்பித்தகாலந் தொடங்கி பலன்கருதாப் பணியியற்றி வந்தவரும் பலகாலம் ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலை அதிபருமாகக் கடமை ஆற்றி
அளப்பிலாத் தமிழ்ச்சேவை வழங்கியவருமாகிய திருமதி ஜெகதாம்பிகை ஜெகநாதன் அவர்கள் மங்கலவாத்தியம் ஒலிக்க விளக்கேற்றியதோடு அரங்க வாயிலில் கட்டப்பட்டிருந்த நாடாவைத் துண்டித்து, பக்தரின் பலத்த கரகோசத்துடன் திரையரங்கைத் திறந்துவைத்தார். ஈழப்போரினால்; உயிர்நீத்த அனைவரின் நல்லாத்மாக்களும் சாந்தி பெற அனுட்டிக்கப்பெற்ற இருநிமிட மௌனஅஞ்சலியைத் தொடர்ந்து ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் தமிழ்மொழி வாழ்த்தும் அவுஸ்திரேலிய தேசியகீதத்தையும் பாடினார்கள்.


மறுவிலா மரபில் வந்துதித்து மாறிலா ஒழுக்கம் கண்ட செந்தண்மை கெழுமிய சிவத்திரு செந்தில்நாத சிவாச்சாரியார் துர்க்கையம்மனுக்குச் சில மந்திர சுலோகங்களுடன் அவருக்கே உரித்தான கணீரென்ற குரலில் அற்புதமான ஆசியுரை வழங்கும் பொழுது, “அவுஸ்திரேலியாவில் முதன்முதலில் தமிழ் மக்களின் கலாசாரத்தைப் போற்றுவதற்காக தமிழர்களுக்கு என்று ஒரு சமய கலாசார மண்டபம் சிட்னி ஸ்ரீ துர்க்கையம்மன் திருவருளாலே ஆலய வளாகத்தில் அமைக்கப்பெற்று இன்று சனிக்கிழமை திறப்புவிழா காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கமைய இந்த ஆலயம் நன்கு துரித வளர்ச்சியடைந்து தன்னேரில்லாச் சைவசமயத்தை வளர்க்கத் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது பங்களிப்பினை நல்க வேண்டும். அன்னை துர்க்காதேவி, அவுஸ்திரேலியாவிலே மிகப்பெரிய ஆலயமாக அமையவிருக்கும் புதிய ஆலயத்தில் எழுந்தருளி வெகு விரைவில் மகா கும்பாவிடேகம் காணவேண்டும் என மனதாரவணங்கி, ‘பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகையாய்’ விளங்கும் எம்பெருமானைப் பிரார்த்தனை செய்து வாழ்த்தி மகிழ்கிறோம் ”என்று கூறி ஆசீர்வதித்தார். இந்த நிகழ்ச்சியைத்; தொடர்ந்து திருமதி ஜெயலஷ்மி குகராஜன் (Kalashetra -Dip –in-Music) அவர்களின் மாணவர்கள் நல்லதொரு வயலின் நிகழ்ச்சியை இரு பகுதிகளாகத் தந்தார்கள். முதலில், சிறுவர் பலர் அரங்கம் நிறைந்திருந்து வயலின் வாசித்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடுத்து உயர்தர மாணவர்கள் ‘மாணிக்க வீணை ஏந்தும்’, ‘ஆயர்பாடி மாளிகையில்’, ‘போ- சம்போ’, ‘மருதமலை மாமணியே’ என்ற பாடல்களைத் திறம்பட வயலினில் வாசித்து எல்லோரையும் மகிழ்வித்தார்கள்.



அடுத்த நிகழ்ச்சியாக துர்க்காதேவி தேவஸ்தானம் நடாத்திய 2011ஆம் வருட அறிவுத் திறன் போட்டிகளில் வெற்றியடைந்தோருக்குப் பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த நான்கு வருடங்களாகக் கவிஞர் செ பாஸ்கரன் மற்றும் செயல்வீரர் திரு கு  கருணாசலதேவா ஆகிய இருவரின் கைவண்ணத்தில் மலர்ந்து, தொடர்ந்து நடாத்தப்பட்டுவந்த சிட்னி துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டிகள் (நாலு போட்டிகள்) இம்முறையும் ஆறு பிரிவுகளில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தலைவர் திரு மகேந்திரன் அவர்கள், மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பாபரா பெரி அவர்கள், திரு பாலா பாலேந்திரா அவர்கள், திருமதி ரமணா குமாரலிங்கம் அவர்கள், மற்றும் செயலாளர் திரு சுரேந்திரன் அவர்கள், போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களுக்குப் பரிசில்களை வழங்கிச் சிறப்பித்தார்கள். வருடா வருடம் நடாத்தப்படும் போட்டிகளால் சமய அறிவைப் பெறும் சிறார்கள் உண்மையிற் கொடுத்து வைத்தவர்கள். தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றி வளர்ப்பதற்கு அம்மன் கோயில் எடுக்கும் இந்த முயற்சி எமது இளஞ்சந்ததியினருக்கு ஒரு வரப்பிரசாரமன்னோ? ஆகவே அனுபவம்மிக்க திருவாளர்கள் பாஸ்கரன் மற்றும் கருணாசலதேவா ஆகியோரின் அயரா உழைப்பினாலும் ஆலயத் தொண்டர்களின் தன்னலமற்ற சேவையாலும் இப் போட்டிகளிற் பங்குபற்றுபவர்கள் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கதே!. வருங்காலச் சந்ததியினரை ஆலயப் பணிகளில் ஈடுபடச் செய்வதும் சமய அறிவை வளர்ப்பதும்; ஆலயத் தலைவரினதும் ஆலய நிர்வாகக் குழுவினதும் முக்கிய நோக்காக இருக்கும் என்று ஆலயத் தலைவர் அறியத்தந்ததை நினைக்குந்தோறும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. 






அடுத்த நிகழ்ச்சியாகச் சங்கீத வித்துவான் திருமதி வரலஷ்மி அவர்களின் வீணை இசை ஆரம்பித்தது. சிட்னியில் ஒரு சிறந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது என்றால் அங்கே கண்டிப்பாகத் திருமதி வரலஷ்மி அவர்களின் வீணை இசையின் நாதம் பொழியும் அன்றோ? ஆறு பிள்ளைகள் பங்குபற்றிய வீணை இசை நிகழ்ச்சியில் பிள்ளைகள் வீணை மீட்டிய பாங்கு பெரிதும் பாராட்டுதற்குரியது. வீணை இசை மேதை சிட்டி பாபு மற்றும் மதுரைமணி ஆகியோரின் விறுவிறுப்பான சுரக் கோர்வைகளைத் திறம்பட இசைத்ததைத் தொடர்ந்து ‘மயில் வாகனா’, ‘ஜெகத் ஜனனி’, மாணிக்க வீணை ஏந்தும்’, ‘குயிலே குமரன் வரக் கூவுவாய்’ என்ற பாடல்களுக்கு வாசித்த வீணையிசை எல்லோரையும் கவர்ந்தது. பக்கவாத்தியக் கலைஞர்களான செல்வன் பவன் சிவகரன் மிருதங்கத்தையும் செல்வன் ராகுலன் ஜெனநாயகம் தபேலாவையும் திறம்பட இசைத்தார்கள்.




ஆலயத் தலைவர்  தனது உரையை நிகழ்த்தும்பொழுது “தமிழர் அனைவருக்கும் அருள்பாலித்தருள எழுந்தருளியிருக்கும் துர்க்கையம்மன் திருக்கோயில் அவுஸ்திரேலியாவிலேயே ஆலயத்துடன் கூடிய மிகப் பெரிய மகாமண்டபத்தைத் தன்னகத்தே கொண்டிலங்குகின்றது. இது தமிழர் அனைவருக்கும் அளப்பிலா மகிழ்ச்சியைத் தரக்கூடியது. பல நவீன சாதனங்களுடன் எழுப்பப்பட்டுள்ள இம்மண்டபம் தமிழர் எல்லோருக்கும் தனிப் பெருமைதரக் கூடியதொன்று. இந்தத் துர்க்கையம்மன் ஆலயம் சமயத்தையும் சமுதாயத்தையும் தன்னிரு கண்களாக்கொண்டு செயற்படும் என்பது உறுதி.’ ‘மற்றும் இந்தக் கோயில் காலாகாலம் சைவசமயத்தின் மேன்மையை எடுத்தியம்பும் விருட்சமாக நிலைத்து நிற்கப்போகிறது. முதலாவதாக எமது முயற்சியில் மலர் அரும்புவது போன்று இன்று மகாமண்டபம் பல சிறப்பு அம்சங்களுடன் மிகவும் குறுகிய காலத்திற்குள் கட்டப்பட்டுத் திறப்புவிழா அமைந்தது அம்மன் éரண அருட்டுணை அன்றி வேறொன்றுமில்லை. வெகுவிரைவில் இந்த மண்டபத்தைத் தமிழ்ச்சமுதாயம் பல வித தேவைகளுக்காகப் பாவிக்க முடியும். திருமண வைபவமோ, திரையரங்க நிகழ்வுகளோ அவற்றை திறம்பட ஒப்பேற்றுவதற்குரிய விசேட வசதிகளுடன் கட்டப்படடுள்ளதென்பது இதன் தனித்துவம் என்பதைப் பெருமையுடன் தெரியப்படுத்த விரும்புகிறேன். இதனைத்தொடர்ந்து கல்வி நிலையம், முதியோர் ஓய்விடம், மற்றும் Áலகம் ஆகியவற்றிற்குரிய கட்டிட வேலைகள் முடியுந்தறுவாயில் இருக்கின்றன. வெகுவிரைவில் அ~;டலக்குமிகளுடன், சிவன்- விநாயகப்பெருமான் - முருகக் கடவுள் ஆகிய தெய்வத்திருவுருவச் சிலைகளயும் முறையாகப் பிரதிட்டை செய்யவுள்ளோம். இவ்வண்ணம் எமது தளரா முயற்சி காயாகிக் கனியாகிப் பாகாகி எல்லோருக்கும் அம்மன் அருளைச் சுரந்தருளும். வற்றாத பெருங்கருணை வடிவத்துத் தேவி துர்க்கை அம்மனுக்கு அவுஸ்திரேலியாவிலே விரைவில் ஒரு பெருங்கோயில் தமிழரின் புகழ்பாடும் திருக்கோவிலாக அமையப்போவது என் கண்முன் நிதர்சனமாகத் தெரிகிறது. 800 இருக்கைகளைக் கொண்டிருக்கும் இந்த மண்டபம் கட்டப்பட்டது புலம்பெயர் தமிழரின் சரித்திரத்திலேயே ஒரு மிகவும் மகத்தான சாதனையே!. உண்மையான உழைப்பம் உள்ளார்ந்த ஈடுபாடும் உடையோர்களுக்கு அன்னை நிச்சயமாகத் தன் அளப்பெரும் கருணையையும் திருவருளையும் நல்குவாள் என்பதும் நிதர்சனமான உண்மை. தமிழ் மக்களுக்கு ஒரு வெற்றியும் மகிழ்ச்சியுமான நாளாகிய இன்று இந்தத் திறப்பு விழாவிற் பங்கேற்று உங்களுடன் சேர்ந்துமகிழ்வதில் பெருமைப்படுகிறேன். இந்த மகிழ்ச்சி தமிழ் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த உன்னத பணியிற் பங்கேற்று மனமார உழைத்த மெய்யடியாரெல்லோருக்கும் துர்க்கை அம்மன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இப்படி இன்ப உணர்ச்சி பிரவாகமெடுக்க ஆலயத் தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து அவரின் அருந்தவப் புதல்வி செல்வி அகல்யா மகேந்திரன் ஓர் அருமையான கர்நாடக இசையில் பக்தர்களை மகிழ்வித்தமை குறிப்பிடத்தக்கதாகும். ‘சிறீசக்கர ராஜ’ , ‘ஜெக ஜனனி’, ‘மகா கணபதி’ போன்ற பல அருட்பாடல்களைத் தனது இனிமையான குரலிற் பாடிமகிழ்வித்தமை ‘ஒரு மருத்துவம் பயிலும் மாணவியாக இருந்தாலும் நான் அம்மன் திருவருளினால் சங்கீதத்திலும் சளைத்தவளல்ல’ என்று கூறுவது போலத் தெரிந்தது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு சிறு இடைவேளை விடப்பட்டது. சுவையான சிற்றுண்டிகள்; கோயில் நிதிக்காக விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.




 இறுதி நிகழ்ச்சியாகச் ‘சிட்னி கலா பவனத்தின் (Fine Arts) “கலியுக நாயகி” என்னும் நாட்டிய நாடகம் ஆரம்பமானது. திருமதி சுகந்தி தயாசீலன் அவர்களின் மாணவர்கள் அம்மன் பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடியமை எல்லோர் நெஞ்சங்களையும் ஈர்த்ததில் வியப்பில்லை. அருமையான நடனங்களை மேடையேற்றி வரும் திருமதி சுகந்தி அவர்கள் முறையாகப் பயின்ற பரத நாட்டியத்தைப் பிள்ளைகளுக்கு திறமையாய்ப் பயிற்றுவிக்கிறார் என்பது நடனத்தின் ஒவ்வொரு அம்சங்களிலும் பிரதிபலித்தமை பாராட்டுதற்குரியது. அம்மன் அருளால் எல்லா நிகழ்ச்சிகளும் தடங்கலெதுவுமின்றி மங்களகரமாக நிறைவுற்றது. நிகழ்ச்சிகளைத் தமது கனிவான குரல்களால் தமிழில் அறிவித்து வழங்கிய செல்வி ஆரணி சசீந்திரனும் ஆங்கிலத்தில் அறிவித்த செல்வி அஸ்வினி நாகராஜாவும் நன்றியுரை கூறியதைத் தொடர்ந்து விழா இனிதே நிறைவுற்றது. பூரண வாழ்வு கைகூடச் சாமகான வேத காரணி சிம்மவாஹினி அருளைவேண்டித் துதிப்போமாக!.














1 comment:

kirrukan said...

தமிழர் மண்டபம் தந்த அம்மனுக்கு நன்றிகள்...(தமிழர் மண்டபம் என்று பெயர் போடுவார்களா? கட்டுரைகளிலும் வானொலிகளில் மட்டும்தானா?)

///மற்றும் இந்தக் கோயில் காலாகாலம் சைவசமயத்தின் மேன்மையை எடுத்தியம்பும் விருட்சமாக நிலைத்து நிற்கப்போகிறது///
சைவசமயமா?இந்து சமயமா? சைவ சமயம் என்று சொல்லிகொண்டு இந்து சமயத்தை பரப்புகிறோம்...சைவ சமய‌த்தை நாம் எம்மை அறியாமலயே இழந்துவருகின்றோம்...பெரியவர்கள் உங்களுக்கு தெரியும் இருந்தும் நான் என‌க்கு தெரிந்த‌தை கிறுக்குகிறேன்.