இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள்

தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி


17/8/2011

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க அணித்தலைவர் டில்ஷான் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டம் கைகொடுக்க 287 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை மாலிங்கவின் அபார பந்து வீச்சுடன் 78 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

ஆஸி. அணியின் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டிய மலிங்க அபாரமாக 5 விக்கெட்டுக்களை பறிக்க 208 ஓட்டங்களுக்கு ஆஸி. அணியை சுருட்டியது இலங்கை அணி.


இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் தொடரின் 3 ஆவது போட்டி அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸி. அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி தரங்க, டில்ஷான் ஆகியோரது இணைப்பாட்டம் கைகொடுக்க 9 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப்பெற்றது.

இதில் முதலாவது விக்கெட்டுக்காக தரங்கவுடன் 139 ஓட்டங்களைப்பகிர்ந்த டில்ஷான் 55 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அசத்தலாக துடுப்பெடுத்தாடிய தரங்க சதம் கடந்து (111 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 287 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ஆஸி. அணி 44.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களைப்பெற்று தோல்வியைத்தழுவியது. இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடரில் ஆஸி. அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.

நன்றி வீரகேசரி  


No comments: