கெழுத்திமீன் -சிறுகதை - தாமிரா

.
என் கிராமத்திற்கும் எனக்குமான தொடர்பு அம்மா என்கிற ஒற்றை மனுசியால் பிணைக்கப்பட்டிருந்தது. அம்மா கிராமத்தைத் தன் உயிரில் பொதிந்து வைத்திருந்தாள். இரண்டு முறை சென்னைக்கு வந்து என்னோடு தங்கிய அம்மா ஒரு அன்னியத் தன்மையோடு வேற்று மனுசியாகவே இருந்தாள். தினமும் ஒரு வீட்டிற்குள் அடைந்து கிடந்து சாப்பிடுவதும் டீ.வி பார்ப்பதுமான வாழ்க்கைமுறை அவளுக்கு ஒவ்வாததாக இருந்தது.'என்னை ஊர்ல கொண்டுபோய் விட்டுருடா அப்பப்போ வந்து பாத்துக்கோ என்னால இந்த நரகத்துல இருக்க முடியலே' என்றாள்.அதன்பின் வருடத்திற்கு இரண்டு முறை அம்மாவைப் பார்ப்பதற்காக ஊருக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.அந்த ஊர் என் பால்யத்தை இன்னமும் தனக்குள் ஒரு ரகசியமாக பத்திரப்படுத்தி வைத்திருந்தது.

girl_200இந்தமுறை ஊருக்குப் போனபோது அம்மா கெழுத்தி மீன் வாங்கி குழம்பு வைத்திருந்தாள். கெழுத்திமீன் எனக்கு சண்முகவடிவை நினைவுபடுத்தியது. பரிசுப் பொருட்கள்..சுற்றித்திரிந்த இடங்கள், பழைய புகைப்படங்கள், பெயர்ப்பலகைகள் இவைகள்தான் பழையநினைவுகளை மீட்டு எடுக்கவேண்டும் என்பதில்லை. சில சாதாரணமான விஷயங்கள் கூட நினைவுபடுத்திவிடும். சண்முகவடிவையும்,கெழுத்தி மீனையும் ஒருபோதும் என்னால் பிரித்துப் பார்க்க முடிந்ததில்லை.. ஒருவேளை கெண்டை மீன்களைப் போல கெழுத்தி மீன்களுக்கும் கொடுக்கு இல்லாமல் இருந்திருந்தால் சண்முகவடிவு என் வாழ்வில் இல்லாமல் இருந்திருப்பாள். வடிவை முதல்முதலில் பார்த்தது குண்டாங்கிடங்கு குளம் அழிந்த போதுதான்..

அன்று ஊர் கூடி மீன் பிடித்தது. குளம் முழுக்க சகதியும், மீனுமாக இருந்தது. தாந்தோன்றிக்குளம் அழியும்போதோ, பரணிப்பாடுகுளம் அழியும்போதோ இத்தனை கூட்டம் வருவது இல்லை. குண்டாங்கிடங்கு குளத்து மீனின் ருசி எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வரவைத்துவிடும். பெரிய பெரிய பாத்திரங்களோடு காலையில் ஏழு மணிக்கே எல்லோரும் வந்துவிடுவார்கள். எல்லாருடைய கைகளிலும் ஒரு நார்க்கூடை இருக்கும் அதை சகதிக்குள் முக்கி எடுத்தார்களானால் சகதியும் மீனுமாக கூடை வெளியேவரும். கரையில் நல்ல தண்ணீரோடு குடும்பத்து உறுப்பினர்கள் யாராவது ஒருவர் இருப்பார்கள் அவர்கள் சகதியிலிருந்து மீனைப் பிரித்தெடுப்பார்கள்.


நான் போனபோது ஒரு பெரிய நார்க்கூடையை நடுக்குளத்திலிருந்து இழுக்க மாட்டாமல் இழுத்துக் கொண்டு வந்தாள் வடிவு. சாய்ந்த நிலையில் அவள் கூடையை இழுத்துக்கொண்டு வந்தது அழகாக இருந்தது. அவள் முகத்தில் சகதி புள்ளிப்புள்ளியாக தெரித்திருந்தது.பின்னியிருந்த சடையிலிருந்து ஒரு கற்றை முடி தனியே பிரிந்து நின்றது.ஒருகையால் கூடையை இழுப்பதும் மறுகையால் முடியை ஒதுக்குவதுமாக இருந்தாள் வடிவு. அதற்கு முன் வடிவை நான் அத்தனை வடிவாகப் பார்த்ததில்லை.

வடிவு சொல்லிக் கொள்கிற மாதிரி நிறம் இல்லை, திட்டுத்திட்டாக அவள் முகத்தில் பருக்கள் இருக்கும் எண்ணெய் தேய்த்து தலையை படிய வாரி சடை போட்டிருப்பாள், வாடாமல்லிக் கலரில் ஒரு குட்டை பாவாடை, அழுக்கடைந்து நிறம் மங்கிய ஒரு சட்டை இதுதான் பெரும்பாலும் அவள் அணிந்திருக்கும் உடை. வடிவின் மீது பெரியவிருப்பு ஒரு போதும் யாருக்கும் வந்திருக்காது. எப்போதாவது நடுவப்பண்னை  வயல்வெளியில் மாடுகளை மேயவிட்டுவிட்டு பாடிக் கொண்டிருப்பாள்.

’மயக்கமென்ன டிங்டிங்டிங் இந்த மௌனம் என்ன டிங்டிங்டிங் மணிமாளிகைதான் கண்ணே’பாடலுக்கிடையே வரும் இசையைக்கூடப் பாடுவாள் வேடிக்கையாக இருக்கும். தினமும் நான் பள்ளிக்கூடம் செல்லும்போது எதிரில் தங்கள்வீட்டு எருமை மாடுகளை ஓட்டிக்கொண்டு போவாள் வடிவு. அவள் வயதொத்த சிறுமிகளோடு நான் நெருக்கமாகவும் இணக்கமாகவும் பேசும்போதோ, விளையாடும்போதோ அம்மா எதுவும் சொல்வதில்லை வடிவிடம் ஏதாவது பேச முயன்றால் மட்டும் பொட்டப் புள்ளையகிட்ட என்னடா பேச்சு வேண்டிக்கிடக்கு எனத் திட்டிவிட்டு செல்வாள் அம்மா. வடிவும் எந்த ஆண்களிடமும் பேசாமல் ஒதுங்கியே செல்வாள். ஒருவேளை படிக்கிற வயதில் மாடு மேய்க்கிறோமே என்கிற தாழ்வுமனப்பான்மை காரணமாக இருக்கலாம். வடிவின் வீட்டில் யாருமே படித்தவர்கள் இல்லை. வயல்வேலைக்குச் செல்வது மாடுகன்னுகளை பார்த்துக்கொள்வதுதான் அவர்களுக்கு பிரதானம். ’படிப்பு என்னவே படிப்பு ரூவாநோட்ட எண்ணத்தெரிஞ்சாப் போதாதா’ என்பார் வடிவின் அப்பா பெரியகண்ணு.

வடிவை தினம் தினம் பார்ப்பவன்தான் நான், ஆனாலும் மீன்பிடித்தபோது பார்த்ததுதான் முதல்முதலாகப் பார்த்த கணக்கில் இருக்கிறது. அவள் நடுக்குளத்தில் கூடையை இழுத்து வந்தபோது நான் எனது நார் பெட்டியோடு அவளுக்கு எதிரில் சென்று கொண்டிருந்தேன். நான் அவள் அருகே செல்லவும் ஒரு பெரிய கெழுத்தி மீன் வடிவின் கையில் கொட்டிவிட்டது. வடிவின் கைகளில் ரத்தம் வழிந்தது. அந்தக்கெழுத்தி எனக்கும் வடிவிற்கும் நுட்பமான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த விரும்பியதோ என்னவோ தெரியவில்லை கொஞ்சம் ஆழமாக கொட்டியிருந்தது. கையில் ரத்தம் வழிய ஒரு கையில் கூடையைப் பிடித்தபடி மறுகையை உதறிக் கொண்டு அழுதாள். சட்டென அவள் கையை பிடித்து ரத்தம் வழியும் விரலை என் வாயில் வைத்துக் கொண்டேன். ஊரே கூடி நிற்க நான் அவள் கையைப் பிடித்ததில்.. எழுந்த பயமும், வெட்கமும் கலந்த ஒரு பார்வையைப் பார்த்தாள்.

அவள் கைகளில் வழிந்த ரத்தம் நிற்கவில்லை. நான் சட்டென என் சட்டையின் விளிம்புப் பகுதியைக் கிழித்து அவள் கைகளில் கட்டுப்போட்டேன். [இதுபோன்ற ரத்தத் தருணங்களில் பெண்கள்தான் புடவைத் தலைப்பையோ, தாவணி விளிம்பையோ கிழித்து கட்டுப் போடவேண்டும் என்பதில்லை. ஆண்களும் சட்டையை கிழிக்கலாம்.] ஒரு நன்றி கலந்த ஒரு புன்னகையோடு கூடையை இழுத்துக் கொண்டு சென்றாள். அந்த சிரிப்பிற்குள் ஒரு மாயத்தன்மை இருந்தது. அது என்னவோ செய்தது. அம்மா புதுச் சட்டைய கிழித்ததற்காக அடித்தபோதுகூட வலிக்கவில்லை காரணம் அந்த மாயச்சிரிப்பு.

அந்த நிகழ்விற்குப் பின் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் மிகச் சரியாக என்னெதிரில் மாடு ஓட்டிக் கொண்டு செல்வாள் வடிவு. ஒரு கையில் சாப்பாட்டுத் தூக்குவாளி மறுகையில் மாடு ஓட்டும் குச்சி இவற்றோடு எனக்கான சிரிப்பையும் அவள் எடுத்து வர மறப்பதில்லை. அவள் தனது அன்பையும் நன்றியையும் ஒற்றைச் சிரிப்பில் கட்டி வைத்திருந்தாள். அந்தச் சிரிப்பு அநேகம் பேசும். ஏன்லேட்டு, சாப்பிட்டியா, நல்லா பரிட்சை எழுது, இப்படி தினமும் அக்கறையாக பேசும்.

தெருவில் ஆளரவமற்ற சில தினங்களில் நான் அவளிடம் பேச முயன்ற பொழுது மிகநுட்பமான பதற்றத்தோடு விலகிச் சென்றாள். வடிவைப் புரிந்து கொள்ள நான் எடுத்துக் கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்து போனது. அப்போது எனக்கு பதிமூன்று வயது, அவளுக்கு பதினோரு வயது அது காதலிக்கும் வயதா? ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது அடிவயிற்றில் எழும் பயஉணர்விற்குள் காதல் ஒளிந்திருந்ததா என்பதை என்னால்இப்போதும் கூட உறுதியாக சொல்ல முடியவில்லை.

வடிவிடம் பேசிவிட வேண்டும் என்கிற தவிப்பு மட்டும் எனக்குள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருந்தது.வடிவு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் காட்டிற்கு போய் பேசுவது என முடிவு செய்தேன். அன்று நடுவப்பண்ணை வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாள் வடிவு. நான் போகும் பொழுது மாமரத்து நிழலில் தனக்கு இருபுறமும் இருவர் நிற்பது போன்ற பாவனையில் கைகளைக் கோர்த்துக்கொண்டதுபோல வைத்துக் கொண்டு ’பூப் பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்’என சத்தமாக பாடியபடி எதிர் திசை நோக்கி ஓடினாள். சற்று தூரம் சென்று திரும்பியவள் குரலை மாத்தி ”எந்தப் பூவைப் பறிக்கிறீர்கள் எந்தப்பூவைப் பறிக்கிறீர்கள்” எனப்பாடியபடி திரும்பினாள். பத்துக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை ஒற்றை மனுசியாக விளையாடினாள். அவள் விளையாடிய விதமும் அப்போது அவளிடம் காணப்பட்ட முக பாவனையும் ஒரு புதிரைப்போல இருந்தது நான் அவளைப் பார்க்காமலேயே திரும்பிவந்தேன்.

அன்றுதான் முதல் முறையாக அம்மாவிடம் வடிவைப்பற்றிப் பேசினேன்.  ”அம்மா பெரியகண்ணு மாமா பொண்ணு நடுவப்பண்ணைக் கிணத்துல தனியா நின்னு கிறுக்குப்புள்ள மாதிரி பாட்டுப்பாடி விளையாடிட்டு இருக்கும்மா” நான் இதைச் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடைவாள் என எதிர்பார்த்தேன். அம்மாவிடம் சிறுசலனம்கூட இல்லை.

"எல்லாம் கிரஹக்கோளாறுடா…. வடிவு எட்டு வயசுல சமைஞ்சுட்டா…” இதைச் சொல்லிவிட்டு, தான் சொல்வது எனக்கு புரிகிறதா என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு "பெரியமனுசியாயிட்டா..” என விளக்கம் சொன்னாள். வடிவின் வேதனைகளை முழுமையாக சொல்லும் ஆயத்தத்தோடு இருந்தாள் அம்மா. நான் அவள் மடியில் படுத்துக் கொண்டேன்.

"அங்க நிக்காதே…இங்க நிக்காதே.. அவன் கூட பேசாதே..இவன் கூட பேசாதே.. சமைஞ்சகுமரிக்கு விளையாட்டு என்னடி வேண்டிக்கிடக்கு இப்படியே தட்டித்தட்டி அந்தப் புள்ளய ஒடுக்கிவச்சிருக்கு.. யாருகூடயாவது அந்தப்புள்ள பேசறதப் பாத்தாப் போதும் அவ அம்மை தொடையில ஊதுகுழலைக் காயவச்சு சூடு போட்டுருவா.. அந்தப்புள்ள தொடை முழுக்க சூட்டுத்தழும்புதாண்டா இருக்கும்”. அம்மா மிகுந்த மன வேதனையோடு இதைச் சொன்னாள். வடிவிடம் பேசும்போது அம்மா திட்டுவதற்கான  காரணம் எனக்கு அன்றுதான் புரிந்தது.

"சின்ன வயசிலயே பெரிய மனுசியானது அவ தப்பு இல்லல்லம்மா" என்றேன். அம்மா பதிலேதும் சொல்லவில்லை. மிக நீண்ட மௌனத்திற்கு பிறகு 'வடிவு பாவம்மா' என்றேன். அம்மா என்ன  நினைத்துக் கொண்டாளோ தெரியவில்லை "நீயும் அவ தொடையில ஒரு சூடுபோட வச்சிடாதடா" என்றாள். அதன்பின் வடிவை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூட எனக்கு பயமாக இருந்தது. ஆனால் வடிவிடம் எந்தமாற்றமும் இல்லை வழக்கம்போல ஒற்றைச்சிரிப்புடன்தான் கடந்து சென்றாள்.

அந்தத் தனிமைக்கும், வாழ்க்கை முறைக்கும் வடிவு முழுமையாக பழகிப்போயிருக்கவேண்டும். அவளுடைய பாவனைகளில் துளிவருத்தமும் தெரிய வில்லை.எப்போதாவது சத்தமான குரலில் பழைய திரைப்படப் பாடல்களைப்பாடுவாள், எனக்கு அவளது வலி தெரிந்ததால் நான் அந்தப்பாடல்களை அவளோடு பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.

சில சமயங்களில் அவள் மாடு ஓட்டிக் கொண்டு வரும் பாதை வழியாக சைக்கிளில் செல்வேன். அப்படி எதிர்பாராமல் என்னைப் பார்க்கும் போது வடிவிடம் ஒரு தனி முகமலர்ச்சி தெரியும். ஒரு வார்த்தைகூட என்னிடம் பேசாமலேயே அவள் என்னோடு மிக நெருக்கமாக இருந்ததாக உணர்ந்தேன். அவள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சிறுவனாக இருந்தேன்.

எங்கள் பார்வைப் பரிமாற்றத்தை பள்ளிச் சிறுவர்கள் எந்தவிதமாக புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை. வடிவு போகும்போது ஒளிந்து நின்று கொண்டு 'ஏய் கெழுத்திமீனு' என கேலி செய்யத்துவங்கினார்கள். நான் வடிவைப் பார்த்துக் கொண்டிருப்பது பற்றியோ.. நான்சட்டையைக் கிழித்து அவளுக்கு கட்டுப் போட்டது பற்றியோ யோசிக்காமல் கூட அவர்கள் கேலி செய்திருக்கலாம். வடிவு எதையும் சட்டை செய்வதில்லை. அவள் பாட்டும் பார்வையும் என்னை தொடர்ந்தபடி இருந்தது.

அந்த வருட அம்மன் கோவில் கொடைதான் என்னிடமிருந்து வடிவைப்பிரித்தது. எங்கள் ஊர்அம்மன் கொஞ்சம் வித்தியாசமான அம்மன் அவள் எப்போதும் ஒருவர் மீது மட்டும் வந்து இறங்குவதில்லை. சாமி கொண்டாடி என ஒருவர் இருந்தாலும் ஒரு பத்துபேராவது சாமியாடிக் கொண்டிருப்பார்கள். அன்று இரவுக் கொடையில் வடிவு சாமியாடினாள். மற்ற எல்லாசாமிகளின் ஆட்டத்தைவிட வடிவின் ஆட்டம் உக்கிரமாக இருந்தது. இதுவரை தான் விளையாடாத விளையாட்டிற்கெல்லாம் சேர்த்து வைத்து ஆடுவது போல இருந்தது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அவள் நாக்கைத் துருத்திக் கொண்டு ஆடியவிதம் அவள் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரானது என்பதை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை. எல்லோரும் வடிவின்மீது தான் இசக்கிஅம்மன் முழுமையாக இறங்கியிருப்பதாக பேசிக்கொண்டார்கள். வடிவின் முகத்தில் குங்குமமும், திருநீரும்,கோபமும் வியர்வையோடு வழிந்துகொண்டிருந்தது. வடிவின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் மேளக்காரர்கள் திணறினார்கள்.

வடிவு கண்கள் உருட்டி ஆடியபடியே எல்லோர் தலையிலும் திருநீரால் அடித்தாள். அது அம்மனின் ஆசீர்வாதம் இல்லை. வடிவின் சாபம் என்றே எனக்குப்பட்டது. தூரத்தில் நின்ற என்னை அழைத்து என் நெற்றியில் திறுநீறு வைத்துவிட்டுச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு 'இப்ப என்ன பண்ணுவே' என அவள் அம்மாவைக் கேள்வி கேட்டது.

அன்று இரவு முழுக்க எனக்கு வடிவு பற்றிய எண்ணம் மட்டும்தான் இருந்தது. நிறைவேறாத எந்த ஆசைகளையும் கனவுகளையும் வடிவிற்குள் திணித்துவிடக் கூடாது என முடிவுசெய்தேன். ஒருவேளை உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் வடிவின் மூர்க்கத்தைப் பார்த்த பயமாகக்கூட இருக்கலாம். அதன் பின் வடிவை சந்திப்பதைத் தவிர்த்தேன். வடிவைப் பார்க்கவில்லையே தவிர அவளது புன்னகை எப்போதும் என் கூடவே இருந்தது.

அடுத்த ஆண்டு என்னை பாளையங்கோட்டையில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். வடிவை சந்திக்கும் சூழ்நிலை தானாகவே குறைந்தது.கல்விக்கான அடுத்தடுத்த இடம் பெயர்தல் வடிவை முற்றிலுமாக என்னைவிட்டு விலக்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முறை எதிரெதிராக சந்திக்க நேர்ந்தபோது ஒரு கணம் என் எதிரில் நின்று தீர்க்கமாக என்னைப் பார்த்துவிட்டு கடந்து சென்றாள்.

பெருநகரங்கள் என்னை பணி நிமித்தமாக விழுங்கியதற்கு பிறகு வடிவைப் பற்றிய எண்ணங்கள் கூட சுத்தமாக மறந்து போனது. ஒரு முறை ஊர் திரும்பிய போது வடிவு குறித்து கேள்விப்பட்ட தகவல்கள் எல்லாமே தவறாக இருந்தது. அன்று வடிவை நான் நடுவப்பண்ணை கிணற்றடியில் சென்று சந்தித்தேன். அதுதான் நானும் வடிவும் தனிமையில் சந்தித்த ஒரே சந்திப்பு.

வடிவிடம் என்னை நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கும் எந்த பரபரப்பும் இல்லை. சொல்ல வந்ததை சொல்லிட்டுப் போ என்பது போல இருந்தது அவள் பார்வை. 'ஏன் இப்படி மாறிட்டே?' என்றேன். அமைதியாக பார்த்தபடி இருந்தவள் என்அருகில்வந்து 'எல்லாஆம்பளைங்க கிட்டயும் நான் உன்னைத்தான்டா தேடினேன்' என்றாள். ஒரு குற்றச்சாட்டைப் போல ஒலித்த அந்தக்குரலை எதிர்கொள்ள முடியாமல் அமைதியாக  தலை குனிந்து நின்றேன். வடிவு என்னை கடந்து சென்றாள். அதன் பின் எப்போது வந்தாலும் வடிவைப் பற்றி யாரிடமும் எதுவும் விசாரிப்பதேயில்லை. இந்த முறை, அம்மாவின் கெழுத்தி மீன் வடிவை நினைவுபடுத்திவிட்டது.

சாப்பிட அமர்ந்தபோது அம்மா சொன்னசொல்தான் இன்னும் உறுத்தலாக இருக்கிறது.

"நல்லா சாப்பிடு மக்கா வரவர கெழுத்திமீன் அழிமானமாயிட்டு வருது. அடுத்த தடவை நீ வரும்போது  கெழுத்திமீன் சுத்தமா அழிஞ்சு போயிரலாம்’’.



Nantri: Ananthavikadan

No comments: