சிரித்திரன் சிவஞானசுந்தரம்

.
                                                                                          முருகபூபதி

  தமிழர்களைத் தட்டி எழுப்பிய பெரியோர் யார்? இது கேள்வி
   அநுராதபுரத்தில் ரயிலேறும் சிங்களச்சகோதரர்கள். இது பதில்.
   இப்படி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கத்தக்க எழுத்தாற்றல் மிக்க ஒருவர் எம்மத்தியில் இருந்தார்.
  இலங்கையில் நானறிந்த வரையில் 1958 1977 1981 1983 காலப்பகுதியில் நடந்த இனவாத வன்செயல்களின்போதெல்லாம் அநுராதபுரத்தை தமிழர்கள் அநியாயபுரம் என்று வர்ணித்துப் பேசியதையும் அறிவேன்.
  சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் படிக்கச்சென்று விடுமுறை விட்டதும் கொழும்புக்கு பகல் அல்லது இரவு ரயிலில் பயணித்திருக்கின்றேன்.
  எம்மவர்கள் ரயில் இருக்கையில் கால் கை நீட்டி ஆழ்ந்த உறக்கத்திலிருப்பார்கள்.
அநுராதபுரத்தில் ஏறும் சிங்களப்பயணிகள் தமிழர்களை தட்டி எழுப்புவதைப்பார்த்திருக்கிறேன். நானும் அவ்வாறு தட்டி எழுப்பப்பட்டவன்தான்.




 பல வருடங்களின் பின்னர் சிரித்திரன் சஞ்சிகையின் அபிமான வாசகனாகியதும்,  அதில் வரும் மகுடி கேள்வி- பதில் பகுதியைத்தான் முதலில் படிப்பேன்.
ஒரு இதழில்தான் மேலே குறிப்பிட்ட கேள்வியும் பதிலும் இடம்பெற்றிருந்தது. அப்பொழுது நான் நீர்கொழும்பில் படித்துக்கொண்டிருந்த காலம்.
 எங்கள் நீர்கொழும்பு அல்ஹிலால் மகா வித்தியாலய விஞ்ஞான ஆசிரியர் ராஸிக் சேர் ஒருநாள் என்னிடமிருந்த சில சிரித்திரன் இதழ்களை வாங்கிச்சென்றுவிட்டார்.
 பின்னர், அதிலிருந்த நகைச்சுவைத்துணுக்குகளை தொகுத்து ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியையே மாணவர்களைக்கொண்டு பாடசாலை விழாவில் மேடையேற்றிவிட்டார்.
 சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மிஸ்டர் அன்ட் மிஸிஸ் டாமோடரன் முதலான பாத்திரங்களை இன்றைக்கும் நாம் நினைத்து நினைத்துச் சிரிக்கவைத்தவர் சிவஞானசுந்தரம்.
 பாடசாலைப்பருவத்திலிருந்து சிரித்திரன் வாசகனாக இருந்தபோதிலும் எனது பெயரையும் பத்திரிகையில் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் மகுடிக்கு சில கேள்விகளை அவ்வப்போது அனுப்பியிருக்கிறேன்.
 சிரித்திரன் ஆசிரியரைப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் 1972 இற்குப்பின்னர்தான் துளிர்த்தது.
 அந்த முதல் சந்திப்பு எதிர்பாராதது. அத்துடன் விந்தையான அனுபவத்தையும் தந்தது.
இனி அந்தச்சம்பவத்தை சித்திரிக்கின்றேன்.
 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவுள்ள ரஜேஸ்வரி பவான் சைவஹோட்டலில் ஒருநாள் முற்பகல். அந்த மாதத்து சிரித்திரன் இதழை வாங்கிக்கொண்டு தேநீர் அருந்துவதற்காக உள்ளே செல்கின்றேன்.
 அங்கே எழுத்தாளரும் வானொலி நாடக ஆசிரியருமான நண்பர் கு.ராமச்சந்திரன் ஒருவருடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்துகிறார்.
 “ஹலோ முருகபூபதி. வாருங்கள். இதோ இவர்தான் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம். ஐயா இவர்தான் முருகபூபதி.” அறிமுகப்படலத்துடன் அவர்களுக்கு அருகில் நானும் அமர்கின்றேன்.
 “ கண்டது மகிழ்ச்சி. கேள்வி மாத்திரம் கேட்கிறீர். ஏதும் கதை எழுதித்தரலாமே.”
புன்னகைத்தவாறே உரையாடுகிறார்.
 “ இப்பொழுதுதான் இம்மாத சிரித்திரன் வாங்கினேன்.” கையிலிருந்த இதழைக்காண்பித்தேன்.
 “ நீங்கள் அதற்கு நன்றி சொல்லவேண்டியவர் எனது மனைவி” என்றார் சிவஞானசுந்தரம்.
 “ புரியவில்லையே” என்றேன். அவர் விளக்கினார்
  சுவாரஸ்யமான கதையொன்று கிடைத்தது.
 குறிப்பிட்ட சிரித்திரன் இதழ்பிரதிகளை பெரிய பார்சலாகக் கட்டி யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் முதல்நாள் காலை சேர்ப்பித்திருக்கிறார். அன்று இரவு தபால் ரயிலில் அந்தப் பார்சல் கொழும்புக்கு புறப்படும். குறிப்பிட்ட பார்சலுக்கான சீட்டை கொழும்பு கோட்டையில் கொடுத்துத்தான் பார்சலைப்பெறவேண்டும். அன்று இரவு அந்த ரயிலில் கொழும்பு பயணமாகவிருக்கும் சிவஞானசுந்தரம் அந்தச்சீட்டு;டன் சென்றால்தான் பெறமுடியும்.
 யாழ்ப்பாணத்தில் சஞ்சிகை பிரதிகளை விநியோகித்துவிட்டு இரவு ரயிலுக்கு புறப்பட்டுவிட்டார். பயண அவசரத்தில் சேர்ட்பொக்கட்டில் இருந்த குறிப்பிட்ட சீட்டை எடுத்துவரவும் மறந்துவிட்டார். ரயில் ஏறி நாவற்குழியும் கடந்தபின்புதான் தனது மறதிக்காக தன்னைத்தானே நொந்துகொண்டு பயணித்திருக்கிறார்.
 வீட்டிலே அவரது மனைவி கணவரின் உடைகளை துவைப்பதற்காக எடுத்தபொழுது குறிப்பி;ட்ட சீட்டைக்கண்டுள்ளார். பிறகு நிதானமாக அந்தச்சீட்டை ஒரு கடித உறையில் வைத்து ராஜேஸ்வரி பவானின் முகவரியும் எழுதி, மேலதிக முத்திரைகளும் (Late Fee Stamps) ஒட்டியபின்பு அச்சுக்கூடத்திலிருந்த பணியாளரை அழைத்து குறிப்பிட்ட கடித உறையை கணவர் சிரித்திரன் ஆசிரியர் பயணம்செய்யும் அதே இரவு தபால் ரயிலில் தபால் Compartment இல் சேர்ப்பிக்கச்செய்துள்ளார். அந்த ஜனநெரிசலில் பணியாளரால் ஆசிரியரை தேடிக்கண்டுபிடிக்கமுடியாது என்ற காரணத்தினால்தான் திருமதி சிவஞானசுந்தரம் துரிதமாக-சமயோசிதமாக அப்படிச்செய்தார்.
 மிகுந்த யோசனையுடனும் கவலையுடனும் கொழும்புக்கு காலையிலேயே வந்துவிட்ட சிவஞானசுந்தரம் கொட்டாஞ்சேனை சென்று உடைமாற்றி குளித்துவிட்டு ராஜேஸ்வரிக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு தகவல் அனுப்புவது அல்லது கோட்டை ரயில் நிலையம் சென்று நடந்ததைச்சொல்லி பார்சலைப்பெற்றுக்கொள்ள முயற்சிப்பதற்காக வருகிறார்.
 ஆனால் என்ன ஆச்சரியம் குறிப்பிட்ட அவசரத்தபால் ராஜேஸ்வரி பவனுக்கு விநியோகிக்கப்பட்டு அங்கிருந்த ஒரு ஊழியர் ரயில்நிலையம் சென்று அதனைப்பெற்றுவந்து விநியோகத்துக்கும் வைத்துவிட்டார்.
 சிரித்திரன் ஆசிரியர் இந்தச்சம்பவத்தை என்னிடம் சொன்ன காலகட்டத்தில், கவிஞர் கண்ணதாஸன் “ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பாடலை இயற்றியிருக்கவில்லை.
 இதுபோன்ற சம்பவங்களை அனுபவித்துப்பார்த்தவர்கள்தான் “ மனைவி ஒரு மந்திரி” என்று சொன்னார்களோ தெரியவில்லை.
 இந்த முதல் சந்திப்பிற்கு பிறகு சில வருடங்கள் கழித்து குடும்பநண்பர் வயலின் வி.கே. குமாரசாமி அவர்களின் மகன் ராஜனுடன் சிரித்திரன் ஆசிரியரின் வீட்டைத்தேடிக்கொண்டு சென்றேன். அச்சமயம் ராஜன் இலங்கை விமானப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். .
 “ என்ன அப்பா வயலினைப்பிடித்தார் நீர் துப்பாக்கியைப் பிடித்தீரா?” – என்று நகைச்சுவையுடன் கேட்டார்.
 சிவஞானசுந்தரம் சுவாரஸ்யமான மனிதர். அவருடன் உரையாடிக்கொண்டிருந்தால் நேரம் செல்வதே தெரியாது. என்னைக்காணும்போதெல்லாம் சிரித்திரனுக்கு ஏதும் எழுதித்தருமாறு கேட்பார். ஆனால் அவரது வேண்டுகோளைத்தான் என்னால் பூர்த்திசெய்ய முடியாமல் போய்விட்டது.
 வாசகர்களை சிரிக்கவைத்துக்கொண்டே இருந்தவர் அந்திமகாலத்தில் பக்கவாதம் வந்து கண்ணீர் உகுத்தவாறு இருந்தார் என்ற தகவலை அறிந்தபோது நெஞ்சு கணத்துப்போனது.
 இலங்கையில் தமிழ்ச்சூழலில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அதற்காகவே ஒரு இதழை நீண்டகாலம் நடத்திய சாதனையாளர்தான் சிவஞானசுந்தரம்.
 இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தின் ஆத்மாவையே தனது கேலிச்சித்திரங்கள் நகைச்சுவைத்துணுக்குகளினால் பிரதிபலித்தவர்.
 பல துணுக்குகள் சிறுகதைகள் நாவல்களுக்கு கருப்பொருளாகக்கூடியவை.
எனது ‘கற்றுக்கொள்வதற்கு’ (கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழில் வெளியானது) என்ற சிறுகதையில் சிவஞானசுந்தரத்தைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
  ஈழத்தமிழ் மக்களின் புலப்பெயர்வைப்பற்றி சிவஞானசுந்தரம் எப்பொழுதோ தீர்க்கதரிசனமாக பதிவு செய்த ஒரு துணுக்கு இதோ:-
 ஒரு ஏழைத் தந்தை சொல்கிறார்.:-

 எனது மகளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடினேன்.
 அவள் கறுப்பு. அழகில்லை என்றார்கள்.
 அவள் படிப்புக்குறைவு என்றார்கள்.
 அவளுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்றார்கள்.
 அவள் சாதியில் குறைவு என்றார்கள்.
 அவளுக்கு கொடுப்பதற்கு சீதனம் இல்லை என்றார்கள்.
 இப்பொழுது அவள் லண்டன் சீமையில் வெள்ளைக்காரனைக்கட்டி
 சந்தோசமாக சீவிக்கிறாள்.
சிலர் பிறப்பார்கள். இறப்பார்கள். மறக்கப்பட்டும் விடுவார்கள்.
ஆனால் சிரித்திரன் சிவஞானசுந்தரம் போன்றவர்கள் வாழ்ந்துகொண்டுதானிருப்பார்கள். மறையமாட்டார்கள்.

(குறிப்பு: விரைவில் வெளியாகவுள்ள முருகபூபதியின காலமும் கணங்களும் நூலில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரை)

No comments: