அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ அம்மையார் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வுகள்

.
“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு நேற்று(7/04/11) நடைபெற்றது.

வியாழக்கிழமை 07-04-2011 அன்று அவரது சொந்த இடமான அவுஸ்திரேலியா விக்ரோரிய மாநிலத்தின் வரகுலில் காலை 11 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து அம்மையாரின் பூதவுடல் நல்லடக்கத்திற்காக வரகுல் லோன் மயனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஆராதனைகள், இறுதி அஞ்சலியைத் தொடர்ந்து பூதவுடல் நல்லடக்கம் மதியம் 12.30மணியளவில் இடம்பெற்றது.


அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பல தமிழ் உணர்வாளர்களும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பங்குபற்றி அவரது பணிக்கு தமது மதிப்பளித்தனர். அத்துடன் தமிழ் சமூகத்தினால், பெலுமளவில் அனுதாபச் செய்திகளும், மலர் செண்டுகளும் பெற்றி அம்மையாரின் குடும்பத்தவருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

“வெள்ளைத் தமிழச்சி” என தமிழ் மக்களால் போற்றப்பட்ட அடேல் பாலசிங்கம் அவர்களின் அன்னையார், தமிழீழ மக்களின் வாழ்வியல் பற்றிய உரிமையில் அதிக கவனமும், தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய ஆழத்தை அறியும் தேடலும் ஒருங்கே கொண்டவர்.

தமிழர்களால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்வுகளில் ஆர்வத்துடன் இணைந்து கொள்ளும் இவர், அவர் வாழ்ந்த இடமான மெல்பேணில் மட்டுமன்றி சிட்னி, பேர்த் போன்ற இடங்களுக்குச் சென்றும், தனது பங்களிப்பை நல்கியவர்.

அவுஸ்திரேலியாவில் தாயகத்தமிழ் மக்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, தமிழர் ஒன்றுகூடல்களில் தனது பிரசன்னத்தை ஏற்படுத்தி, தமிழ்மக்களின் உறுதியான, தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு வலுவூட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தமது பங்களிப்பை இயன்றவரை செய்துவருகின்றார்கள் என்பதையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மனைவியார் அடேல் அவர்கள் தனது கணவரோடு இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடியது மட்டுமன்றி தனது குடும்பத்தினரை கூட எமது தேசிய பணிகளில் இணைத்து தமிழ்மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இறுதி நிகழ்வின் இறுதியில் பெற்றி அம்மையாரின் குடும்பத்தவரினால் தமிழ் நண்பர்களுக்கு நிகழ்வில் நேலடியாக கலந்து கொண்டமைக்கும், அனுதாபச் செய்திகளையும், மலர் செண்டுகளையும் அனுப்பி வைத்தமைக்காக தமது அன்பையும், நன்றியையும் பகிர்ந்து கொண்டு, திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களையும் பெருமைப்படத்தியிருப்பதாகவும் கூறினார்கள்.


No comments: