தமிழ் சினிமா

விக்ரம், சூர்யாவுடன் இணைவாரா கமல்?
அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
தமிழகத்தில் உள்ள ஈழ மாணவர்களுக்கு நடிகர் கருணாஸ் உதவி
முதல்வர்… கமலுக்கு சூட்டிய புகழாரம்



பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற நம்பத்தகுந்த தகவல் கிடைத்தவுடனேயே நாம் அதனை வாசகர்களுக்கு செய்தியாக அளித்திருந்தோம். மிகவும் கௌரவமிக்க இப்படத்தினை மணிரத்னத்தைத் தவிர வேறு யாரால் உருவாக்க முடியும்? நிச்சயமாக முடியாது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் நாயகனாக விக்ரம் முடிவாகிவிட்ட நிலையில், படத்தின் மற்ற நடிகர் நடிகையர் குறித்து விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் இன்னொரு நாயகனாக சூர்யா நடிக்கவுள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் மற்ற பணிகள் குறித்த விவாதங்கள் ஒருபுறம் நடந்து வர, படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விரைவில் சன் பிக்சர்ஸூம், மெட்ராஸ் டாக்கிஸூம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை நடிக்க வைக்கவே மணிரத்னம் விரும்புகிறாராம்.

கமல் இப்படத்தில் இடம்பெற்றால் அது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பது மணிரத்னத்தின் எண்ணம். விக்ரமும், சூர்யாவும் எந்தவித மறுப்பும் இன்றி படத்தை உடனடியாக ஒப்புக்கொள்வர். அவர்களின் பதில் உடனடியாகக் கிடைத்துவிட, கமலின் பதிலுக்காக மட்டும் தற்போது காத்திருக்கின்றனர்.

இதுபோன்ற இலக்கியம் சார்ந்த கதைக்கு உலகநாயகன் நிச்சயம் மிகப்பெரிய பலமாக அமைவார். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து என்று படக்குழு அமைந்து விட்டால், அதன் விளைவு நிச்சயம் அபிரிமிதமானதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பொன்னியின் செல்வன் போன்ற படத்தினை நாம் உருவாக்கிவிட்டால் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதினை நிச்சயம் வென்றுவிடலாம். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் பொன்னியின் செல்வன் உருவாகவுள்ளது. தெலுங்குப் பதிப்பில் நடிக்க மகேஷ் பாபுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த தீவிர நட்சத்திர வேட்டையே காவியம் பேசுமே.....!

அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்


சர்வதேச அளவில் ஹாலிவுட் ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கடந்த 2 மாதங்களில் சுமார் 20 முறை அமெரிக்கா சென்று திரும்பியிருக்கிறார் ரகுமான். இவ்வாறு செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களிலேயே தங்கி வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் சொந்தமாக வீடு இருந்தால் வசதியாக இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமான் கருதினார். இதையடுத்து அவரது நண்பர்கள் மூலம் வீடு பார்க்கும் படலம் தீவிரமாக நடந்தது. தற்போது அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ரகுமான் வாங்கியுள்ளார்.

இதன் மதிப்பு பல கோடிகளாகும். உலகின் சொகுசு நகரங்கள் பட்டியலில் லாஸ் ஏஞ்சல்ஸ் முன்னணி இடத்தில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே அங்கு தனது வீட்டை ரகுமான் அமைத்துள்ளார். இந்த வீட்டிலேயே சிறிய ஸ்டூடியோ ஒன்றையும் அவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் அங்கேயே இசையமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

ரகுமானின் சென்னை வீட்டிலும் இதேபோன்று ஸ்டூடியோ உள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைப்பதால் இதைவிட நவீனமாக அமெரிக்க வீட்டின் ஸ்டூடியோவை ரகுமான் அமைத்துள்ளார்

தமிழகத்தில் உள்ள ஈழ மாணவர்களுக்கு நடிகர் கருணாஸ் உதவி



தமிழ்நாட்டில் வாழும் ஈழ மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி செய்துள்ளார்.

ஈழத்தில் இருக்கும் மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டார்கள். அதில் கருணாஸும் ஒருவர். அன்மையில் இவர் இலங்கையில் உள்ள முருகன் கோவிலில் தனது குழந்தைக்கு முடி இறக்க செல்ல முயன்றதால் சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் உள்ள நன்றாக படிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறாராம் நடிகரான கருணாஸ்.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பி.பி.எஸ் என படித்து வரும் இந்த மாணவர்களுக்கு சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை என்று பல்வேறு கல்லூரிகளில் இவர்களை படிக்க வைத்தும் வருகிறார் .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்களை அழைத்து புத்தாடை, இனிப்பு போன்றவற்றை வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அப்போது, நடிகர் கருணாஸ் கூறுகையில், இவர்கள் படித்து வேலைக்குப் போன பிறகு இவர்களுடைய சம்பளத் தொகையில் பத்து சதவீதத்தை இதே போன்று ஈழ மாணவர்களின் படிப்புக்கு கொடுக்க வேண்டும்.

இனி ஈழ மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அது அவர்களின் படிப்பாக மட்டும்தான் இருக்கும். எனவேதான் நான் இந்த உதவியை செய்ய முன்வந்தேன் என்றார்

முதல்வர்… கமலுக்கு சூட்டிய புகழாரம்


கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில் :

உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். சிறு வயது முதல் இன்று வரை தமிழ்த் திரையுலகில் நீங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறீர்கள். இப்போது மதிப்பிட முடியாத உயரத்தை அடைந்துள்ளீர்கள். புகழின் உச்சாணியில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முதல்வர்.

உலக நாயகன் கமல்ஹாசனின் 56 வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சில தினங்களுக்குமுன் பல்வேறு தொண்டுகள் மூலம் கொண்டாடினர். வழக்கம் போல அவரது பிறந்த நாளை, கமல்ஹாசன் ரசிகர்கள், பல்வேறு சமூக சேவைகள், தொண்டுப் பணிகள், ரத்ததானம் போன்ற தானங்களுடன் கொண்டாடினர். கூடுதலாக இந்த ஆண்டு உறுப்புதானமும் செய்தனர்.

சென்னை குரோம்பேட்டையில் நடந்த நிகழச்சியில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கமல் ரசிகர்மன்ற பொறுப்பாளர் பி.கே.மணிவண்ணன் தலைமையில் 200 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்வது தொடர்பான உறுதிமொழிப் பத்திரங்களை அளித்தனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மோகன் பவுண்டேஷன் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பின்னர் இலவச மருத்துவ முகாம் ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. விதவைகள் மற்றும் முதியோர் 50 பேருக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. சென்னையில் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் கமல். அப்போது தனது ரசிகர்களை தொடர்ந்து இதுபோல சமூக சேவைகளிலும், நற்பணிகளிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும் அதிக அளவில் ஈடுபடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் ஞானசம்பந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 12 ம் வகுப்பு மாணவருக்கு இலவச லேப்டாப், 56 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள், 15 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், மாணவர்களுக்கு ரூ. 20,000 மாணவர்களுக்கு மருந்துகள், திருவண்ணாமலையைச் சேர்ந்த எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு 50 தரைவிரிப்புகள், கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 25,000 மதிப்புள்ள புத்தகங்கள், முதியோர் இல்லத்திற்கு 100 தலையணைகள், பாய்கள், 3 விதவைப் பெண்களுக்கு தலா ரூ. 10,000 பண உதவி, 2 உடல் ஊனமுற்றோருக்கு ரூ. 3000 நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை கமல்ஹாசன் வழங்கினார்.

நன்றி வீரகேசரி

No comments: