பிரட்மன் வழியில் முரளி

.

டெஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவில் எந்தவித மாற்றத்தினையும் முத்தையா முரளிதரன் செய்யமாட்டார் என அவரது முகாமையாளர் குஷில் குணசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 792 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலகில் அதிகூடிய விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான முத்தையான முரளிதரன் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருந்தார். எதிர்வரும் 18ஆம் திகதி காலியில் நடைபெறும் இந்தியா - இலங்கை போட்டியே முரளியின் இறுதிப் போட்டியாக இருக்கும்.

இந்நிலையிலேயே முரளியின் முகாமையாளர் மேற்படி விடயத்தினை குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில்… தற்போது முரளி 792 விக்கெட்டுகளை டெஸ்ட்டில் வீழ்த்தியிருக்கிறார். 800 விக்கெட்டுகளுக்கு இன்னமும் 8 விக்கெட்டுகளே தேவைப்படுகிறது. ஒருவேளை முரளி 799 விக்கெட் எடுத்தாலும் கூட தனது முடிவில் மாற்றம் கொண்டுவந்து அடுத்த போட்டியில் விளையாட மாட்டார். சேர்.டொன் பிரட்மன் தனது இறுதிப் போட்டியில் ஓட்டமெதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். அவர் தனது முடிவினை மாற்றி அடுத்த போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயமாக அவரது சராசரி 100 ஆக இருந்திருக்கும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இது அவரது நல்ல குணத்தினை எடுத்துக் காட்டுகிறது. இதேபோல் முரளியும் தனது முடிவில் மாற்றம் கொண்டுவரமாட்டார் என்றார்.
முரளி தனது ஓய்வு பற்றி அறிவிக்கும்போது 800 விக்கெட்டுகள் என்ற சாதனையோடு ஓய்வுபெறுவதை தான் விரும்புவதாக கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: